சிங்கள “மனிதநேயமும்”…..ஆஸ்திரேலிய “இனவெறியும்”….

  

ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.

 

கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.

 

ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து கொள்கிறதாம்.

 

அடப் பாவிகளா…. ரெண்டு பேருக்கு உதடு கிழிந்ததற்கே ”இனவெறி” என்று கூச்சல் போட்டால்..…. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட..…. மழலைகள்…. பெண்கள்…. முதியவர்கள்….  என்று எந்த இரக்கமும் இன்றி பாஸ்பரஸ் குண்டுகளாலும்…. புல்டோசர் ஏற்றியும் எங்கள் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே…. அதனை என்னவென்று சொல்வீர்கள்.?

 

ஆஸ்திரேலிய சாராயக்கடையில் குடித்துவிட்டு அலப்பரை செய்தபோது விழுந்திருக்கிறது முதல் உதை.

அதற்கே குய்யோ…. முறையோ என்று கூப்பாடுகள்….

பிரதமரின் எச்சரிக்கை….

உள்துறை, வெளியுறவுத் துறையின் அலறல்கள்….

தூதுவர்களின் கண்டனம்….

வட இந்திய தொலைக்காட்சிகளின் ஓலங்கள்…. 

 

இவற்றையெல்லாம் பார்த்தும் கொஞ்சம் கூட இரக்கம் வரவில்லை. மனம் இறுகிப் போயிருந்தது.

 

இதற்காக வேதனைப்படவுமில்லை.

கண்ணீர் வடிக்கவுமில்லை என்பதுதான் உண்மை.

 

காரணம்: எதை விதைக்கிறார்களோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.

 

பத்துப் பதினைந்து நாட்கள்கூட ஆகவில்லை…. எம் இனத்தின் தளிர்களும்…. இளம் குருத்துக்களும் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு. மொத்த தமிழினமும் துயரத்தின் உச்சியில் நின்று குமுறியபடி ஆதரவுக் கரங்களுக்காய் அலைபாய்ந்தபோது. ஒருவரும் வரவில்லை.

 

வாயைத் திறக்கவில்லை பிரதமர்.

வாயைத் திறக்கவில்லை தூதரகங்கள்.

வாயைத் திறக்கவில்லை உள்…. வெளி அமைச்சகங்கள்.

 

தமிழகத்தின் சகல ஜீவன்களும் தங்கள் உறவுகளுக்காய் கதறிக் கண்ணீர் விட்டபோது கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது மத்திய அரசு.

 

குடும்பம் குடும்பமாய் கூடி அழுதோமே நாம்.

 

தமிழகத்தின் தெருக்கள்தோறும் சந்தித்துக் கொண்டவர்கள் “என்னவாச்சு பிரபாகரனுக்கு? ”

“என்னவாச்சு முற்றுகையில் சிக்கியுள்ள மக்களின் கதி?” என்றுதானே பரிதவித்தார்கள்.

 

’கதியற்றோருக்கு கடவுளே துணை’ என நம்பியவர்கள் கோயில்களில் குமுறித் தீர்த்தனர்….

மசூதிகளில் மனம் வெதும்பி மண்டியிட்டனர்….

ஆலயங்களில் அழுது புலம்பினர்….

 

மனிதரை நம்பியவர்களோ…. யுத்தத்தையே நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து வீதியில் இறங்கினர்.

 

எதற்கும் செவிசாய்க்கவில்லை அவர்கள்.

 

வாயும் வயிறும் எரிகிறது.

 

குண்டடி பட்டு செத்து வீழ்வதும் தமிழன்.

அவனுக்காய் தொண்டை வற்றிக் குரல் கொடுப்பவனும் தமிழன்.

ஆனால்…. ஆஸ்திரேலியாவில் அடிபட்டவன் அப்படி இல்லையே.

 

எமது கண்ணீரைக் கூட கேலி செய்தது வடக்கத்திய மீடியாக்கள்.

தமிழர்களும் அவர்களது நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டபோது  பட்டாசு வெடித்து கொண்டாடாதது ஒன்றுதான் பாக்கி.

 

நாம் அழுது கொண்டிருந்த வேளையில் அவர்கள் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஆனால் நாம் அப்படியா இருந்தோம்?

 

குஜராத்தில் பூகம்பம் என்றால் கண்ணீர் வடித்தோம். கட்டியிருந்தது போக மிச்சமிருந்ததை அள்ளிக் கொடுத்தோம்.

 ஒரிசாவில் வெள்ளம் என்றால் வாய்ப்பு இருந்தவர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தையும்…. வசதியற்றவர்கள் தங்கள் உண்டியலின் சேமிப்பையும் கூட துயர் துடைக்கக் கொடுத்தோம்.

 கார்கிலில் போர் மேகங்கள் என்றால் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யுத்த நிதி அளித்தோம்.

 

அன்று அவர்கள் அழுதபோது நாமும் அழுதோம்.

ஆனால் இன்று நாம் அழும்போது நாம் மட்டுமே அழுகிறோம்,

என்ன கொடுமை இது?

 ஆனால் இந்தப் பாராபட்சம் இன்று மட்டுமில்லை. என்றும்தான்.

 வளைகுடாப் போரில் மலையாளிகள் மாட்டிக் கொண்டனர் என்றதும் ஓடோடிப் போனார் அமைச்சர் உன்னிக் கிருஷ்ணன்.

 

பிஜித் தீவில் குஜராத்திகளுக்கு பிரச்சனை என்றபோது குமுறி எழுந்தது இந்திய அரசு.

 ஆஸ்திரியாவில் இரண்டு சீக்கியர்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவர் செத்தார் என்பதற்காக பஞ்சாப்பே பற்றி எரிந்தது.

 அடுத்த கணமே ”காப்பாற்ற நானிருக்கிறேன் கவலைப்படாதீர்கள்” என  தானாடா விட்டாலும் தன் தசை ஆடியது இந்தியப் பிரதமருக்கு

 

இவற்றையெல்லாம் பார்க்கும்போது

எனக்குள் எழும் கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:

எங்களைப்பற்றி இந்தியா கவலைப்படாத போது

எதற்காக நாங்கள் இந்தியாவைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?

 

அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நமது கதி..

அது ”மாமா” நேரு காலமாக இருந்தாலும் சரி…..

அது “அன்னை” இந்திரா காலமாக  இருந்தாலும் சரி…..

அது “அன்னை”யின் தவப்புதல்வன் காலமாக இருந்தாலும் சரி…..

அது ”அன்னை”யின் மருமகள் காலமாக இருந்தாலும் சரி…..

அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நமது கதி..

 

 ஆக

தமிழனென்று சொல்லுவோம்.

தலை நிமிர்ந்து செல்லுவோம்.

தமிழர்களது தலையை மற்றவர்கள் விட்டுவைக்கும்பட்சத்தில்.

 

(நன்றி : தமிழக அரசியல் வார இதழ்)

நீங்களும் ஒரு தேசத்துரோகிதான்….

 ஒரு துப்பறியும் மர்ம நாவலைப் படித்ததைப் போலிருக்கிறது. ஆனால் இதில் வரும் அத்தனை  வரிகளும் அப்பட்டமான நிஜம். அதுவும் இந்திய அரசியலின் மர்மமான முடிச்சுகளை அவிழ்க்கும் புத்தகம்தான் : “சீனாவின் முற்றுகையில் இந்தியா”. ஈழத்தின்  இன்றைய இனப்படுகொலைகளுக்கு அன்றைக்கே அச்சாரம் போட்ட அரசியல் சதிகளை அங்குலம் அங்குலமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.

 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியான சந்திரிகா இனப்படுகொலையை தங்கு தடையின்றி நடத்தவும்… போராளிகளை ஒடுக்கவும் நேரடி யுத்தம் இன்றி வேறு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என சிந்திக்கிறார். அப்போது அவரது மனக்கண் முன்னே வந்து நிற்கிறார் முந்தைய ஜனாதிபதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா. 240px-J_R_Jayewardene‘தமிழன் தொடைக்கறி இங்கே கிடைக்கும்’ என எண்பதுகளில் சிங்களர்கள் போர்டு போட்டு விற்பனை நடத்துவதற்கு வழியமைத்துக் கொடுத்த “பொற்கால ஆட்சி”க்கு சொந்தக்காரர்தான் இந்த ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா. ஆசாமியின் அந்தக் காலக் கணக்கு என்னவென்றால் மேற்குலக நாடுகளுக்கு இலங்கையின் சந்தையை திறந்து விடுவதன் மூலமாக ஏதேனும் அந்த நாடுகளில் இருந்து போராளிகளை ஒடுக்குவதற்கு ஆதரவு கிடைக்குமா என்பதுதான்.

 

அந்த அண்ணன் காட்டிய வழியில் தங்கை நடை போட தீர்மானித்ததன் விளைவுதான் 1998 இல் வாஜ்பாய் அரசுக்கும் சந்திரிகா அரசுக்கும் இடையில் கையெழுத்தான இந்திய இலங்கை சுதந்திர வியாபார ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் விளைவால் chandrikaஓகோவென பயன் அடைந்த இந்திய முதலாளிகளும் சிங்கள முதலாளிகளும் அடுத்த ஆர்டர் எப்படா வரும்? என காத்திருக்கத் துவங்கினர். சந்தடி சாக்கில் சத்தமில்லாமல் இலங்கையில் கடை விரித்தவர்கள் அசோக் லேலண்ட்….

டாடா டீ….

ஏசியண் பெயிண்ட்ஸ்….

ஐசிஐசிஐ….

ராஜபாளையத்தின் ராம்கோ….

என ஏகப்பட்ட பேர். அப்படி இந்தியாவில் நுழைந்த இலங்கையின் நிறுவனங்களுள் தம்ரோ கட்டில் நாற்காலி நிறுவனம்…. மாலிபான் பிஸ்கெட் நிறுவனம்…. மாஸ் ஹோல்டிங்ஸ் ஆயத்த ஆடைகள் போன்றவைகளும் அடங்கும்.

 

“இதுல என்னங்க இருக்குது? இவன் அங்க பிசினெஸ் பண்றான்…. அவன் இங்க பிசினெஸ் பண்றான்….இதுல என்ன தப்பு இருக்கு?” என்கிற கேள்வி சாதாரணமாகவே எல்லோருக்கும் எழும். ஆனால் சந்திரிகா இந்தக் கணக்கை இப்படிப் போடவில்லை. இப்படி வரி விலக்கும்…. வரிச் சலுகையும் அடைந்த இந்திய முதாலாளிகளை வைத்து ஈழப் போராளிகளை ஒடுக்குவதற்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்க முடியுமா? என்பதுதான் சந்திரிகாவின் கணக்கு. அவர் போட்ட கணக்கு தப்பவில்லை என்பதற்கு பல ஆதாரங்களை அள்ளி வீசுகிறது இந்தப் புத்தகம்.

 

ஏனென்றால் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென்றாலும் தேர்தலின் போது பல்லை இளித்துக் கொண்டு நிற்க வேண்டியது இந்த முதலாளிகளிடம்தான். அப்படிக் காசு வாங்கி ஆட்சிக்கு வந்ததற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்றால்….அவர்கள் அடுத்த ஐந்து வருடங்களுக்கு எங்காவது படை எடு என்றால் எடுக்க வேண்டும்…. எவனுக்காவது ஆயுதம் கொடு என்றால் கொடுக்க வேண்டும்…. இதுதான் தங்கு தடையற்ற வர்த்தகத்தின் தாரக மந்திரம். மற்றபடிக்கு ஓட்டுப் போட்ட கேணையர்கள் எல்லாம் கரும்புள்ளி குத்திய கையையே அடுத்த தேர்தல் வரைக்கும் வெறிச்சு வெறிச்சு பார்த்தபடி குந்தியிருக்க வேண்டியதுதான். அப்படி அரங்கேறிய திரை மறைவு நாடகங்களில் சிலதுதான் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா கொடுத்த ராணுவ “உதவி”…. சிங்கள ராணுவத்திற்கு இவர்கள் கொடுத்த தொழிநுட்ப “உதவி”…. போன்ற இத்யாதிகள்.

 

ஆனால் சிங்களம் சரசமாடியது இந்தியாவிடம் மட்டும்தானா? சீனாவிடமும் சத்தம் போடாமல் வர்த்தக உறவுகளை வளர்த்துக் கொண்டது. தெற்கு இலங்கையில் உள்ள ஹம்பன் தோட்டா துறை முகத்தை விரிவுபடுத்த…..மேற்கு இலங்கையில் உள்ள நோராச்சோலை கடலோரக் கிராமத்தில் மின் நிலையம் அமைக்க….. என சீனாவுக்கும் அழைப்பு விடுத்தது.

இதிலும் என்ன தப்பு? என்று கேட்கலாம் சிலர். இந்தியாவோடு மட்டும் வர்த்தகம் அதன் மூலம் ஈழமக்கள் மீது யுத்தம் என்பதில் முழு நம்பிக்கையில்லை இலங்கைக்கு. காரணம் தப்பித் தவறி தமிழகம் கொந்தளித்தால் இந்திய அரசு அதற்கு பணிய வேண்டி வரலாம். எனவே இந்தியாவுக்கு ஆப்பு வைக்க வேண்டுமென்றால் சீனாவை அழைத்து வரவேண்டும். அதன் படியே அழைத்து வந்தது. அநேக திட்டங்களை அள்ளிக் கொடுத்தது. ஏற்கெனவே தென் மேற்கு இலங்கையில்  “நோரிங்கோ” நிறுவனத்தை நிறுவி அந்த ஆயுதக் கிடங்கில் இருந்து பலகோடிகளுக்கு ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது சீனா.

 

என்ன தலை சுற்றுகிறதா…..? எனக்கும் அப்படித்தான் இருந்தது ஆரம்பத்தில். ஆனால் நாம் நேசிக்கும் மக்களது துயரத்திற்கான பின்னணிகளைப் புரிந்து கொள்வதற்கு நமக்கே கொஞ்சம் சலிப்பு வருகிறதென்றால் அப்புறம் நாம் அவர்களது விடுதலையைப் பற்றி யோசிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்று என்னை நானே கேட்டுக் கொண்டு மீண்டும் புத்தகத்தினுள் மூழ்கிப் போனேன்.

 

மிக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூலை வெளியிட்டிருப்பது “முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்” (ஈழத்தின் விடியலுக்காய் தன்னைத் தானே தீய்த்துக் கொண்ட நம்ம Bookமுத்துக்குமார்தான்)  எண்ணற்ற இளைஞர்களது  உழைப்பு இதில் ஒளிந்திருக்கிறது. இன்னும் இதில் ஒளிந்திருக்கும் உண்மைகளை நீங்கள் அறிந்தே தீர வேண்டுமென்றால்  எழுபத்தி ஐந்து ரூபாயை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு ரூபாய் பூத்தில் ஏறி 044 24354142 நம்பருக்கு ஒரு போனைப் போடுங்கள். அல்லது உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணோடு எனக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வையுங்கள்

புத்தகம் உங்களைத் தேடி வரும்.

  

அட……போன் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. ஒருதொலைபேசி நிறுவனத்தால் நாளை இந்தியாவின் ரகசியங்கள் எப்படி கப்பல்…… விமானம் எல்லாம் ஏறப் போகிறது என்கிற அபாயம்.

 

இப்படி பலபக்கம்……பலபேருக்கு கதவைத் திறந்திவிட்டிருக்கும் இலங்கையால் இந்தியாவுக்கு ஒரு மாபெரும் ஆப்பு ஒன்று கண் விழித்துக் காத்திருக்கிறது. அதுவும் 2007 செப்டெம்பர் 15 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் ஒன்றின் மூலம். இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்ம நபரின் பெயர் :ஒலோப் ஹாக். ஐரோப்பியரான இந்த ஹாக்தான் தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றியவர். இவரை இலங்கையின் குக் கிராமங்களுக்கெல்லாம் செல்போன் mahindaசேவையை கொண்டு போக வேண்டும் என்பதற்காக அணுகுகிறது ராஜபக்சேவின்  சிங்கள அரசு. (ஒருவேளை எங்கெங்கே மக்கள் பட்டினியில் செத்தார்கள்…… அல்லது பாஸ்பரஸ் குண்டுகளால் செத்தார்கள் என்கிற தகவல்களுக்காக இருக்கலாம்) அந்த ஆசாமி அழைத்துப் போன இடம் சிங்கப்பூரில் உள்ள சிங்டெல் நிறுவனம்.  சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனத்தை அணுகி தாங்கள் ஆற்ற வேண்டிய தொலைபேசி சேவையை ராஜபக்சே  சொல்ல….. “இந்தியாவுக்கு ஏற்கெனவே நீங்கள் கொஞ்சம் அதிகமாக சீனாவோடு கொஞ்சுகிறீர்களோ என்கிற சந்தேகம் இருக்கிறது….இந்த நேரத்தில் எங்கள் சிங்டெல் நேரடியாக உங்கள் நாட்டுக்குள் வருவதைவிட எங்கள் இந்தியப் பங்காளி ஏர்டெல்லை அழைத்துக் கொள்ளுங்கள்.எங்களுக்கு அதில் 30% பங்கு இருக்கிறது. அதை வைத்து மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்கிறது சிங்டெல் நிறுவனம். 

 

“ஆனால்….. இதற்கான அடிப்படைத் தகவல் தொடர்பு கட்டுமானப் பணிகளையும்…..

 நாடு முழுவதும் நிர்வகிக்கும் பணிகளையும்…..

நாங்கள் எங்கள் சகோதர நிறுவனமான ஹுவாவேய் நிறுவனத்தை வைத்துச் செய்து கொள்கிறோம்”. என்கிறது சிங்கப்பூரின் சிங் டெல்.

 

பிரச்னையே இங்குதான் கிளம்புகிறது.

1000 கோடி முதலீட்டில் தொலைபேசி  சேவையை தொடங்குவது இந்தியாவின் ஏர்டெல்.

கட்டுமான….நிர்வாகப் பணிகளோ சீனாவின் ஹுவாவேய்.

இந்த ஹுவாவேயின் உண்மையான உரிமையாளர் யார்? அதற்கும் சீனாவின் உளவு நிறுவனமான MSS க்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் நம்மைக் காட்டிலும் இந்தியாவின் உளவு அமைப்புக்களான  IB  க்கும் RAW  க்கும் மிக நன்றாகவே தெரியும்.

 

இந்த ஹுவாவேய் நிறுவனம் தங்கள் நாட்டுக்குள் கால்வைக்கவே கூடாதென்று கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளியது ஆஸ்திரேலியா…..ஆளை விடுப்பா சாமி என்றது அமெரிக்கா……கதவை இழுத்துச் சாத்தியது கனடா.

 

 ஏற்கெனவே இந்தியாவில் அதனது  பல திருவிளையாடல்களுக்காக பலமுறை எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்திய உளவு அமைப்புக்களின் எச்சரிக்கைகளையும் மீறி அதனோடு உறவு வைத்துக் கொண்ட இந்தியாவின் பெரு முதலாளிகள் எல்லாம் யார்….யார்…..?

சீனாவின் உளவு நிறுவனத்தோடு தொடர்புடைய ஹுவாவேய் Mkநிறுவனத்தின் பங்குகள் 49% இல் இருந்து 74% பங்குகள் ஆக உயர்த்தப்படும் போது தயாநிதி மாறன் மெளனம் காத்தது ஏன்?

பின்னர் வந்த ராசாவும் வாயைத் திறக்கவில்லையே என்ன காரணம்?

இலங்கையில் ஏர்டெல்லின் மூலம்  சீனாவின் உளவு நிறுவனம் மஞ்சக்குளிக்கும் இந்த செயல் இந்தியாவை நாளை பாதிக்குமா? பாதிக்காதா?

இது இந்தியாவின் வெளிஉறவுத் துறை ஆலோசகர்கள், பாதுகாப்புத்துறை ஆலோசகர்கள் என வலம் வரும் மும்மூர்த்திகள் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய்சிங் போன்றோருக்கு உரைத்ததா இல்லையா? என்கிற இந்தியாவின் பாதுகாப்பு குறித்த ஓராயிரம் கேள்விகளை எழுப்புகிறது இச்சிறு நூல்.

 

இவற்றையெல்லாம் வாசிக்கும் போது உண்மையிலேயே தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கவனிக்கப்பட வேண்டியவர்கள் கொளத்தூர் மணி போன்ற மக்கள் நலத்தில் மாளாத அக்கறை கொண்டவர்களா?

 

SGஅல்லது இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி இம்மியளவும் கவலைப்படாது சீனாவின் உளவு நிறுவனத்தோடும்,  பாகிஸ்தானோடும் பகிரங்கமாகவே உறவு கொண்டிருக்கும் இலங்கையோடு கொஞ்சி குலவுகின்றவர்களா? என்கிற கேள்வியெல்லாம் உங்களுக்குள் எழுந்தால் சந்தேகமே வேண்டாம் நிச்சயம் நீங்களும் ஒரு தேசத்துரோகிதான்.

மயிர் நீப்பின் உயிர் வாழா……

WarofJenkinsEar

ஓரிரு மாதங்கள் முன்பு நண்பர்களோடு  மதுரையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் பல்வேறு விவாதங்கள்…… கலந்துரையாடல்களோடு தொடர்ந்து கொண்டிருந்தது பயணம். விவாதம் உலகில் நிகழ்ந்த யுத்தங்கள் குறித்து நகர…… இடையில் குறுக்கிட்டார் வழக்குரைஞர் பாலமுருகன்.

“நாடு பிடிக்க…… இளவரசியை சிறை பிடிக்க…… என எது எதற்கோ நடந்த யுத்தங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு காதுக்காக நடந்த யுத்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்றார் நண்பர்.

என்னது……? காதுக்காக நடந்த யுத்தமா? என்ன எங்கள் காதில் பூ சுற்றுகிறீர்களா? என்றோம் ஆச்சர்யம் அகலாமல்.

”ஆமாம். அதுவும் ஒரே ஒரு ஒற்றைக் காதுக்காக.”

பேச்சில் சுவாரசியம் தட்டவே எங்கள் காதுகளை தீட்டிக் கொண்டோம்.

ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த அச்சு அசலான வரலாற்றுச் சம்பவம் இது.

மிகச்சரியாக 1731 ஆம் ஆண்டு ஜமைய்க்கா நாட்டில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு ஒரு கப்பல் விரைந்து கொண்டிருக்கிறது. அக்கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்த அதன் கேப்டனுக்குத் தெரியாது தன்னால் ஒரு மாபெரும் யுத்தமே பிற்காலத்தில் வரப் போகிறது என்று. பிரிட்டனுக்குச் சொந்தமான அக்கப்பலை ஓட்டிக் கொண்டிருந்தவர் பெயர் ராபர்ட் ஜென்கின்ஸ். (ச்சே…… வாயுல நொழையற மாதிரி பேரா இருந்திருக்கலாம்). திசைமானி காட்டிய வழியே கப்பலை செலுத்திக் கொண்டிருந்தவர் கண்களில் படுகிறது எதிரே வந்து கொண்டிருக்கிற மற்றொரு கப்பல். சரி…… அது அதனது வழியில் போகப் போகிறது நமக்கென்ன? என்று ஜென்கின்ஸ் தனது கப்பலைச் செலுத்த…… வந்த கப்பலோ பிரிட்டன் கப்பலைச் சுற்றி வளைத்து நிற்கிறது. மறித்து நின்ற கப்பலில் ஸ்பெயின் நாட்டுக் கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பிரிட்டனுக்கும் ஸ்பெயின் நாட்டுக்கும் ஒரு ஒப்பந்தம் அமுலில் இருந்த நேரம் அது.. பிரிட்டிஷ் அரசு ஸ்பெயின் நாட்டுக்குத் தேவையான அடிமைகளையும் ஆண்டுக்கு 500 டன் பண்டங்களையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே அது.

குறுக்கே வந்து நின்ற கப்பலில் இருந்த ஆட்கள் பிரிட்டன் கப்பலுக்குள் குதித்து என்னென்ன வைத்திருக்கிறார்கள் என சோதனையிடுகிறார்கள். கண்டவனெல்லாம் வந்து உள்ளே புகுந்து சோதனை போட இதென்ன ——————————– நாட்டுக் கப்பலா? என முணுமுணுக்கிறார் கேப்டன் ராபர்ட் ஜென்கின்ஸ். இதைப் பார்த்து கடுப்பாகிப் போன ஸ்பெயின் நாட்டுக் கடற்படை காடையர்கள் கேப்டனை நோக்கி பாய்கிறார்கள். கடுமையான வாக்குவாதம் முற்றுகிறது. எந்தவித பதிலையும் செவிமடுக்காத ஸ்பெயின் கப்பற்படை இறுதியில் கேப்டன் ராபர்ட் ஜென்கின்ஸின் ஒரு காதை அறுத்தெறிந்துவிட்டு தங்கள் கப்பலை நோக்கித் திரும்புகிறது.

கப்பலுக்குள் கிடந்த தனது அறுபட்ட காதினை தேடி எடுத்து பத்திரமாக ஒரு கண்ணாடி சீசாவுக்குள் போட்டுக் கொள்கிறார் பிரிட்டன் கப்பல் தளபதி. கப்பல் வழமைபோல் இங்கிலாந்து தேசம் நோக்கி நகர்கிறது. தனது நாட்டு மாலுமி காது அறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தகவல் மக்களுக்குள் பரவ…… கொந்தளிக்கிறார்கள் மக்கள். கேப்டன் ராபர்ட் ஜென்கின்ஸின் ஒரு காதை அறுத்ததோடு நில்லாமல் “இதுதான் உங்கள் மன்னர் ஜார்ஜுக்கு நாங்கள் விடுக்கும் எச்சரிக்கை என்பதனையும் போய்ச் சொல்,” என்று ஸ்பெயின் நாட்டுக் கப்பற்படை சொல்லி விரட்டிய கதையையும் சொல்லி முடிக்கிறார் தளபதி. வெகுண்டு எழுகிறது பிரிட்டன்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் காமன்ஸ் அவை கூடுகிறது. அழைத்து வருகிறார்கள் காதறுக்கப்பட்ட ராபர்ட் ஜென்கின்ஸை. அவர் வரும்போதே அவ்வளவு காலமாக சீசாவில் பாதுகாத்து வைத்திருந்த தனது அறுபட்ட ஒற்றைக் காதினையும் மறக்காமல் எடுத்து வருகிறார். கூடியிருக்கும் பிரிட்டன் பாராளுமன்றத்தின் முன்பாக தனது அறுபட்ட காதை எடுத்து வைத்து……

“இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதவில்லை நான். இது இந்த நாட்டின் மக்களை…… இந்த நாட்டின் மக்கள் அவையை…… இந்த காமன்ஸ் சபையை…… என ஒவ்வொரு பிரிட்டன் குடிமகனையும் இழிவுபடுத்திய செயலாக உணர்கிறேன்.” என்று கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறுகிறார் ராபர்ட் ஜென்கின்ஸ்.

மானமுள்ள பிரிட்டிஷ் பேரரசோ மிகச் சரியாக 1739 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி  ஸ்பெயின் நாட்டின் மீது போர் தொடுக்கிறது. தனது குடிமகனின் ஒற்றைக் காதுக்காக ஆரம்பித்த இந்த யுத்தம் ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகாலம் நீடித்த பிறகே முடிவுக்கு வருகிறது. இதை ஆங்கிலத்தில் War of Jenkins Ear என்றே இன்னமும் அழைக்கிறார்கள்.

”இதுதான் ஒற்றைக் காதுக்காக நிகழ்ந்த யுத்தத்தின் கதை” என நிறைவு செய்கிறார் நண்பர்.

********

”மீண்டும்”

என்று இன்னும் எத்தனை முறைதான் மீண்டும் மீண்டும் எழுதுவது என்று தெரியவில்லை. இந்த வாரமும் சிங்களக் கடற்படை அத்துமீறி தமிழக மீனவர்கள் ஒன்பது பேரைக் கைது செய்து அனுராதபுரம் சிறையில் அடைத்துள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். இதற்கொரு விடிவு எப்போது வருமோ தெரியவில்லை. 1983 முதல் இன்று வரையிலும் 800 தமிழக மீனவர்களுக்கு மேல் கொல்லப்பட்டாயிற்று. ஆனால் இந்திய அரசிடம் இருந்து சிங்கள அரசை நோக்கி ஒரு வருத்தமோ…… ஒரு கண்டனமோ…… ஒரு எச்சரிக்கையோ…… எழுந்ததாக வரலாறு இல்லை. சாகின்றவர்கள் தமிழர்கள்தானே என்கிற அலட்சியம் தவிர வேறென்ன? மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் எல்லோருமே எல்லையைத் தாண்டி போய் விடுபவர்களாகவும்…… சிங்களக் கடற்படை என்னவோ ஒழுக்கசீலர்களாக எல்லை தாண்டாதவர்களாக…… தாண்டி வருபவர்களை மட்டும் தண்டிப்பவர்களாக இந்திய அரசே சித்தரிக்கும் கொடுமைக்கு என்ன செய்வது?

கடந்த ஆண்டு பேட்டியளித்த இந்திய கப்பற்படை கமாண்டரோ தமிழக மீனவர்கள்தான் எல்லை தாண்டிப் போய் இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்று சிங்கள அரசின் குரலையே பிரதி பலிக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில்  சிங்களக் கப்பற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் எண்ணிக்கை மட்டும் 250 பேர்.

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள் நண்பர்களே…… எண்ணூறோ…… ஐநூறோ…… இருநூறோ அல்ல…… ஒரே ஒரு வட இந்திய மீனவர் பாகிஸ்தானின் கடற்படையால் கொல்லப்பட்டதற்கு  தூதரகத்தின் மூலமாக கடும் எச்சரிக்கை விடுத்தது இதே இந்திய அரசுதான். செத்து விழும் மீனவர்களில் கூடவா வடக்கு தெற்கு? அப்போது எவரும் ”எல்லை தாண்டி போய் மீன் பிடித்தார் அந்த வட இந்திய மீனவர்” என எவரும் வாய் கிழியப் பேசவில்லை.

ஏறக்குறைய 800 பேரை காவு வாங்கிய பின்னும் கள்ள மெளனம் சாதிக்கும் மத்திய அரசு  எங்கே?

தன் குடிமகனின் ஒற்றைக்காது அறுபட்டதற்கே சுயமரியாதையின் நிமித்தம் பொங்கியெழுந்து போர் தொடுத்த பிரிட்டன் அரசு  எங்கே?

சொந்த மக்களையே கூறுபடுத்திப் பார்க்கும் கூறுகெட்ட அரசு எங்கே?

தனது குடிமகனின் உயிர் அல்ல…… உடலின் ஒரு சிறு பகுதி பாதிக்கப்பட்டாலும் கூட அது தனக்கு ஏற்பட்ட அவமானமாய் உணர்ந்து சினம் கொண்ட இங்கிலாந்து அரசு எங்கே?

ஒரு ராபர்ட் ஜென்கின்ஸுக்காக ஒரு மாபெரும் யுத்தத்தையே நடத்தியது பிரிட்டிஷ் அரசு……

காரணம் அதற்கு மானமும்…… தன் மக்கள் மீது அக்கறையும் இருந்தது.

ஆனால் “நமது” அரசுகளுக்கு……?

Rameswaram

மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு…

அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கிறது இந்திய அரசு.

கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததின் மூலம். அகிம்சை……… அணி சேராக் கொள்கை……… பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை……… என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது.

சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 17 நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் ஈழ மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அள்ளக்கையாக இருந்து அதனை ஆதரித்ததன் மூலம் மொத்த தமிழ் இனத்தின் முகத்திலே கரியை அல்ல மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு.

மாபெரும் மனிதப் பேரவலம் நடந்தேறியது கண்டு எங்கெங்கோ இருக்கிற அரசுகளெல்லாம் பதை பதைத்து குரல் கொடுத்த வேளையில் இன்னும் எத்தனை பிணங்கள் விழுந்தாலும் நாங்கள் சிங்கள அரசின் பக்கம்தான் நிற்போம் என ஐ.நா.சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்த வெட்கக்கேட்டிற்கு என்ன பெயரிட்டு அழைப்பது?

இப்படி இந்த ஈனச் செயலில் இறங்குவதற்கு முன்னர் இந்திய மக்களின் ஒப்புதலைப் பெற்றார்களா? அல்லது பாராளுமன்றத்தைக் கூட்டி விவாதித்து ஒப்புதல் பெற்று வாக்களித்தார்களா? யாரின் அனுமதி பெற்று இந்த அநீதிக்குத் துணை நின்றது மத்திய அரசு?

மத்திய அரசு பச்சையாகச் சொல்ல வரும் விசயம் இதுதான்: ஆமாம். அப்படித்தான் செய்வோம்.உங்களால் என்ன புடுங்க முடியும்? மீறி மீறிப் போனால் ஒரு ஆர்ப்பாட்டம்……… ஒரு உண்ணாவிரதம்……… ஒரு நாள் கடையடைப்பு……… அவ்வளவுதானே. உங்களால் முடிந்ததைப் பாருங்கள். என்பதுதான்.

இதுதான் இப்படி என்றால் நாம் இதுவரை காலமும் நேசித்து வந்த பொதுவுடமைக்குச் சொந்தக்காரர்கள் என நம்பியிருந்த நாடுகளோ……… அவைகளும் அப்பட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற இனப்படுகொலையைக் கண்டிக்காமல் ஆயுதங்களை அள்ளி வழங்கி ஆசி வழங்கியதோடு  ஐ.நா.வில் அந்த மூட அரசுக்கு முட்டுக் கொடுத்து நின்றிருக்கின்றன. நாம் இதுவரை யார் யாரையெல்லாம் தோழமை உறவுகள் என்று நம்பினோமோ அவர்களெல்லாம் அயோக்கியர்கள் பக்கமே நிற்கிற அவலத்திற்கு எங்கே போய் முட்டிக் கொள்வது?

கியூபா, சீனா, ரஷ்யா என பொதுவுடைமைச் சித்தாந்தம் பூத்த பூமிகள் கூட பொறுக்கிகள் யார்? செத்து மடியும் பாட்டாளிகள் யார்? என்கிற அடிப்படை அறிவின்றி படுகொலையாளர்கள் பக்கம் நின்ற படுபாதகச் செயலுக்கு என்ன நியாயம் வைத்திருக்கிறார்கள்.?

ஒரு தேசிய இனம் அப்பட்டமான ஒடுக்குமுறைக்கு ஆளாகும் போது எவர் பக்கம் நிற்க வேண்டும் என்கிற அரிச்சுவடியை பேராசான் மார்க்சும், மாமேதை லெனினும், மாமனிதன் மாவோவும் நேரில் வந்தே போதித்தாலும் புரிபடப்போவதில்லை இந்த மரமண்டைகளுக்கு.

இனப்படுகொலை நிகழ்ந்ததாக இவர்களால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும்………

மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகக் கூட இவர்களால் முணுமுணுக்க முடியவில்லையே ஏன்?

கோபாலபுரத்துக்கும்……… போயஸ்கார்டனுக்கும்……… ஏன் விஜயகாந்த் வீட்டிற்கும் கூட தேர்தல் காவடி தூக்கும் உள்ளூர் ”கம்யூனிஸ்டு”களைப் போலத்தான் இம்மூன்று நாடுகளின் ”கம்யூனிஸ்டு”களும் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் இருக்க முடியும்?

இன்குலாப் ஜிந்தாபாத்.

**********

தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை கட்டுரை அனுப்பியாக வேண்டுமே என்கிற அவசரம்……… அடுத்த இதழில் கண்டிப்பாக எழுதுவேன் என்று தந்திருந்த உறுதிமொழி……… மாலை ஆறு மணிக்குள் அனுப்பி விட்டால் அச்சேற்றி விடுவார்கள் என்கிற பரபரப்பு……… சாலையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு  செல்ல எனது இரு சக்கர வாகனத்தினை திருப்புகிறேன். கை காட்டாமல்………

ஆனால் பின்னால் வரும் அந்த மனிதனுக்குத் தெரியுமா……… இப்படி ஒரு கேணையன் முன்னால் சென்று கொண்டிருக்கிறான் என்று? தினத்தந்தி பாணியில் சொல்வதானால் அடுத்த நொடியே “டமார்” என்றொரு சத்தம். அவ்வளவுதான் தெரியும். சாலையின் மத்தியில் விழுவதும்……… மக்கள் கூடுவதும்……… யாரோ இருவர் கை பிடித்து எழுப்பி விடுவதும்……… என ஏதேதோ என்னெதிரே நடந்து கொண்டிருக்கிறது. சில நிமிடங்களிலேயே நண்பர்கள் வந்து சேர……… அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவமனை. எக்ஸ்ரே……… ஸ்கேனிங்……… என நகர்கிறது நேரம்.  நண்பரும் மருத்துவருமான மகேந்திரன் காலுடைந்ததை உறுதி செய்கிறார். மறுநாள் அறுவை சிகிச்சை.. நன்றாக கவனித்துக் கொள்ளச் சொல்லி ஆபரேஷன் அறையில் உள்ள மருத்துவருக்கே அலைபேசி வருகிறது இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடமிருந்து. மாற்றி மாற்றி மருத்துவர்கள் வந்து கவனித்துக் கொள்கிறார்கள்.

”முதுகுத் தண்டில் மயக்க ஊசி போட்டிருப்பதால் எழுந்து உட்காராதீர்கள்………மயக்கம் வந்துவிடும்………”

”சாய்ந்து படுங்கள்”

“இன்சூரன்சுக்கு சொல்லியாச்சு வந்துரும்”

”வலி சுத்தமா இருக்காது அதற்கான மருந்து குடுத்திருக்கு”

சுற்றிலும் புடை சூழ நண்பர்கள்……… செவிலியர்கள்……… மருத்துவர்கள்………

ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கிறேன்.

அய்யோ என் மக்களே………

உங்களுக்கு யார் இருக்கிறார்கள்? மருத்துவமனை உண்டா? உண்டென்றாலும் அங்கு குண்டு விழாது என்கிற உத்திரவாதம் உண்டா? தொடையோடு துண்டாகிப் போன கால்களோடு……… தோளோடு பிய்த்தெறியப்பட்ட கைகளோடு……… மரண வேதனையில் தவிக்கும் உங்களுக்கு ஒரு வலி நிவாரணி உண்டா? அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் உண்டா? என்னைப் போல சோற்றால் அடித்த பிண்டங்களுக்குக் கூட இருக்கிற இன்சூரன்சு உண்டா? படுக்கையில் சரிந்தபடி அழுகிறேன்.

எங்கள் மக்கள் யாருக்கு என்ன கெடுதல் செய்தார்கள்?

ஏன் எங்கள் மக்களுக்கு மட்டும் இப்படி?

எனது அவலக்குரலும் சிங்கள அரசுக்குக் கேட்டிருக்குமோ என்னவோ……… அடுத்த சில தினங்களிலேயே மக்கள் இப்படி மருத்துவமனைகள்………மயக்க மருந்துகள்……… வலி நிவாரணிகள் இல்லாது துயரப்படுகிறார்களே என்கிற ”மனிதாபிமானம்” மேலிட……… கொத்துக் கொத்தாய் குண்டுகளை வீசி……… அம்மக்களுக்கு வலியிலிருந்தும்……… வாழ்விலிருந்தும் ”விடுதலை” அளிக்கிறது சிங்கள அரசு.

வன்னிக்காடுகளிலும்……… ஈழத்தின் முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்டது பல்லாயிரம் தமிழ் மக்கள் மட்டுமில்லை.

புத்தரும் சேர்த்துத்தான்.

“படுபயங்கர துணிச்சல்காரர்கள்”…

 தமிழகமே “கொந்தளித்துப்” போயிருந்த வேளையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.ஒரு மனிதனது தூக்கம் அவனது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் என்பதற்கு ஏகப்பட்ட நீதிக்கதைகளும் , பல்லாயிரம் சினிமாப் பாடல்களும் இருக்கின்ற நிலையில்
நான் அப்படி தூங்கித் தொலைத்திருக்கக் கூடாதுதான்.

அதுவும் பகல் தூக்கம்.

“ஒருவேளை வெளிநாடு போய் வந்த களைப்பாக இருக்கும்”……

“அல்லது இரவு முழுக்க எழுத்துப் பணியாக இருந்திருக்கும்”……

என்றெல்லாம் அநாவசியத்துக்கு கற்பனைக் குதிரையை தட்டி விடவேண்டியதில்லை யாரும்.
சும்மாவே நினைத்த மாத்திரத்தில் தூங்கக் கூடியவன் நான். இந்தத் தூக்கம் எந்த அளவிற்கு எனக்குள் ஏற்பட இருந்த பதட்டத்தையும் எதிர்பார்ப்பையும்  தவிர்க்கத் துணை புரிந்திருக்கிறது என்பதை எண்ணும்போது…… எனது மாண்புமிகு தூக்கத்தை என்னால் பாராட்டாமல்
இருக்க முடியவில்லை.

தமிழக முதல்வர் சாரி……
தி.மு.க.தலைவர் மத்திய அரசை கிடுகிடுக்க வைக்க நடத்திய பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு  வேறுவழியின்றி அதிகாலையில் உண்ணாவிரதத்தில் குதித்ததும்……

இது மத்திய அரசை ஒரு குலுக்கு குலுக்கி……

மத்திய அரசு “இறையாண்மைக்” கவலைகளையும் மீறி சிங்கள அரசை ஒரு ஆட்டு ஆட்டி……

அய்ரோப்பிய நாடுகளும், ஐ.நாவும் அலறிய அலறலுக்கே செவி சாய்க்காத ராஜபக்சே கிடுகிடுத்துப் போய்…… திடீர் “போர் நிறுத்தம்” அறிவித்து……

அதை அடுத்து முதல்வரும் தனது உண்ணாவிரதத்தை விலக்கி……

என சகல சமாச்சாரங்களும் நடந்து முடிந்து விட்டது நான் தூங்கி எழுவதற்குள்.

இன்னும் இரண்டு மணிநேரம் தூங்கியிருந்தால் ஈழமே வாங்கித் தந்திருப்பார்களோ என்னவோ?

ஜெ.வின் ஈழப் பிரகடனம்……
காங்கிரஸ் அரசின் “நிதி உதவி”……
கலைஞரின் உண்ணாவிரதம்……
என எல்லாவற்றையும் பார்க்கும்போது……
ஈழத் தமிழர் படுகொலைகளுக்கு எதிராக இனி ராஜபக்சே உண்ணாவிரதம் இருப்பது ஒன்றுதான் பாக்கி போலிருக்கிறது.

 

                                             ***********

எனக்கென்னவோ நாற்பது தொகுதிகளையும் மொத்தமாக வாரிச் சுருட்டி……
நாளை நமதே……நாற்பதும் நமதே…… என்று “வெற்றிக் கொடி” நாட்டப்போவது நான்காவது அணிதான் என்று தோன்றுகிறது.

இதுதான் உண்மையான வெற்றிக் கூட்டணி.
அதாவது:
நா.ம.க + ச.ம.க + பா,ஜ.க + ஜ.க = நாடாளுமன்றம்.

கா……கா……கா……

ஏற்கெனவே திருமங்கலத்தில் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகளை “அள்ளிக் குவித்த” சரத்குமார்……
மைக்ராஸ்கோப் வைத்துத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத பி.ஜெ.பி……
தனது தொப்பியைக் கூட கைப்பற்ற முடியாத கார்த்திக்……
கவுன்சிலர் தேர்தலில் கூட கடைசியாக வரும் ஆளுக்கு அடுத்ததாக வரும் சுப்ரமண்யன் சாமி……
இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து மடம் கட்டினால் எப்படி உருப்படும்?

தன்னம்பிக்கை தேவைதான். ஆனாலும் இந்த படு ஓவரான தன்னம்பிக்கையை என்னவென்று சொல்வது,?
வேண்டுமானால் ஒன்று செய்யலாம்…….
உலகிலேயே படுபயங்கர துணிச்சல்காரர்கள் என்கிற அடிப்படையில் இவர்களது பெயர்களை கின்னஸ் சாதனைப் பட்டியலுக்கு அனுப்பி வைக்கலாம்.
அவ்வளவுதான்.

                                            ***********

gallery_anitaheli

அபத்தத்தின் சிகரமான NDTV தொடங்கி உள்ளூர் உதவாக்கரை சேனல்கள் வரைக்கும்
ஈழப்போர் நிலவரம் குறித்து ஆளாளுக்கு ஒவ்வொன்றை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கும் நிலையில்……
“தி வீக்” வார இதழ் மட்டும் அனிதா பிரதாப்பின் அற்புதமான அலசல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

என்னவோ இங்கிருந்து உள்ளூர் தமாஸ் போலீஸ் இலங்கையில் போய் இறங்கி……
அப்படியே ஈழத்துக்குள் ஊடுருவி……
வட கிழக்கில் தேசியத் தலைவரை தேடிக்கண்டுபிடித்து……
“யூ ஆர் அண்டர் அரஸ்ட்……
ஐ மீன் நான் உங்களக் கைது செய்கிறேன்” என்று பழைய தமிழ் சினிமா நடிகர் கோபாலகிருஷ்ணன் பாணியில் வசனம் பேசி அழைத்து வரும் ரேஞ்சுக்கு அளந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அனிதா பிரதாப்பின் வார்த்தைகளில் எதார்த்தமும் நேர்மையும் துளிர்விடுகிறது.
அதை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……
“பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள்.


தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறீலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிக்கையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.

கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன்.

பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப்படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒரு முறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார். அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.
எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.”

என பொட்டில் அடித்தது மாதிரி சொல்லி இருக்கிறார் அனிதா பிரதாப்.

தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத அனிதா பிரதாப்புக்கு இருக்கிற
உண்மையும்……  உணர்வும்……
சூடு சொரணையும்……  கூட

தமிழை தாய் மொழியாகக் கொண்ட சில தறுதலைகளுக்கு இல்லை என்பதற்காக
வீழ்ந்துவிடவா போகிறது அந்த வீரஞ்செறிந்த விடுதலைப் போர்?

 

அரசியல் என்பது……

தி.மு.க.வை ஆதரித்தால்

அது இனப்படுகொலைக்கு துணை போகும் காங்கிரசை ஆதரிப்பதாக ஆகி விடும்……

தனியாக தி.மு.க.வை யும் வி.சிறுத்தைகளையும் ஆதரிக்கலாமா?

அல்லது இரண்டையும் சேர்ந்து எதிர்க்கலாமா?

 

வை.கோ.வை ஆதரித்தால் அது இதுவரை எதிராக இருந்த அம்மா தி,மு,க.வை ஆதரிப்பதாக ஆகி விடுமே……

தனியாக வலது “கம்யூனிஸ்ட்”டையும், வை.கோவை மட்டும் ஆதரிக்கலாமா?

அல்லது அந்த அணியையே எதிர்க்கலாமா?

என ஆளாளுக்கு ஒரு பக்கம் முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க…… மாணவர்கள் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள். தங்களை வரவேற்பதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்த வைகோ விற்கு “சிறப்பான” வரவேற்பு கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். கூடவே “எங்களுக்கு திருமாவளவனும் வேண்டாம்…… ராமதாசும் வேண்டாம்” என ஓங்கிக் குரல் கொடுத்திருக்கிறார்கள். இவருக்கே இந்த “வரவேற்பு” என்றால் தி.மு.க. காங்கிரஸ் அண்ட் கோவுக்கு எத்தகைய “வரவேற்பை” கொடுத்திருப்பார்கள் என்பது உலகுக்கே வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த விசயம்.

போதாக்குறைக்கு வைகோ வேறு சும்மா இருக்காமல் “நான் அரசியல் என்கிற சட்டையைக் கழட்டி வைத்து விட்டு வந்திருக்கிறேன்” என்கிற முத்தையும் உதிர்த்துவிட்டு திரும்பியிருக்கிறார் வை.கோ.

இதற்கிடையே “கவிதாசரண்” என்கிற இலக்கியப் பத்திரிகையை வாசிக்க நேரிட்டது. அதில் தன் விலை மதிப்பற்ற உயிரைத் தந்து உலகை விழிக்க வைத்த தம்பி முத்துக்குமாரின் கவிதைகளை வாசிக்க நேரிட்டது. கவிதைகள் ஒவ்வொன்றும் பொட்டில் அடித்த மாதிரி கனல் கக்கும் வரிகளாய்…… இதயத்தை தொட்டது……இல்லையில்லை சுட்டது.

அதிலிருந்து ஒரு கவிதை:

ஒரு வீடு இரு திருடர்கள்

அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

 நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.

 

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

 

முதல் திருடன் சொன்னான்,

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

‘திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

 

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

 

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய

அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

 

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

 

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.

 

பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை

‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

 

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.

 

ஆனால்……

அரசியல் என்பது போட்டிருக்கிற சட்டையல்ல.

கட்டியிருக்கிற கோவணம்.

வணக்கத்துடன் பாமரன்.

அன்பிற்குரிய “தமிழக அரசியல்” வார இதழின் ஆசிரியர் அவர்களுக்கு,

 

 

வணக்கத்துடன் பாமரன்.

 

தமிழகமும், தமிழக அரசியலும் நெஞ்சை விட்டு நீங்காமல்தான் இருக்கின்றன. கட்டுரை எழுத வேண்டும் என்கிற நினைவு இருந்தாலும் இங்கிலாந்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலுள்ள நேர மாற்றம் சட்டென்று நினைவுக்கு வராததால் இம்முறை எழுதுவது இயலாததாகி விட்டது. (தமிழகத்தில் இருந்தாலே சரியான நேரத்தை நாம் தொலைபேசியில் நினைவூட்டினால்தான் உண்டு. இந்த லட்சணத்தில் அயல் நாட்டிற்குப் போயா நீ நேரத்தைக் கடைபிடிக்கப் போகிறாய்? என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.)

 

எங்கெங்கு காணினும் நம் தமிழர் கூட்டம். வேற்று மண்ணாகவே தெரியவில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் உள்ளுக்குள் பெருத்த சோகங்களைச் சுமந்தபடி திரிகிறார்கள். நேற்று ஒரு இளைஞனை உணவு விடுதி ஒன்றில் சந்தித்தேன். “அம்மா வன்னீல இறந்துட்டாங்க. இப்பதான் தகவல் வந்துச்சு.” என்றார்.

 

தாய் “பயணப்பட்ட” தகவல் தெரிந்ததும் உடனே பஸ் பிடித்து ஊர் போய்ச் சேர இதென்ன நம்நாடா? இங்கு தட்டு கழுவியோ…. பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக் கொண்டோ உயிர் பிழைத்துக் கொண்டு உலவும் கூட்டத்துக்கு அம்மா இறந்தாலும் சரி…. அப்பா இறந்தாலும் சரி…. ஊர் போக காசும்…. அப்படியே போய் சேர்ந்தாலும் போனவர் உயிரோடு திரும்பி வருவதற்கான உத்திரவாதத்தையும் யார் தரப் போகிறார்கள்?

 

லண்டனில் இங்கு எங்கு அப்பமும் தயிர் வடையும் கிடைக்கும்? என பயணக்கட்டுரை எழுதுவதற்கு இது இன்பச் சுற்றுலா அல்ல. இது சோகங்களை மட்டுமே சுமந்து வந்திருக்கும் நமது சொந்தங்களைக் கண்டு துக்கம் விசாரிப்பதற்கான பயணம். பச்சையாகச் சொன்னால் நான் இழவு வீட்டிற்கு வந்திருக்கிறேன்.

 

இங்கு எண்ணற்ற சந்திப்புகளும்….

ஒரு தொலைக் காட்சிக்கான நேர்காணலும்….

எனக்கென காத்துக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

 

நமது வாசகர்களுக்கு எனது மனம் நிறைந்த அன்பைச் சொல்லுங்கள்.

 

 

 

தோழமையுடன்,

பாமரன்.

 

 

 

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல

முலாயம்சிங் கட்சியோடு சோனியா காங்கிரஸ் 

கூட்டணி வைத்துக் கொள்ளாததற்கு எது காரணம்?

நாட்டு நலன்தான்.

ஆனால் “இன்னமும் காத்திருக்கிறேன். கூட்டணி பற்றிய முடிவை கட்சியின் குறுந்தலைவர்களிடம் விடாமல் தலையாய தலைவராய் இருக்கிற சோனியாவே இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்கிறார் முலாயம்சிங்.

அதற்கு எது காரணம்?

நாட்டு நலன்தான்.

“விஜயகாந்த் தேர்தல் புறக்கணிப்பையோ அல்லது தி.மு.க, அ.தி.மு.க.வோடு கூட்டு சேருவதை கைவிட்டு பா.ஜ.க.வோடு கூட்டு சேருவதுதான் நல்லது” என இல.கணேசன் கதறுகிறாரே… எதற்காக?

நாட்டு நலன்தான்.

சாலைப் பணியாளர் போராட்டம்……

விவசாயிகள் போராட்டம்……

நெசவாளிகள் போராட்டம்……

அரசு ஊழியர் போராட்டம்……

எனச் சகலரின் போராட்டத்துக்கும் ஆப்போ ஆப்பு வைத்த புர்ர்ர்ர்ர்சித் தலைவியோடு பல்லை இளித்துக் கொண்டு கூட்டு வைத்திருக்கிறார்களே

லெப்ட்டும்…… ரைட்டும்……

என்ன காரணத்திற்காக?

நாட்டு நலன்தான்.

ஒரு பக்கம் புறக்கணிப்புப் பெனாத்தால்…… 

மறுபக்கம் காங்கிரசுடன் மச்சான் மந்திரியாவதற்கான  பேரம்……

என அல்லும் பகலும் அலைமோதுகிறாரே

அலப்பரைகாந்த்……

எதற்காக?

நாட்டு நலன்தான்.

 

ஊரே காறி உமிழ்ந்து கொண்டிருக்கிற காங்கிரசோடு

உடும்புப்பிடி உறவு வைத்துக் கொண்டிருக்கிறாரே

உடன்பிறப்புகளின் தலைவர்……

அது எதற்காக?

நாட்டு நலன்தான்.

இந்தப் பக்கம் குதிக்கலாமா?

இல்லை அந்தப் பக்கம் குதிக்கலாமா?

இப்பவே குதிக்கலாமா?

அல்லது அப்புறமா குதிக்கலாமா? என தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாரே

தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் அய்யா ……

அந்த ஆலோசனைகள் எதன் பொருட்டு?

நாட்டு நலன்தான்.

 

அத்துமீறுவதாவது ……?

அடங்க மறுப்பதாவது ……?

அறிவாலயமே சரணம்!

என சத்தம் போடாமல் ஒதுங்க இடம் கிடைத்தால் போதும் இப்போதைக்கு

என ஓரம் கட்டுகிறதா சிறுத்தை?

என்ன காரணம்?

அதுவும் நாட்டு நலன்தான் வேறென்ன?

எல்லாம் சரிதான் …….
ஆனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து கரடியாகக் கத்துகிறார்களே ……
நாட்டு நலன் ……
நாட்டு நலன் என்று ……
அது எந்த நாட்டின் நலன் என்பதை தேர்தலுக்கு முந்துன நாள் சொன்னாக் கூட தேவலை.

அந்த நாட்டு மக்களை ராவோட ராவா கூட்டியாந்து ஓட்டுப் போட வெச்சுரலாம்.

 நாங்க கையில, கால்ல கரும்புள்ளி …… செம்புள்ளி குத்திக்கறதுக்குள்ள சீக்கிரமா சொல்லுங்கப்பா ராசா …… உங்குளுக்கு கோடிப் புண்ணியமா போகும்.

 

**********

புத்தகம் படித்தல் என்பது இந்த நாட்டில் மிகப் பெரிய தேசத் துரோகக் குற்றம். இது சட்டப்படி அல்ல. நம்மவர்களே தங்களுக்குள் போட்டுக் கொண்ட எழுதப்படாத சட்டம். படிப்பது என்பதே தேர்வில் வெற்றி பெறுவதற்காகவோ …… பதவி உயர்வுக்காகவோ …… படிப்பது என்றாகி விட்டது.

“கடைசியாக என்ன படம் பார்த்தே?” என்று கேட்டுக் கொள்கிறார்களே ஒழிய ……  ஒரு போதும் “கடைசியா என்ன புத்தகம் படிச்சே?” எனக் கேட்பதேயில்லை பலரும். இதில்  தூக்கம் வருவதற்காகப் ‘படிக்கின்ற’ ஜாதியும் உண்டு. ஆனால் …… அதற்காகவே அச்சாகும் புத்தகங்களும் உண்டு என்பதனையும் மறுப்பதற்கில்லைதான்.

அன்மையில் சீனாவைச் செப்பனிட்ட மாமனிதர் மாவோவின் நூல் ஒன்றினை வாசிக்க நேரிட்டது. “கீழைக்காற்று” பதிப்பகம் வெளியிட்டுள்ள “மா சே துங் மேற்கோள்கள்” என்கிற நூல்தான் அது. வெகு எளிமையாகவும், சகலருக்கும் புரியும் விதத்திலும் மாவோவின் கருத்துக்களை அழகாக எடுத்து வைக்கிறது புத்தகம்.

“மக்களை ஒற்றுமைப்படுத்துவது எப்படி?

நமது சிந்தனை முறையும் வேலை முறையும் எப்படி இருக்க வேண்டும்?

அரசியல் என்பது  இரத்தம் சிந்தாத யுத்தம்.
யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்”  என எண்ணற்ற கருத்துக்களை நம்முள் விதைத்துக் கொண்டே போகிறது புத்தகம்.

பல பதிப்புகள் வந்து விட்ட இந்த நூலில் என்னைப் பாதித்தது மாவோவினது “படிப்பது” பற்றிய கருத்துக்கள்தான். அதை அவரது வரியிலேயே சொல்வதானால் ……
“சுய திருப்தி என்பது படிப்பின் விரோதி. இந்தச் சுய திருப்தி உணர்வை நம்மிடமிருந்து நீக்கினால் ஒழிய, நாம் ஒன்றையும் உண்மையாகக் கற்க முடியாது. நம்மைப் பொறுத்தவரையில் ‘படிப்பில் தெவிட்டாமை’ என்ற கண்ணோட்டத்தையும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் சளையாமை’ என்ற கண்ணோட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.”

ஆனால் இங்கே பலருக்கு படித்ததே போதும் என்கிற தெவிட்டலும் இருக்கிறது. பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் சலிப்பும் இருக்கிறது என்பதுதான் எதார்த்தம். அதை விடவும் மக்களுக்கான தலைவர் மாவோவினது ‘புரட்சி’ பற்றிய கருத்துக்களைப் படித்தபோது …… சிந்தனையை விட சிரிப்புதான் மேலிட்டது. அதற்குக் காரணம் நிச்சயம் மாவோ அல்ல. இந்த மகத்தான மண்தான். இங்குதான் எதை எதைத்தான் ‘புரட்சி’ என்பதற்கு விவஸ்தையே கிடையாதே ……

  “புரட்சி தலைவி”
  “புரட்சிப் புயல்”
  “புரட்சித் தளபதி”
  “புரட்சிப் கலைஞர்”
இத்தனையும் போதாதென்று செல்போன் விற்பவன் கூட இங்கே

‘புரட்சிகர சிம் கார்டு” என்றுதான் கூவுகிறான்.

ஆனால் புரட்சி என்பதற்கான அர்த்தமே மாவோவின் மொழியில் வேறானது.

வேறானதோ ……

மாறானதோ …… இருக்கட்டும் ……

அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் அவர்? என நீங்கள் எரிச்சல்படும் முன் ……

மாவோவை உங்கள் முன்னர் நிறுத்திவிட்டு நான் எஸ்கேப் ஆவது நல்லது.paams

“புரட்சி என்பது ஒரு மாலை விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வளவு பண்பானதாக இருக்காது; அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தூக்கி எறியும் ஒரு பலாத்கார நடவடிக்கை.”

என்ன இந்த பதில் போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?.

ஆனால் இதைப் படித்த பிறகும்

எவராவது ……

எவரையாவது ……

“புரட்சிகரப் பீடிகை” போட்டு பிதற்றுவார்களெனில் அதற்கு நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.

**********

பெரும்பாலும் இந்தக் கல்யாணம் ……

காதுகுத்து ……

வளைகாப்பு ……

பூப்பு நன்னீராட்டு போன்றவைகள் பக்கம் போவதே கிடையாது. அதிலும் உறவினர்களுடைய வைபவங்கள் என்றால் அந்தத் தெரு பக்கம் கூட தலைவைத்துப் படுக்க மாட்டேன்.

 காரணம்:

என்னதான் சுற்றிச் சுற்றிப் பேசினாலும் கடைசியில் சாதியில்தான் வந்து நிற்பார்கள் என்பதுதான். 

தப்பித் தவறி எதிரில் தென்பட்டு விட்டாலும் சொந்த சித்தப்பனிடமே “சாரை எங்கியோ பார்த்த மாதிரிதான் இருக்கு …… ஆனா பேருதான் ……?” எனப் பெரிய போடாய் போட்டுவிடுவேன். அதற்கப்புறமும் என்னிடம் நின்று பேச அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? எல்லாம் இந்த “சாதி” என்கிற சனியன் பிடிக்காததால் வந்த ‘வினை’.

 ஆனால் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் …… பெரிய பெரிய கொள்கைப் பிரகடனங்கள் எல்லாம் செய்யாமல் நடந்த ஒரு அற்புதமான ம(ண)ன விழாவுக்கு நண்பர்களும் நானும் சென்றிருந்தோம். அண்ணன், தம்பி இருவரது மணவிழா வரவேற்பும் ஒரே மேடையில். அண்ணன் விஜியும்   ராணியும் சாதி மறுப்புத் திருமணம். கூடவே தம்பி சுரேசும்   ரேணுவும் சாதி மறுப்புத் திருமணம்.

அண்ணனுக்குப் பணி தன் தந்தை கிருஷ்ணனோடு இணைந்து இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்ப்பது. “ஒர்க்சாப் விஜி” என்றால் நண்பர்கள் வட்டத்துக்கு நல்ல பரிச்சயமான பெயர்.

கைகளும், உடைகளும் பணிகளின் நிமித்தம் அழுக்காகி இருப்பினும் ……

சாதி …… மதம் …… என்னும் அழுக்குகளை அகற்றியாக வேண்டும் என்கிற அக்கறை அந்த இளைஞனுக்குள் என்றோ முளைவிட்டிருக்கிறது. இதில் அவரோ அவரது குடும்பத்த்¢னரோ எந்தவித திராவிட இயக்கத் தொடர்போ …… பொதுவுடமை இயக்கத் தொடர்போ இல்லாதவர்கள் என்பதுதான் ஆச்சர்யப்படத்தக்க விசயம்.

இந்த இருவரது சாதி மறுப்புத் திருமணங்களையும் எந்தவித முகச்சுழிப்பும் இன்றி பெரும் மகிழ்வோடு முன்னின்று நடத்தியவர்கள் இருதரப்பினதும் பெற்றோர்கள்தான் என்பதுதான் மனதார பாராட்டப்பட வேண்டிய விசயம்.

“இப்ப எல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா?” என நீட்டி முழக்கி விட்டு …… 

தனது வீட்டுத் திருமணங்களின் போது மட்டும் சத்தமில்லாமல் சொந்த சாதியில் ……
உட்பிரிவுகள் கூட சிக்கலாகாமல் ஆள் தேடும் அயோக்கியர்கள் மத்தியில் ….. 

நாற்பது ஆண்டுகளாய்  ஒர்க்சாப் உழைப்பால் மட்டுமே உயர்ந்து ……
தனது புதல்வர்கள் மனம் விரும்பிய இடத்தில் மணம் புரியத் துணை நின்ற கிருஷ்ணன்கள் மிக மிக மரியாதைக்குரியவர்கள்.

அவர்கள் பழுது நீக்கிக் கொண்டிருப்பது
வாகனங்களுக்கு மட்டுமில்லை.
சமூகத்திற்கும் சேர்த்துத்தான்.

 

நன்றி : “தமிழக அரசியல்” வார இதழ்.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

போனமுறை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களையே புரட்டிக்கூட பார்க்காவிட்டாலும், இந்தமுறையும் போயிருந்தேன் புத்தகக் கண்காட்சிக்கு. எல்லாம் ஒரு அரிப்புதான். புத்தகக் கண்காட்சிக்குப் போகாவிட்டால் எங்கே நம்மை “அறிவுஜீவி இல்லை” என்று அறிவித்து விடுவார்களோ என்கிற பயத்திலேயே பலபேர் போகிறார்கள் போலிருக்கிறது.

இலவசக் கடலையோடு சில புத்தகங்களையும் இலவசமாக வாசலிலேயே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திலகவதி புண்ணியத்தில் அடியேன் திருமுகத்துக்கும் ஒதுக்கீடு வழங்கியிருந்தார்கள் அம்ருதா பதிப்பகத்தினுடைய பேனரில்.

புத்தகக் கண்காட்சிக்கு வெளியே இருக்கிற கேண்டீனில் வயிறு புடைக்கத் தின்றது போதாதென்று உள்ளேயும் தர்ப்பூசினி…… வடை…… டீ…… என்று பலபேர் வெளுத்துக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். பல ஜென்மங்கள் சாப்பிடுவதற்காகவே வந்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

புத்தகக் கண்காட்சி உண்மையிலேயே உருப்பட வேண்டுமென்றால் அதைச் சுற்றி பத்து கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஓட்டல்களே இல்லாமல் இருப்பது நல்லது.

கீழைக்காற்று…… தமிழினி…… திராவிடன்…… உட்பட பல பதிப்பகங்களில் கையிலிருந்த காசுக்கு கொஞ்சம் புத்தகங்கள் வாங்கிவிட்டு வெளியில் வர…… எங்கோ

பராக்குப் பார்த்தபடி வந்த ஒருவர் ஆளை குப்புறத் தள்ளுகிற அளவுக்கு மோதி விட்டு…… “அட நீங்களா?” என்றார். ஏதோ பிக்பாக்கெட்டைப் பார்த்ததைப் போல. “ஆமாம்…… நானேதான்.” என்றேன்.

அடுத்து ஒரு பத்திரிக்கையின் பெயரைக் குறிப்பிட்டு “நீங்கள் ஏன் அதில் எழுதுவதேயில்லை?” என்றார். “அவங்க கேட்கல…… அதனால எழுதலீங்க” என்றேன். ஆசாமி

அத்தோடு விடுவதாயில்லை. இன்னொரு பத்திரிக்கையைக் குறிப்பிட்டு “இதில் ஏன் எழுதுனீங்க……?” என்றார். “எழுதச் சொன்னதால் எழுதினேன்” என்றேன். வேறென்ன சொல்ல?

இந்தக் குழப்பம் “நண்பர்கள்” சிலருக்கும் உண்டு. என்னைப் பொறுத்தவரை எதில் எழுதுகிறேன் என்பதை விடவும்…… என்ன எழுதுகிறேன் என்பதில்தான் எனது கூடுதல் கவனம் இருக்கும். எனது எந்தவொரு வார்த்தையோ…… வாக்கியமோ…… நான் நேசிக்கும் பெரியார் – அம்பேத்கரிய தத்துவங்களுக்கோ…… பொதுவுடமை சித்தாந்தங்களுக்கோ…… இம்மியளவு கூட குந்தகம் விளைவித்துவிடக் கூடாது என்கிற அக்கறையிலேயே பயணப்படும்.

நான் எழுதிக் கிழித்ததெல்லாம் கிடக்கட்டும் ஒருபுறம்…… ஆனால் என்னை எழுத வைப்பதற்குள் அந்தந்த பத்திரிகை நண்பர்கள் படும்பாடுதான் பெரும்பாடு. உலகமகா சோம்பேறிக்கான பட்டம் யாருக்காவது கொடுக்கலாம் என்றால்…… நிச்சயம் எனது பெயரைத்தான் பரிந்துரைப்பார்கள் பத்திரிகை உலக நண்பர்கள்.

எப்படித்தான் மற்றவர்கள் மூனே மாசத்தில் எட்டு புத்தகம்…… பத்து புத்தகம்…… என்று போட்டுத் தள்ளுகிறார்களோ……? அவர்களெல்லாம் எழுத்தாளர்களா? அல்லது ஏதாவது காபி போடும் மெஷினா? என்கிற சந்தேகம் அடிக்கடி வரும். அதுசரி…… சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? நமக்குத்தான் மண்டையில் இருக்கவேண்டிய சமாச்சாரம் சுத்தமாய் இல்லையே…… என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.

கட்சிதாவலுக்கு பல அரசியல்வாதிகள் சொல்லும் பல சமாளிப்புகளைப் போல……

பத்திரிகை தாவலுக்கும்

 “சொந்த வீடு……”

“வாடகை வீடு……”

“ஒத்திக்கு எடுத்தது……” என்றெல்லாம் புலம்பித்தள்ளும் எழுத்தாளர்களும் உண்டு. என்னைப் பொறுத்தவரை எந்தப் பத்திரிகையோடும் எந்தப் பகையும் இல்லை. ஏனென்றால் உறவு இருந்தால்தானே பகையைப் பற்றி சிந்திக்க.

 வர்த்தக இதழ்களைத் தாண்டி சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களது இதழ்களில் எழுத வேண்டும் என்கிற ஆசை அவ்வப்போது எழும். ஆனால் வெகுஜன தளத்தில் வெறுமனே ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் எனது எழுத்துக்களால் அந்த இதழ்களின் பக்கங்கள் விரையமாகிவிடக் கூடாதே என்கிற அக்கறையில் அந்த ஆசையை அப்போதே புதைத்து விடுவேன்.

“சண்டே இந்தியன்” பத்திரிகையின் அரிந்தம் செளத்ரி “ஈழக் கோரிக்கை சரியில்லை” என்கிறாரா……

அதிலேயே “ஈழம் காலத்தின் கட்டாயம்” என்றுதான் எழுதுவேன்.

அவ்வளவு ஏன்……? இதே தமிழக அரசியல் இதழில் “சீனியர்” “பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடுதான் சரியானது” என்கிறாரா……

அதற்கு நேரெதிரான கருத்துத்தான் என்னுடையது என்பதனை எழுதத் தயங்க மாட்டேன். “குமுதம்” தொடங்கி “தமிழக அரசியல்” வரைக்கும் அதனதன் ஆசிரியர்கள் சமூகநீதி…… சமயமறுப்பு உட்பட எனது பல்வேறு எண்ணங்களை அறிந்தேதான் எழுத அழைக்கிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் என்பது இதழியலின் மிக முக்கியமான அங்கம் என்பதை உணர்பவர்களோடு தொடர்கிறது எனது எழுத்து. அது இல்லாத இடங்களில் “உனக்கொரு கும்பிடு…… உன் பத்திரிகைக்கு ஒரு கும்பிடு” என்று நடையைக் கட்டி விடுவேன்.

இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமானால் ஒன்று செய்யலாம்……

“இந்த இதழில் வெளிவரும் எந்தவொரு கதையையோ, கட்டுரையையோ ஏற்கவோ, மறுக்கவோ, சுருக்கவோ, நீட்டவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.” என பல பத்திரிகைகள் கட்டம் கட்டி கடைசி பக்கத்தில் வெளியிடுவதைப் போல……

எனது கட்டுரை இடம்பெறும் பத்திரிக்கைகளில்…… “ இந்த இதழின் பிற பக்கங்களில் இடம்பெறும் எந்தவொரு கதைக்கோ…… கட்டுரைக்கோ…… நான் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல. எனது பக்கங்களில் இடம்பெறும் எழுத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பு.” என்று கட்டம் கட்டிப் போடச் சொல்லலாம்.

ஆக……

எழுதுகிற இதழ்களெல்லாம்

எனக்கானவையும் அல்ல.

எழுதாத இதழ்களெல்லாம்

எனது எண்ணங்களுக்கு எதிரானவையும் அல்ல.

நன்றி : தமிழக அரசியல் வார இதழ்.

“வாழும் பக்தவச்சலங்கள்”

muthukumar01

 உலகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கிப் போட்டிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். இப்பூவுலகை விட்டுப் புறப்படுவதற்கு முன் தான் பயணப்படுவதற்கான காரணங்களை மிகத் தெளிவாக அச்சிட்டு……. நிதானமாக ஒவ்வொருவர் கையிலும் அளித்துவிட்டு……. மூடியைத் திறந்து ஊற்றினால் பெட்ரோல் பரவலாகத் தன் உடலில் பரவாது என்று அதன் அடிப்பகுதியை அறுத்து தன்னை முழுதாகக் குளிப்பாட்டிக் கொண்டு பற்ற வைத்திருக்கிறான் தோழன் முத்துக்குமார்.

அந்தத் தோழனின் மரண சாசனத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரியும் இதயமுள்ள எவரையும் கண்ணீர் விட்டு அழ வைக்கும். உள்ளூர் அரசியலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசி ஆராய்வதிலிருந்து……. சர்வதேச அரசியலின் ஆணிவேரையும் அடையாளம் காட்டியிருக்கிறது அவனது மரண சாசனம். இது இந்த நூற்றாண்டின் மக்களுக்கான இலக்கியமாக என்றென்றும் வீற்றிருக்கும்.

“வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை…….” எனத் தொடங்கும் அந்தத் தோழனின் மடல் தமிழக – இந்திய ஓட்டுப் பொறுக்கிகளின் யோக்யதை……. தமிழக மாணவர்களது போராட்ட உணர்வு……. காவல்துறையில் எஞ்சியிருக்கும் ஓரிரு நேர்மையாளர்களும் மக்களுக்காகப் அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியம்……. காலத்தின் கட்டாயமாகிப் போன ஈழத்தின் விடியல்……. என எண்ணற்ற திசைகளில் பயணிக்கிறது அக்காவியம். அத்தோடு நில்லாமல் முத்துக்குமார் தான் நேசிக்கும் சர்வதேச சமூகத்தை நோக்கி வீசியிருக்கும் வினா……. அறிவு நாணயமுள்ள எவரையும் சிந்திக்க வைக்கும் வினா.

அதை அத்தோழனது வரிகளிலேயே சொல்வதானால்……. ” வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன் படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?” முத்துக்குமாரின் வரிகளில் உள்ள சர்வதேச அரசியல் பார்வையையும்……. சர்வதேச சமூகத்தின் சகிக்கமுடியாத மெளனம் குறித்த கவலையையும்……. வாசிக்க வாசிக்கவே……. இத்துணை அற்புதமான தோழனை இழந்திருக்கிறோமே எனக் கண்ணீர் விட்டு அழுதேன். ஒருமுறை அல்ல. பலமுறை.

தான் வெறுமனே தமிழ் வெறியனல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஓருயிர் என்பதை உணர்த்தும் விதமாய்…….” படுகொலை செய்யப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர் லசந்தாவின் சாவுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…….

தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதிகளாக வந்த சிங்களத் தம்பதியினர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்…….” என்கிற வரிகளை வாசிக்கும்போது விண்ணுக்கும் மேலாய் உயர்ந்து நிற்கிறான் அம்மானுடன்.

“என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்” என்கிற தம்பியின் வேண்டுகோளை ஏற்று……. போலீசை மட்டுமல்ல……. ஓட்டுப் பொறுக்கிகளையும் ஓட ஓட விரட்டியிருக்கிறார்கள் இளைஞர்கள்.

காங்கிரசின் கிளைக் கழகமாகிப் போன தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வுக்கு உதை…….

போயஸ் தோட்டத்தில் “போர்த்தந்திரம்” வகுக்கும் வை.கோவிடம் “ஜெ.கிட்டே இருந்து வெளீல வந்துட்டு ஈழத்தைப் பத்திப் பேசு” என்கிற எச்சரிக்கை…….

என ஓட்டுத் தலைவர்கள் எவரும் தப்பவில்லை இந்த இளைஞர்களிடம். காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் இந்தித் திணிப்பிற்கெதிரான மாணவர்களது மொழி உணர்வுகளை தங்களுக்காக அறுவடை செய்து கொண்ட தி.மு.க.வினருக்குத் தெரியாதா……. எதை எப்படிச் சமாளிப்பதென்று? அதுவும் அப்படியே செய்தது…….. கல்லூரிகள் அனைத்தையும் இழுத்து மூடி, மாணவர்களை வெளியேற்றியது. ஆனால் அதையும் உடைத்தெறிந்து இந்தக் கணம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது மாணவர்களது யுத்தம்.

காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பகதவச்சலம் மாணவர்களை ஒடுக்க எதை எதையெல்லாம் செய்தாரோ……. அவைகளை அச்சு பிசகாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் “வாழும் பக்தவச்சலமான” முத்தமிழறிஞர்.

இந்த லட்சணத்தில் இருக்கின்ற அமைப்புகள் போதாதென்று “இலங்கை தமிழர் நல உரிமை பேரவை” என்று இன்னொரு புது அமைப்பு வேறு. பெரியாருக்கு ஆப்படிக்கும்போது “தலைவர்” பதவியைக் காலியாக விட்ட மாதிரி…….

இந்த அமைப்புக்கும் இப்போது “தலைவர்” கிடையாதாம்…….

அதன் துணைக் குழுவுக்கு அமைப்பாளராக துரைமுருகனாம்…….

செயலாளர்களில் ஒருவராக இரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழாயான கி.வீரமணியாம்…….

இப்படி நகர்கிறது இவர்களது நகைச்சுவை நாடகம். இதற்கு பதிலாக…….

தலைவராக “வழக்கம்போல்” கலைஞரும்…….

பொதுச் செயலாளராக ராஜபக்சேவும்…….

பொருளாளராக சோனியாவும்…….

செயலராக ஜெயலலிதாவையும்…….

துணைச் செயலாளராக சுப்ரமண்யன்சாமியையும்…….

சேர்த்துப் போட்டிருக்கலாம்.

கிழிஞ்சது கிருஷ்ணகிரி.

கொஞ்ச காலம் முன்பு வட மாநிலத் தொலைக்காட்சி ஒன்று “கருணாநிதி” என்பதற்குப் பதிலாக “கருணா” என்று அழைத்ததைக் கண்டு கடும்கோபமும்……. எரிச்சலும் கொண்டேன்.

ஆனால்…….

நடந்து வரும் நாடகங்களயும்…….

நயவஞ்சகங்களையும்……. பார்க்கும்போது…….

ஈழத்துக் “கருணா”விடம் இருந்து மட்டுமில்லை…….

இந்தியக் “கருணா”க்களிடம் இருந்தும்

ஈழப்பிரச்சனையை மீட்டால்தான்

தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட

தம்பி முத்துக்குமாரின் கனவு நனவாகும்

என்பது மட்டும் உறுதி.