மார்க்சீய முதலாளிகளுக்கு….!

செவ்வணக்கங்க.

பொதுவாவே உங்க கூட பேசறதுன்னாலே பயந்தாங்க.

நான் நம்மூரைப் பத்தி பேசறப்ப

நீங்க இந்த நாட்டப் பத்திபேசுவீங்க.

நான் இந்த நாட்டப்பத்தி பேசறப்ப

நீங்க வேற நாட்டப்பத்திப் பேசுவீங்க.

நானும் உங்கள மாதிரி பேசணும்னு தத்துப்பித்துன்னு நாலு நாட்டு சமாச்சாரங்களத் தெரிஞ்சிட்டு வந்தா

அப்பப் பாத்து நம்மூரு மாரியாத்தா கோயிலப்பத்திப் பேசுவீங்க.

எப்பப்பாரு இதே கூத்துதாங்க. சாகறதுக்குள்ள என்னைக்காவது ஒருநாள் ஒத்துமையா நாம ஒரே விசயத்தைப்பத்தி பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசைங்க.

உங்ககிட்டே நெருங்கறதுன்னாலே ஒரு கிலி. சும்மா இருக்காம ஒரு சந்தேகம் கேட்டா அதுக்கு பதிலா பத்து கேள்விய குடுத்து வாயடச்சிருவீங்க.

நீங்களுந்தான் இந்த ’நாட்டுல’ (மன்னிச்சுக்குங்க நீங்க ”சர்வதேச” கருத்துக்காரரு) புரட்சியக் கொண்டு வரணும்னு எவ்வள பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய போர்த்தந்தரமெல்லாம் செய்யறீங்க. ‘உகாண்டாவில் உப்புமா’ பாக்கிஸ்தானில் பச்சடி’ன்னு பல நாட்டு சமாச்சாரங்கள கரைச்சு குடிச்சிருக்கீங்க.

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

’இவுங்குளுக்கு இப்பிடிப் பேசறதுதான் ஒரே வேல…. எந்த நாட்டுலயாவது ஏதாவது பண்ணீருக்காங்களா?  கியுபாவுல சனங்க சண்டைபோட்டப்ப இவுங்க அந்த ஊர் டீக்கடைல உக்காந்து ஈ ஓட்டீட்டு இருந்தாங்க’ன்னு பேசறாங்க. அதென்னவோ நெக்கரகுவாவோ இல்ல நிக்கரகுவான்னோ ஏதோ ஒரு நாடு இருக்காமா….? அங்கியும் வேற கட்சிக்காரங்கதான் சண்டபோட்டு சதிகாரனுங்கள தொறத்துனாங்க….. அங்கியும் இவுங்க ஏதும் பண்ணல…. அப்பிடி இப்பிடின்னு ஒரே ரப்ச்சருங்க… எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சுங்க. சரி… அத உடுங்க….

நம்ம கூடங்குளத்துல அணு உலையக் கொண்டு வர்றத ஆதரிச்சே தீருவதுன்னு நீங்க முடிவு பண்ணீட்டதா கேள்விப்பட்டேன். உண்மையிலேயே  நல்ல முடிவுங்க. ஏன்னா….

ஏழை ….. பணக்காரன்

தி.க….. தி.மு.க

ஜனதா….. காங்கிரஸ்

நல்லவன்….. கெட்டவன் இப்படிப் பாகுபாடு இல்லாம அணு உலைக்காத்து ஊரையே காலியாக்கிடுமாம்.

இப்படிப்பட்ட “சோசலிசமான சாவு” கெடைக்கறதுக்கு நம்ம ஊர் சனங்களுக்கு குடுத்து வெச்சிருக்கனுங்க. இதே அமெரிக்காக்காரன் கொண்டாந்திருந்தான்னா நம்ம சனத்துக்கெல்லாம் இப்படி ”நல்ல சாவு” வரும்களா…..? என்ன இருந்தாலும் அதென்னவோ நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே ’தேக பத்தியமோ’…..? ’ஏகாதி பத்தியமோ’….? அப்படிப்பட்ட சாவு நம்ம சனங்களுக்குத் தேவைங்களா? என்ன இருந்தாலும் நம்ம ரசியா கைல சாகறதுன்னா சோசலிசமாச் சாகலாம்.

நீங்குளுந்தான் எப்பிடியாவது இந்த அணு உலைகளக் கொண்டாந்து இந்த நாடு பூரா ஒளிமயமாகனும்னு கஷ்டப்படுறீங்க…..

 

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

 

”அது” வந்தா நெறைய பேருக்கு வேலை கிடைக்கும்ன்னு நீங்க சொல்றத நானும் கேட்டேன். நெசமாலுமே ரொம்ப கரீக்ட்டுங்க இது. நம்ம ரசியாக்காரன் ஊர்ல சொர்னோபிலோ ….இல்ல செர்னோபிலோ…ன்னு ஒரு ஊர் இருக்காமா…. அந்த ஊர்ல உள்ள அணு உலை வெடிச்சப்ப பெரிய்ய்ய பெரிய்ய்ய எலிக்காப்டருல வந்து 40 டன்னு உலோகத்தூளு…. 800 டன்னு சுண்ணாம்புக்கல்லு….. 2400 டன்னு ஈயம்….. ஆயிரக்கணக்கான டன்னுள்ள காங்கிரீட்டு…. மணலுன்னு எல்லாம் மேலே இருந்து கொட்டுனாங்களாமா….?

நாம அதயவே தலைகீழா மாத்தி பெரிய பெரிய கட்டடத்துல இந்த சித்தாளுங்க வேலை செய்யறமாதிரி ஆளுக்கொரு சட்டியக் குடுத்து ‘மூடுங்கடா உலைய’ன்னா….. எத்தன லட்சம் பேருக்கு வேல குடுக்கலாம்…. அப்படியே ஊர் ஊருக்கு ஒரு உலையத் திறந்தா எத்தன கோடிப்பேருக்கு வேல கிடைக்கும்…. அதுவும் மூடற வேலை…  இதப்போயி புரிஞ்சுக்காம இங்க அவனவன் எகத்தாளம் பேசீட்டுத் திரியறானுங்க.

ஆனா… நீங்க இந்த எகத்தாளத்துக்கெல்லாம் பயந்துக்கற ஆளா? அப்படியே எவனாவது பேசினாலும் அவனப்பாத்து….

‘நீ நவீன இடதுசாரி…….

ஏகாதிபத்தியதாசன்..…

நவீன வலதுசாரி…..

ஓரங்கட்டிய வலதுசாரி….

வேட்டி கட்டாத ராகவாச்சாரி…… ன்னு எடுத்து உட்டா….

அவனவன் ஆளுக்கு ஒரு மூலைக்குப் பறந்துருவான்.

அதுக்கப்புறம், தேர்தல் வந்துச்சுன்னா… சாரி சாரியா ‘கலைஞரை’யோ…’ ‘புரட்சித்தலைவி’யையோ பாத்து…’கொஞ்சம் போட்டுக்குடுங்கன்னு’ கேட்டாப் போகுது…. இதுல நம்முளுக்கு வார்த்தைக்கா பஞ்சம்….?

காங்கிரஸ் எதிர்ப்பு……

எதிர்ப்புக்கு எதிர்ப்பு……

எதிர்ப்பில்லாததற்கு எதிர்ப்பு……

அப்படி இப்படின்னு ஜமாய்ச்சாப் போகுது.

தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் வேண்ணா……

இனவாதி….

முதலாளித்துவ அரசியல்வாதி.…

தொழிலாளர் வர்க்க விரோதி…..

’சிம்சனில் மண்டை உடைத்தவரே..

அரவங்காட்டில் சுட்டவரே…..’ன்னு ஆரம்பிச்சா போகுது..

 

இருந்தாலும்  பாருங்க தோழரே!

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

நம்மளோட ‘போர்தந்திரம்’ பற்றி இந்த சூன்யங்களுக்கு எதுவும் வெளங்காம…. இவுங்களுக்கு ஓட்டு போடறதவிட… இவங்க மாத்தி மாத்தி ஆதரிக்கிற இவங்க எஜமானர்களே தேவலைன்னு….முடிவுபண்ணி அவுங்களுக்கு ஓட்டைப் போட்டுட்டு நடையக் கட்டறாங்க…. அத நெனச்சாத்தான் மனசு நொந்து போயிருது.

‘விஞ்ஞானிக எல்லாம் வெறும் சம்பளம் வாங்குற அதிகாரிக இல்ல. அவங்கதான் இந்த நாட்டோட தூண்கள்னு..’ நீங்க பேசறதா பொட்டிக்கடை பளனிச்சாமி சொன்னான். அதையும் இந்த வெட்டிப் பசங்க உடமாட்டேங்குறானுங்க….

அப்படீன்னா….. சமீபகாலம் வரைக்கும் அதென்னவோ விவசாய ஆராய்ச்சி நிலையம்ன்னு ஒண்ணு தில்லிப்பட்டணத்துல இருக்காமா…. அங்க இதுவரைக்கும் 17 விஞ்ஞானிகளாவது தூக்குப்போட்டு….. தூக்க மாத்திரை தின்னு…… உசுர விட்டுருக்காங்களாமா? அவங்க சாவுக்கே காரணம்…. பெரிய பெரிய விஞ்ஞானிங்கதானாம்… அப்படிப் பதினேழு பேர் தற்கொலை பண்ணீருக்காங்களே…. அதுக்கு உங்க தோழருக இது வரைக்கும் ’பிட்டு நோட்டீசாவது’ அடிச்சிருப்பாங்களா……? இப்ப மட்டும் உங்காளுகளுக்கு விஞ்ஞானிக மேல ‘திடீர்ப்பாசம்’ எப்பிடி வந்துச்சு…? என்னாவது ‘போர்த்தந்தரமா’…?ன்னு நக்கலாப் பேசறானுகங்க….

இருந்தாலும் பாருங்க கொஞ்சநாளா எனக்கே உங்க மேல சில சந்தேகம் வர ஆரம்பிச்சுருச்சு. அப்புறம் மத்தவங்களுக்கு வராம இருக்கும்களா? ஆனாலும் ஏதோ நான் ‘லூஸ்’ கணக்கா இருக்கிறதுனால நம்பறேன். மத்தவங்களும் இப்பிடியே இருப்பாங்கன்னு நெனைக்க முடியும்களா….. சரி அது கிடக்கட்டும்.

புரியாமக் கெடந்த எனக்கே நெறையப் புரிய வச்சீங்க. நீங்ககூட அடிக்கடி சொல்லுவீங்களே…. அதென்ன…… ”அமைதிக்கான… அணு உலை..’ ‘ஆக்கத்திற்கான…..அணு சக்தி…..’ அப்படீன்னு… அதையும் இவனுக உடமாட்டேங்கறானுகங்க… கேட்டா….

”ஆமா…. ’அமைதிக்கான அணு உலை’தான்….

ஏன்னா…. பீரங்கிகளையும், ஏரோப்பிளேன்களையும், விதவிதமான துப்பாக்கிகளையும் வெச்சு ஈழ மக்களைக் கொல்றதையே….. ‘அமைதிப்படை’ன்னு ஏத்துக்கிட்ட இவுங்க…. இத மட்டும் ‘அமைதிக்கான அணு உலைன்னு’ ஏன் சொல்ல மாட்டாங்க?ன்னு என்னயவே திருப்பிக் கேக்கறானுகங்க…..

அதுமட்டுமில்ல…. ’இவுங்க எப்பத்தான் மக்களுக்கு ஆதரவாப் பேசியிருக்காங்க? இந்திப் பிரச்சனைல இருந்து ஈழப்பிரச்சனை வரைக்கும் மக்களுக்கு எதிராவே பேசிப் பழக்கமாயிருச்சு….. இது வரைக்கும் அவுங்களுக்கு அவங்களே குழிதோண்டற வேலயச் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க…… இப்ப கூடங்குள விஷயத்துல நடக்குறது மண்ணத்தள்ளுர வேலைதான்னு……’ வாய்க் கொழுப்பெடுத்துப் பேசறானுகங்க…. சரி…. அத உடுங்க…. நாம நம்ம விஷயத்துக்கு வருவோம்.

நம்மாளுங்க எல்லாம் சேந்து சனாதிபதியாக்கோணும்னு பாடுபட்டாங்களே….. பழைய நீதிபதி….. அதான்….. கிருஷ்ணய்யரு..…  அவுருகூட இவுங்கமாதிரித்தான் பேசறாருங்க. நல்லவேளை…..  அவரு சனாதிபதியாகுல. ஆகியிருந்தா….  இந்த நாடே இருட்டுலதான் இருந்திருக்கும்… அப்பறம் நாமெல்லாம்…. ’வீட்டுக்கு ஒரு தீப்பந்தம்னு’ ஒரு போராட்டம் ஆரம்பிக்க வேண்டி வந்துருக்கும்.

பஸ்சுல லாரில அடிபட்டா பொட்டுன்னு உயிர் போறதில்லையா? அந்த மாதிரித்தான் இதுவும்….. அதுக்காக காரு பஸ்சே வேண்டான்னு சொல்லுவமான்னு….? போட்டாலும் போட்டீங்க ஒரு போடு. எல்லாரும் அசந்தே போயிட்டாங்க. இருந்தாலும் பாருங்க….. இந்தப் பசங்க மட்டும் ஒரேடியா குதிக்கறானுகங்க.

பஸ்சுல அடிபட்டா நான் சாவேன்…. ஆனாக்கா…… என் பேரன் சாவானா?ன்னு கேக்கறாங்க. அதென்னவோ கதிரியக்கமாமா…? அது பரவுச்சுன்னா சந்ததி சந்ததியா.. புத்து நோவு வந்து சாக வேண்டி வரும்னு சொல்றாங்களே…. நெசமுங்களா…?

‘ஆனால் போர் இல்லாமலேயே அணுகுண்டு பரிசோதனைகளை நிலத்துக்கடியிலும், காற்று வெளியிலும் அணு வல்லரசுகள் இதுவரை நடத்தியவை – நடத்தி வருபவை மனித வாழ்சூழலை நாசகரமான அளவுக்கு மாசு படுத்திவிட்டது.’ அப்படீன்னு எவ்வளவு தீர்க்க தரிசனத்தோட நீங்க எழுதியிருக்கீங்க. இதப் பார்த்தாவது இவுங்களுக்குப் புத்தி வரவேண்டாம்? உங்குளுக்கு இருக்குற அக்கறைல கால் பங்காவது இதுகளுக்கு இருக்குமா?

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

அப்படீன்னா…. நம்ம நாட்டுல பெக்கரானோ……  பொக்கரானோ……  ஏதோ ஒரு எடம் இருக்காமா? அங்க மொதல் மொதல்ல ‘அகிம்சைக்காக’ ஒரு குண்டை பூமிக்கடில வெடிச்சப்ப….. இவுங்களும்….. இவுங்க கட்சியும்….. கைல ராட்டையையும் காதுல பஞ்சையும் வெச்சுட்டு இருந்தாங்களா….? அல்லது இவுங்களோட ‘பொலிட்பீரோ’வுல அனுமதி வாங்கீட்டு வந்து வெடிச்சாங்களா?ன்னு கேக்குறாங்க. நானும் உங்க கூட பழகினதோசத்துல…. ‘அது அவங்களோட தந்தரோபாயம்’ன்னு சொல்லீட்டு நடையக் கட்டீட்டங்க….

நாமும் இந்த காங்கிரசு பேசற மாதிரியே பேசிப் பேசி வீணாக் கெட்ட பேருதான் மிச்சம்.

அவுங்க பாதுகாப்பு இருக்குன்னு சொன்னா…..

நாமும் பாதுகாப்பு இருக்குன்னு சொல்றோம்.

அவுங்க அமைதிக்குத்தான்னு சொன்னா……

நாமும் அமைதிக்குத்தான்னு சொல்றோம்.

அவுங்க விலை மலிவுன்னா…..

நாமும் அதையேதான் திருப்பிச் சொல்றோம்.

இப்பிடியே பேசறதால நம்மளையும் காங்கிரஸ் கட்சிக் கிளைதான்னு சனங்க நெனச்சுக்கிட்டு  “நாங்க உங்க கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டோம்”னு ”கை”ய வேற காட்டறாங்க….. இந்தக் கர்ம்ம எல்லாம் தேவையான்னு தோணுது.

பத்தாததுக்கு….. இவுனுங்க வேற…… காங்கிரசுக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்ல. நாலும் ஒண்ணுதான்னு… நேராவே பேசறானுகங்க…

அணு உலைல இருந்து வர்ற மின்சாரம் வெல கம்மின்னு சொன்னா… அதுக்கும்….. ’கல்பாக்கம் பத்தின பொதுக் கணக்குக் குழுவப் போயி கேளு… அங்க அமல்தத்தான்னு உங்காளுதான் தலைவரு….. அவரையே கேட்டுத் தெரிஞ்சுக்கோ’ன்னு நெத்தியடி அடிக்கறானுகங்க.

இப்பிடிப் பல பக்கம் தலைவலிங்க……

நானும் உங்கள மாதிரிப் பேசி பேசியே….

இப்ப திமுக காரனும் சேத்த மாட்டேங்கறான்…..

ஜனதாக்காரனும் சேத்த மாட்டேங்கறான்…..

நெடுமாறன் கட்சிக்காரன் கூட…. ”வேண்டாப்பா….. நீ ஆளை உடு”ன்னு கையெடுத்துக் கும்படறான்….

இப்படித்தனியா பொலம்பற நெலைமைக்கு வந்துட்டேன்…..

கொஞ்சம் தப்பித்தவறி ஏதாவது சந்தேகம்ன்னு வந்து உங்காளுககிட்ட கேட்டா….. போதாததுக்கு…அவுங்க வேற என்னைய மேலயும்…. கீழயும்…  பாத்துட்டு…… ‘ஏகாதிபத்தியக் கைக்கூலின்னு’  பல்லை நறநறன்னு கடிக்கறாங்க.

உருப்படறதுக்கு ஏதாவது வழி இருந்தா கடுதாசி போடுங்க….

அப்புறம் அதையும் மறந்துட்டு…..

போர்த்தந்திரம்…..

தந்திரோபாயம்னு…… எல்லாம் சொல்ல வேண்டாம்.

ஏன்னா…

இப்பவே நான் கொளம்பிக் கெடக்கிறேன்.

பாமரன்.

 

(1990 ஆம் ஆண்டு வெளிவந்த “புத்தர் சிரித்தார்” நூலில் இருந்து)

எமது நேசிப்பிற்குரிய சோவியத் அதிபருக்கு….. !,

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒடுக்கப்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் உத்வேகமூட்டும் உன்னத தத்துவம் உமது மண்ணில்தான் முதன் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த மகோன்னத தத்துவத்தை மதிக்காதவன் மனித ரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டியாய் இருப்பான் அல்லது அவனது துதிபாடியாய் இருப்பான்.

உலகில் ஒவ்வொரு நாடும் உம்மையும் உமது மண்ணையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

சீனச்சதுக்கம் சிவப்பானது கண்டு சிரிப்பை இழந்தவர்கள், சிறிது காலம் கழித்து சிந்தும் ரத்தம் கண்டு சிரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். ரத்தம் கண்டு சிரிப்பவர்களின் சிந்தைக் கோளாறினை அறிவோம் நாம். நாம் அழும்போது அவர்கள் சிரிப்பார்கள். நாம் சிரிக்கும்போது அவர்கள் அழுவார்கள். தத்துவங்கள் சாவதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் உங்களையே உற்று நோக்குகிறான்.

காலச்சக்கரம் சுழன்று காட்சிகள் மாறும்போது ஆட்சிகளும் மாறுகின்றன.

லெனின்கிராடு ஸ்டாலின்கிராடாவதும்

ஸ்டாலின்கிராடு மீண்டும் லெனின்கிராடாவதும்

ஆட்சி மாற்றங்களே.

இருப்பினும்….

“இந்தத்தேசம்” “இந்தப்பாதை”யிலிருந்து மாறி “அந்தப் பாதை”க்குப் போய்க்கொண்டிருக்கிறது பார்த்தாயா? எனப் பக்கத்தில் வந்து கிசுகிசுப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை எமக்கு.

தனிப்பட்ட ஸ்டாலின்களுக்கோ

குருச்சேவ்களுக்கோ

கோர்ப்பச்சேவ்களுக்கோ

காவடிதூக்கத் தயாரில்லை நாங்கள்.

நாங்கள் நேசிப்பது

அந்த மண்ணை

அந்த மக்களை

அந்த தத்துவத்தை.

தத்துவம் தோற்காது.

தோற்கடிக்க முயலும்போது ஜாரைத் துரத்தியடித்த மக்கள் தூங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

தத்துவம் தோற்காது.

எனவே கோர்ப்பச்சேவ் அவர்களே !

மீண்டும் சொல்கிறோம்…….  நாங்கள் நேசிப்பது :

சோவியத்து மண்ணை.

சோவியத்து மக்களை.

பொதுவுடைமைப் பாதையை.

எனவே,

ஸ்டாலினை விமர்சிப்பதோ

குருச்சேவை விமர்சிப்பதோ

உங்களை விமர்சிப்பதோ

மனிதகுல விடிவிற்கான பொதுவுடைமைச் சித்தாந்தத்தை விமர்சிப்பது ஆகாது. அதனை வளப்படுத்தவும் பலப்படுத்தவும் ஆன முயற்சியே இது.

தங்களது மறுசீரமைப்புக் கொள்கையினையும்(பெரிஸ்த்ரோய்க்கா), பகிரங்கத்தன்மை(கிளாஸ்னஸ்து) பற்றியும் உலக மக்கள் பரபரப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இவை….. இப்படி….. இருக்க……

இனி…..,

உங்கள் உதவியோடு உருவாக இருக்கின்ற ‘அமைதிக்கான’ அணு உலைகள் பற்றி பகிர்ந்து கொள்வோமா?

கிறுக்குப் பிடித்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த “அமைதிக்கான அணுகுண்டு” பற்றியும், அவை நாகசாகி, ஹிரோசிமாவில் ஏற்படுத்திய “நிரந்தரமான அமைதி” பற்றியும் அறிவீர்கள்.

அதைப்போலவே…….

“அமைதிக்கான அணு உலை” பற்றியும்

“அமைதிக்கான அணுகுண்டு” பற்றியும்

“அமைதிக்கான ஏவுகணை” பற்றியும்

“அமைதிக்கான படை” பற்றியும்

எமது மக்கள் நன்கு அறிவார்கள்.

விஞ்ஞானி கோரஸ்மெத்வதேவ் பற்றித் தெரியும் உங்களுக்கு.

உங்கள் மண்ணிலுள்ள யூரல் மலைச்சாரலும் தெரியும் உங்களுக்கு.

ஆனால்…… அங்கு நிகழ்ந்த அணு உலை விபத்து பற்றி?

தெரியும் எங்களுக்கு.

ஐம்பத்தி எட்டில் நிகழ்ந்தது

எழுபத்தி ஆறில் தெரிந்தது.

வெளியில் வந்த கோரஸ்மெத்வதேவ் மூலமாக.

பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிவாங்கிய ஆர்மீனியப் பூகம்பத்திற்குப் பின்னர்தான் அங்கே இயங்கி(?) வந்த ‘ஆக்டெம்பர்யான்’ அணு உலை இழுத்து மூடப்பட்டது. அதுவும் மக்களது கொந்தளிப்பிற்குப் பிறகு….. ஏன் இந்த நிலை?

அணு உலைகளைப் பொறுத்தவரை சோசலிச நாடாயினும் சரி…. முதலாளித்துவ நாடாயினும் சரி….

ஒரே குரலில்தான் முழங்குகின்றார்கள்.

“அதிக பாதுகாப்பு”

”கதிரியக்கம் கட்டுக்குள்தான்” என்று.

வெடித்தபிறகுதான் முழங்கியவர்கள் முளிக்கிறார்கள். அதற்குப்பிறகு பகிரங்கமாக்குவதோ…. விசாரணைக் கமிஷன் வைப்பதோ…. இழந்த உயிர்களை மீட்டு வருமா எனச் சிந்தியுங்கள். மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை தோழரே!.

 

இருப்பினும் கோர்ப்பச்சேவ் அவர்களே !

இந்த நிலையிலும் நீங்கள்

இந்தியாவின் ஒரு மூலையிலுள்ள

கூடங்குளத்து மக்களுக்கு சோவியத்தின் பரிசாக

அளித்திருப்பது அணுஉலைகளைத்தானா…..?

அதுவும் உங்கள் நாட்டில் ஏறக்குறைய

எட்டு அணு உலைகளை மூடியதற்குப் பிறகு….?

யூரல் மலைச்சாரல் விபத்தும்

செர்னோபில் விபத்தும்

ஆர்மீனியப் பூகம்பமும்

அறிவுறுத்துவது என்ன அதிபர் கோர்ப்பச்சேவ் அவர்களே?

அங்கு இழுத்து மூடிவிட்டு வந்து

இங்கு திறப்பு விழாவுக்கு நாள் குறிக்கிறீர்களே

அதுதான் புரியவில்லை எமது மக்களுக்கு.

சோவியத்து மக்களே வீதிக்கு வந்து அணு உலைக்கெதிராகக்

குரல் கொடுக்கும் போது,

எங்கள் வீட்டிற்குள் நுழைந்து

வெடி வைக்கிறீர்களே நியாயம்தானா…..?

சோவியத் மக்களின் எழுச்சிக்குப் பணிந்து

மின்ஸ்க்,

ஒடெஸ்ஸா,

கிராஸ்னடார்,

பைலோரஷ்யா,

ஜியார்ஜியா,

அசர்பைஜான்,

ஆகிய இடங்களில் அணு உலைத்திட்டங்கள்

கைவிடப்பட்டதனை அறிவோம் நாங்கள்.

மின்ஸ்கிலும், ஒடெஸ்ஸாவிலும் உடைப்பில் போடப்பட்ட அதே உலைகள் கூடங்குளத்தில் குடியேறப்போவது கண்டு கூடங்குளத்து மக்கள் குறட்டை விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

மக்கள் கருத்தினைப் புறக்கணித்து

புதுதில்லியில் போட்ட கையெழுத்தினையோ

ஏற்பட்ட ஒப்பந்தத்தினையோ எப்போதும்

ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எமது மக்கள்.

  

நவம்பர் 19 :

 

-    இதுதான் இங்குள்ள மக்களை கூண்டோடு “கைலாசத்திற்கு” அனுப்ப

கூட்டாகக் கையெழுத்திட்ட நாள்.

மக்கள் கருத்தினைப் புறக்கணித்து ஏற்படும்

எந்த ஒப்பந்தமும் காலாவதியாகிப் போனதே அன்றி

நீடித்திருந்ததாய் வரலாறு இல்லை.

ஒப்பந்தக்காரர்கள் போன வேகத்தில்

துரத்தியடிக்கப்படுவார்கள் என்பதற்கு

ஈழமே சாட்சி.

ஒப்பந்தம்

சோவியத்து அரசுக்கும் இந்திய அரசுக்கும்தானே அன்றி

சோவியத்து மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் அல்ல.

ஒப்பந்தங்களுக்கு எப்போதும்

மண்டியிடமாட்டார்கள் மக்கள்.

ஏனெனில்

அவை

மன்னர்களுக்கிடையேயானவை

மக்களுக்கிடையேயானவை அல்ல.

 

பாமரன்.

 

(1990 ஆம் ஆண்டு வெளிவந்த “புத்தர் சிரித்தார்” நூலில் இருந்து)

வெவரங்கெட்ட விஞ்ஞானிகளுக்கு…..!,

இப்பிடிக் கூப்பிடறனேன்னு கோவிச்சுக்காதீங்க. ஏதோ உங்கள மாதிரி நாலெழுத்துப் படிக்கிலீன்னாலும் அங்கியும் இங்கியும் காதுல உளுந்தத வெச்சுத்தான் இந்தக் கடுதாசிய எழுதறேன். எனக்கு அவ்வளவாப் படிப்பறிவு கெடையாதுங்க.

அந்தக் காலத்துல எங்க அப்பத்தா நெலாவைக் காட்டித்தான் சோறு ஊட்டும். அப்பறம் நெலாவைப் பாம்பு முழுங்கறது… பாம்பைப் போட்டு கடலைக் கடையறது… அப்பிடி இப்பிடின்னு கதையெல்லாம் சொல்லும். கொஞ்சம் பெரிசாக பெரிசாக நம்மூர்ல பெரியார் வேற மூலமூலைக்கு நின்னுகிட்டு “அடப் பைத்தியக்காரா! நெலாவென்ன லட்டா? ஜிலேபியா? பாம்பு வந்து முழுங்கறதுக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கடா முட்டாப்பசங்களா…”ன்னு கன்னா பின்னான்னு திட்டீட்டு இருந்தது புரிய ஆரம்பிச்சுது.

பத்தாததுக்கு திடீர்ன்னு ஒரு நாள் உங்கள மாதிரி நாலு பெரிய மனுசனுங்க சேந்து நெலாவுலயே போய் குதிச்ச சேதி கேட்டதுமே சின்ன வயசுல கேட்ட சமாச்சாரங்க மேலெயெல்லாம் சந்தேகம் பொறந்துடுச்சு.

அப்புறம் ஒருநாளு நம்ம ஊட்டுல மாட்டீருந்த சங்கிலிக்கருப்பராயன்ல இருந்து சரசுவதி வரைக்கும் அத்தனையையும் கழுட்டி பொடக்காழில போய் போட்டுட்டு வந்தேன்.

என்ன இருந்தாலும் நீங்க என்னோட கண்ணத் தொறந்தவுங்க. நம்ம சனங்களோட முட்டாத்தனத்துக்கெல்லாம் ராப்பகலா ஆராஞ்சு பதிலு கண்டுபுடிச்சவுங்க….

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

என்னவோ நீங்களும் கூட ராக்கெட் உடறப்ப புள்ளையாருக்குத் தேங்கா ஒடச்சுட்டுத்தான் மேல உடறீங்களாமா? உங்கள மாதிரி விஞ்ஞானிங்க கூட திருப்பதில மொட்டை அடிச்சுக்கிட்டு லட்டுக்காக சண்டப் போட்டுக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதக் கேட்டதும்தான் கோபம் பத்தீட்டு வந்துருச்சு. சங்கிலிக்கருப்பராயன பொடக்காழில போட்டதுக்கு பதிலா உங்களத் தூக்கிப் போட்டிருக்கலாமோன்னு தோணிச்சு. ஆனாலும் நம்மூர் பசங்கள நம்ப முடியாது. ஏதாவது புளுகுனாலும் புளுகுவானுகன்னு தெரிஞ்சுதான் இந்தக் கடுதாசிய எழுதறேன்.

அதென்னவோ கூடங்குளத்துல அணு உலையக் கொண்டுவரப் போகுது நம்ம கவர்மெண்டு… அது வந்தா ஊரே காலியாயிடும்…. புல் பூண்டு கூட மொளைக்காது….ன்னு மொளச்சு மூணு எலை கூட உடாத பசங்கெல்லாம் பேசீட்டுத் திரியுதுங்க. ஏங்க அணு ஒலை நம்ம விஞ்ஞானத்துக்கு எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய கெவுர்த்தி. இதப் புரிஞ்சுக்காம ஆபத்து கீபத்துன்னு அளந்துகிட்டு இருக்கானுங்க சிலபேரு. ஆனா அவனுக சொல்றதுலயும் ஒண்ணு ரெண்டு நல்லது இருக்கத்தான் செய்யுதோன்னு ஒரு சந்தேகங்க….

அமெரிக்காவுல என்னமோ இந்த ஒலைகளை வருசத்துக்கு கொறஞ்சது அறநூறு தடவையாவது மூடறானுங்களாமா? ஏங்க மூடறதுக்காகவா தொறக்கிறது? ஒரு எழவும் புரிய மாட்டேங்குதுங்க. ஏதோ உங்கள மாதிரி வெவரம் தெரிஞ்ச நாலுபேரு வெளக்கிச் சொன்னாத்தானே எங்குளுக்குப் புரியும்.

“அது” வந்தா இந்த நாட்டுக்கே வெளக்குப் போடலாம்… பேக்டரி ஓட்டலாம்….ன்னு சொல்ற ஆளுங்களும் இருக்காங்க. அப்புறம் என்னங்க இந்த நாட்டுக்கே வெளக்கு வருதுன்னா ஒரு ஊரு செத்தாத்தான் என்ன? அதுவும் பொதைக்கற வேல மிச்சம்னு சொல்றாங்க. அப்படியே சாம்பலாயிருமாமா? தூக்கற வேலயும் இல்ல… பொதைக்கற வேலயும் இல்ல.

ஒரு நாட்டுக்கு கரண்டு கெடைக்குதுன்னா ஒரு ஊரையே கொளுத்தலாம்…. இந்த ஒலகத்துக்கே கரண்டு கெடைக்குதுன்னா ஒரு நாட்டையே கொளுத்தலாம். எத்தன பேரு பஸ்சுலயும் ரயில்லயும் அடிபட்டுச் சாகறானுங்க… இதுல செத்தா எவ்வளவு கவுரவம். விஞ்ஞானத்துக்காக செத்தவன்னு பேராவது மிஞ்சுமில்லீங்களா?

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

அதென்னவோ அப்பிடிக் கிப்பிடி இந்த ஒலை வெடிக்கறமாதிரி தெரிஞ்சா ராவோட ராவா ஊர்சனத்த வேற தூரத்து ஊருக்கு கொண்டுபோற அளவுக்கு நெறைய பாதுகாப்பு சமாச்சாரமெல்லாம் செஞ்சிருக்கோம்; அதனால யாரும் பயப்பட வேண்டாம்னு கவர்மெண்டு சொல்றதா கேள்விப்பட்டேங்க. இதுலதாங்க ஒரு சின்ன சந்தேகம்….. என்னடா இது இவனே இப்பிடிக் கேக்கறானேன்னு கோவுச்சுக்கக் கூடாது.

ஏங்க நம்மூர் மூலைல தீப்புடிச்சாலே இந்த பயருசர்வீசு வர்றதுக்கு ஏழு மணி நேரமாவுது….. வந்தாலும் தண்ணி வந்தா பைப்பு கழுண்டுரும்…. பைப்பு செரியா இருந்தா தண்ணி வராது…. எல்லாஞ் சேந்து வர்றதுக்குள்ள தீ தானா அணஞ்சுரும். அப்புறம் எப்பிடீங்க இந்த ஒலைல ஏதாவுதுன்னா நாங்க உங்கள நம்பீட்டு உக்காந்திருக்கிறது? ஏதோ கேக்கோணும்னு தோணுச்சு கேட்டுட்டேன்…. சரி அத உடுங்க….

உலைல கெடக்கற கசடாமா….? அது பேரு புளூட்டோனியமோ என்னமோ…. அதுல இருந்து ஏதோ சக்தி வெளியே வந்துட்டே இருக்கும்னு சொல்றாங்க. அந்தக் காத்து நம்ம மேல பட்டாலேயே கண்ட கண்ட நோவெல்லாம் வரும்னு சொல்றாங்களே…. இது நெசந்தாங்களா?

ஆனா அதுக்கும் வழி இருக்கிறதா நம்மூர்ல பேசிக்கிறாங்க. அந்தக் கசட பத்திரமா எடுத்துட்டுப்போயி பொதைச்சிருவாங்க…. இல்லேன்னா நம்ம நாயர் கடை பார்சல் மாதிரிப் பண்ணி கடலுக்குள்ள  கடாசிருவாங்கன்னு கேள்விப்பட்டேன்.

உங்குளுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு….

நீங்குளுந்தான் இந்த சனங்க உசுரக் காப்பாத்தறதுக்காக தலைல இருக்குற மசிரெல்லாம் போயி பாடாப்படறீங்க….

இருந்தாலும்  பாருங்க….

இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….

கசடைத் தூக்கி கடலுக்குள்ள போட்டா என்னைக்காவுது அதுல ஓட்டை விழுந்துச்சுன்னா மீனெல்லாம் சாகும்…. அதத் தின்னா நம்ம சனமெல்லாம் சாகும்னு சொல்றானுகங்க. ஏங்க….  இவனுக மீன் புடிக்க வேற எடமே கெடைக்காதா….? கடல்தான் கெடைச்சுதா….? ஏன் நம்மூர் வாலாங்கொளம் மாதிரி வேற ஏதாவது கொளத்துல மீன் புடிச்சா போதாதா….? அப்பிடி அதுலயும் தீந்து போச்சுன்னா நம்ம கெவர்மெண்டே ஊருக்கு ஏழு கொளம் வெட்டி அதுக்குள்ள மீனைக்கொட்டி நம்ம “பஞ்சாயத்து ராசு” மாதிரி “மீன் ராசு”ன்னு ஒரு திட்டம் கொண்டாந்தா எல்லாம் செரியாயிடுங்க…. இது புரியாம இவனுங்க…..

என்னமோ…. எந்த உலையா இருந்தாலும் முப்பதே வருசந்தான் ஆயுசு…. அதுக்கு அப்பறம் அதை சமாதி மாதிரி காங்கிரீட்டு போட்டு மூடி காவல் வேற வெக்கணும்…. அதக் கட்டறத விட மூடறதுக்கு பல மடங்கு செலவாகும்…. அப்பிடீன்னெல்லாம் சொல்றாங்க…. அதிலிருந்து வர்ற கதிரியக்கக் காத்தாமா….. அதுவேற பத்தாயிரம் வருசம் வரைக்கும் அடிக்கும்னு வேற சொல்றாங்க…. அப்ப ஒண்ணு பண்ணுங்க….. “நம்ம” தலைவருக்கு ஓட்டுப் போடாத ஊராப் பாத்து உலையை ஆரம்பிச்சிருங்க….

அது ஓடவும் வேண்டாம்….

அத மூடவும் வேண்டாம்….

ஒரேடியா அந்த ஊரையே மூடீறலாம். இப்பிடியே ஒவ்வொரு ஊரா மெரட்டுனா போதுங்க…. அப்புறம் ஊரென்ன…… நாடே நம்ம கைல….. ஏன்…. இந்த உலகமே நம்ம கைல… எப்புடி நம்ம “ஐடியா”?

இந்தக் கடுதாசிய எழுதி முடிக்கறப்ப இன்னொரு சமாச்சாரம் கைக்குக் கெடைச்சதுங்க. அதுவும் நீங்களே எழுதி  வெளியிட்டதுங்க. ஆனா…. அது கெடைச்சப்பறந்தாங்க கொளப்பமே அதிகமாயிடுச்சு…..

தப்பித்தவறி உலைல இருந்து கதிரியக்கம் கெளம்பீடுச்சுன்னா….. ஜீப்புல மைக்கக் கட்டீட்டு ஊர் ஊராப் போயி தெரியப்படுத்துவோம்னு போட்டிருக்கீங்க…..

ஏங்க….. கதிரியக்கம் கெளம்பீருச்சுன்னு தெரிஞ்சவுடனே எந்தப் பயலாவது ஜீப்பை ஊருக்குள்ள ஓட்டுவானுங்களா…..? இல்ல ஊரை உட்டே ஓடுவானுங்களா….?

சரி….. அது கெடக்கட்டும்…. அப்புடி என்னாவது சந்தேகம்னா அவுங்கவுங்க ஊட்டு ரேடியோப் பொட்டியையும், டீவீப் பொட்டியையும் தெறந்து கேளுங்கன்னு போட்டிருக்கீங்க…..

ஏங்க…. இந்த நாட்டுல என்னைக்காவுது  டீவியும் ரேடியோவும் உண்மை பேசி கேட்டுருக்கீங்களா? பெரியவர் செயப்பிரகாசு நாராயணன் குண்டுக் கல்லாட்டம் உயிரோட இருந்தப்பவே நம்மூர் ரேடியோ அவரைக் கொன்னு போட்டுது. ஊர்ல ஏதாவது பிரச்சனை….. கடையடைப்புன்னா….. ரோட்டுல திரியற கழுதை….. மாடு…. இதையெல்லாம் பாத்துட்டு உங்க ஆளுங்க பஸ்சுகள் பறந்தன….. ரயில்கள் மிதந்தன…. ”மாமூல்” வாழ்க்கை கெடவில்லை….ன்னு கப்சா உடுவாங்க. இந்த லட்சணத்துல நீங்க டீவீயையும் ரேடியோவையும் கேக்கச் சொல்றீங்களே….. இது உங்குளுக்கே நாயமாப் படுதா…..? வேண்ணா ஒண்ணு பண்ணச் சொல்லுங்க….. டீவீலயும் ரேடியோவுலயும்….உலைகள் பத்திரமா இருக்கு. கதிரியக்கம் துளிக்கூட வெளியேறல….” அப்பிடீன்னு சொல்லச் சொல்லுங்க…. அப்பத்தான் சனங்க துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஊரைக் காலி பண்ணுவாங்க.

சரி…. இதுவும் கெடக்கட்டும்….. ஊட்டுல இருக்குற சன்னல்…. கதவையெல்லாம் இறுக்கமா மூடீட்டு உள்ள இருக்கச் சொல்றீங்க…..

சரிதான்…. ஆனா இங்க சனங்க ஊடே இல்லாம நாயும் பன்னியும் மாதிரி பசில பராரியா சுத்தீட்டு இருக்குறப்ப எப்புடீங்க ஊட்டுக்குள்ள பூந்து கதவச் சாத்தறது…..சன்னலை மூடறது? கண்டவன் ஊட்ல பூந்தா கதவச் சாத்த முடியும்? அப்பிடியே ஊடே இருந்தாலும் ஓடே இல்லாம….. மழை வந்தா தலைக்கிட்டயும் கால்கிட்டயும் கக்கத்துலயும் ஓட்டைச் சட்டிகளை வெச்சுட்டுக் கெடக்குற எங்கள மாதிரி சனங்க எதப்போயி அடைக்கிறது? எதப்போயி மூடறது? அப்படீன்னா…. ரோட்டோரமாப் படுக்குறவனும்….. பாட்டுப்பாடிப்     பொழைக்கிறவனும்…..    கழைக்கூத்தாடியும்……. எங்க போயி ஒடுங்குவாங்க…..? யார் ஊட்ல பதுங்குவாங்க…..?

இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் நம்ம நாட்டுக்கு அவமானமா இருக்குதுன்னு ஒருவேளை இந்தத் திட்டமோ என்னவோ…. ஆனா இதுக்குப் பதிலா ஊடில்லாம இருக்குற இதுகள ஓட்டீட்டுப் போறதை விட உலைக்குள்ளயே தூக்கிப் போட்டா…. ஏழ்மைய ஒழிச்ச மாதிரியும் இருக்கும்…. ஏழையவே ஒழிச்ச மாதிரியும் இருக்கும்.

இருந்தாலும் உங்குளுக்கு நல்ல மனசுங்க.

எது எப்பிடியோ ஊரைச் ”சுத்தம்” பண்றதுன்னு நீங்க தீர்மானிச்சாச்சுன்னா அதுக்கு “அப்பீலே” கெடையாதுங்க. அந்தக் காலத்துல பிளேக் நோவு வந்து ஊரையே தூக்கீட்டுப் போனாப்பல இந்தக் காலத்துல பிளேக்குக்கு அப்பனா அணு உலை வருது.

இந்த மடம் இல்லைன்னா வேற எந்த மடமாவது போக வேண்டியதுதான்….

அதுக்கும்….

உங்க விஞ்ஞானம்…..

உசுரோட உட்டு வெச்சா….

பாமரன்.

 

(1990 ஆம் ஆண்டு வெளிவந்த “புத்தர் சிரித்தார்” நூலில் இருந்து)

புத்தர் சிரித்தார்…..

ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு மற்றொரு புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது  கூடங்குள மக்களது வாழ்க்கையில். 90 களில் இம்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த அநேகம் பேர் ஓசையின்றி காணாமல் போனார்கள். (அதில் நானும் ஒருவன்).

தமிழ்ச் சமூகத்திற்குத்தான் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றனவே…. சமூக நீதி, சாதீயம், ஈழம் என…… அதில் ஏதோ ஒன்றில் ஒன்றிப்போயிருக்கலாம் நம்மவர்கள். அவற்றைப் போலவே இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது கூடன்குள மக்களது அவலமும்.

தலித் மக்கள் மீதான பரமக்குடி படுகொலைகள் எப்படி இன்னமும் பலரது கேளாச் செவிகளை எட்டவில்லையோ…. அப்படி கூடங்குள மக்களது கூக்குரலும் தமிழகத்தின் பிற பகுதி மக்களது மனதை உலுக்கவில்லை.

1986-1987 வாக்கில் ”வேண்டாம் மரணதண்டனை” என தமிழகம் முழுக்க கருத்தரங்கம்…. கையெழுத்து இயக்கம்….. பள்ளி, கல்லூரிகளின் வகுப்பறைகளில் நுழைந்து பரப்புரைகள்….. என நமது தோழர்கள் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்(சர்வதேச பொது மன்னிப்பு இயக்கம்) வாயிலாக செயல்பட்டபோது ஏறிட்டும் பார்க்கவில்லை எண்ணற்றோர். 90 களின் பிற்பகுதியில் நம்மவர்களுக்கே அத்தண்டனை என்றபோது எழுந்த எழுச்சியில் எம் கரங்களையும் அதனோடு இணைத்துக் கொண்டோம்.

“புத்தர் சிரித்தார்” நூலினை 1990 ஆம் ஆண்டு வெளியிட்டபோது அதைக் கண்டுகொண்ட பத்திரிக்கைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று : கோவை ஞானியின் “நிகழ்”. மற்றொன்று : ”கணையாழி”.

திருட்டு வி.சி.டி.கூட ப்ளாப் ஆகிப் போன தமிழ் சினிமாவைப் போல எவராலும் கண்டு கொள்ளப்படாத அந்த “புத்தர் சிரித்தார்” இனி ஒவ்வொரு திங்களும், வியாழனும்  இணையத்தில் உங்களை வலம் வரும்.

(அதுக்கு நாங்களாடா கெடச்சோம்? எனப் புலம்பிப் பயனில்லை. நாயோட படுத்தா உண்ணியோடதான எந்திரிக்கணும்?  

”எல்லாம் வல்ல” நம் அணு விஞ்ஞானிகள் உம்மை காப்பாற்றக் கடவார்களாக!.)

இனி…..

 

வசர அவசரமாக வந்தார் அந்த நண்பர்.

வந்த வேகம் அவரது மூச்சிறைப்பில் தெரிந்தது.

”உங்களுக்குத் தெரியுமா? வி.பி.சிந்தன் இறந்து விட்டாராம். பேப்பரில் போட்டிருக்கு” என்றார்.

அப்படியா? எப்படி? என்றேன்.

சொன்னார். அத்தோடு நில்லாமல்

”பாத்தீங்களா எவ்வளவு நல்ல சாவுன்னு?”

புரியாமல் நிமிர்ந்து பார்த்தேன். சொன்னார்.

“இங்கிருந்து போய் மாஸ்கோவுல செத்திருக்கார். நினைக்கவே சிலிர்க்கிறது” என்றார்.

மாஸ்கோவில் சாவதற்கும் சிலிர்ப்பதற்கும் சம்பந்தம் என்ன இருக்கிறது என்றேன்.

கேட்டதுதான் தாமதம்.

“புரியாம பேசாதீங்க தோழர். ஒவ்வொரு தோழரும் சாவைக் கண்டு அஞ்சல. ஆனா அப்படிப்போற உயிர் சோவியத் யூனியன் மடியில போற மாதிரி இருந்தா எவ்வளவு சந்தோஷத்தோட போகும்….. இது புரியாம….”

உண்மையில் எனக்குப் புரியவில்லைதான்.

ஆனால் இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருந்தது எப்படியோ சோவியத் யூனியனுக்கே எட்டியிருக்கும் போலிருக்கிறது.

உண்மையிலேயே உலகெங்கும் உள்ள மக்களின்

உள்ளத் துடிப்பினை சோவியத் யூனியன்

உணர்ந்திருந்ததனை உணரவில்லை நான்.

இப்படி ஒவ்வொருவரும் சோவியத் யூனியனுக்கே வந்து “சொர்க்க லோகம்” போக வேண்டும் என ஆசைப்பட்டால் சோவியத் யூனியனே சுடுகாடாகிவிடுமே எனும் அச்சத்தில் ஆலோசனைகள் நடத்தி அறிஞர்களுடன் அளவளாவி அரிய வழியினைக் கண்டு பிடித்தனர் அணுகுண்டு அறிஞர்கள்.

அதுதான் :

உலகெங்கும் உள்ள மக்களின்

உன்னத வேண்டுகோளுக்கு இணங்கும்

அதே நேரத்தில் அவர்கள்

சோவியத் யூனியனுக்கு வந்து சிரமப்பட்டுச் சாவதைவிட            

மிக எளிய முறையில் அங்கே

பழைய இரும்புக் கடைகளில் போட வேண்டிய

அணு உலைகளை எல்லாம் ஆங்காங்கே

உள்ள நாடுகளுக்கு அனுப்பி வைத்தால்

“சமத்துவமான சாவு” அனைத்து மக்களுக்கும்

பரவலாகப் போய்ச் சேரும் என முடிவு செய்ததன்

விளைவே :

“கூடங்குளத்திலும் அணு உலைகள்.”

ஐம்பெரும் ஐடியாக்கள்….

பொதுக்குழு பரபரப்பு

தி….க்கு            மு…..க்காடும்           க…..ட்சி?

திமுக இப்போது  செய்யவேண்டிய முக்கிய ஐந்து சீர்திருத்தங்கள் என்ன? என்று அரசியல் சமூக விமர்சகர்கள், எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். சில தீவிரமான, உபயோகமான, கிண்டலான யோசனைகள் கிடைத்தன.

ஞாநி,  விமர்சகர்

  
1  திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்குவது. அதாவது மு.க.ஸ்டாலின் நீங்கலாக மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.

2  ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியில் குடும்ப ஆதிக்கத்தைத் தடுப்பது. தந்தை மாவட்டச் செயலாளர் என்றால் மகனும் பொறுப்பில் இருப்பதை தடை செய்ய வேண்டும். அவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.

3 ஒரு முறையான உட்கட்சித் தேர்தலை நடத்தவேண்டும். அந்தத் தேர்தலை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன்னிலையில் நடத்தலாம்.

4  கட்சித் தொண்டர்களுக்கு ஐம்பதுகளில் நடத்தியதுபோல வாசக சாலைகள் ஏற்படுத்தவேண்டும். திராவிட இயக்கம் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் வரலாறு பற்றிய வகுப்புகளை நடத்தவேண்டும்.

5  கட்சியில் யார் எந்தப் பொறுப்புக்கு வந்தாலும், அவர்கள் ஓர் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் சொத்துக்கணக்கைக் காட்டவேண்டும்.

 

 

 

 

 

பாமரன்,  விமர்சகர்

1   திராவிடர்களுக்கான சகல தேவைகளையும் கழகம் பூர்த்தி செய்துவிட்டபடியால் திமுக என்கிற அதன் பெயரை சோமுக என்று மாற்றம் செய்யவேண்டும். (அதாகப்பட்டது சோனியா முன்னேற்றக் கழகம்)

 2   பேரன் பேத்தி, மாமன் மச்சான், கொழுந்தனார் நாத்தனார் தவிர வேறுயாரும் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிக்குப் போட்டியிடக்கூடாது.

3 சினிமா எடுப்பது, பத்திரிகை நடத்துவது, டிவி காட்டுவது தொடங்கி, ஆணுறைக்கான கம்பெனி வரைக்கும் குடும்ப உறுப்பினர்களே நிர்வாக இயக்குனர்களாக இருந்து தமிழ்ப்பண்பாட்டை  மானாட மயிலாட பாணியில் காப்பாற்ற வேண்டும்.

4  உண்மை அறியும் சோதனைக் கருவியை பொதுக்குழு வாசலில் பொருத்தி மாநில சுயாட்சி, ஈழ விடுதலை, மீனவர் பிரச்னை, மொழிப் பிரச்னை, இடஒதுக்கீடு பிரச்னை என ‘கண்றாவி’ பிரச்னைகள் குறித்தெல்லாம் இன்னமும் யாரேனும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்.

5  மேற்கண்ட நான்கு தீர்மானத்தையும் எதிர்ப்பவர் எவராக  இருந்தாலும் அவர்கள் இனத்துரோகிகள், குடிகெடுக்க வந்த கோடாரிக்காம்புகள் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தை விட்டு பார்வதியம்மாள் பாணியில் நாடுகடத்தப்பட வேண்டும்.

 

 

 

 

நாஞ்சில் நாடன், எழுத்தாளர்

 

 1  திராவிட இயக்கத்தின் அடிப் படைக் கோட்பாடுகளை மீண்டும் கடைப்பிடிக்க முயலவேண்டும். திமுக என்ற இயக்கத்திற்காக ரத்தமும், வியர்வையும் சிந்தியவர்களின் தியாகத்தை பரிசீலனை செய்யவேண்டும்.

2  ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகத் தோற்றமளிக்கும் திமுகவை மறுபடியும் மக்கள் நலன் சார்ந்த இயக்கமாக உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

3  எல்லா அரசியல் தலைவர்
களுக்கும் குடும்பங்கள் உள்ளன. ஆனால் குடும்ப நலன்களை மட்டுமே முன்னிறுத்தாமல் தமிழ்நாடும், தமிழ் மக்களும்தான் தமது குடும்பம் என்பதை திமுகவின் கட்சித்தலைமை உணரவேண்டும்.

4  ஈழம் சார்ந்த திமுகவின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டும்

5 வெறுமனே மேடைப்பேச்சு, கோஷங்கள் ஆகியவற்றைவிட்டு தமிழ் மொழி, பண்பாட்டுத் துறையில் உண்மையான வளர்ச்சிக் கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

 

 

 

இமையம், எழுத்தாளர்

 

   1  திமுக படிப்படியாக தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிவந்திருக்கிறது. அக்கட்சி மீண்டும் தன்னுடைய வேர்களை மீட்டெடுக்க வேண்டும்.

2 மாவட்டச் செயலாளர்கள் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக மாற்றப்பட வேண்டும்.

3  அமைச்சர்களாக இருப்பவர்கள் கட்சியில் முக்கிய பதவியோ, மாவட்டச் செயலாளர் பதவியோ வகிக்கக்கூடாது.

4  மாவட்டச் செயலாளர்களின் மகன்கள், மனைவிகளின் புகைப்படம் போட்டு சுவரொட்டிகள் ஒட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

5  யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழ்நிலை திமுகவில் உருவாகவேண்டும்.

 

 

 

 

 

கலாப்ரியா, கவிஞர்

1  எங்கள் பதின் பருவத்தில், எங்களைப் போன்றவர்களை, திராவிட இயக்கம் ஈர்த்தது போன்ற சூழலை, இன்றைய இளைஞர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.அவர்கள் இன்று அடைந்துள்ள பல சமூக நீதிகளுக்கு தி.மு.க முக்கிய காரணம் என்று அவர்கள் உணராதிருக்கிறார்கள். அதற்கு தொண்டனை வைத்துதான் கட்சி என்ற ஆதி மனோபாவம் பலப்பட வேண்டும்.

2  மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோஷம் ஒரு நிகழ்வாய் உருப்பெறத் தொடங்கி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது.  உண்மையான ஒரு ஃபெடரல் அமைப்பை உருவாக்கத் தவறியதாகவே உணர்கிறேன். அதற்கு இப்போதும் வாய்ப்பு உள்ளது .

3  ஊடகங்கள் சித்தரிக்கிற, பொதுப்புத்தி சார்ந்த ‘குடும்ப அரசியல்’ குறித்த எதிர்மறைக் கருத்துகள் பற்றி உள்ளபடியே ஆராயவேண்டும்

4   ஈழப்பிரச்சினையில் மத்திய அரசின் (அது காங்கிரஸ் ஆனாலும் சரி வேறு எந்த ‘தேசியக் கட்சி ஆனாலும் சரி) அணுகுமுறைகள் முற்றிலும் தவறானது என்று  மத்திய அரசுடன் எந்த சமரசமும் இன்றி உணர்த்தவேண்டும்.

5  ‘வீழ்வது நாமாக இருந்தாலும்.வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற கோஷத்தை அதே அக்கறையுடன் இனி யார் காப்பாற்றப்போகிறார்கள், என்ற கவலை பரவலாக உள்ளது. இதற்காக அறிவார்ந்த தளத்தில் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தயாராக வேண்டும்.   

நன்றி : சண்டே இந்தியன் இதழ் (ஜூலை 12, 2011)

திக்கெட்டும் திட்டுக்கள்…


 ”உனக்கு எழுதறத விட வேறென்னய்யா வெட்டி முறிக்கிற வேலை? ஒவ்வொரு தடவையும் உன் வலைப்பக்கமா வந்து வெறுப்பேறிப் போறதுதான் கடுப்பா இருக்கு” என ஏகப்பட்ட “பாராட்டுரைகள்” எல்லா பக்கமிருந்தும்.

 

எல்லாம் சரி பண்ணீர்லாம் நண்பா… ஜூன் ரெண்டாவது வாரத்துல இருந்து நமது வலைக்கென்றே ஒரு புதிய தொடர் தொடங்கீட்டாப் போகுது. அதுக்கு பட்டாசா ஒரு தலைப்ப மட்டும் அனுப்பி வையுங்க.

 

அதுக்கு இடைல மனச நெருடுன “மாற்றான் தோட்டத்து கனகாம்பரங்களில்” இருந்து கொஞ்சம்…

 

முதலாவதாக…..

 

நீதியின் கண்களை திறக்க முற்படும் நம் அன்புத் தம்பி பேரறிவாளனின் நியாயக்குரல்……

 

என் குரலைக் கேளுங்கள்

பேரறிவாளன்


அனைவருமே எதிர்த்து நின்றாலும்
சரியானவை சரியானவையே; அனைவருமே ஆதரித்து நின்றாலும் பிழையானவை பிழையானவையே”

உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்தச் சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.

அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்து கொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு கண்கள் என அறிமுகம் செய்துகொள்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறெல்லாம் அறிமுகம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இருந்தாலும் எனது விருப்பத்திற்கு மாறான அறிமுகம் ஒன்று என்மீது திணிக்கப்பட்டுள்ளது. அதுவே, ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தூக்குத் தண்டனை கைதி அ.ஞா. பேரறிவாளன். ஆம். இதுவே எனது இன்றைய தவிர்க்கமுடியாத அடையாளம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களைப்போலவே தெருக்களில் திரிந்த சாதாரண மனிதனை திடீரென பயங்கரவாதியாக, கொடூர கொலைகாரனாக சித்தரித்தது பேரவலமாகும். ஒரு தமிழனாகக் கூட அல்ல; ஒரு மனிதனாக சக மனிதர்கள் துன்பத்தில் உழல்வது கண்டு துடித்தெழுவதும் கொலைக்குற்றமாகிவிடும் என ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.

உங்களுக்கு ஒன்றை வெளிப்படையாக நான் சொல்ல விரும்புகின்றேன். எனது வாழ்வின் எந்த நிலையிலும் ராஜிவ் காந்தியை மட்டுமல்ல; எந்த மனிதரையுமே கொல்ல கடமையாற்றியதும் இல்லை. அதுகுறித்து மனதளவில் கருதிப் பார்த்ததும் இல்லை. நான் நேசித்து ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் தந்த சுயமரியாதை கொள்கையும் பார்ப்பன எதிர்ப்பும் என்னை கொலைகாரனாக சித்தரிக்க ஆதிக்கச் சக்திகளுக்குக் கிடைத்த முதல் ஆயுதம் எனில் தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழினம் மேற்கொண்ட தற்காப்புப் போர்மீது கொண்ட  என் தீராப்பற்று அடுத்த காரணமாயிற்று.

மின்னணுவியல்  மற்றும்  தகவல் தொடர்பியலில் பட்டயக்கல்வி ( Diploma in Electronics and Communication ) முடித்திருந்தேன் என்ற ஒரே காரணத்தால் புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிக்கு ஆட்பட்டு 19 வயதில் நான் ஒரு வெடிகுண்டு நிபுணராக செய்தி ஊடகங்களால் சித்திரிக்கப்பட்டேன். ஆனால் அந்த வெடிகுண்டு குறித்து இன்றுவரை புலனாய்வு செய்யவே முடியவில்லை என்கிறார் வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்து  ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி கே. ரகோத்தமன்.

ராஜிவ் கொலையில் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 17 பேருக்கு ‘தடா’ சட்டத்தின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையும் பதிவு செய்தவர் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையின் கொச்சி பிரிவு காவல் கண்காணிப்பாளர் தியாகராஜன். இவரது நம்பகத்தன்மையை விளக்க கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அபயா கொலையுண்ட வழக்கு போதுமானது. 1993 ஆம் ஆண்டு நடந்த அபயா கொலையினை ‘தற்கொலை’  என முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், அவருக்குக் கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தாமஸ்வர்கிஸ் தனது பதவியையே துறந்தார். 16 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு அக்கொலை வழக்கு துப்பறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு அருட்சகோதரியின் வழக்கிலேயே சிலரைக் காப்பாற்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்துள்ளார் எனில், ராஜிவ் கொலை போன்ற பெரிய வழக்கில் எவ்வாறெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை இவர் தயார் செய்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்னர் என்மீது பூசப்பட்ட கொலைகார சாயம் இன்று மெல்ல மெல்ல வெளுத்து வருகிறது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சரி, அதற்கு முன்னர்  அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவிலும் சரி, இதைவிட மனிதநேயத்திற்கு ஒவ்வாத சட்டமே இல்லை எனக் கூறும் அளவிற்கு கொண்டு வரப்பட்ட தடா எனும் கொடூரச் சட்டத்தின் துணைகொண்டு ஒரு பெருங்கதை என் போன்ற அப்பாவிகளுக்கு எதிராக புனையப்பட்டது. இறுதியில் ராஜிவ் காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றம் முடிவுக்கு வந்த பின்னர், அச்சட்டத்தின் கொடிய பிரிவுகளை மட்டும் பயன்படுத்தி என்னை தண்டித்துவிட்டது. தனக்கு ‘மாமூல்’ தரவில்லை என்ற ஒரே காரணத்தால் நடைபாதை கடை வியாபாரி ஒருவனை பயங்கரவாதி யென அறிவித்து ‘தடா’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த கொடுமை வடமாநிலம் ஒன்றில் நடந்தேறியதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.

சாதாரண பெட்டிக் கடையில் கிடைக்கும் 13 ரூபாய் மதிப்பிலான பேட்டரி செல் இரண்டு வாங்கித் தந்ததற்காக ஒரு மனிதனுக்கு தூக்கு வழங்கப்படுமெனின், அவனது 20 ஆண்டுகால இளமை வாழ்வைப் பறிக்க முடியுமெனின் இவ்வுலகில் நீதியின் ஆட்சி குடிகொண்டிருக்கிறதா என்ற ஐயப்பாடு எழுகிறது. ஆம். அரசியல் சதுரங்கத்தில்    அரண்மனை  கோமான்களைக் காக்க வெட்டுப்பட்ட சிப்பாயாக வீழ்ந்து கிடக்கிறேன்.

எனது வழக்கில் மூடிமறைக்கப் பட்ட உண்மைகளை விளக்கி நான் எழுதிய கடிதங்கள் “தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்”  என்ற பெயரில் நூல் வடிவில் வெளியிடப்பட்டு துவரை தமிழில் மட்டும் 6 பதிப்புகளாக 11,700 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளது. தற்போது மே 18 அன்று வேலூரில் ஏழாம் பதிப்பு வெளிவரவுள்ளது. ஆங்கில மொழி யில் 3500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் அதன் இந்திப் பதிப்பு மிக அண்மையில் வெளிவர உள்ளது. இவையெல்லாம் மிக தாமதமாகவேனும் உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.

உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும் மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர். கிருட்டிண அய்யர், எனது குற்றமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு மேதகு குடியரசுத் தலைவர் அவர் களுக்கும் மாண்புமிகு தலைமை அமைச்சருக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருமதி சோனியா அவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் எனது நீண்ட வலிமிகுந்த போராட்டத்திற்கான வெற்றிகளாகும். மும்பை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் எச். சுரேஷ் அவர்களின் கடிதமும் எனது ஊர் சட்டமன்ற உறுப்பினரின் கடிதமும் எனது பள்ளி ஆசிரியர், எனது ஊர் பொதுமக்களின் ஆதரவான செயல்பாடுகளும் உடைந்துபோன என் உள்ளத்திற்குக் கிடைத்த அருமருந்தாகும்.

எனது வேண்டுகோளெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ராஜிவ் காந்தியை அரசியல்வாதியாக விமர்சனம் செய்கிறவர்களை மட்டுமல்ல; அவரை மிக ஆழமாக நேசிக்கும் மனிதர்களையும் நான் கேட்க விரும்புவதெல்லாம் ராஜிவ் காந்தி யின் உயிர்ப் பலிக்கு ஈடாக அக் குற்றத்தில் எப்பங்கும் வகிக்காத குற்றமற்ற ஒரு மனிதனின் உயிர் பலியிடப்பட வேண்டுமா? அவ்வாறான அநீதிக்கு மனித நேயமிக்க நீதிமான்களான நீங்கள் உடன்படமாட்டீர்கள் என நம்புகிறேன்.

அன்பிற்குரியோரே! அரசியல் செல்வாக்கும், பணபலமுமற்ற இந்த சாமானிய மனிதனின் உண்மைக் குரலின் பக்கம் சற்று உங்கள் செவிகளைத் திருப்புங்கள். என் தரப்பு உண்மைகள் உங்கள் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுமெனில், எனது விடுதலைக்காக உங்கள் வலிமை யான குரல்கள் எழட்டும். குற்றமற்ற கடைக்கோடி மனிதனின் உள்ளக் குமுறலை உலகம் புரிந்து கொண்டது என வரலாறு குறிக் கட்டும்.

நீதி வெல்லட்டும்.

 நன்றி : சண்டே இந்தியன் – மே 18 – 2011

http://www.thesundayindian.com/ta/story/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81%EF%BF%BD%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/60/552/

யுத்த தந்திரம்…

”தோழரே!” என்றுதான் எல்லோரையும் இன்று வரை அழைப்பது எனது வழக்கம். அதைக்கேட்டதும் நெகிழ்ந்து பார்ப்போரும் உண்டு. நமட்டுச் சிரிப்பு சிரிப்போரும் உண்டு.

சிலர் நேரடியாகவே “நீங்க கம்யூனிஸ்டா?” என்று கேட்ட பிறகுதான் என் அடிவயறு கலக்க ஆரம்பிக்கும். கேட்பவர் எந்தக் ”கம்யூனிஸ்ட்டை” மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்….? அப்படியானால் இனி இவர் நம்மை எப்படிப் பார்ப்பார்….? என்றெல்லாம் மனசுக்குள் கேள்விகள் ஓடத் துவங்கும்.

அந்த நேரம் பார்த்து….. தகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்த உள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்” நினைவுக்கு வர….. ஐய்யய்யோ நான் அந்தக் கம்யூனிஸ்ட் இல்லீங்க…. நான் வேற… அந்தத் தத்துவம் பிடிக்கும்…. அதைச் செதுக்கிய மார்க்சைப் பிடிக்கும்…. அதனை செயல்படுத்திய லெனினைப் பிடிக்கும்….. ஆனால் இவுங்களைப் பிடிக்காதுங்க….. என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஆரம்பித்து விடுவேன்.

எப்படி ஏற்பட்டது இந்த நிலை? மார்க்சிம் கார்க்கியின் ”தாய்” படித்து…. ஜூலியஸ் பூசிக்கின் “தூக்குமேடைக் குறிப்புகள்” வாசித்து…. நிரஞ்சனாவின் “நினைவுகள் அழிவதில்லை”யை சிலாகித்து…. ராகுல்ஜியின் “பொதுவுடைமை என்றால் என்ன?” நூலை மனப்பாடம் செய்து….. மூலதனம்…. உற்பத்தி….. உழைப்பின் பாத்திரம் என ஒவ்வொன்றுக்காய் அர்த்தம் தேடி ஓடி வளர்ந்த நான் அப்படி இவர்களை மறுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

அதற்குப் பின்னணியில் “ஏகாதிபத்திய சதி” ”குட்டி முதலாளித்துவ சக்திகளின் தூண்டுதல்” என ஏதுமில்லை.

அதற்குக் காரணமே அவர்கள்தான். அதாவது உள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்”. அல்லது மார்க்சிய லெனினியர் பார்வையிலோ…. மாவோவினர் பார்வையிலோ பச்சையாகச் சொன்னால் போலிக் கம்யூனிஸ்டுகள்.

மாமேதை லெனினோடு தங்களை ஒப்பிட்டு கற்பனை செய்து கொண்டு… அவர்  ”டூமா”வைக் கைப்பற்றியது போல் தாங்களும் பாராளுமன்றத்தைக் கைப்பற்றி அதை அம்பலப்படுத்தப் போகிறோம் என ஆரம்பத்தில் ”போர்க்களம்” புகுந்தவர்கள்தான் இவர்கள். பாராளுமன்றத்தை இவர்கள் அம்பலப்படுத்தினார்களோ இல்லையோ ஆனால் பாராளுமன்றம் இவர்களை அம்பலப்படுத்தி விட்டது.

77 பாராளுமன்றத் தேர்தலில் இடதுகள் தி.மு.க.வோடு. காரணம் காங்கிரஸ் எதிர்ப்பு. காங்கிரசின் அப்போதைய வளர்ப்பு மகன் வலதோ தாயோடு. பிற்பாடு வந்த சட்டமன்றத் தேர்தலில் எமர்ஜென்சியை ஆதரித்த எம்.ஜி.ஆரோடு இடது இணைந்து கொள்ள… வழக்கம்போல் வலது காங்கிரசோடு பிணைந்து நின்றது.

அடுத்து வந்த இரண்டரை ஆண்டுகளிலேயே(1980) எமர்ஜென்சி சிறைக் கொடுமையால் இறந்து போன சிட்டிபாபு…. சாத்தூர் பாலகிருஷ்ணன் என சகலமும் டோட்டல் அம்னீஷியாவில் தகர்ந்து போக நேருவின் மகளோடு ”நிலையான ஆட்சி”க்காக கை நீட்டினார் ”அடக்குமுறை எதிர்ப்பாளர்” எம்பெருமான் கலைஞர். இடதுசாரி ஒற்றுமையை உலகுக்கு ஓங்கி ஒலித்திட வலது இடதும் இப்போது எம்.ஜி.ஆர்.அணியில்.

நகர்ந்து போன நான்காண்டுகளில் 1984ம் வந்து சேர நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதும் வலதும் தி.மு.க. அணியில். வாத்தியார் இறந்த பிறகு வந்த குடுமிபிடி தேர்தலில்(1989) சேவலோடு சேர்ந்திசை பாடிய ஜெ.வோடு வலது. திண்ணை காலியாகிய திருப்தியில் இருந்த தி.மு.க.வோடு இடது காம்ரேடுகள்.

1989 பாராளுமன்றத் தேர்தலில் ஜெ.வுக்கு டாட்டா காட்டிவிட்டு வலதுகள் தி.மு.க.வுக்கு பொட்டி தூக்க…. இடதோ அணி மாற முடியாத களைப்பில் அதே அணியில்.

இதுக்கு மேலயும் நடந்த எழுபத்தியெட்டாயிரம் தேர்தல்களில் யாரு எந்தப் பக்கம் சாய்ஞ்சாங்க…. அதுக்கு என்ன வியாக்கியானம் குடுத்தாங்க என்றெல்லாம் எழுதிக்கொண்டே போனால் அப்புறம் நான் 108 இல் போக வேண்டியதுதான்.

ஆனால் உங்களுக்குள் எழும் கேள்வி என்னவென்று புரிகிறது.

ஈழத்தில் இனப்படுகொலையே வெறித் தாண்டவமாடினாலும்….. ”முதல்ல எங்க கிளை முடிவு பண்ணனும் தோழர்…. அப்புறம் மாவட்ட தப்பு தப்பு ஜில்லா கமிட்டி முடிவு பண்ணனும்….. அதற்கப்புறம் மாநிலக் கமிட்டி முடிவெடுக்கும்….. பிற்பாடு அதை மையக்கமிட்டி அலசி ஆராஞ்சு முடிவு சொல்லும்” என ஆற அமர வெத்திலை பாக்கு போட்டுக் கொண்டு பேசிய காம்ரேடுகள்(வலது அப்போது கொஞ்சம் விதிவிலக்கு) புர்ர்ச்சித்தலைவி தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து ஒரு எத்து எத்தியதும் எந்தக் கமிட்டியைக் கூட்டி முடிவு பண்ணிவிட்டு விஜயகாந்த் ஆபீசில் போய் அடைக்கலம் ஆனார்கள்? செங்கோவணம் காற்றில் சிதறடிக்க விஜய்காந்த் அலுவலகம் நோக்கி காவடி தூக்கியபடி ஆலாய்ப் பறந்து போனார்களே அது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில்?

ஜெயலலிதாவோ…. கருணாநிதியோ….. விஜயகாந்தோ….. குறைந்தபட்சம் தங்கள் ஈகோவுக்காக ஆவது உறுதியாக நிற்பார்கள். ஆனால் பெரிய்ய்ய்ய்ய்ய பெரிய்ய்ய்ய்ய புத்தகங்களையும்…… தத்துவங்களையும் கரைத்துக் குடித்தவர்கள் கேவலம் பத்துப் பதினைந்து சீட்டுகளுக்காக எவரிடம் வேண்டுமானாலும் கையேந்துவதா?

இதுதானே ஜெண்டில்மேன் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வி?

தப்பு கண்ணியவான்களே தப்பு.

மூன்றாவது அணிக்காக விஜயகாந்திடம் மட்டுமல்ல…..

நான்காவது அணியாக ஒன்றை சிம்பு என்கிற சிலம்பரசன் அறிவித்தாலும் ”பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்களை மீட்பதற்காக” அவரோடும் அணி சேர்வார்கள் அவர்கள்.

அவ்வளவு ஏன் ஐந்தாவது அணியாக அனுஷ்க்கா ஒன்றை அறிவித்தாலும் அதிலும் அணி சேர அவர்கள் தயார்.

அதுதான் யுத்த தந்திரம்.

லால்சலாம் சகாக்களே.

நன்றி: சண்டே இந்தியன் இதழ்

அவர் பெயர் சுஜாதா….

அவர் பெயர்: சுஜாதா 

வயது : 12 

ஊர் : இராமநாதபுரம் அருகேயுள்ள உப்புக்கோட்டை 

”நடந்த” சம்பவம் : ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இச்சிறுமியை அதே பள்ளியில் படிக்கும் கார்மேகம் என்ற மாணவன் 6.4.1997 அன்று கடத்திச் செல்கிறான். அதன்பின் சுஜாதாவுக்கு என்ன கதி ஏற்பட்டது என்பது யாருக்கும் தெரிவதில்லை.

மகளைக் காணவில்லை என்று  அவரது தந்தை சேவுகன் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் தருகிறார்.

விசாரிக்கிறது போலீஸ்.

குற்றவாளிபெயர் :கிருஷ்ணமூர்த்தி  

தொழில் : ஆட்டோ ஓட்டுநர் 

செய்த ”குற்றம்”: சிறுமி சுஜாதாவைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது. பிற்பாடு அவரது உடலை 5 லிட்டர் பெட்ரோல் கேன் கொண்டு சுடுகாட்டில் எரித்தது.

இந்தப் படுபாதகச் செயலுக்கு துணை நின்ற பழனி என்பவரையும் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீஸ்.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லாத சுஜாதாவின் தந்தை சேவுகன் ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், தொண்டி போலீசின் வழியிலேயே வழக்கைக் கொண்டு செல்கிறார்கள். கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோர் மீது சுஜாதாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், கார்மேகம் கடத்தியதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறார்கள்.

இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டு காலமாக நடந்து வந்த வேளையில்….

யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக 11.10.2006 அன்று ”படுகொலை செய்யப்பட்ட” சுஜாதாவே தன் கணவர் மற்றும் கைக்குழந்தை சகிதம் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக…

வெட்கித் தலைகுனிகிறார்கள் போலீசாரும் நீதித் துறையினரும்.

தற்போதைய நிலவரம் : பொய் வழக்கில் சித்ரவதைக்குள்ளாகி 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலைந்த இளைஞர்கள் 2 பேருக்கும் தலா ரூ ஒரு லட்சம் இழப்பீடாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் வழங்க வேண்டும். சித்ரவதை செய்த போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

அப்படியாயின்….

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கொடுத்த வாக்குமூலம்….?

கொலை செய்ததாக கொடுத்த ஒப்புதல்….?

ஒரு வேளை விசாரணையும் விரைந்து நடைபெற்று… உச்சபட்ச தண்டனையாக மரணதண்டனையும் விதிக்கப்பட்டு…. அதன் பிற்பாடு சுஜாதா கோர்ட்டுக்கு வந்து நின்றிருந்தால்?

யாருக்குக் கவலை இதன் மீதெல்லாம்?

“முறையாக” விசாரித்து…. ”முறையாக” வழக்குத் தொடுத்து…. ”முறையாக” விசாரணை நடைபெற்ற இந்த வழக்கின் கதியே இதுவென்றால் ”என்கவுண்ட்டர் கொலை” வழக்குகளின் கதி?

தவறு செய்தவர்கள் யாராயினும் நிச்சயம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். ஆனால் அது எந்த வழியில்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

                                         கோவையில் பள்ளி செல்லும் இரு பிஞ்சுகள் குதறிக் கொல்லப்பட்டதைக் கேட்டதும் பதறாத உள்ளம் இருந்திருக்கவே முடியாது. இதைக் கண்டு கலங்காதவர்களும்…. கண்டிக்காதவர்களும்…. மனித இனத்திலேயே சேர்த்தி இல்லை என்பதில் சந்தேகமே கிடையாது.

அந்த மொட்டுகளின் வாழ்வை சிதைத்த கொடூர குற்றவாளிகள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உரியவர்கள். நீதியை விரைந்து நிலைநாட்டவும்…. வழக்கு நேர்மையாகவும் துரிதமாகவும் நடைபெறவும் கோவை நகர மக்களது ஒத்துழைப்பு அத்தியாவசியத் தேவை.

நாம் அந்தப் பிஞ்சுகளின் மரணத்திற்கு உண்மையிலேயே வருந்துகிறோம் என்றால் அந்த ஒத்துழைப்புதான் நீதியை விரைந்து நிலைநாட்ட துணை நிற்கும்.

அதற்காக “எண்கவுண்ட்டர்” கொலைகளுக்கு நாம் பட்டாசு வெடிப்பதும்…. இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவதும்… போலீசாருக்கு பணத்தைக் குறிப்பிடாமல் காசோலையை கொடுப்பதற்குச் சமம்.(BLANK CHEQUE). நாளை அது நம் மீதும் திரும்பாது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது.

பிஞ்சுகளைக் கொன்ற பாதகர்கள் மிக மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அந்த தண்டனையை விரைவான விசாரணையின் மூலம் வாங்கித் தர ஒத்துழைப்பதே நம் அனைவரது கடமையும். அதற்காக குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜின் ”மோதல் சாவு”க்கு பட்டாசு வெடிப்பதல்ல நம் வேலை.

அந்தச் சாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால் நாமும் ஒரு வகையில் மோகன்ராஜுக்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

மோகன்ராஜ்கள் இப்படி காமவெறியும் கொலை வெறியும் கொண்டு அலைந்ததற்கு நமது மீடியாக்களும் ஒரு மிக முக்கியக் காரணம். நாளிதழ்கள்…. வார இதழ்கள்…. தொலைக்காட்சி சேனல்கள்… என அனைத்திலும் தவறாது இடம்பெறும் ஆபாசங்களும், வக்கிரங்களும் எளிய மனிதர்களைக்கூட கிரிமினல்களாக மாற்றுவதில் போய் முடிகின்றன. சம்பவங்கள் நடந்த பிற்பாடு அதற்கு பலியானவர்களை பிரதான குற்றவாளிகளாக முன் நிறுத்திவிட்டு பின் ஒளிந்து கொள்கின்றன இந்த மீடியாக்கள்.

இந்த நேரத்தில் எனக்கு மரியாதைக்குரிய இயக்குநர் மகேந்திரன் அவர்களது ”உதிரிப்பூக்கள்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிதான் நினைவுக்கு வருகிறது. மற்ற மனிதர்களுக்கு துன்பத்தைத் தருவதை மட்டுமே ”லட்சியமாக” வைத்திருக்கும் விஜயனை ஊர் மக்களே ஒன்று சேர்ந்து விரட்டிப் போய் ஆற்றில் குதித்து சாகச் சொல்வார்கள். அப்போது விஜயன் பேசும் அந்த இறுதி வசனம்தான் என் மனதுக்குள் இப்போதும் ஓடுகிறது.

அது:

”நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இன்னைக்கு உங்க எல்லாரையும் நான் என்னப்போல மாத்தீட்டேன்.

நான் செஞ்ச தவறுகள்லயே பெரிய தவறு அதான்.”

ஆம்….

நாம் ஒருபோதும் மோகன்ராஜ்களாக ஆக வேண்டாம்.

அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் நல்ல மனிதர்களாக ஆவோம்.

அதுதான் கற்கால மனோபாவங்களில் இருந்து நம்மை விடுவித்து நாகரீக உலகை நோக்கி நடைபோட வைக்கும்.

இதையே தத்துவமேதை ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளில் சொல்வதானால்……

“நான் மிருகத்தனமாய் இருந்து 

என்னை முறியடிக்க நீங்களும் 

மிருகத்தனமான முறையையே உபயோகித்தால் 

நீங்களும் என்னைப்போலவே  

மிருகமாகி விடுகிறீர்கள்.

 

 

நன்றி : ”த சண்டே இந்தியன்”(The Sunday Indian)

வரலாற்றுச் “சிரிப்பு” மிக்க வாக்குறுதி…

ஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப இவன் 2010 க்கு வர்றது? நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது? என்று எரிச்சல் கூட வரலாம்.

ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்?

ஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்…..

”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது.

அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல வேண்டுமானால் நாம் மீண்டும் 1947 குச் செல்ல வேண்டும்.” என்று நாம் கடந்த இதழில் கூறியிருந்தபடி இப்போது அதில் அடியெடுத்து வைப்போம்.

அந்த நாள்தான் அக்டோபர் 24. அன்றுதான் குறிப்பிட்ட மூவாயிரம் பழங்குடியினர் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரில் நுழைகிறார்கள்.

மன்னர் அரிசிங் இந்தியாவோடு இணைய விரும்பாமலோ அல்லது எந்த முடிவும் எடுக்க தீர்மானிக்க இயலாத நிலையிலோ இருந்த நேரத்தில்தான் இவர்கள் நுழைகிறார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட எல்லைக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் இந்துக்களும், சீக்கியர்களும் நுழைய….. இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய இரு புறமும் கொலை, கொள்ளை, தீவைப்பு. இந்தத் தாக்கம் ஜம்மு பகுதியிலும் தொற்றிக் கொள்ள…. அப்போது நுழைந்தவர்கள்தான் அம்மூவாயிரம் பழங்குடியினர்.

இந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் அங்கீகாரம் இல்லாவிட்டாலும் ஆசி இருந்தது. காப்பாற்ற வந்ததாகச் சொன்னவர்களே காஷ்மீரின் பல பகுதிகளிலும் வன்முறையில் ஈடுபட இசுலாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என அனைவரும் இப்பழங்குடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இதில் பாரமுல்லா எனும் நகரத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் மூவாயிரம் பேர்.

இந்த வேளையில்தான் கலவரக்காரர்களை விரட்டியடிக்க மன்னர் அரிசிங் இந்திய உதவியை நாடுகிறார். இந்த உதவி காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் கிடைக்காது என்பது பள்ளிச் சிறுவனுக்குக்கூட தெரியும். அப்புறம் இது மாட்சிமை தாங்கிய மன்னருக்கு தெரியாமலா இருக்கும்.

தெரிகிறது.

புரிகிறது.

1947 அக்டோபர் 26 ஆம் தேதி மன்னருக்கும் இந்தியாவுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

அதன்படி பாதுகாப்பு…. வெளியுறவு…. தகவல் தொடர்பு…. இம்மூன்றில் மட்டும்  இந்திய அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொள்கிறார் மன்னர்..

”ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பிறகு மக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்பே இந்த இணைப்பை இறுதியானதாக ஏற்றுக் கொள்வோம்” என்று மறுநாள் இந்தியாவும் பதிலுக்கு ஒரு அறிக்கை வெளியிடுகிறது.

பிறகு இந்தியப்படைகள் சிறீநகரில் நுழைந்ததும்…..

பள்ளத்தாக்கில் ஊடுருவல்காரர்கள் நுழைந்துவிட்டார்கள் என கேள்விப்பட்டு மன்னர் பரம்பரை நிர்வாகத்தை தேசிய மாநாட்டுக் கட்சியினரிடம் ஒப்படைத்து விட்டு ஜம்மு நோக்கி ஓட்டம் விட்டதும்……

சேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியினர் இந்துக்களையும், இசுலாமியர்களையும் அணி திரட்டி பாலங்களுக்கும், சொத்துக்களுக்கும் பாதுகாப்பளித்ததும்……. ஏறக்குறைய அறிந்த செய்திகள்தான்.

இவற்றுக்கு மத்தியில்  நவம்பர் இரண்டாம் நாள் அகில இந்திய வானொலியில் உரையாற்றிய பிரதமர் நேரு “ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் அம்மாநில மக்களால் தீர்மானிக்கப்படும் என்கிற வாக்குறுதியை மீண்டும் உறுதிபடுத்துகிறேன். அமைதி நிலைநாட்டப்பட்ட உடனேயே சர்வதேச பார்வையாளர்கள் தலைமையின் கீழ் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.” என்று மீண்டும் ஒரு முறை அடித்துச் சத்தியம் செய்கிறார்.

இந்திய ராணுவம் ஊடுருவல்காரர்களை பாகிஸ்தான் எல்லைக்குள் விரட்டியடிக்க…..பாகிஸ்தான் ராணுவமோ இந்திய எல்லைக்குள் நுழைந்து சண்டையிட போர் உருவாகிறது.

போரின் முடிவோ காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதில் போய் முடிகிறது.

ஊடுருவ வந்து பாகிஸ்தான் கைப்பற்றிய ஒரு பகுதியை ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என்று இந்தியா அழைக்க……

உதவ வந்து இந்தியா மீட்ட மற்றொரு பகுதியை “இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்” என்று பாகிஸ்தான் அழைக்க….

அக்பர் தொடங்கி அரிசிங் வரைக்கும் எண்ணற்ற ராஜபரிபாலனைகளைப் பார்த்த காஷ்மீர் மக்கள் வாழ்க்கையில் இனம்புரியாத இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது.

அதுவரையில் மன்னர்களது குத்துகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ”ஜனநாயக” கும்மாங்குத்துக்களை அனுபவிக்கும் ”பாக்கியம்” அப்போதுதான் வாய்க்கிறது.

காஷ்மீரின் ஒரு பகுதியை மீட்ட நேரு தலைமையிலான இந்திய அரசு  ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்ததற்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு உறுதிமொழியை ஐ.நா.சபையிடம் சமர்பிக்கிறது. அந்த நாள்தான் 1947 டிசம்பர் 31. அந்த உறுதிமொழி இதுதான்.:

“ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை அரசியல் அறுவடை செய்து கொள்ள இந்திய அரசு பயன்படுத்துகிறது என்ற தவறான கருத்தை அகற்ற பின்வரும் செய்தியை இந்திய அரசு தெளிவாக முன் வைக்கிறது. அதாவது, படையெடுப்பாளர்கள் விரட்டப்பட்டு இயல்புநிலை நிலைநாட்டப்பட்ட உடனேயே அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே சுதந்திரமாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வாக்கெடுப்பு அல்லது நேரடி வாக்கெடுப்பு என்ற சனநாயக வழிமுறைகள் மூலம் மக்களின் விருப்பம் முடிவு செய்யப்படும். சுதந்திரமான, நியாயமான நேரடி வாக்கெடுப்பிற்கு ஐ.நா.சபையின் மேற்பார்வை அவசியப்படும்.”

இதுதானய்யா அந்த வரலாற்றுச் சிரிப்பு மிக்க வாக்குறுதி.

ஆக இன்னமும் படையெடுப்பாளர்கள் விரட்டப்படவில்லை…. அன்று தொடங்கி இன்று வரை இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை…. அதனால் அம்மாநில மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் நேரம் கனியவில்லை… அதனாலேயே நேரடி வாக்கெடுப்பு நடத்த முடியவில்லை….. இதுதான் பல ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருந்த ஒரே பல்லவி.

நேரடி வாக்கெடுப்பு நடந்தால் காஷ்மீர் மக்கள் நம் பக்கம்தான் சாய்வார்கள் என நாக்கைத் தொங்கப்போட்டபடி பாகிஸ்தானும் அதற்கு தலையாட்டியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 47 இல் நடந்த யுத்தம்….. 65 இல் நடந்த யுத்தம்…… 71 இல் நடந்த யுத்தம்…. இவற்றின் போதெல்லாம் பாகிஸ்தான் பக்கம் கனவிலும் தலைவைத்துப் படுக்காத காஷ்மீர் மக்களைப் பற்றி அது அறிந்து வைத்திருந்தது அவ்வளவுதான்.

இந்தியாவைத் தொடர்ந்து ஐ.நா.வும் தன் பங்குக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்மானத்தை 1948 இல் நிறைவேற்றியது. “சண்டையிடுவதற்காக அம்மாநிலத்திற்குள் நுழைந்த பழங்குடிப் படையெடுப்பாளர்களும், அம்மாநிலத்தில் வசித்து வராத ஏனைய பாகிஸ்தான் தேசிய இனத்தவரும் அம்மாநிலத்திலிருந்து வெளியேறுவதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உள்ளூர் அரசாங்கத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச இராணுவத்தை மட்டுமே இந்திய அரசு ஜம்மு காஷ்மீரில் வைத்திருக்க வேண்டும். இணைப்பு பிரச்சனையின் மீது அம்மாநில மக்கள் வாக்களிப்பதற்குத் தேவையான முழு சுதந்திரத்தையும், சூழ்நிலையையும் இரு நாட்டு அரசாங்கங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.”

ஆனால் அவ்வளவு லேசுப்பட்ட நாடுகளா இந்தியாவும்…. பாகிஸ்தானும்….? வெளிப்பார்வைக்கு வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டாலும் இரண்டுக்கும் உள்ளூர ஒரு பயம். இரண்டு நாட்டுக்குமே இந்த மக்கள் அல்வா கொடுத்து விட்டால் என்ன செய்வது என்றுதான்.

அப்புறம் நேரடியாவது….. மறைமுகமாவது……? அப்படியே தொடர்கிறது கதை.

மன்னனிடம் இருந்து விடுபட்டு காஷ்மீர் மக்கள் தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வது என்பதில் தொடங்கிய கதை பிற்பாடு இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்னையாக விரிவடைந்து…. அப்புறம் இருநாட்டுக்குமான பாதுகாப்புப் பிரச்சனையாக பரிமாணம் எடுத்ததில் போய் முடிந்தது.

முதலில் காஷ்மீரிகளின் கதி அக்பரின் கைகளில் இருந்தது…..

அப்புறம் சில முகலாய மன்னர்கள் அதை வைத்திருந்தார்கள்…..

பிற்பாடு சீக்கியர்கள் வைத்திருந்தார்கள்….

அடுத்து டோக்ரா இந்து மன்னன் வைத்திருந்தான்…..

அதற்கும் பிற்பாடு இந்தியா பாகிஸ்தான் நாடுகள் வைத்திருந்தன……

அது சரின்னே…. அப்ப இந்த ரெண்டு நாடுகள வேற யாருன்னே வெச்சிருந்தா? என கரகாட்டக்காரனில் செந்தில் கேட்டதைப் போல யாரேனும் கேட்டால்…?

அதற்கும் இருக்கிறது பதில். அதுதான் அமெரிக்க-சோவியத் வல்லரசுகள்.

ஆம் 1953 க்குப் பிறகு தங்களது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்க வந்த அமெரிக்காவோடு பாகிஸ்தான் கொண்ட காதலும்….. சோவியத் யூனியனோடு இந்தியா கொண்ட மையலும்….. இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையாக உருமாறிப் போயிருந்த காஷ்மீரப் பிரச்சனையை அமெரிக்கா- சோவியத் பிரச்னையாக தடம் மாற்றிப் போட்டன.……

இவ்வளவுக்கும் மத்தியில் “பணிவானவர்கள்….. கோழைகள்” என வர்ணிக்கப்பட்ட காஷ்மீரிகள் ஆயுதப் போராட்டத்துக்கு அறிமுகமானதே 1988 க்குப் பிற்பாடுதான்.

இதிலும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்கிற (JKLF) அமைப்பு ”எங்களுக்கு பாகிஸ்தானும் வேண்டாம்…. இந்தியாவும் வேண்டாம்…. எங்கள் வாழ்க்கையை நாங்களே நிர்ணயித்துக் கொள்கிறோம்” என்று போராடுகிற அமைப்பு. ஆனால் இந்த அமைப்பை பாகிஸ்தானுக்கும் பிடிக்காது. இந்தியாவுக்கும் பிடிக்காது. போதாதற்கு ”மதசார்பற்ற அரசுதான் காஷ்மீரில் அமைய வேண்டும்” என்பதுதான் அந்தப் போராளி அமைப்பின் லட்சியமாக சொல்லப்படுகிறது.

இந்த அமைப்பினரை ஒட்டுமொத்தமாக தாக்கி அழிக்க ஆள் அனுப்பும் ஒரே நாடு பாகிஸ்தான்தான். அதைப் போலவே மதசார்பற்ற ஒரு அமைப்பை எதிரியாகக் காண்பித்து போரை நடத்துவதை விடவும் பாகிஸ்தான் ஆதரவும், மதப்பிடிப்பும் கொண்ட ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற குழுக்களை முன்னிறுத்தி போரிடுவதாகக் காண்பிப்பதுதான் இந்தியாவுக்கு லாபம்.

ஆயுதப் போராட்டம் அறிமுகமானதற்கே முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது அதற்கு முன்னர் நடந்த தேர்தல் கூத்துக்கள்தான் என்பது அநேகரது கருத்து. சனநாயகம் சிரிப்பாய்ச் சிரித்த தேர்தல்கள் அவை. நம்மூர் இடைத் தேர்தல்கள் எல்லாம் இந்தியா நடத்தும் காஷ்மீர் தேர்தல்கள் முன் பிச்சை வாங்க வேண்டும். ஒன்று இந்தியாவுடன் இணைப்பை வலியுறுத்துகிற வேட்பாளர் போட்டியின்றியே ”தேர்ந்தெடுக்கப்படுவார்”. அல்லது எதிர்த்து நிற்கிற வேட்பாளரது மனு தள்ளுபடி பண்ணப்படும். அங்கு எல்லாமே ”சிதம்பரம் பாணி” தேர்தல்கள்தான்.

சட்டப்பிரிவு 370 இன் ஓட்டைகள்….. பாகிஸ்தான் ஆயுத உதவி பெற்ற குழுக்களது வன் செயல்கள்….. நான்கு சதவீதமே உள்ள பண்டிதர்களது அதிகாரப்பகிர்வு….. பெரும்பாலான காஷ்மீரிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பாகிஸ்தானின் ஆதரவு குழுக்கள் பண்டிதர்கள் மீது நடத்திய  தாக்குதல்கள்…. இடையில் ஆளுநராக அரசாண்ட ஜக்மோகனின் லீலைகள்….. என எழுதிக் கொண்டே போக ஏராளம் இருக்கிறது.

இந்த மண்ணின் மக்களது தொடரும் துயரங்களை இந்தத் தொடருக்குள்ளேயே முடித்து விட முடியாதுதான். ஆனாலும் இந்த மக்களின் வலியைப் புரிந்து கொள்ள இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதுதான் இம்மூன்று வார கட்டுரையின் நோக்கம்.

ஜம்மு – காஷ்மீரின் அடிப்படைப் பிரச்சனை என்பது இந்து முஸ்லீம் மோதலுமல்ல…… இந்தியா – பாகிஸ்தான் இரண்டுக்குமான போட்டி சமாச்சாரமும் அல்ல. அது காஷ்மீரிகள் தங்களது தன்னுரிமைக்காக ஏங்கும் ஏக்கங்களில் கலந்து நிற்கிறது.

எது எவ்வாறாயினும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது அது ஒன்றே ஒன்றுதான்.

சுருக்கமாகச் சொல்வதானால்……

காஷ்மீர் விடுதலைக்காக

ஆயுதம் ஏந்தியவர்களெல்லாம்

போராளிகளும் அல்ல.

தன்னுரிமையை

நேசிக்கும் காஷ்மீரிகள் எல்லாம்

தேசத்துரோகிகளும் அல்ல.

காஷ்மீரிகளின் தனித்துவம்…..

”ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் இருந்து வருகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முசுலீமுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.”

– மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தினை இந்து முசுலீம் இடையிலான போராட்டம் என்றோ……

அல்லது இந்தியா பாகிஸ்தான் இடையிலான யுத்தம் என்றோ எண்ணிக் கொண்டிருந்தால்…..

நாம் எங்கோ தவறான திசையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை ஓரளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னதாக காஷ்மீரி மக்களின்  தனித்துவமான பண்பாட்டைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் அது சாத்தியப்படும்.

பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்கள் என்றாலும் பெளத்தர்கள்….. சீக்கியர்கள்…. இந்துக்கள் என அனைவருமே உழைத்து உண்டு உறவாடிய மண்தான் காஷ்மீர மண். அவர்களை ஆண்ட ஆட்சியாளர்கள்தான் அடக்குமுறையாளர்களாக வந்து வாய்த்தார்கள்.

அது இந்து மன்னனாக இருந்தாலும் சரி. இசுலாமிய மன்னனாக இருந்தாலும் சரி. இரண்டுமல்லாது சீக்கிய மன்னனாக இருந்தாலும் சரி. இம்மன்னர்களது மொழி என்பது கொடுங்கோலாட்சியும் ஒடுக்குமுறையும்தான்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் துவங்கிய போராட்டங்கள் ஏதோ 1947 இல் தொடங்கிய போராட்டமாக….. அதுவும் இந்திய “சுதந்திரத்தைத்” தொடர்ந்து அதனோடு இணைவதா இல்லையா என்பதில் தொடங்கிய போராட்டமாகத்தான் இன்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீர் மக்களது விடுதலைக்கான வேட்கை என்பது  1586 ஆம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறது.

ஆம்.

பேரரசரான அக்பர் தனது அதிகாரத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் விரிவுபடுத்திய ஆண்டுதான் 1586. அப்போதும் காஷ்மீர மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

அதன் பிற்பாடு பிரிட்டிஷ்காரர்கள் 1846 இல் எழுபத்தி ஐந்து லட்சம் ரூபாய்க்கு  மன்னன் குலாப்சிங்கிற்கு ஜம்மு காஷ்மீரை விற்றபோதும் காஷ்மீர் மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

அதற்கும் பிற்பாடு சமஸ்தானங்களின் முழு இறையாண்மையை மதிப்பதாக முகம்மது அலி ஜின்னா உறுதியளித்ததைப் பார்த்து பாகிஸ்தானிடம் போகலாமா? என்று இந்து டோக்ரா மன்னன் ஹரிசிங் ஊசலாட்டத்தில் இருந்த போதும் காஷ்மீர மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

இப்படி எல்லாவற்றுக்கும் பிற்பாடு எதிர்பாராத பழங்குடித் தாக்குதலால் தன்னை தற்காத்துக் கொள்ள இயலாமல் இந்தியாவோடு அதே மன்னன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட போதும் காஷ்மீர் மக்கள் வேண்டி நின்றது தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையைத்தான்.

பொதுவாக காஷ்மீரி இஸ்லாமியர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். உலகின் பிற பகுதிகளில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் இவர்களுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு.

குறிப்பாகச் சொன்னால் இறுக்கம் நிறைந்த ”ஆச்சாரமான” வைதீக இஸ்லாமியர்களுக்கும் காஷ்மீர இஸ்லாமிய மக்களுக்கும் வாழும் முறையில் இருந்து வழிபடும் முறைகள் வரைக்கும் எண்ணற்ற விசயங்களில் ஒத்துப் போகாது.

காஷ்மீர் இசுலாமியர்கள் இறுக்கமற்ற சூஃபி வழியில் வந்த இசுலாமைப் பின்பற்றுபவர்கள். இந்த வழியில் வந்த சூஃபி ஞானியான ”சில்சிலா ரிசியான்” என்பவரது இசுலாத்தைத்தான் இம்மக்கள் பின்பற்றுகிறார்கள்.

இதை நாம் நமக்குத் தெரிந்த அளவில்  புரிந்து கொள்ள வேண்டுமென்றால்  தென்னகத்தில் அர்த்தமற்ற ஆச்சாரங்களையும்….. மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்த இறுக்கம் நிறைந்த வைதீக கட்டுப்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கிய சித்தர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஓரளவு இந்த சூஃபி துறவிகளைப் புரிந்து கொள்ளலாம்.

அந்த சில்சிலா பாரம்பரியத்தைப் பின்பற்றி வந்த ஞானிகளில் மிக முக்கியமானவர்தான் நூருதீன். பதினாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் துறவியை ரிசி என்று இன்றும் அழைக்கிறார்கள். இவரை இசுலாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் பிற சமயத்தவர்களும் கூட பெரும் ஞானியாக மதிக்கிறார்கள்.

மக்களோடு நெருக்கமாக நின்ற நூருதீன் போதித்தபடி வாழாத முசுலீம் துறவிகளை கடுமையாக வெறுத்தார். பேராசை….. பாசாங்கு…. அகந்தை கொண்டு அலைந்த உலோமாக்களை கேலி செய்தார்.

இத்தகைய ஞானிகள் கூட்டத்தில் பெண்களும் அடக்கம் என்பதுதான் ஆச்சர்யம் அளிக்கும் செய்தி. இது வைதீக இசுலாமின் கொள்கைக்கு எதிரானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சங்காபீபி, பேகத்பீபி போன்றவர்கள் இந்த சில்சிலா மரபில் பெண் ஞானிகளாகவே வலம் வந்தனர்.

அதைப்போலவே லாலாமாஜி எனும் சைவத் துறவி பெரும் புகழ் பெற்றிருந்தார். தேவையற்ற சடங்குகளையும், ”உயர் சாதி” மனோபாவங்களையும் இவர் மிகக் கடுமையாகச் சாடினார். இவரை காஷ்மீர் முசுலீம்கள் இன்றும் கூட ஒரு பெரும் ஞானியாகப் பார்க்கிறார்கள்.

காஷ்மீரின் இந்து முசுலீம் மக்களுக்கிடையே நிலவிய இத்தகைய ஒரு அற்புதமான சகிப்புத் தன்மையை நான் வேறு எங்கும் கண்டதில்லை என்று ஆங்கிலேய ஆணையர் ஒருவரே ஆச்சர்யப்பட்டு சொல்லியிருக்கிறார்.

காஷ்மீரி இசுலாம் பண்பாடு சகலரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாடு. மத ஞானிகளது புனிதத்தலங்களில் காஷ்மீரிகள் செய்து வரும் சடங்குகளில் பிற சமயத்தவர்களது சடங்குகளும் கலந்திருக்கின்றன. மசூதிகளோடு பிற புனிதத் தலங்களையும் வழிபடும் போக்கு காசுமீர இசுலாமியர் மரபு. (இதில் நமக்குத் தெரிந்த உதாரணம் விரும்புபவர் எவர் வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய நாகூர் தர்கா)

ஆனால் வைதீக இசுலாமியர்களுக்கு இப்போக்கு ஏற்புடையதாய் இல்லை.

வைதீக விதிகளில் நாட்டம் கொண்ட இசுலாமியர்களுக்கும் அதை ஏற்றுக் கொள்ளாத காஷ்மீர இசுலாமியர்களுக்கும் இடையிலான இந்த நெருடல் காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய போராளிக் குழுக்கள் மத்தியிலும் கூட எப்படி பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்தின என்பதைப் பிற்பாடு பார்ப்போம்.

ஓரளவுக்கு நாம் புரிந்து கொண்ட காஷ்மீர மக்களது தனித்துவங்கள் இவை. மன்னர்கள் மாறி மாறி வந்தாலும் மக்களுக்குள் மகத்தான உறவே நிலவியது. ஏறக்குறைய பிரிட்டிஷ் இந்தியாவின் பெரும்பகுதி மத மோதல்களில் மூழ்கிக் கிடந்தபோது காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டும் மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டே நின்றது. அதுதான் காஷ்மீரத்தின் தனித்துவம். இன்றைக்கும் காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது.

அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல வேண்டுமானால் நாம் மீண்டும் 1947  க்குச் செல்ல வேண்டும்.

(அது அடுத்த வாரம்)

Follow

Get every new post delivered to your Inbox.

Join 66 other followers