ஈராண்டல்ல….. நூறாண்டைக் கடந்து நிற்கும் சாதனை எது?

அத்தியாயம் : ஒன்று

மகனைப் பள்ளியில் சேர்த்துவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ அதைப் பார்த்துவிட்ட எனது நண்பர் ஜெயச்சந்திரன் ஓடி வந்தார்.

”என்ன தோழர் நீங்க போய் வரிசைல நின்னுகிட்டு…? இருங்க நான் போய் டோக்கன் வாங்கீட்டு வந்தர்றேன்” எனப் பரபரத்தார்.

நான் மட்டுமென்ன பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்தா வந்திருக்கிறேன். நானே ஊருக்குள்ள அனாமத்து. இங்க நின்னா என்ன? எங்க நின்னா என்ன? வேண்டாம் தோழர் விடுங்க. இந்த அனுபவங்களையெல்லாம் அப்புறம் நான் எப்படிப் பெறுவது… எனத் தடுத்தேன் அவரை……..

 

மேலும் வாசிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்

http://andhimazhai.com/news/view/column-pamaran.html

ஒரு மாபெரும் மடையனின் மலேசியப் பயணம்…

Poster

 

 

ராட்டிணத்தில் சுற்றுவதே எனக்கு ஏகபயம். அதுவும் அது மேலே போகும்போது கீழே தெரியும் ஊரைப் பார்க்கும் போதே அடிவயிறு கலங்கிவிடும். இந்த லட்சணத்தில் விமானப் பயணம் என்றால் எப்படி இருக்கும்? அது கிளம்பி மேலே போகப்போக காய்ச்சல் வந்த மாதிரி ஆகிவிடும். விமானத்தில் ஏதாவது ஒரு சின்ன ஆட்டம் என்றாலும் அய்யோ…. காப்பாத்துடா” என்றோ….. ”காப்பாத்துடி….” என்றோ  கடவுளைக் கூப்பிட முடியாது. அதுவும் ஒரு நாத்திகன். போறப்ப எங்கே போறே?ன்னு அபசகுனமா கேட்காதே என்கிற ஜென்மங்களெல்லாம் ஒரு முறை விமானத்தில் போனால் போதும்…. ஏறி உட்கார்ந்தவுடனேயே விமானத்திற்கு விபத்து ஏற்பட்டால் எப்படி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு குனிந்து உட்கார வேண்டும்…. மூச்சு திணறினால் ஆக்ஸிஜன் பையை எப்படி மூக்கில் மாட்டிக் கொள்ள வேண்டும்…. அவசரகால வழி மூலமாக எப்படி தப்பித்தோம் பிழைத்தோம் என பாய்ந்தோட வேண்டும்…. என அக்கு வேறாக ஆணி வேராக விளக்கிப் பேசும் ஒரு பெண். இது போதாதா சகுனப் பேர்வழிகளுக்கு?

புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் உற்சாகபானங்கள் அடங்கிய சரக்கு வண்டியை தள்ளிக் கொண்டு வந்தார் விமானப் பணியாளர். ரெண்டு மூணு உள்ளே போகவும் பயம் பாதி போயிருந்தது. இனி அடுத்த கண்டம் ஆரம்பம். பொதுவாக எனது பொழுதுபோக்கே சிறுநீர் கழிப்பதுதான்… அதிலும் ஏதாவது நீராகாரம் உள்ளே போய்விட்டால் எனதுபாடு பெரும்பாடுதான். அருகில் இருந்த இருவரிடம் பல்லைக் காண்பித்து எழுச்சொல்லி வெளியில் வந்து கழிப்பறைப் பக்கம் போனால்…. அங்கும் ஒரு கியூ. ஏழெட்டு பேர் நிற்கிறார்கள். எனக்கு சேலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள கட்டணக் கழிவறை ஞாபகம் வந்தது. அங்கு ஒருவர் ஓயாமல் சத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பார். ”போனமா வந்தமான்னு இரு”…. ”போனமா வந்தமான்னு இரு….” என்று. ஒருவேளை லாட்ஜில் ரூம் போட்ட நினைப்பில் அரைநாள் அங்கேயே இருப்போரும் உளர் போலிருக்கிறது. அப்பாடா என வெளியில் வரும் போது விமானம் மலேசியாவில் தரை இறங்கப் போவதாக விமானியின் அறிவிப்பு ஒலிக்க ஆரம்பித்தது.

இறங்கியாயிற்று. அடுத்து கையில் இருக்கிற ரூபாயை மலேசியப் பணமாக மாற்ற வேண்டுமே… எங்கே? என்றால் இன்னொரு பக்கம் காண்பித்தார்கள். அதற்கு உள்ளேயே இன்னொரு மின்னல் வேக ரயில். மலேசிய ரிங்கட்டுகளாக ரூபாயை மாற்றிக் கொடுத்த பெண் என் முகக்கெழுத்தியையும் முழுக் கோலத்தையும் பார்த்துவிட்டு நிறைய சில்லரையாகவே கொடுத்தார். பெட்டி நியாபகம் வந்தது. அதற்கு எங்கே போவது? என்றால் இன்னொரு டெர்மினலை காண்பித்தார்கள். மீண்டும் மின்னல் வேக ரயில். பெட்டியை எடுத்த பிற்பாடு வெளிவாயிலுக்கு எப்படி செல்வது என்று கேட்டால் அதற்கும் இன்னொரு டெர்மினலைக் காண்பித்தார்கள். மறுபடியும் உள்ளேயே ஓடும் மின்னல் வேக ரயில். சுங்கச் சோதனை முடித்து ரயிலேறிப் போய் பெட்டியை எடுத்துக் கொண்டு ரூபாயை மாற்றி வெளியில் வருவதற்கு பதில் மாறி மாறி மூன்று முறை ஒரே ரயிலில் காவடி எடுத்த ஒரே ”மாமேதை” நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.

இத்தனைக்கும் எப்படி பணம் மாற்ற வேண்டும்….  எங்கே பெட்டியை எடுக்க வேண்டும்… தங்குமிடத்துக்கு எப்படிச் செல்ல வேண்டும்… என ஒவ்வொன்றையும் பள்ளிக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல அனைத்தையும் சொல்லியிருந்தான்  சிங்கப்பூரில் இருக்கும் எனது நீண்டகால கோவை நண்பன் முரளிதரன். போதாக்குறைக்கு நண்பர்கள் சிறீகாந்த், டி.எம்.செந்தில், சார்லஸ் போன்றவர்களின் அரிய ஆலோசனைகள் வேறு. யாரும் சொல்லாமலே புரிவதற்கும்…. அப்படிச் சொன்னாலும் மண்டையில் ஏற்றிக் கொள்வதற்கும் நானென்ன ஞானியா?படம்

ஏற்கெனவே பலமுறை மலேசியாவைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் (நினைத்தாலே இனிக்கும் படத்தில்) நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை. வெளியில் காத்திருந்த தோழன் கருணாகரனோடு நகரம் நோக்கிய பயணம். வானுயர்ந்த கட்டிடங்களை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டே வந்தேன். கோலாலம்பூரில் உள்ள ஒரு எட்டுக்கு எட்டு லாட்ஜில் அடைக்கலமானோம் இருவரும். கழிப்பறைக்குள் குண்டானவரோ…. உண்டானவரோ போனால் வெளியில் வருவது சிரமம். ஜன்னல் கிடையாது. உள்ளே உள்ள காற்று வெளியேவோ… வெளியே உள்ள காற்று உள்ளேவோ வர வாய்ப்பே இல்லை. அறையையும் அறையின் தோற்றத்தையும் ஓட்டலின் இருமருங்கிலும் உள்ள மசாஜ் பார்லர்களையும் பார்த்தவுடனேயே அது தங்குவதற்கு மட்டுமான லாட்ஜ் இல்லை…. ”மற்றவற்றுக்கும்”தான் என்பது புரிந்து போயிற்று. அடைத்த அறைக்குள் நான் விடும் புகையையும் சேர்த்தால் தனக்கு சாவு அங்கேயேதான் என்பதைப் புரிந்து கொண்ட நண்பன் தன் தாய் மீதான பாசத்தையும்… தங்கை மீதான பரிவையும்…. அவர்களைப் பிரிந்து தான் படும் கவலையையும் எடுத்துச் சொல்லி பின்னங்கால் பிடறியில்பட ஓடிப்போனான். வெம்மையும் புகையுமாய் கழிந்தது என் முதல் இரவு.

விடிந்ததும் முதல் வேலையாக தமிழகத்தில் உள்ள என் நண்பன் சுரேஷ்பாபுவுக்குப் போனைப் போட்டு என் ”கற்பு”க்கு நேர இருக்கும் ஆபத்துக்களையும், அபாயங்களையும் எடுத்துச் சொல்லி…. இங்கு வந்தும் நண்பனோடு கதைக்கக்கூட இயலாத அறையில் தவிக்க வேண்டி வந்ததை வாய் விட்டுக் கதறி…. எப்படியாவது ஒரு ஜன்னல் உள்ள இடத்தில் ஒரு ரூமைப் போட்டால் கோடிப் புண்ணியம் என்றேன். பத்தே நிமிடத்தில் இணையதளத்தில் அறையை புக் செய்து விட்டு “ரூம் போட்டாச்சு… பிரிக் பீல்ட் போங்கள்… அங்கே நம்ம தமிழர்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள்” என்றான்.

படம்

போய் இறங்கியதில் இருந்து என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம் ஒரு இடத்தில் கூட வண்டிகள் எழுப்பும் ஒலி சத்தம் கேட்காததுதான். இரவு மூன்று மணி என்றால் கூட…. மூன்று பக்கமும் ஆள் நடமாட்டமே இல்லாவிட்டாலும் கூட சிக்னலில் பச்சை விழும் வரை காத்திருந்து புறப்படுகிறார்கள். சாலை ஓர உணவகங்களில் உணவோடு மது அருந்தினாலும் அலப்பரை செய்யாமல் கிளம்பிப் போகிறார்கள். இவைகள் ஆச்சர்யங்கள் என்றால் துயரங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லோருக்கும் வாயிற்கதவுகளைத் திறந்துவிட்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக பல்வேறு தெருக்களில் பாலியலுக்கு அழைக்கும் தோழிகளுக்கும் அளவில்லை. உணவுக்குக்கூட வக்கற்ற அபலைகளை பாலியல் தொழிலாளிகளாக மாற்றி தாய்லாந்து, இந்தோனேசியா எனப் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வைத்திருக்கிறது இந்நாடுகளது வெட்கமற்ற பொருளாதாரக் கொள்கைகள். இதில் மட்டும் மொழி, இன, மத, எல்லைப்பாகுபாடுகள் இல்லை.

மூன்றாம் நாள் ரயிலேறி ஷா ஆலம் நகருக்குப் போனால் நண்பர் வரதராஜன் வெளியில் காத்துக் கொண்டிருந்தார். “தமிழ்ப் பள்ளிகளைப் பார்க்கப் போகலாமா?” என்றார் நண்பர். வருகையின் நோக்கமே அதுதானே என்றேன். அடுத்து நாங்கள் பயணப்பட்டது கொஞ்சம் தொலைவில் இருந்த பத்துதீகா நோக்கி. தமிழ்ப்பள்ளி என்றதுமே கதியற்றோரின் கடைசி புகலிடமாக…. கேட்பாரற்றுக் கிடக்கும் மெலிந்த நம் நோஞ்சான் குழந்தைகளின் பாடசாலைகளாக திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்ட நம் தமிழகப் பள்ளிகளின் நினைவுதான் வந்தது. (மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பம்மாத்துகளைத் தாண்டி தூள் கிளப்பும் தமிழ்ப் பள்ளிகள் தமிழகத்தில் ஏராளம் என்பது வேறு விஷயம்.) நாங்கள் சென்ற வண்டி ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நின்றது. உடன் வந்த நண்பர் அங்கிருக்கும் யாரையோ பார்க்கத்தான்  அழைத்துப் போகிறார் என்று நினைத்தால் ”இதுதான் நாம் பார்க்க வந்த தமிழ்ப் பள்ளி” என்கிறார். ஒரு கணம் ஆடிப் போகிறேன் நான்.

முதல் அறையில் நுழைந்தால் பேக்ஸ்…. இணையதளம்… சிசிடிவி கேமரா சகிதம் கார்ப்பரேட் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரியைப் போல் வரவேற்கிறார் பள்ளி முதல்வர். சில நிமிட உரையாடல்களுக்குப் பிறகு வகுப்பறைகளைப் பார்ப்போமா என்கிறார் கிளன்மேரி தமிழ்ப்பள்ளியின் முதல்வர் மனோகரன். ஆய்வகம்… நூலகம்…. வகுப்பறை என அனைத்துமே அசத்தலாக இருக்கிறது. இத்தனைக்கும் இது ஆறாம் வகுப்புவரை மட்டுமே படிக்கும் ஆரம்பப் பள்ளிதான். இதற்கே மாணவர்கள் கற்பதற்காக 50 கம்ப்யூட்டர்கள் வைத்திருக்கிறார்கள். ஆறாம் வகுப்புக்குப் பிற்பாடு தமிழ்ப்பள்ளியில் தொடர வேண்டுமென்றால் அதற்கு குறைந்தபட்சம் 15 மாணவர்களாவது சேர்ந்திருக்க வேண்டும். தமிழ்ப் பள்ளிகளுக்கு லைசன்ஸ் பெறுவதிலும் அதைத் தக்க வைத்துக் கொள்வதிலும் எண்ணற்ற சிக்கல்கள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளின் பாராமுகம்… அரசுகளின் மலாயா சார்புப் பார்வைகள்… என பின்னர் விரிவாக எழுத ஏராளம் இருக்கிறது.

படம்

அடுத்து நான் அடியெடுத்து வைத்தது எலுமினா எஸ்டேட். மலேசியா மார் தட்டி நிற்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் இம்மண்ணின் தோட்டத் தொழிலாளர்கள்தான். காடும் மலைகளுமாய்க் கிடந்த நாட்டைச் செதுக்கி செப்பனிட்டதில் தமிழகத்தில் இருந்து சென்ற இந்தத் தோட்டத் தொழிலாளர்களது ரத்தம் தோய்ந்து கிடக்கிறது. வெள்ளையர்களால் அடிமைகளாய் கூலிகளாய் கூட்டி செல்லப்பட்ட  தலித் மக்களது வாழ்வில் சொல்லாத சேதிகள் ஏராளம் இருக்கிறது.

செம்பனை மரத்தில் செதில்களுக்கிடையே ஏறி பழம் பறிப்பதற்குள் அவர்கள் பட்டபாடு எழுத்துக்களில் கொடுத்துவிட முடியாது. முக்கால் மரம் ஏறுவதற்குள் செதில் பிய்ந்து மேலிருந்து மல்லாக்க விழுவதில் தொடங்கி…. செதில்களுக்குள் பதுங்கியிருக்கும் பாம்புகள் தீண்டி மருந்து கட்டும் முன்பே மரணத்தைத் தழுவிய துயரங்கள் வரைக்கும் ஏராளம் இருக்கிறது. அங்கிருந்த தோழர்கள் சிலரிடம் நெடுநேரம் பேசிவிட்டு தோட்டத்தில் கிடந்த சில செம்பனைப் பழங்களையும் அவர்கள் நினைவோடு சேர்த்து எடுத்துக் கொண்டு கோலாலம்பூர் வந்து சேர்ந்தேன்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் “லிட்டில் இந்தியா” பகுதிக்குப் போனால் எல்லாம் தமிழ்மயம். தடுக்காமல் விழுந்தாலும் தமிழர்கள் மீதுதான் விழ வேண்டும். இதற்காகவே மலேசியத் தமிழர்கள் “லிட்டில் தமிழ்நாடு” எனப் பெயர்மாற்றப் போராட்டம் அறிவிக்கலாம். இங்குள்ளவர்களுக்கு காதில் ஏதோ கடும் பிரச்சனை போலிருக்கிறது. ஒவ்வொரு கடையிலும் பிரமாண்ட ஸ்பீக்கர்கள் வைத்து ஊரை அலற விடுகிறார்கள். இவர்களுக்கென்றே பிரத்யேகமாக இலவச காது சிகிச்சை முகாம்களை நடத்தலாம் மலேசிய அரசு. உணவு விடுதி ஒன்றில் என்னை அடையாளம் கண்டு கொண்ட குருமூர்த்தி கைகளை நேசத்துடன் பற்றிக் கொண்டார். அவருடன் மலேசிய அரசியல்… தமிழக அரசியல் குறித்தெல்லாம் கதைத்துவிட்டு தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தேன்.

இப்போது ஓட்டல் அறையில் இளையராஜாவும் நானும் மட்டும்தான். (அவர் எப்ப அங்க வந்தார்?ன்னு என்னைப் போலவே கேணயனாட்டக் கேட்டுராதீங்க அப்பு. நான் பாட்டுக் கேட்டதை அப்படிச் சொன்னேன் அம்புட்டுதான்)

சரி ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று ஓட்டலை விட்டுக் கீழே இறங்க… ஓட்டல் கதவைத் திறந்துவிட்ட ஊழியர் எந்த ஊர்? என்று கேட்டார். தமிழ்நாடு என்றேன். நீங்க? என்றதற்கு ”பாகிஸ்தான்” என்றார். ”உங்களைக் காட்டி பயமுறுத்திதான் எங்களுக்கான கல்வி…. எங்களுக்கான வேலை…. என அனைத்தையும் பறித்துக் கொள்கிறது எங்கள் அரசு…” என்றார். அங்கும் அதே கதைதான் என்றேன்.

இந்த ஓட்டலில் தங்கியிருப்பதால் என்னை ஏதோ லார்டு லபக்கு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்…. நாலு நண்பர்கள் பிச்சை போட்டதால் மலேசியா வந்திருக்கிறேன். நானும் உங்க ரகம்தான் என்றேன். நேரம் காலை நாலு மணி என்றது.

”நீங்க எழுத்தாளர் என்பதால் இதை கேட்கிறேன்….தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்…. நம் இரண்டு நாடுமே ரா(RAW)வைப் பற்றி பேசுகிறார்கள்….. ஐஎஸ்ஐ(ISI) பற்றிப் பேசுகிறார்கள்….. ஆனால் ஒரு போதும் அமெரிக்க உளவுத் துறையின் FBI பற்றி சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்களே…. ஏன்?” என்றார். தெரியலியேப்பா என்றேன். ஒரு கடைநிலை ஊழியரின் அறிவுக்கு முன்னே நான் இன்னும் சிறியதாகி இருந்தேன். சரி கிளம்பலாம் என்று எண்ணி அந்த நண்பனிடம் கைகொடுத்து விட்டு தோழா! உங்கள் பெயர்? என்றேன்.  பஃஸி என்றான் அந்தத் தோழன். நம்ம ரெண்டு நாட்டுக்குமே இதுதான் பிரச்சனை. அதுதான் பசி. சில நேரங்களில் ப.சி.யும் கூட. புரியாமல் சிரித்தான் அந்த எளிய நண்பன்.

 

சாலை ஓரத்தில் உணவகம் வைத்து பிழைப்பு நடத்தும் பெருமாள் என்பவரை நண்பர் அறிமுகம் செய்து வைத்தார். மலேசியக் கல்வி முறையில் இருந்து அமைப்புமுறை வரைக்கும் அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார் பெருமாள். அவர் உணவாளர் மட்டுமல்ல உணர்வாளரும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அங்கு யாரிடம் நம்மை அறிமுகப்படுத்தி வைத்தாலும் “ஊர்” என்றே அறிமுகப்படுத்துகிறார்கள். ஊர் என்றதுமே…. “நான் ராமநாதபுரம்… நீங்க அங்க எங்கே?” என்கிறார்கள். அவர்களுக்கு ஊர் என்றாலே தமிழகம்தான். இந்தத் தலைமுறையில் சிலரைத் தவிர அனைவரும் “ஊர்” நினைவை மனதில் சுமந்து திரிகிறார்கள். பல வருடங்களுக்கு ஒரு முறை வந்து போக வசதியுள்ளவர்கள் தவிர….. மற்றவர்கள் ஊர் நினைவிலேயே வாழ்கிறார்கள்.

ஊர் சரி…. பார் எப்படி இருக்கிறது எனப் பார்க்கவேண்டாமா? நண்பர் கணேஷ்தான் தமிழாய்ந்த தமிழ்குடி எப்படிக் குடிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் என அழைத்துப் போனார் ஒரு “தமிழ்” பாருக்கு. உள்ளே நுழைந்தால்….காது சவ்வு நார் நாராய்க் கிழிந்து விடுவதைப் போல இரைச்சல். ஆர்கெஸ்ட்ராவாம். குத்துப்பாட்டுகளுக்கு குடும்பம் குடும்பமாய் ஆடுகிறார்கள். யாரும் யாரோடும் பேசிவிடக் கூடாது என்கிற அதீத கவனத்தில் பத்து நொடிகூட இடைவெளி இல்லாமல் பாடல் சாரி….இரைச்சல் தொடர்கிறது. ”வாடா மாப்ளே வாழைப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா?” என்றார் பாடகி. “நண்பா! காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாதுங்கிறது இதைத்தானோ?” என்றேன் கணேஷிடம்.

நாராச ஒலி காதைக் கிழிக்க எழுந்து வெளியில் வந்து ஒரு புகையைப் பற்ற வைத்தேன். எதிரே தொங் நாம் மூல வியாதி மருத்துவர் என்கிற ஒரு பெயர்ப்பலகை. அழகிய தமிழில். அப்புறம் இந்த முக்கு முக்குனா மூல வியாதி வராம என்ன செய்யும்?

மீண்டும் உள்ளே போனால்…. ”சொய்…. சொய்” என தமிழினி பாடலைத் தாறுமாறாகக் கிழித்துக் கொண்டிருந்தார்கள். அத்தோடு விடுவார்களா…. கூறு ஒண்ணாக…. கூறு ரெண்டாக…. சிங்சாங்….. சிங்சாங்…. என்று விஜலஷ்மி நவநீதகிருஷ்ணனையும் கூறு போட ஆரம்பித்தார்கள். நல்ல வேளையாக இவர்களிடம் சிக்காமல் பி.பி.சிறீனிவாஸ் செத்துப்போனார்.

படம்

 

”ஊர்” கிளம்பும் நாள் வந்தது. நானும் ஊர் விட்டு வந்து ஆறு நாட்களாயிற்று. லண்டனில் இருந்து தன் வயதான அம்மாவைப் பார்ப்பதற்காக வந்திருந்த ஈழத்து நண்பன் கருணாகரனும் அன்றுதான் லண்டன் திரும்ப வேண்டும். எனக்குப் பிறகுதான் அவருக்கு விமானம் என்றாலும் அதிகாலையிலேயே எழுந்து என்னை வழியனுப்ப வந்திருந்தான் நண்பன். இருவரும் கிடைத்ததைக் கொறித்து விட்டு நேரம் பார்த்தோம். ஊருக்குக் கிளம்ப எனக்கு இன்னும் 20 நிமிடம் இருந்தது. சரி…. ஒரு தம் அடிக்கலாம் என்று அதற்கான அறையைத் தேடிப் போனோம். புகை வாசனை ஒத்துக் கொள்ளாமல் வெளியிலேயே எனக்காக நின்றிருந்தான் நண்பன். விமானத்தில் நுழைய கடைசி ஐந்து நிமிடம் இருக்கும்வரைக்கும் என்னுடனேயே இருந்துவிட்டு தன்னுடைய பெட்டியை நகர்த்தியபடி சென்ற கருணாகரனைப் பார்த்தபடி ஓரிரு நிமிடம் நின்றேன்.

”ஊர்”.

ஆறே நாட்கள்  பிரிந்து இருந்துவிட்டு மீண்டும் ஊர் பார்க்கும் மகிழ்ச்சியில் நான்.

எப்போதாவது ஊர் திரும்புவோம் என்கிற நம்பிக்கையில் எண்ணற்ற மலேசிய மக்கள்.

எப்போதுமே ஊர் திரும்ப முடியாது என்கிற எதார்த்தம் புரிந்து வாழ்வின் வலிகளைச் சுமந்தபடி கருணாகரனும் அவனது மக்களும்.

 

நன்றி : ”அந்திமழை” மாத இதழ்.

சட்டங்கள் காக்குமா சரிகாக்களை….?

படம்

அன்புத் தோழி,

இம்மடல் ஆச்சர்யமாகத்தானிருக்கும் உனக்கு. ஏன் அதிர்ச்சியாகக்கூட.

“இதுவரையிலும் பெண்ணினத்துக்காக ‘வரிந்து கட்டிக்கொண்டு’ எழுதியதெல்லாம் வெறும் வேடமோ?” என்று எரிச்சலாகக் கூட இருக்கும்.

“ஆண்களுக்கான ஒரு அப்பட்டமான வக்காலத்து” என அடிமனதில் ஆத்திரம்கூட எழும்.

என்ன செய்வது? எழுதுவது என்று வந்துவிட்ட பிறகு…. எதனோடு மோதுவது… எவரோடு மோதுவது…. என்னவாகும் விளைவு…. என்பதெல்லாம் என் புத்திக்கு உரைப்பதேயில்லை. என்ன செய்வது…. இனி எல்லாம் வல்ல பகுத்தறிவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு எண்ணியதை எழுதித்தானாக வேண்டும்.

சரிகா :

இறந்த பிறகு எல்லா இதயங்களிலும் வாழத் துவங்கியிருக்கும் ஒரு மாணவி. பெண்களைக் கேலி செய்யும் போக்கிற்குக் கிடைத்த ஜூலை மாதத்து இரை.

நாளிதழ்கள் தொடங்கி வண்ணத் தொலைக்காட்சிகள் வரைக்கும் சரிகாவுக்காக வருந்தியாயிற்று….

வழக்கு மன்றத்திற்கு வந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊரே கூடி நின்று சரிகாவுக்காக சபித்தாயிற்று…..

சட்டென்று விழித்துக் கொண்ட அரசு சரிகாக்களுக்காக சட்டம் கூடப் போட்டாயிற்று…..

சரி…. இனி எல்லாம் முடிந்தது….

மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்தியாயிற்று…

இனி அவரவர் வேலைகளுக்குப் போகலாம்.

சுபம்.

என்ன சரிதானே?

சரிகாவுக்காக வருத்தப்பட்ட பத்திரிகை, தொலைக்காட்சி, பொதுமக்கள் என எல்லோரும் பார்க்கத் தவறிய விஷயமும் ஒன்று உண்டு. பெண்களைக் கேலி செய்யும் குற்றச்செயல் என்றில்லை. எல்லா குற்றச் செயல்களிலும் நாம் காணத்தவறும் விஷயம் அது.

அதுதான் : பிரச்னையின் ஆணிவேரை அடையாளம் காணும் விஷயம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு “மனஓசை” என்கிற ஆரோக்கியமான பத்திரிக்கையில் படித்த அற்புதமான கதை ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

என்ன தோழி…. கதை என்றதும் உனது பாலபருவம் நினைவுக்கு வருகிறதா? அது இருக்கட்டும் ஒருபுறம்.. இனி கதைக்கு வருவோம்.

“ஒரு ஊரில் வாழ்ந்த மக்கள் கொசுத் தொல்லையால் பயங்கரமான துன்பத்திற்கு ஆளாகிறார்கள். என்ன செய்தும் அவர்களால் கொசுக்களை விரட்ட முடிவதில்லை. அப்போது பார்த்து ஒருவன் கொசுவலையோடு அந்த ஊருக்குள் வருகிறான். மக்கள் அவனிடமுள்ள விதவிதமான வலைகளை வாங்கி உள்ளுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். கொசுவை இவர்கள் விரட்டுவது மாறி கொசு இவர்களை விரட்டுகிறது. வாங்கிய வலையும் வசதிப்படுவதில்லை.

நாட்கள் நகர அடுத்ததாக அந்த ஊருக்குள் கொசுவத்திச் சுருள்களோடு இன்னொருவன் அறிமுகமாகிறான். இதைக் கொளுத்தி வைத்தால் போதும்… நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம்… என்று அவனது சுருள்களை விற்றுப் போகிறான். ஆனால் அந்த மக்களுக்கோ கொசுத் தொல்லையோடு புகைத் தொல்லையும் சேர்ந்ததுதான் மிச்சம். அந்தப் புகையால் கொசு மயங்கியதோ இல்லையோ அவர்கள் மயங்கியதுதான் கண்டபலன்.

மீண்டும் கொஞ்சநாள் கழித்து அந்த ஊருக்குள் மற்றொருவன் வருகிறான். புதிதாக வந்தவன் கொசுவலைகளையும் கொண்டு வரவில்லை, கொசுவத்திச் சுருளையும் கொண்டு வரவில்லை. மாறாக விதவிதமான கிரீம்களோடு வந்திருந்தான். அவன் கையிலிருந்த கிரீம் குழாய்களை மக்கள் வியப்போடு பார்த்தனர். “இனி நீங்கள் அதிக விலை கொடுத்து வலையையும் வாங்க வேண்டியதில்லை…. சுருளையும் வாங்க வேண்டியதில்லை…. இந்தக் கிரீமை உடல் முழுக்க பூசிக் கொண்டால் போதும். பக்கத்தில் வராது கொசு…..” என்று தான் கொண்டு வந்திருந்த கிரீம்களை விற்றுத் திரும்பினான். கிரீம் தடவிய மக்களோ அது ஏற்படுத்திய உடல் எரிச்சலில் கொசுக்கடியே பரவாயில்லை என்று எண்ண ஆரம்பித்தனர்.

அந்த வேளையில் ஊருக்குள்ளிருந்த உருப்படியான இளைஞர்கள் ஆறேழு பேர் மண்வெட்டி, கடப்பாறை, சட்டி சகிதம் எதிரில் வரக் கண்டனர் மக்கள்.

“இந்தக் காலை வேளையில் கடப்பாறை சட்டியோடு எங்கே கிளம்பிவிட்டீர்கள்?” என அந்த இளைஞர்களைப் பார்த்து ஊர் மக்கள் கேட்டதற்கு…. அவர்களில் ஒருவன் சொன்னான்….

“நீங்களும் இது வரைக்கும் கொசுவை விரட்ட ஏதேதோ வழிகளைக் கையாண்டு பார்த்து விட்டீர்கள். கொசுவை நீங்களும் விடுவதாயில்லை…. கொசுவும் உங்களை விடுவதாயில்லை. கொசு வலைக்காரன் பேச்சைக் கேட்டு வலை வலையாய் வாங்கி அதற்குள் நுழைந்து கொண்டீர்கள்….. விடவில்லை கொசு. கொசுவத்திச் சுருள்களை விடிய விடியக் கொளுத்தி தப்பிக்கப் பார்த்தீர்கள்….. விடவில்லை கொசு. கண்டகண்ட கிரீம்களைத் தடவி உடல்களைப் புண்ணாக்கிக் கொண்டீர்கள்…. விடவில்லை கொசு.

கொசுவலைக்காரன், கொசுவத்திச் சுருள்காரன், கொசுக்கிரீம்காரன் என எல்லோரும் உங்களால் பெரும் பணக்காரன் ஆனதுதான் மிச்சம். இவர்கள் மூவரும் கொசுவை விரட்டத்தான் வழி சொன்னார்களே தவிர கொசுவை அடியோடு ஒழிக்க வழி சொல்லவில்லை. அதுதான் நாங்கள் புறப்பட்டு விட்டோம்….” என்றனர் அந்த இளைஞர்கள்

”அடடே…. கடப்பாறையில் கொசு அடிக்கும் கலை நமக்குத் தெரியாது போயிற்றே…” என்று கிண்டல் செய்தனர் ஓரிருவர். இந்த இளைஞர்களிடம் ஏதோ ஒரு விஷயம் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஒருவர் மட்டும் சற்றே அவர்களை நெருங்கி…. “நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான். ஆனால் கடப்பாறை, மண்வெட்டி எதற்கு என்றுதான் புரியவில்லை” என்றபோது….

“கொசுவின் ஊற்றுக்கண்ணாக ஊரைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையை மூடுவதற்கு….”என்று நெத்தியடியாய் பதில் வருகிறது. ஊரே அப்போதுதான் அது குறித்து யோசிக்க ஆரம்பிக்கிறது.

ஆம் தோழி…. அதைப்போன்றே நம்மில் யாரும் ஒரு குற்றத்திற்கான ஊற்றுக்கண்ணை உற்று நோக்குவதேயில்லை. பெண்களைக் கேலி செய்பவர்களைப் பிடிக்க, மாறுவேடத்தில் காவலரை நிறுத்துவது….. தர்ம அடி கொடுப்பது….. வித விதமான சட்டங்கள் போடுவது… என்பதெல்லாம் கொசுக்கடிக்கு கிரீம் தடவுகிற வேலைகள்தான். கொசுக்களின் ஊற்றுக்கண் சாக்கடை என்பதைப் போல இந்தக் கேலி…. கிண்டல்களின் ஊற்றுக்கண் எது? என்பதைப் பார்த்தால் எல்லா விஷயமும் புரிந்து போகும். சரி தோழி…. இவை இப்படி ஒருபுறம் இருக்க நாமும் இந்தக் கேலியின் மூலம் நோக்கி முன்னேறலாமா? இனி?

ஹரி :

சென்னை மாநிலக் கல்லூரி மாணவன். இருபதே வயது. ஒரே இரவில் தமிழகத்தின் பொதுமக்கள் பலராலும்…. பத்திரிகைகளாலும் கொடூரமானவனாக சித்தரிக்கப்பட்டு விட்டவன். ஏழை கூலித் தொழிலாளியின் மகன்.

எது துரத்திற்று அவனை இக்கொலைப்பட்டத்தை நோக்கி?

எது துரத்திற்று அவனை சிறைக்கம்பிகளை நோக்கி?

எது துரத்திற்று அவனை எத்திராஜ் கல்லூரி வாசலை நோக்கி?

அவன் பிறக்கும்போதே பெண்களைக் கேலி செய்து சிறைக்குப் போகவேண்டுமென சங்கற்பம் செய்து கொண்டு பிறந்தவனா? ஏன் இப்படி மக்களது ஏச்சுக்கும் ஏளனத்துக்கும் ஆளாகிப் போனான்?

பட்டதாரியாகப் பட்டம் பெறப்போனவன் கொலைகாரப் பட்டத்தைச் சுமக்கும் அளவுக்கு அவனைத் துரத்தியது எது?

இன்றைக்கு எதுவெல்லாம் அவனைக் குற்றவாளியென குற்றம் சாட்டுகிறதோ அதுவெல்லாம்தான் அவனைத் துரத்திற்று.

‘மச்சி அவ துப்புனா எச்சி’ என பெண்களைச் சுற்றும் விடலைகளை ஹீரோக்களாக்கிய திரைப்படங்கள்….

’நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி’ எனப் பாடும் பொறுக்கிகளை உருவாக்கிய, நியாயப்படுத்திய பாடல்கள்….

’டேட்டிங் ஸ்பெஷல்’….. தழுவல் ஸ்பெஷல்….. நழுவல் ஸ்பெஷல்… என காசுக்காக எதையும் விற்றுத் தள்ளும் பத்திரிக்கைகள்….

கை வண்டி இழுக்கும் உழைப்பாளிகளைக் கூட தடுத்து நிறுத்தி ‘உங்களுக்குப் பிடிச்ச பாட்டு ஒன்ணச் சொல்லுங்க’ என செயற்கையாய் இளித்தபடி கேட்கும் தொலைக்காட்சிகள்…..

இவர்களே ஆயிரக்கணக்கான ஹரிகளை குற்றவாளியாக்கியவர்கள்.

இவர்களே ஆயிரக்கணக்கான ஹரிகளை உற்பத்தி செய்பவர்கள்.

குதிரை குப்புறத் தள்ளியதோடு நிற்காமல் குழியும் தோண்டிய கதையாய்…. ஹரிகள் பிடிபடாமல் இருக்கும்போது “கல்லூரிக் காம்பவுண்ட்”, “கழிப்பறைக் காம்பவுண்ட்” என இவர்களை ஹீரோக்களாய் வர்ணித்துவிட்டு…..

பிடிபட்டவுடன் “பிறக்கும்போதே பிச்சுவாவோடு பிறந்தவனாம் ஹரி” என்று கவர் ஸ்டோரியும் எழுதிவிடுவதுதான் அவர்கள் பாணி.

ஆக…. ஒரு குற்றத்தைப் புரிந்தவனை விட அக்குற்றச் செயலை புரிய தூண்டுகோலாய் இருப்பது மாபெரும் குற்றம் என்கிறதாம் இந்திய குற்றவியல் சட்டம்.

ஆனால் இங்கு…. ஹரிகளை சிறைச்சாலைகளுக்குள் அனுப்பி விட்டு….. பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை எழுதியவர்களுக்கு பாரதிதாசன் விருதும், ஜனாதிபதி விருதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களை இழிவுபடுத்தும் கேலி, கிண்டல்களின் உற்பத்தித் தலங்கள் எது எது என்று அரசுக்குத் தெரியாதா?

படுகேவலமான திரைப்படங்கள் எடுக்கும் நபர்களை அரசுக்குத் தெரியாதா?

படுகேவலமான பாடல்களை எழுதும் நபர்களை அரசுக்குத் தெரியாதா?

படுகேவலமான கதைகளை எழுதும் பத்திரிக்கைகளின் முகவரி அரசுக்குத் தெரியாதா?

இந்த லட்சணத்தில் ஈவ் டீசிங்கைத் தடுக்க அதிரடிப்படையாம்…. கராத்தே கற்ற பெண்காவலர்களாம்…. அதுவும் மாறுவேடத்திலாம்….. இப்பெண் காவலர்களை ஒவ்வொரு கல்லூரி வாசல்களுக்கும் அனுப்புவதற்கு பதிலாக… ஒவ்வொரு பாடலாசிரியர் வீட்டுக்கும்…. ஒவ்வொரு பத்திரிக்கை அலுவலகத்துக்கும் அனுப்பி அவர்களது கராத்தே ’கலையை’ கொஞ்சமாவது காண்பிக்கச் சொல்லியிருந்தால்…. குறைந்தபட்சம் குற்றச் செயல்களின் ஊற்றுக்கண்ணை ஆட்டம் காணச் செய்த புண்ணியமாவது கிடைத்திருக்கும்.

சமூகமே செல்லரித்துப்போய் கிடக்கும்போது அதிலிருந்து வருபவன் மட்டும் சொக்கத்தங்கமாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இந்த நூற்றாண்டின் வேதனையான நகைச்சுவை.

ஆபாச சினிமா… ஆபாச பாடல்… ஆபாச தொலைக்காட்சி…. ஆபாச புத்தகங்கள்…. என எல்லாம் அப்படியே இருக்க வேண்டும்….. ஆனால் இந்தச் சூழலில் உருவாகி வருபவன் மட்டும் புடம் போட்டவனாய் இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட வடிகட்டிய முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ராகிங்கா….. உடனே அதற்கொரு சட்டம்.

கேலி கிண்டலா…. உடனே அதற்கொரு சட்டம்.

அப்படியானால் இப்போது இருப்பில் உள்ள சட்டங்கள்……..?

இத்தகைய செயல்களை சட்டங்களால் சாதிக்க முடியாது. பிரச்னைகளின் ஆணிவேரை அடையாளம் காட்டும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களால்தான் சாதிக்க முடியும். இப்போதைய தேவை சட்டங்களல்ல. சமூக மாற்றங்கள்.

தோழி! சரிகா விஷயத்திலாகட்டும் அல்லது எந்த விஷயத்திலாகட்டும் மீண்டும் மீண்டும் ஒன்றை வலியுறுத்தவே விரும்புகின்றேன். குற்றவாளிகளைத் தண்டிப்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் எமக்குள் இல்லை. ஆனால் அதற்கும் முன்னதாக குற்றங்களை உருவாக்குகிற சூழல்கள் களையப்பட்டாக வேண்டும் என்பதே எமது கருத்து.

தொலைக்காட்சி….

திரைப்படம்….

பத்திரிக்கை…. போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் பலியாக்கப்பட்டது சரிகாக்கள் மட்டுமில்லை…. ஹரிகளும்தான்.

இனிய தோழி!,

இம்மடலுக்கான இறுதி வரிகளை இரவலாகத் தந்திருப்பவர் வேறு யாருமில்லை நமது திருவள்ளுவர்தான். ஈவ் டீசிங்கிற்கு மட்டுமில்லை…. இம்மண்ணின் அனைத்து அவலங்களுக்கும் ஆப்படித்த மாதிரி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதி வைத்துவிட்டுப் போன வைர வரிகள்தான் இனி வரும் வரிகள் :

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

( பின்குறிப்பு : ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகளுக்கு முன் (1998) “பெண்மணி” மாத இதழில் எழுதிய கட்டுரை. )

பெண்களுக்கு எதிரான யுத்தம்…..

படம்

ஆக….

கள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் இரு ஊர்களையே கருக்குவதில் போய் முடிந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பதிவுத் திருமணமும் செய்து கொண்ட திவ்யா – இளவரசன் இணையைப் பிரித்தே தீருவது என்பதில் தொடங்கிய சாதி வெறியாட்டம் நூற்றுகணக்கான தலித் மக்களது வீடுகளைக் கொளுத்தி….. அவர்களது வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி….. சொந்த மண்ணிலேயே அந்நியராக்கி….. கையறு நிலையில் கையேந்தி நிற்க வைத்திருக்கிறது.

காரணம் திவ்யா ”உயர்ந்த” சாதியாம்.

இந்த உயர்ந்தது…. தாழ்ந்தது…. இவர்கள் மேலானோர்…. இவர்கள் கீழானோர்…. என்கிற கருமாந்திரங்களையெல்லாம் காறி உமிழ்ந்துவிட்டு கண்ணியமாகக் கரம் கோர்த்த இவர்களது வாழ்வைப் பிரிக்க இங்கு எவனுக்கு யோக்யதை இருக்கிறது? அல்லது உரிமை இருக்கிறது?

கேட்டால்….. இப்படித்தான் ஒவ்வொரு ஊரிலும் செய்கிறார்களாம்…. தங்கள் சாதிப் பெண்ணை மயக்கி திருமணமும் செய்து கொண்டு பின்பு நட்டாற்றில் கழற்றி விட்டு விடுவார்களாம்….. இது நாடகக் காதலாம்….. தர்மபுரிப் பக்கம் வன்னியர்களில் சிலர் இப்படித் திருவாய்மலர்ந்தால்…. கொங்குநாட்டுப் பகுதியில் உள்ள கவுண்டர்களில் சிலரும் இப்படித் திருவாய் மலர்ந்தருளுகிறார்கள்.

பெண்களை இதைவிட யாரும் இவ்வளவு இழிவாகக் கொச்சைப்படுத்த முடியாது. தங்கள் வீட்டில் பிறந்த…. தங்களோடு வளர்ந்த பெண்களையே சுய அறிவற்றவர்களாக…. பகுத்தறியும் திறன் இல்லாதவர்களாக…. பார்க்கும் இவர்கள் மொத்தமாகப் பெண்ணினத்தையே எப்படிப் பார்ப்பார்கள் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

சரி “தங்கள் சாதிப் பெண்களை” மயக்கி…. திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விடுகிறார்கள் தங்களுக்குக் ”கீழ்” உள்ளவர்கள்” என்று குமுறுகிறார்களே…. அப்படியானால் இவர்களை விட ”உயர்ந்ததாக”ச் சொல்லிக் கொள்ளும் ஆற்காட்டு வெள்ளாளர் வீட்டிலோ அல்லது சைவப் பிள்ளைமார் வீட்டிலோ பிறந்த பெண்களை இவர்களது ஆண்கள்  காதலித்தால் அதை என்னவென்று அழைப்பார்கள்? முன்னது ”நாடகக் காதல்” என்றால் இதை காவியக் காதல் என்றழைக்கலாமோ…..?

ஒவ்வொரு சாதியும் தனக்குக் கீழாக ஒரு சாதி இருப்பதை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் தனக்கு மேலாகவும் ஒரு சாதி ஆதிக்கம் ஒளிந்திருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகின்றன. இப்படிப்  பெருமிதம் கொள்ள இயலாத சாதியாக….. சாதி மூட்டைகளிலேயே அடிமூட்டையாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் சாதி அருந்ததியர் சாதி மட்டும்தான்.

இன்று இறுமாப்போடும் கர்வத்தோடும் நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிற பல பிற்பட்ட சாதிகள் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்னர் தங்கள் சாதி பெயரை சொல்லக்கூட வெட்கப்பட்டுக் கொண்டு கூனிக் குறுகி நின்ற சாதிகள்தான். இன்றைக்கு இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து என்னென்ன இழிவுகளையும், குறைகளையும் சொல்கிறார்களோ….. அதே இழிவுகளை…. அதே குற்றச்சாட்டுகளைச் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இவர்களும் சுமந்து நின்றவர்கள்தான். அன்று ஒடுக்கப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சுமந்து நின்ற சமூக இழிவை கண்டு மனம் குமைந்து…… பொங்கி எழுந்து…… அவர்களுக்கான சமூக நீதியை சகல துறைகளிலும்  பெற்றுத்தந்தவர்கள் சாதியாளர்கள் அல்ல.

சாதி மறுப்பாளர்கள்.

ஆம் ஒவ்வொரு சமூக மாற்றத்திற்குப் பின்னாலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் ஒளிந்திருக்கிறது.

ஆக….. இதில் நாம் யார் என்பதைக் காட்டிலும்…. நாம் யாருக்காக நிற்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.

கலப்பு மணத்திற்கு அரசு ஊக்கம் அளிப்பதை விடவும்…… ”யாரேனும் இனி ”சொந்த” சாதியில்… ”சொந்த” மதத்தில் திருமணம் செய்தால் பத்தாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை” என்றொரு சட்டம் கொண்டு வர வேண்டும்.

பச்சையாகச் சொன்னால் இந்த சாதி… மதம்….. போன்ற கண்றாவிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் உண்மையிலேயே பெண்கள்தான். பெண்களைப் போன்ற ஜனநாயகப் பூர்வமான உயிரினம் உலகில் வேறெதுவும் இல்லை. மதத்தின் பேரால்…..சாதியின் பேரால்…. இனத்தின் பேரால்… என சகலத்தின் பேராலும் நடத்தப்படும் யுத்தங்களால் மூர்க்கமாகப் பாதிக்கப்படுபவள் பெண் மட்டும்தான்.

சாதியும்…. மதமும்…. ஆண்களுக்கானவை. இம் மண்ணில் பிறந்த எந்தப் பெண்ணும் தன் பெயருக்குப் பின்னால் செட்டியார் என்றோ….. முதலியார் என்றோ…. கவுண்டர் என்றோ போட்டுக் கொல்வதில்லை. தன் வீட்டில் தன்னை அடக்கி ஒடுக்கும் ஆண் என்ன நினைத்துக் கொள்வானோ என்கிற சூழலிலேயே  பெண்ணும் சாதியை…. மதத்தை நம்புபவராக நடிக்கிறார். உண்மையில் எவ்விதப் பாகுபாடும் அற்று மனித குலத்தை அணு அணுவாய் நேசிக்கும் உள்ளம் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு சாதிக்காரனும் பெண்ணை தன் வீட்டில் வளரும் ஒரு கால்நடையாகவே கருதிக் கொள்கிறான். சுருக்கமாகச் சொன்னால் அவனுக்கு பெண் ஒரு அஃறிணைப் பொருள் அவ்வளவே.

இந்த வரலாறு மாற்றி எழுதப்பட்டேயாக வேண்டும். தங்களுக்கு எதிராக இந்தச் சகல சாதி ஆண்களும் தொடுக்கும் யுத்தத்தை முறியடித்து வருங்கால வரலாற்றை எழுதப் போவது நமது பெண் இனமாகத்தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் இதுவரை எழுதப்பட்ட வரலாறெல்லாம் ஆண்களால்…. ஆண்களுக்காக…..ஆண்களே எழுதிய வரலாறு.

படம்

நன்றி : “அந்திமழை” மாத இதழ்

கிழக்கிந்தியக் கம்பெனி பார்ட் II

”நீர்தான் கட்டபொம்மன் என்பவரோ?”

”நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ?”

என எங்கேயோ கேட்ட குரல்கள் மீண்டும் இனி பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் ஒலிக்கத் துவங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை யாரும். சினிமாவில்தான் பார்ட் 2 சீசன் வரவேண்டுமா என்ன? இந்திய அரசியலிலும் இது பார்ட் 2 சீசன்தான். என்ன அன்றைக்கு ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி…. இன்றைக்கோ கிழக்கு…மேற்கு….தெற்கு எனச் சகல திசைகளிலும் நம்மை ஆப்படிக்க வரும் வால்மார்ட், டெஸ்கோ எனும் இத்யாதிகள்.

டீசல் விலை ஏற்றம் ஏன்? மண்ணெண்னை விலை ஏற்றம் ஏன்? அத்யாவசியப் பண்டங்களின்  விலை ஏற்றம் ஏன்? என்றெல்லாம் கேட்டால் “எலே கச்சா எண்ணெய்க்கு அவன் வெல ஏத்தீட்டானில்ல….பொறவு என்ன செய்ய?” என்கிறது அது. இதுக்குப் பேசாமல் ஒரு மளிகைக் கடைக்காரரையே பிரதமராக ஆக்கியிருக்கலாம்.(அவர் இவரை விடவும் நிச்சயம் சிறப்பாக இருப்பார் என்பது வேறு விஷயம்) போதாதற்கு ”வளமான எதிர்காலத்திற்காக கசப்பான முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்கிற ”அருள்வாக்கு” வேறு.

வளம் யாருக்கு?

கசப்பு யாருக்கு? என்பதுதான் கேள்வியே.

அமெரிக்காவின் வால்மார்ட் எத்தனை விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கியது….

எத்தனை வணிகர்களை தெருவில் நிறுத்தியது….

எத்தனை சிறு முதலாளிகளை தலையில் துண்டைப் போட வைத்தது….

என்பதெல்லாம் இந்தப் பொருளாதார மேதைக்குத் தெரியாது என்று நினைத்தால் நம்மை விட சுப்ரமண்யன்சாமி வேறு யாரும் இருக்க முடியாது.

தெரியும்.

ஆனால் இதுகளையெல்லாம் முன்னேற்றவா அவர் ஆக்ஸ்போர்டிலும், கேம்பிரிட்ஜிலும் படித்து குப்பை கொட்டிவிட்டு வந்தார்? போங்கப்பு.

வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பறிபோகப் போகிறது என்று அர்த்தம்.

வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் அதைச் சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகப்போகிறது என்று அர்த்தம்.

வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் அதைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் மத்தியதர வர்க்கம் கற்பனை செய்தாலும் வாங்கிவிட முடியாத அளவுக்கு உச்சத்தில் போய் நிற்கப்போகிறது என்று அர்த்தம்.

அவ்வளவு ஏன்….  ’மீதி அஞ்சு ரூபா நாளைக்குத் தர்றேன் அண்ணாச்சி….’ என்கிற உரிமையோடு வீடு திரும்பி மறுநாள் உறவோடு திருப்பித் தரும் வாழ்க்கை முறை மாறி பிளாஸ்டிக் டப்பாக்களில் இரசாயணங்களால் பதப்படுத்தப்பட்ட பண்டங்களை சொன்ன விலைக்கு வாங்கவும் முடியாமல்…. வாங்கினால் உண்ணவும் முடியாமல்…. உண்டது  செரிக்கவும் செய்யாமல்… சீரழியப்போகும் வாழ்க்கை முறை வருவதற்கான அறிகுறிதான் இந்த வால்மார்ட்.

ஆக….

ஏறக்குறைய எல்லாவற்றிலும் அந்நிய முதலீட்டிற்கான அச்சாரம் போட்டாயிற்று. ஒன்றிரண்டைத் தவிர. அதில் ஒன்றுதான் பத்திரிக்கைத் துறை. தமது துறையைத் தவிர பிறவற்றில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் பத்திரிக்கைகள் இதில் மட்டும் ஏன் அந்நியத் தலையீட்டை  எதிர்க்கிறார்கள்? அவர்கள் வந்தால் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அடியோடு சீரழித்து விடுவார்களாம்….. ஒரு முறை நீதியரசர் கிருஷ்ணய்யர் சொன்னதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. ”அவர்கள் சொல்வதும் சரிதான். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அந்நியர்கள் சீரழிப்பதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவே முடியாது. ஏனென்றால் அந்த உரிமை நமக்கு மட்டும்தான் இருக்கிறது.”

இதெப்பிடி இருக்கு?

 

 நன்றி : ”அந்திமழை” மாத இதழ்

மத்தியதர வர்க்க மகான்களுக்கு…….

படம்

னாலும் இந்தக் குசும்பு கூடாது இந்த அந்திமழை ஆட்களுக்கு. யார் எதைப் பற்றி எழுதுவது என்கிற விவஸ்தை வேண்டாமா? உழைப்பைப் பற்றி….. அதுவும் நான்….. எழுதினால் அவனவன் நிச்சயம் வாயில் சிரிக்க மாட்டான் என்பது மட்டும் உறுதி. எழுதப் போற தலைப்பைப் பற்றிச் சொன்னதுமே ஏற இறங்கப் பார்த்தார்கள் நண்பர்கள். ”எழுத்தாளா…. இந்தாய்யா டீ….. குடிச்சுட்டு உழைப்பைப் பத்தி எழுது…” என இரண்டு மணி நேரமாய் துணைவி எழுப்பிய பிற்பாடு எழுத உட்கார்ந்திருக்கிறேன் நான்.

உண்மையிலேயே இந்த உழைப்பு யாருக்குத் தேவைப்படுகிறது? அதுவும் கடும் உழைப்பு.? உழைப்புக்கேற்ற ஊதியம்… ஊதியத்துக்கேற்ற உழைப்பு….இது பலமுறை பலபக்கம் கேட்ட தாரக மந்திரம்  உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிற இடத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்தான். ஆனால் ஊதியம் இவ்வளவுதான் என ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட இடங்களில் கை ஊணி கரணம் போட்டாலும் கிடைப்பதுதானே கிடைக்கும்.

இந்த முதல்வகை மனிதர்கள்தான் சகலருக்குமான டார்கெட். கழுதைக்கு முன்னால் குச்சியில் தொங்கவிடப்பட்ட கேரட் கணக்காய் மத்திய தர வர்க்கத்துக்கும்…. உயர் மத்தியதர வர்க்கத்துக்கும் முன்னே தொங்க விடப்பட்டுள்ள கேரட்டுகள் ஏராளம். அவைகள் அதைப் பிடிக்க பாயும் பாய்ச்சல்தான் இன்றைய வாழ்க்கை(?) முறை. ”பணத்தில் பல்லு விளக்குவது எப்படி?” “பணத்திலேயே பாடை கட்டலாம் வாங்க” என பப்பல பக்கமும் ஏகப்பட்ட லேகிய வியாபாரிகள்.(பாஸ்…இதுல எதுவும் உள்குத்து இல்ல)

ஒரு மாநகரத்துத் தூய்மைத் தொழிலாளி பொருள் சேர்க்க படாதபாடு பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. நிலையங்களில் நிற்கும் ரயில்களில் ”இருந்துவிட்டு”ப் போகும் “பண்பாளர்களது” மலத்தின் மீது நீரைப் பீய்ச்சி அடித்து துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒரு தாய் பொருளாதார மேம்பாட்டுக்காய் நாய்பட்ட பாடுபட்டால் ஒரு நியாயம் இருக்கிறது. வாழும் காலத்திலேயே நரகத்தைப் பார்த்துவிட்ட அவர்கள் 24 மணி நேரம் அல்ல 30 மணி நேரம் உழைத்தாலும் அவர்கள் மீள வழி கிடைக்குமா? கிடைக்காது ஏனெனில் அவர்களுக்கு விதிக்கப்பட்டது ஊதியத்திற்கான உழைப்பு. மகனுக்கோ மகளுக்கோ வந்த காய்ச்சலுக்காக கந்துவட்டிக்கு வாங்கிய மூன்றாயிரம் ரூபாயை அடைப்பதற்குள் அவர்களுக்கு மூன்று யுகங்கள் கடந்து போகும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இருந்து  இந்தியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளுபவர்கள் இயற்கை உபாதைகளை தீர்த்துவிட்டு பணம் செலுத்தாமல் வர ஒரு சாப்ட்வேர் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த சாப்ட்வேர் என்ஜினீயருக்கான ஊதியமோ உழைப்புக்கேற்றது.

எமது நண்பர் சதீஷ் டேவிட் ஒருமுறை கேட்டார்….”ஏன் நம்ம நண்பர்கள் எல்லாம் இப்படியே இருக்கீங்க?” என்று. எங்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட மிக நல்ல மனிதர்தான் அவர். ஒருவேளை ஜிப்பை சரியாகப் போடவில்லையோ என்கிற சந்தேகத்தில்  ஒரு முறை சரிபார்த்து விட்டு… ”ஏன் எங்களுக்கென்ன?” என்றேன்.

”இல்ல நாம நெனச்சா நல்லா மேல வரலாமில்ல….”

புரியல…நல்லான்னா என்ன?ன்னு என்றேன்.

“இப்ப நீங்க எல்லாம் டூ வீலர்தான் வெச்சிருக்கீங்க…. ஏதாவது பிசினஸ் செய்தா ஒரு கார் வாங்கலாம் இல்லியா…..”

அதான் நீங்க வெச்சிருக்கீங்களே… என்றேன்.

”இருந்தாலும் உங்களுக்கூன்னு ஒண்ணு இருந்தா நல்லா இருக்குமில்ல” இது சதீஷ்.

அப்புறம்…?

“அப்புறமென்ன சின்னதா ஒரு சொந்த வீடு…..”

சரி வாங்கீரலாம்….அதுக்கப்புறம் என்றேன்.

“பியூச்சர்ல்ல ஏதாவது நோய் நொடின்னா பாத்துக்கறதுக்கு பேங்க் பேலன்ஸ்….”

ஓகே வெச்சுக்கலாம் அப்புறம் என்றேன் மீண்டும்…..

மீண்டும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார். ஒருகட்டத்தில் இடைமறித்து சதீஷ் வெறும் கமாவாவே போட்டுட்டுப் போறீங்களே….. எப்ப புள்ளி வைக்கப் போறீங்க? என்றேன். அவருக்குத் தலை சுற்றி விட்டது.

“ச்சே….உங்க கூட பேசீட்டு இருந்தா நானும் உங்க மாதிரி ஆயிருவேன்” எனக் கிளம்பிவிட்டார் நண்பர்.

எனக்கு பார்த்ததுமே சிரிப்பு வருவது இந்த “சொந்த” வீட்டுக்காரர்களைப் பார்த்துத்தான். மத்தியதர வர்க்கத்தின் ஒரே இலக்கு இதுதான். இதை அடைய வங்கி வங்கியாய் அலைந்து கண்டவர்களிடம் பல்லிளித்து முதலில் பேஸ்மெண்ட்க்கு முதல் தவணை….. கதவு, ஜன்னல் வைத்த பிற்பாடு இரண்டாவது…. எனக் கடன் வாங்கிக் கட்டி…. முப்பது வருட இன்ஸ்டால்மெண்ட்டில் மொத்தத்தையும் வாங்கி…. கட்டி முடித்த பிற்பாடாவது  ஓய்வார்கள் எனப் பார்த்தால் அதுதான் அவர்களது அகராதியிலேயே இல்லாத விஷயம் ஆயிற்றே…. புது மனை புகு விழா வைக்காவிட்டால் சொந்தபந்தங்கள் என்ன சொல்லும்? வாங்கு அதற்கும் ஒரு கடன். அதுக்கப்பறம் வெறும் ஊறுகாயை நக்கீட்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

சொந்த வீடு…. சொந்த வாகனம்…. என லட்சிய வெறி பிடித்து அலைகின்றவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ”அண்ணே! இந்த உலகமே ஒரு வாடகை வீடு. இது புரியாம ”சொந்த” வீட்டுக்கான ஓட்டம் வேறு” என்று தம்பி நா.முத்துக்குமார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

அப்பா பல்கலைக் கழகத்தின் கணக்கு அலுவலர் ஆன போதும் அவரது 24 இஞ்ச் சைக்கிளில்தான் இறுதிவரை சென்று வந்தார். அவர் பயணப்படும் வரை சொந்த வீட்டில்தான் சாக வேண்டும் என்கிற வெறியெல்லாம் ஒருபோதும் அவருக்கு இருந்த்தில்லை. வாடகை வீட்டில் இருந்துதான் அவரைத் தூக்கிக் கொண்டு போனோம். ஆனால் அவர் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்தார். பிழைப்பின் நிமித்தம் வாழ்க்கையைத் தொலைக்கவில்லை. அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது என்கிற துல்லிய வேறுபாடு அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அவரது வாழ்க்கை நதியில் விழுந்த இலையைப் போல இலகுவாக இருந்தது. நானோ வேலைக்குப் போன முதல் மாதத்திலேயே பைக் இருந்தால்தான் ஆயிற்று கடனில் துவங்கினேன் எனது ஈனப்பிழைப்பை. அஞ்சு ரூபா வட்டியில் ஆரம்பித்து…. கிரெடிட் கார்டில் பயணித்து…. கார்டுக்குப் பணம் கட்ட மீண்டும் கடன் வாங்கிக் கழித்து… வீட்டில் வைத்திருந்த பாட்டி காலத்து வெள்ளி டம்ளர்களை சத்தமில்லாமல் விலைக்கு விற்று எனத் தொடர்ந்து கடைசியில் ஐம்பது பைசா பிராங்கோடேப் மாத்திரையைக் கூட கடன் கொடுக்க முடியாது என மருந்துக்கடைக்காரர் சொன்னபோது புரிந்தது அப்பாவின் எளிய வாழ்க்கை. அவ்வேளைகளில் கள்ளம் கபடமற்ற என் நண்பர்கள் மட்டும் இல்லாது போயிருந்தால் என்றோ செத்திருப்பேன் நான்.

எப்படி வாழக்கூடாது என்பதை நான் என்னில் இருந்துதான் கற்றுக் கொண்டேன். “ஒருவன் தனது திருமணத்துக்கு வாங்கிய கடன் அவனது மூன்றாவது பிள்ளை பிறக்கும்போது கூட தீராமல் இருக்கும்” என்றார் தந்தை பெரியார். இன்றைய மத்திய தர வர்க்கம் செலவளிப்பது எல்லாமே இந்த ரகம்தான். மொட்டைக்கு…. காதுகுத்துக்கு… ஞானஸ்தானத்துக்கு ….பூப்பு நன்னீராட்டுக்கு….. கல்யாணத்துக்கு…. கருமாதிக்கு என எல்லாமே ஆடம்பரமாயிற்று இங்கே. அதனால்தான் மீண்டும் மீண்டும் பணத்தைத் தேடி ஓட வேண்டியிருக்கிறது. உழைக்கும் நேரம் போதாது போகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபக்கம் செல்வச் செழிப்பு….. மறுபக்கம் இல்லாமை….. என்பவற்றுக்கெல்லாம்  பிரதான காரணம் இந்த நாட்டின் அமைப்புமுறை. அதை அடியோடு தகர்க்க வேண்டும் என்கிற அரசியல் அரிச்சுவடி நம் முன்னே நிற்கிறது. அதற்கு ஊடான பயணத்திற்கு இடையேயும் அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது ? எனப் பிரித்துப் பார்த்து தீர்மானிக்கும் புத்தியும் நமக்குத் தேவையாய் இருக்கிறது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக எதையும் வாங்கிக் குவிக்க வேண்டியதில்லை. பாதிப்பணத்துக்குக் கிடைக்கிறது என்பதற்காக ”அந்தப் பத்து யானையையும் பந்தல்காலில் கட்டி வைத்து விட்டுப் போ” என்கிற டாம்பீகமும் அவசியமில்லை. வாழ்க்கை முறை எளிதாகும்போது தேவைகள் குறையும். தேவைகள் குறையும் போதுதான் பிழைப்புக்கான ஓட்டம் குறைந்து நமக்கான வாழ்க்கையை வாழத்துவங்குவோம் நாம்.

அந்த வாழ்க்கையை வாழத் துவங்குவதற்கு…….

24 செக் லீப்…..

ரெண்டு சாட்சிக் கையெழுத்து……

ரெண்டு சூரிட்டி என எதுவும் தேவையில்லை.

ஒரே தேவை :  “போதும்” என்கிற மனசு.

”முள் கிரீடம்”

ச்சே…. இந்த இளவட்டங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று முத்தமிழ் “அறிஞர்”…. தப்பு தப்பு…. ஐந்தமிழறிஞர் கலைஞர் எதைச் சொன்னாலும் பகடி செய்யக் கிளம்பி விடுகின்றனர்.

ஈழத்தில் விமானத் தாக்குதல்களுக்கும், கொத்துக் குண்டுகளுக்கும் தப்பி…. முள்வேலி வதை முகாம்களில் இருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் மீண்டு…. மிச்ச சொச்ச உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு அலைபவர்களைக் கரையேற்றலாம் என்று பார்த்தால் அதற்கும் விட மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தால் யார்தான் சகித்துக்  கொள்வார்கள்.?

“டெசோ” வை (அதுவாகப்பட்டது தமிழீழ ஆதரவாளர் அமைப்பு) மீண்டும் ஆரம்பிக்கலாம் என்கிற பல்லவியை பழைய ’டெசோ’க்காரர் வீரமணி லாவகமாக ஆரம்பித்துவைக்க….

ஈழப்போரில் முன் நின்று போராடிய களைப்போடு ”முத்தமிழறிஞர்” சரணமாகத் தொடர….

சுபவீ சுருதி சேர்க்கக் களை கட்டி விட்டது தமிழீழக் கச்சேரி.

இதில் எரிச்சல்படவும் ஏகடியம் பேசவும் என்ன இருக்கிறது? வரலாறு தெரியாத விடலைகள் எல்லாம் அரசியல் கதைக்க வந்தால் இப்படித்தான் இருக்கும். நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளானா நம் முத்தமிழ்க் காவலர்?

இன்று நேற்றல்ல…. ஏறக்குறைய இருபத்தி ஆறு வருடங்கள் முன்னரே இதே டெசோவை அமர்க்களமாக ஆரம்பித்து தரணி எங்கும் பவனி வந்தாரே எங்கள் ”தமிழினத் தலைவர்”….. அப்போதெல்லாம் இவர்கள் பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். ஆனால் “தெய்வாதீனமாக” எம் பெற்றோர் கிருபையால் பிறந்து வளர்ந்து இருபத்தி நான்கு வயது கொண்ட இளைஞனாய் நின்றேன் அப்போது.

தடிமாடு மாதிரி வெறும் இளைஞனாய் அல்ல.

”இலட்சியத்தில் உறுதி”யும் ”கொள்கையில் நேர்மை”யும் கொண்டு எம் தலைவர் எங்கெங்கெல்லாம் அலைகடலென ஆர்ப்பரித்து வா அடலேறே என அழைக்கிறாரோ அங்கெல்லாம் போய் நின்றேன்.

நின்று?

தமிழீழத்துக்காக 1986 ஆம் ஆண்டு தமிழ்க் காவலரால் கூட்டப்பட்ட கூட்டங்களில் நின்று….

”இலங்கையில் தமிழீழம் மலர ஆதரவு தருவேன்….

இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவேன்….

போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையில் இருந்து தவறாமல் இருப்பேன்….

தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித்த் தியாகத்துக்கும் தயராக இருப்பேன்….

இந்தக் கடமைகளைச் செய்யும் போது மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பேன்…..”

என்று தலைவர் சொல்லச் சொல்ல கூடவே ஓங்கி உறுதிமொழி

எடுத்த இளைஞனாக நின்றேன். போதுமா?

இதுதானா தலைவர் செய்த குற்றம்? இது குற்றமென்றால் ஒரு முறை அல்ல

ஓராயிரம் முறை கூட என்னுயிரை அடச்சே…. தன்னுயிரை பலியிடத்

தயங்கமாட்டார் எம் தலைவர். இதைக்கூட புரிந்து கொள்ளாமல்….(மீண்டும்

ஒரு ”ச்சே” போட்டுக் கொள்ளவும்)

என்ன செய்ய இல்லத்தைப் போலவே ஈழத்திலும் வந்த ”சகோதர”ச்

சண்டையை சாக்கிட்டு சுற்றியிருந்தவர்களுக்குக் கூட சொல்லாமல்

டெசோவுக்குப் போட வேண்டியதாயிற்று பூட்டை.

எம் கொற்றவன் குற்றம் செய்யவில்லை.

குற்றம் செய்ததெல்லாம் நம் மக்கள்தான்.

பின்னே…..?

கடலில் போட்டாலும் கட்டையாவேன்….

கரையில் போட்டாலும் விறகாவேன்…. என்றிருந்தவரை எம்.ஜி.ஆர் போன

பின்பு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து “முள்கிரீடம்” சூட்டினால் அவர்தான்

என்ன செய்வார் பாவம்?

அதுவும் அவருக்கு எப்போதும் பிடிக்காத ”முள் கிரீடம்”.

அக்கிரீடம் படுத்தியபாடுதான் நேருவின் மகளை வரவேற்று நிலையான

ஆட்சியைத் தரச் சொன்னது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் மண்டலை ஆதரித்தவரை கமண்டலக்

கட்சிக்காரர்களோடு கூட்டணி வைக்கச் செய்தது…..

அக்கிரீடம் படுத்தியபாடுதான் சொக்கத்தங்கம் சோனியாவோடு கூட்டு சேர வைத்து ஈழத்தமிழர் பிணங்களைப் பார்த்தும் அமைதி காக்க வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் லஞ்ச் பிரேக் உண்ணாவிரதம் இருக்க வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் மழை விட்டாலும் தூவானம் இருக்கத்தான் செய்யும் எனப் பேச வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் முத்துக்குமார் செத்துக்கிடந்தாலும் மகனது பர்த் டே பார்ட்டியைக் கொண்டாட வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் மருத்துவத்துகாக சாவின் விளிம்பில் தமிழகம் வந்திறங்கிய எளிய மூதாட்டி பார்வதியம்மாளை திருப்பி அனுப்ப வைத்தது…..

இப்பொழுது சொல்லுங்கள் யார் குற்றவாளி?

முள்கிரீடம் அளித்தவரா?

அல்லது அதைச் சுமந்தவரா?

டெசோவை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம்…..

யார் வேண்டுமானாலும் பொறுப்பு வகிக்கலாம்…..

ஆனால் நோக்கம் தமிழீழமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

ஆகவே தோழர்களே…..

எமது தலைவர் நிறுவனராக இருக்கும் இத்தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கு

தலைவராக ராஜபக்சே….

செயலராக சோனியா….

பொருளாளராக பொன்சேகா……

கூட இருக்கலாம்

ஏனென்றால் நமக்குத் தேவை தமிழீழம்தான்.

அதற்காக அங்கு தமிழர்கள் உயிர்வாழ வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும்

கிடையாது.

(அதுசரி ஆளே இல்லாத கடைல ஏம்ப்பா இப்பிடி டீ ஆத்திகிட்டு இருக்கீங்க?)

(நன்றி : சண்டே இந்தியன் இதழ்)

Follow

Get every new post delivered to your Inbox.

Join 127 other followers