”ஆலயம் தொழுதல் சாலவும் நன்று”
நன்றுதான் ஆனால் எந்த ஆலயம் என்பதுதான் பிரச்சனையே. ஏற்கெனவே காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்குப் பிரச்சனை முடிவு தெரியாமல் இழுத்துக் கொண்டு கிடக்கிறது. இது போதாதென்று அதே காஞ்சீபுரத்தில் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாத குருக்கள் வேறு சில்மிஷமும் செல்போனுமாய் சிக்கியிருக்கிறார்.
”வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்” என சில சில்மிச ”சகோதரர்கள்” காட்டிய வழியில் இவரும் கருவறையிலேயே தனது லீலைகளை அரங்கேற்றி அற்புத சுகமளித்ததன் விளைவு கம்பி எண்ண வேண்டி வந்துவிட்டது.
கோயிலுக்கு வந்த பெண்களிடம் கருவறையிலேயே ”குடும்பம்” நடத்தியது போதாதென்று செல்போனிலும் அதைப் படம்பிடித்துப் பரவசப்பட்டிருக்கிறார்.
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் “கோயில் கூடாதென்பதல்ல. கோயில் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக்கூடாது” என்கிற கலைஞரின் பராசக்தி வசனமும் இந்நேரத்தில் நினைவுக்கு வரத்தான் செய்கிறது.
ஆறு கால (உண்மையான)பூஜை நடத்துபவர்களுக்கு தேவை தேங்காய், பழம், போன்றவைகள்தான். செல்போன் எதற்கு?
பள்ளி, கல்லூரி செல்பவர்கள் செல்போன் கொண்டுபோக தடை விதித்ததற்கு பதிலாக ”கோயில் குருக்கள்கள் இனி செல்போனும் கையுமாக சுற்றக்கூடாது” என அரசு ஒரே ஒரு உத்தரவைப் போட்டுவிடுவதே உத்தமம்.
இல்லாவிட்டால்…… ” ’அந்த மாதிரி’ படங்களைப் பார்க்க கண்ட கண்ட தியேட்டர்களுக்குப் போவதற்கு பதில் பேசாமல் பக்கத்தில் உள்ள குருக்களிடம் சி.டி.வாங்கிப் பாத்துக்கலாம்” என்று விடலைப் பட்டாளம் படையெடுத்துவிடப் போகிறது எச்சரிக்கை.
*********
வரும்….. வரும்….. வரும்….. வரும்….. வரும்….. வரும்….. வரும்….. என்று 17 வருசமாய் காத்துக் கொண்டிருந்த பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமான லிபரான் கமிசன் அறிக்கை இறுதியில் வந்தே வந்து விட்டது.
”அந்த அறிக்கையும் ஏதோ ஒரு பத்திரிகைக்கு லீக் ஆகிவிட்டது அதைப் பற்றி விசாரிக்க வேண்டும்” என்கிற கூச்சல் காதைக் கிழிக்கிறது.
அதனாலென்ன? அந்த அறிக்கை எப்படி லீக் ஆச்சுன்னு அதுக்கொரு கமிசனப் போட்டுத் தாக்க வேண்டியதுதான். அந்த அறிக்கையும் இன்னும் அம்பத்தேழு வருசம் கழிச்சு ரிலீஸ் ஆச்சுன்னா அதை நியாபகம் வைத்திருப்பவன்ல பல பேரு ”டிக்கெட்” வாங்கீட்டுப் போயே சேர்ந்திருப்பான். இதுதான் ஜனநாயகம். இதக் கூடப் புரிஞ்சுக்காம போயிருதுக பலதுக கையில மை வெச்சுக்கறதுக்கு.
’ வாராது வந்த மாமணியாய் ’ வந்த அந்த கமிஷன் அறிக்கையில் பாபர் மசூதி இடிப்புக்கு யாரெல்லாம் உடந்தை என்கிற பட்டியலைப் பார்த்ததும் அடிவயிறே கலங்கி விட்டது.
வாஜ்பாய், அத்வானி, கல்யாண்சிங், பால்தாக்கரே, உமாபாரதி போன்றவர்கள்தான் மசூதி இடிப்புக்குக் காரணம் என்று அதில் சொல்லியிருப்பதைப் பார்த்தால் நாட்டில் ”நல்லவங்களே” நடமாட முடியாது போலிருக்கிறது.
என்ன கொடுமை சரவணன் இது?
இது வரைக்கும் நான் நம்ம திப்புசுல்தான் தான் இடிச்சாருன்னு நெனைச்சுகிட்டு இருந்தா இப்புடி ஒரு குண்டத் தூக்கிப் போடுறாரே லிபரான்?.
சரி….. எப்புடியோ அறிக்கை வந்ததுதான் வந்தது…… அப்படியே இடிப்புக்குக் காரணமானவங்கள கூண்டிலேற்றி தண்டனை வாங்கிக் குடுக்கப் பாருங்கப்பா வர்ற கி.பி. 2447க்குள்ள.
**********
முத்தமிழறிஞர்…..
வாழும் வள்ளுவர்…….
செம்மொழி தந்த செம்மல்…..
வாழும் தொல்காப்பியர்…..
அஞ்சுகச் செல்வர்…….
அருந்தமிழ்க் காவலர்……
டாக்டர்……. கலைஞரின் காமெடி வர வர வடிவேலுவையும் மிஞ்சி விடும் போலிருக்கிறது..
ஈழத் தமிழர்களுக்காக இவர் மவுனமாக விட்ட கண்ணீரின் விளைவால் கோபாலபுர மக்கள் தங்கள் சைக்கிள், ஸ்கூட்டர், கார்களை விட்டுவிட்டு இப்போது படகில் பயணிக்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்பதுதான் நமது வருத்தமே. ஆனால் கடந்த வாரம் இவர் விட்ட அறிக்கையில் காமெடி பீசுகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.
”எம்.ஜி.ஆர்.காலத்தில் கூட்டிய தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோ மாநாட்டில் எல்லா அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டாலும் பிரபாகரன் அவர்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை….. ”
”தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள் செல்லாக்காசுகளாகி விட்டன…… ”
”ஜனநாயக ரீதியான வாய்ப்புகள் வந்தும் எட்டி உதைத்து விட்டார்கள்…….”
”வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு போர்முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்தவில்லை……. ”
என்றெல்லாம் முழங்கியிருப்பதைப் பார்த்தால் பேசாமல் இவர் இங்கு இருப்பதை விட இலங்கையில் இருந்திருந்தால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னமே தனிஈழம் வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்கிற சந்தேகம் நமக்குள் எழாமலில்லை.
ச்சே என்ன செய்வது ஈழமக்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
ஆனால் ”1986 இல் நடந்த டெசோ மாநாட்டில் பிரபாகரன் மட்டும் கலந்து கொள்ளவில்லை” என்கிற வார்த்தைகளில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று பார்த்தால் அதுவும் அபத்தமாகத்தான் இருக்கிறது.
அன்று ஈ.பி.ஆர்.எல்.எப்.சார்பாக கலந்து கொண்டது பத்மநாபா அல்ல மாறாக வரதராஜபெருமாள் தான்.
பிளாட் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டது அதன் தலைவர் உமா மகேஸ்வரன் அல்ல. மாறாக வாசுதேவன் தான்.
டெலோ அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சபாரத்தினமும் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டது மதி.
ஈரோஸ் அமைப்பின் சார்பிலும் அதன் நிறுவனர் ரத்னசபாபதி கலந்து கொண்டாரே தவிர வே.பாலகுமார் கலந்து கொள்ளவில்லை.
எதார்த்தம் இப்படி இருக்கையில் இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உண்மைக்கு மாறான செய்தியைச் சொல்ல முத்தமிழ் அறிஞருக்கு எப்படி மனது வந்தது என்பதுதான் நமது கேள்வி.
தமிழ்நாட்டு மக்கள் மனதில் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் படுகொலையும்….. தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவிகள் உயிரை காவு கொண்ட துயர சம்பவமும் இன்னமும் நிழலாடிக் கொண்டிருக்கிற லட்சணத்தில் ”சகோதர யுத்தம்” பற்றி மீண்டும் மீண்டும் முழங்குவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.
தினகரன் அலுவலகத்தில் நடந்த யுத்தம் சகோதர யுத்தமா?
அல்லது அந்நிய நாட்டுப் படையெடுப்பா?
இங்கு நடந்தது குழாயடிச் சண்டை. அங்கு நடந்ததோ இரு நாட்டு உளவுப் பிரிவுகளும் மூட்டிவிட்ட பிரித்தாளும் சூழ்ச்சி.
1950 களில் இருந்து இன்றையவரைக்கும் தமிழர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாத சிங்களர்கள் ”2005 தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஓட்டுப் போட்டிருந்தாலேயே போதும் ’தமிழர் மனநிலை’ புரிந்திருக்கும்” என்கிற கலைஞரின் உபதேசம்தான் அந்த அறிக்கையின் உச்சகட்ட நகைச்சுவைக் காட்சி.
இத்தகைய காட்சிகள் எல்லாம் இனிதே நடந்தேறிட அது தமிழகம் அல்ல.
ஈழம்.
இத்தனைக்கும் இந்த ரணில் ஏற்கெனவே 2001 இல் இருந்து 2004 வரை பிரதமராகக் குப்பை கொட்டிய ஜென்மம்தான் என்கிற வரலாற்று உண்மை கூடவா ஈழமக்களுக்குப் புரியாது?
இந்த எல்லாக் கண்றாவிகளையும் கேட்கும்போது நமக்கும் பிரபாகரன் அவர்கள் மேல்தான் கோபம் வருகிறது. இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு பிழைக்கத் தெரியாத ஒரு மனுசன் இருக்க முடியுமா என்று.
லட்டு மாதிரி ரெண்டு பிள்ளைகள்…..
அதில் ஒருவரை மத்திய அமைச்சராகவும்……
மற்றொருவரை துணை முதல்வராகவும் “ஜனநாயக முறைப்படி” ஆக்கிவிட்டு அவரே வட கிழக்கு மாகாண முதல்வராகவும் ”முள்கிரீடம்” சூட்டியிருந்தால் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்?
அதை விட்டுவிட்டு யாராவது பெற்ற பிள்ளையை போர்க்களத்துக்கு அனுப்புவார்களோ?
மற்றொரு மகளையும் எம்.பி.ஆக்கி கொழும்புக்கு அனுப்பி அழகு பார்த்திருக்கலாம்….
தப்பித் தவறி யாராவது ஈழம்…. கீழம்…. என்று முணுமுணுத்தால் “நாங்கள் ஈழக் கோரிக்கையைத்தான் கைவிட்டோம். ஆனால் அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன” என திராவிட நாடு கடையை மூடிய பாணியில் நச்சுன்னு பதில் சொல்லியிருக்கலாம்.
ரணில் விக்ரமசிங்கே கிடக்கட்டும்……
நம்ம சந்திரிகாவோடே கூட கூட்டு சேர்ந்து ”சிறிமாவோ மகளே வருக….. சீரான ஆட்சி தருக” என்று அமைச்சரவையைப் பங்கு போட்டிருந்திருக்கலாம்……
ச்சே பிழைக்கத் தெரியாத ஆளய்யா பிரபாகரன்.
(நன்றி : தமிழக அரசியல் வார இதழ் 27-11-2009)







கொடுத்துச் சொன்ன மீடியாக்கள்…. அவர்கள் அற்புதமான செயல்களில் ஈடுபடும்போது ஓசைப்ப்டாமல் ஒதுங்கிக் கொள்வது எந்தவிதத்திலும் சரியாகாது.
குற்றவியல் வழக்கு மன்றத்தின் முன்பாக நிறுத்தக் கோரியும் ஐ.நா.சபையை வலியுறுத்தி இக்கையெழுத்து இயக்கத்தை தமிழகமெங்கும் தொடங்கியுள்ளார்கள் மரியாதைக்குரிய இம்மாணவர்கள். .
நன்றி: தமிழக அரசியல் வார இதழ்.
ஏழை எளியவர்களுக்கு உதவப்போகிறாராம் அவர். “பிறருக்கு கொடுப்பதில் இருக்கும் பேரானந்ததிற்கான வாரம்” (JOY OF GIVING WEEK) என அறிவித்திருக்கிறார். இந்த அற்புதமான ஆலோசனையை அவருக்கு வழங்கியவர் சச்சினின் பத்து வயது மகள் சாரா.
அழைத்தும் நான் மறுத்ததிற்கான காரணம் அதனது நிறவெறிக் கொள்கைதான். நாம் மனிதர்கள் என்பதால் நம் ஒவ்வொருவருக்கும் ஆற்றியாக வேண்டிய மகத்தான கடமை இருக்கிறது. இப்பூவுலகம் அனைவருக்கும் பொதுவானது என்கிற சமூக அக்கறை அனைவருக்குள்ளும் இருந்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது.”
ர்த்தியிடம்…….
ருந்ததிராய் கேட்கலாம்…….
நன்றி : தமிழக அரசியல்