கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் இருந்து நேர்காணலுக்காக வந்திருந்தார்கள். அவர்கள் கேட்கவந்த சேதி இன்றைக்குப் பலரையும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சல் பற்றித்தான்.
ஏற்கெனவே மக்கள் மிரண்டு போயிருக்கும் சூழலில் ஆக்கபூர்வமாக எதை சொல்வது என்பதுதான் எனது யோசனையாக இருந்தது.
”இத்தகைய தொற்று நோய்க் கிருமிகளையும், உயிருக்கே உலை வைக்கும் வைரஸ்கள் பற்றியும் ஆராய்வதற்கென்றே ஒரு நிறுவனம் அமெரிக்காவில் இருக்கிறது. அதைப் பற்றியும் விசாரித்துவிட்டு பேட்டி கொடுங்கள்” என்றார் டாக்டர்.ரமேஷ்.
அவர் சொன்னபடி விசாரணையில் இறங்கிய எனக்குக் காத்திருந்ததோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான். அதிர்ச்சிக்குரிய அந்த நிறுவனத்தின் பெயர்தான் : தொற்று நோய்க்கான அமெரிக்க ராணுவ மருத்துவ ஆராய்ச்சி நிலையம். (United States Army Research Institute of Infectious Diseases – USAMRIID)
ராணுவ மருத்துவ ஆராய்ச்சி என்றவுடன் ஏதோ காய்ச்சல் இருமலுக்கு மருந்து கொடுக்கும் ’ஆஸ்பத்திரி’ என்று தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம் யாரும். மற்ற நாடுகளுடன் போர் தொடுக்கும் போது எத்தகைய கிருமிகளை ஏவிவிட்டு ”எமலோகமோ”….அல்லது ”பரலோகமோ” அனுப்பலாம் என்பதற்கான ஆராய்ச்சி நிலையம் அது.
அதாவது நோய் தீர்க்கும் நிறுவனமல்ல.
நோய்க்கிருமி உற்பத்தி நிறுவனம்.
உயிரியல் போரில் பெரும் பங்காற்றும் அப்பேர்ப்பட்ட “புகழ் வாய்ந்த” அந்த ஆராய்ச்சி நிலையத்தின் அட்டவணையிலேயே இன்னும் 9220 வகை நோய்க் கிருமிகள் சேர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதுதான் நம்மைக் குலை நடுங்க வைக்கும் விஷயம்.
இவை இந்த ரகத்தில் இருக்க அயல் நாட்டு சீதனமாய் வந்துள்ள பன்றிக்காய்ச்சலை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் இன்று அரசுகளுக்கு முன் உள்ள பிரதான கேள்வி.
முதலில் ஒருவருக்கு அந்தக் கிருமி தொற்றியுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிந்து தெளிவுபடக் கூறிவிட்டாலே பாதி பீதி அகன்றுவிடும். அப்படிக் கண்டறிவதை எங்கே சென்று கண்டறிவது என்பதில்தான் குழப்பம்.
அரசு மருத்துவமனையா?
அல்லது தனியார் மருத்துவமனையா? இத்தகைய தொற்று நோய்க்கெல்லாம் தனியார் மருத்துவமனைகளை அணுகுவதை விட அரசு மருத்துமனைகள்தான் சரியானவை என்பது பல்வேறு நிபுணர்களின் கருத்து.
இதையே சாக்காக வைத்து எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்று தனியார் மருத்துவமனைகள் கொழுக்கின்றன என்பது ஒரு புறம் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு தொற்றுநோய் தென்படத் துவங்கிவிட்ட இத்தருணங்களில் கடந்த முறை எந்த நோய்க்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிற புள்ளிவிவரங்கள் அரசிடம் இருப்பது எதிர்கால நடவடிக்கைகளுக்கு பெருமளவுக்கு நல்லது.
ஆனால் அவ்வளவு பேரும் ஒட்டுமொத்தமாகப் போய் சிகிச்சை பெறக் கூடிய வசதி அரசிடம் இருக்கிறதா? என்பதுதான் எல்லோருக்குள்ளும் எழும் எண்ணம்.
ஆனால் இத்தகைய எண்ணங்களை அரசு நினைத்தால் ஒரே நாளில் மாற்றிவிட முடியும் என்பதுதான் எதார்த்தம். சென்னையில் ஏறக்குறைய 150 வார்டுகள் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு வார்டிலும் ஒரு நோய் பரிசோதனை ஆய்வகத்தை நிறுவி ஒரு மருத்துவரை நியமித்தாலே போதுமானது. அதற்கொன்றும் கோடிக்கணக்கில் கொட்டி செலவழிக்க வேண்டியதில்லை.
மாணவர்கள் காப்பி அடிக்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிப்பதற்கெல்லாம் பறக்கும்படையை வைத்திருக்கிற அரசு இதற்கென மருத்துவர்கள் கொண்ட பறக்கும்படைகளை அமைத்து கண்காணிக்கலாம்.
இத்தகைய ஆய்வகங்களை பன்றிக்காய்ச்சலுக்கு மட்டும் பயன்படுத்தலாம் என்றில்லை.
நேற்று : சிக்கன் குனியா.
இன்று : பன்றிக்காய்ச்சல் என்றிருக்கும் நிலையில்
நாளை: வேறு ஏதேனும் தொற்றுநோய் தென்பட்டால்கூட இத்தகைய ஆய்வகங்கள் அதற்கும் பயன்படும்.
இதற்கெல்லாம் துட்டுக்கு எங்கே போவது என்று நம் அரசாங்கம் ஒரு போதும் கூறாது என்று அடித்துக் கூறலாம் நாம்.
ஒரு ரூபாய்க்கு அரிசியும்…. வீட்டுக்கு வீடு இலவச டீ.வி.யும் வழங்குபவர்கள் வார்டுக்கு வார்டு ஒரு ஆய்வகம் வைக்கமாட்டார்களா என்ன?
**********
சட்டக்கல்லூரி மாணவர்கள் சாதிச் சண்டை போட்டுக்கொண்டார்கள் என்பதை மட்டும் ஓங்கிக் குரல்
கொடுத்துச் சொன்ன மீடியாக்கள்…. அவர்கள் அற்புதமான செயல்களில் ஈடுபடும்போது ஓசைப்ப்டாமல் ஒதுங்கிக் கொள்வது எந்தவிதத்திலும் சரியாகாது.
ஏறக்குறைய சகல தலைவர்களும் ஈழப் பிரச்சனையில் குறட்டை விட்டுக் கொண்டிருக்க ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கையெழுத்து இயக்கத்தில் இறங்கியிருக்கிறார்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள்.
சொந்த நாட்டிற்குள்ளேயே மூன்று லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டு ஹிட்லரது வதை முகாம்களை மிஞ்சுகின்ற வகையில் அமைக்கப்படுள்ள முகாம்களில் அல்லல்படுவதை தடுத்து நிறுத்தி உடனடியாக அவர்களது வாழ்விடங்களில் மீளக்குடியமர்த்தி நீதி வழங்கக் கோரியும்…..
தங்களின் சொந்த நாட்டு மக்களின் மீதே மனிதகுலம் வெட்கித் தலை குனியும் அளவிற்கு முப்படைத் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்து சர்வதேச
குற்றவியல் வழக்கு மன்றத்தின் முன்பாக நிறுத்தக் கோரியும் ஐ.நா.சபையை வலியுறுத்தி இக்கையெழுத்து இயக்கத்தை தமிழகமெங்கும் தொடங்கியுள்ளார்கள் மரியாதைக்குரிய இம்மாணவர்கள். .
”இதை நீங்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? நாங்கள் எந்தவிதத்தில் குறைந்து போனோம்?” என்கிற கேள்வியை வீசியபோது…… ”நாங்க மட்டுமில்லை இந்த அவலங்களைக் கண்டித்து மனிதநேயமுள்ள எவர் குரல் கொடுத்தாலும்…. இதற்காக யார் கையெழுத்து வாங்கி அனுப்பினாலும் பெரும் நிம்மதிதான் எங்களுக்கு.” என்கிறார்கள் ஒட்டுமொத்தமாய்.
அந்த மாணவர்களுக்கு நிம்மதியோ இல்லையோ துயரின் விளிம்பில் உயிர்வாழும் அம்மக்களுக்கு உங்களது கையெழுத்தும் ஒருவேளை உதவக்கூடும். அதற்கான கையெழுத்துப் படிவமோ அல்லது விளக்கமோ வேணும்கிற மகராசருக 9865417418 ங்குற நம்பருக்கு நட்டநடு ராத்திரில கூப்பிடாம பட்டப்பகல்ல கூப்பிடுங்கப்பா. அப்புறம் உங்கபாடு அவுங்கபாடு.

நன்றி: தமிழக அரசியல் வார இதழ்.
1 Comment(s)
Comments RSS TrackBack Identifier URI
Leave a comment

//ஒரு ரூபாய்க்கு அரிசியும்…. வீட்டுக்கு வீடு இலவச டீ.வி.யும் வழங்குபவர்கள் வார்டுக்கு வார்டு ஒரு ஆய்வகம் வைக்கமாட்டார்களா என்ன?//
அது ஓட்டு வாங்கி தருமா?
ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் சொல்லுங்க செய்வாங்க!