ஈராண்டல்ல….. நூறாண்டைக் கடந்து நிற்கும் சாதனை எது?

அத்தியாயம் : ஒன்று

மகனைப் பள்ளியில் சேர்த்துவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ அதைப் பார்த்துவிட்ட எனது நண்பர் ஜெயச்சந்திரன் ஓடி வந்தார்.

”என்ன தோழர் நீங்க போய் வரிசைல நின்னுகிட்டு…? இருங்க நான் போய் டோக்கன் வாங்கீட்டு வந்தர்றேன்” எனப் பரபரத்தார்.

நான் மட்டுமென்ன பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்தா வந்திருக்கிறேன். நானே ஊருக்குள்ள அனாமத்து. இங்க நின்னா என்ன? எங்க நின்னா என்ன? வேண்டாம் தோழர் விடுங்க. இந்த அனுபவங்களையெல்லாம் அப்புறம் நான் எப்படிப் பெறுவது… எனத் தடுத்தேன் அவரை……..

 

மேலும் வாசிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்

http://andhimazhai.com/news/view/column-pamaran.html

ஒரு மாபெரும் மடையனின் மலேசியப் பயணம்…

Poster

 

 

ராட்டிணத்தில் சுற்றுவதே எனக்கு ஏகபயம். அதுவும் அது மேலே போகும்போது கீழே தெரியும் ஊரைப் பார்க்கும் போதே அடிவயிறு கலங்கிவிடும். இந்த லட்சணத்தில் விமானப் பயணம் என்றால் எப்படி இருக்கும்? அது கிளம்பி மேலே போகப்போக காய்ச்சல் வந்த மாதிரி ஆகிவிடும். விமானத்தில் ஏதாவது ஒரு சின்ன ஆட்டம் என்றாலும் அய்யோ…. காப்பாத்துடா” என்றோ….. ”காப்பாத்துடி….” என்றோ  கடவுளைக் கூப்பிட முடியாது. அதுவும் ஒரு நாத்திகன். போறப்ப எங்கே போறே?ன்னு அபசகுனமா கேட்காதே என்கிற ஜென்மங்களெல்லாம் ஒரு முறை விமானத்தில் போனால் போதும்…. ஏறி உட்கார்ந்தவுடனேயே விமானத்திற்கு விபத்து ஏற்பட்டால் எப்படி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு குனிந்து உட்கார வேண்டும்…. மூச்சு திணறினால் ஆக்ஸிஜன் பையை எப்படி மூக்கில் மாட்டிக் கொள்ள வேண்டும்…. அவசரகால வழி மூலமாக எப்படி தப்பித்தோம் பிழைத்தோம் என பாய்ந்தோட வேண்டும்…. என அக்கு வேறாக ஆணி வேராக விளக்கிப் பேசும் ஒரு பெண். இது போதாதா சகுனப் பேர்வழிகளுக்கு?

புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் உற்சாகபானங்கள் அடங்கிய சரக்கு வண்டியை தள்ளிக் கொண்டு வந்தார் விமானப் பணியாளர். ரெண்டு மூணு உள்ளே போகவும் பயம் பாதி போயிருந்தது. இனி அடுத்த கண்டம் ஆரம்பம். பொதுவாக எனது பொழுதுபோக்கே சிறுநீர் கழிப்பதுதான்… அதிலும் ஏதாவது நீராகாரம் உள்ளே போய்விட்டால் எனதுபாடு பெரும்பாடுதான். அருகில் இருந்த இருவரிடம் பல்லைக் காண்பித்து எழுச்சொல்லி வெளியில் வந்து கழிப்பறைப் பக்கம் போனால்…. அங்கும் ஒரு கியூ. ஏழெட்டு பேர் நிற்கிறார்கள். எனக்கு சேலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள கட்டணக் கழிவறை ஞாபகம் வந்தது. அங்கு ஒருவர் ஓயாமல் சத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பார். ”போனமா வந்தமான்னு இரு”…. ”போனமா வந்தமான்னு இரு….” என்று. ஒருவேளை லாட்ஜில் ரூம் போட்ட நினைப்பில் அரைநாள் அங்கேயே இருப்போரும் உளர் போலிருக்கிறது. அப்பாடா என வெளியில் வரும் போது விமானம் மலேசியாவில் தரை இறங்கப் போவதாக விமானியின் அறிவிப்பு ஒலிக்க ஆரம்பித்தது.

இறங்கியாயிற்று. அடுத்து கையில் இருக்கிற ரூபாயை மலேசியப் பணமாக மாற்ற வேண்டுமே… எங்கே? என்றால் இன்னொரு பக்கம் காண்பித்தார்கள். அதற்கு உள்ளேயே இன்னொரு மின்னல் வேக ரயில். மலேசிய ரிங்கட்டுகளாக ரூபாயை மாற்றிக் கொடுத்த பெண் என் முகக்கெழுத்தியையும் முழுக் கோலத்தையும் பார்த்துவிட்டு நிறைய சில்லரையாகவே கொடுத்தார். பெட்டி நியாபகம் வந்தது. அதற்கு எங்கே போவது? என்றால் இன்னொரு டெர்மினலை காண்பித்தார்கள். மீண்டும் மின்னல் வேக ரயில். பெட்டியை எடுத்த பிற்பாடு வெளிவாயிலுக்கு எப்படி செல்வது என்று கேட்டால் அதற்கும் இன்னொரு டெர்மினலைக் காண்பித்தார்கள். மறுபடியும் உள்ளேயே ஓடும் மின்னல் வேக ரயில். சுங்கச் சோதனை முடித்து ரயிலேறிப் போய் பெட்டியை எடுத்துக் கொண்டு ரூபாயை மாற்றி வெளியில் வருவதற்கு பதில் மாறி மாறி மூன்று முறை ஒரே ரயிலில் காவடி எடுத்த ஒரே ”மாமேதை” நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.

இத்தனைக்கும் எப்படி பணம் மாற்ற வேண்டும்….  எங்கே பெட்டியை எடுக்க வேண்டும்… தங்குமிடத்துக்கு எப்படிச் செல்ல வேண்டும்… என ஒவ்வொன்றையும் பள்ளிக் குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல அனைத்தையும் சொல்லியிருந்தான்  சிங்கப்பூரில் இருக்கும் எனது நீண்டகால கோவை நண்பன் முரளிதரன். போதாக்குறைக்கு நண்பர்கள் சிறீகாந்த், டி.எம்.செந்தில், சார்லஸ் போன்றவர்களின் அரிய ஆலோசனைகள் வேறு. யாரும் சொல்லாமலே புரிவதற்கும்…. அப்படிச் சொன்னாலும் மண்டையில் ஏற்றிக் கொள்வதற்கும் நானென்ன ஞானியா?படம்

ஏற்கெனவே பலமுறை மலேசியாவைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் (நினைத்தாலே இனிக்கும் படத்தில்) நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை. வெளியில் காத்திருந்த தோழன் கருணாகரனோடு நகரம் நோக்கிய பயணம். வானுயர்ந்த கட்டிடங்களை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டே வந்தேன். கோலாலம்பூரில் உள்ள ஒரு எட்டுக்கு எட்டு லாட்ஜில் அடைக்கலமானோம் இருவரும். கழிப்பறைக்குள் குண்டானவரோ…. உண்டானவரோ போனால் வெளியில் வருவது சிரமம். ஜன்னல் கிடையாது. உள்ளே உள்ள காற்று வெளியேவோ… வெளியே உள்ள காற்று உள்ளேவோ வர வாய்ப்பே இல்லை. அறையையும் அறையின் தோற்றத்தையும் ஓட்டலின் இருமருங்கிலும் உள்ள மசாஜ் பார்லர்களையும் பார்த்தவுடனேயே அது தங்குவதற்கு மட்டுமான லாட்ஜ் இல்லை…. ”மற்றவற்றுக்கும்”தான் என்பது புரிந்து போயிற்று. அடைத்த அறைக்குள் நான் விடும் புகையையும் சேர்த்தால் தனக்கு சாவு அங்கேயேதான் என்பதைப் புரிந்து கொண்ட நண்பன் தன் தாய் மீதான பாசத்தையும்… தங்கை மீதான பரிவையும்…. அவர்களைப் பிரிந்து தான் படும் கவலையையும் எடுத்துச் சொல்லி பின்னங்கால் பிடறியில்பட ஓடிப்போனான். வெம்மையும் புகையுமாய் கழிந்தது என் முதல் இரவு.

விடிந்ததும் முதல் வேலையாக தமிழகத்தில் உள்ள என் நண்பன் சுரேஷ்பாபுவுக்குப் போனைப் போட்டு என் ”கற்பு”க்கு நேர இருக்கும் ஆபத்துக்களையும், அபாயங்களையும் எடுத்துச் சொல்லி…. இங்கு வந்தும் நண்பனோடு கதைக்கக்கூட இயலாத அறையில் தவிக்க வேண்டி வந்ததை வாய் விட்டுக் கதறி…. எப்படியாவது ஒரு ஜன்னல் உள்ள இடத்தில் ஒரு ரூமைப் போட்டால் கோடிப் புண்ணியம் என்றேன். பத்தே நிமிடத்தில் இணையதளத்தில் அறையை புக் செய்து விட்டு “ரூம் போட்டாச்சு… பிரிக் பீல்ட் போங்கள்… அங்கே நம்ம தமிழர்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள்” என்றான்.

படம்

போய் இறங்கியதில் இருந்து என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம் ஒரு இடத்தில் கூட வண்டிகள் எழுப்பும் ஒலி சத்தம் கேட்காததுதான். இரவு மூன்று மணி என்றால் கூட…. மூன்று பக்கமும் ஆள் நடமாட்டமே இல்லாவிட்டாலும் கூட சிக்னலில் பச்சை விழும் வரை காத்திருந்து புறப்படுகிறார்கள். சாலை ஓர உணவகங்களில் உணவோடு மது அருந்தினாலும் அலப்பரை செய்யாமல் கிளம்பிப் போகிறார்கள். இவைகள் ஆச்சர்யங்கள் என்றால் துயரங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லோருக்கும் வாயிற்கதவுகளைத் திறந்துவிட்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக பல்வேறு தெருக்களில் பாலியலுக்கு அழைக்கும் தோழிகளுக்கும் அளவில்லை. உணவுக்குக்கூட வக்கற்ற அபலைகளை பாலியல் தொழிலாளிகளாக மாற்றி தாய்லாந்து, இந்தோனேசியா எனப் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வைத்திருக்கிறது இந்நாடுகளது வெட்கமற்ற பொருளாதாரக் கொள்கைகள். இதில் மட்டும் மொழி, இன, மத, எல்லைப்பாகுபாடுகள் இல்லை.

மூன்றாம் நாள் ரயிலேறி ஷா ஆலம் நகருக்குப் போனால் நண்பர் வரதராஜன் வெளியில் காத்துக் கொண்டிருந்தார். “தமிழ்ப் பள்ளிகளைப் பார்க்கப் போகலாமா?” என்றார் நண்பர். வருகையின் நோக்கமே அதுதானே என்றேன். அடுத்து நாங்கள் பயணப்பட்டது கொஞ்சம் தொலைவில் இருந்த பத்துதீகா நோக்கி. தமிழ்ப்பள்ளி என்றதுமே கதியற்றோரின் கடைசி புகலிடமாக…. கேட்பாரற்றுக் கிடக்கும் மெலிந்த நம் நோஞ்சான் குழந்தைகளின் பாடசாலைகளாக திட்டமிட்டு மாற்றப்பட்டுவிட்ட நம் தமிழகப் பள்ளிகளின் நினைவுதான் வந்தது. (மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பம்மாத்துகளைத் தாண்டி தூள் கிளப்பும் தமிழ்ப் பள்ளிகள் தமிழகத்தில் ஏராளம் என்பது வேறு விஷயம்.) நாங்கள் சென்ற வண்டி ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நின்றது. உடன் வந்த நண்பர் அங்கிருக்கும் யாரையோ பார்க்கத்தான்  அழைத்துப் போகிறார் என்று நினைத்தால் ”இதுதான் நாம் பார்க்க வந்த தமிழ்ப் பள்ளி” என்கிறார். ஒரு கணம் ஆடிப் போகிறேன் நான்.

முதல் அறையில் நுழைந்தால் பேக்ஸ்…. இணையதளம்… சிசிடிவி கேமரா சகிதம் கார்ப்பரேட் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரியைப் போல் வரவேற்கிறார் பள்ளி முதல்வர். சில நிமிட உரையாடல்களுக்குப் பிறகு வகுப்பறைகளைப் பார்ப்போமா என்கிறார் கிளன்மேரி தமிழ்ப்பள்ளியின் முதல்வர் மனோகரன். ஆய்வகம்… நூலகம்…. வகுப்பறை என அனைத்துமே அசத்தலாக இருக்கிறது. இத்தனைக்கும் இது ஆறாம் வகுப்புவரை மட்டுமே படிக்கும் ஆரம்பப் பள்ளிதான். இதற்கே மாணவர்கள் கற்பதற்காக 50 கம்ப்யூட்டர்கள் வைத்திருக்கிறார்கள். ஆறாம் வகுப்புக்குப் பிற்பாடு தமிழ்ப்பள்ளியில் தொடர வேண்டுமென்றால் அதற்கு குறைந்தபட்சம் 15 மாணவர்களாவது சேர்ந்திருக்க வேண்டும். தமிழ்ப் பள்ளிகளுக்கு லைசன்ஸ் பெறுவதிலும் அதைத் தக்க வைத்துக் கொள்வதிலும் எண்ணற்ற சிக்கல்கள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளின் பாராமுகம்… அரசுகளின் மலாயா சார்புப் பார்வைகள்… என பின்னர் விரிவாக எழுத ஏராளம் இருக்கிறது.

படம்

அடுத்து நான் அடியெடுத்து வைத்தது எலுமினா எஸ்டேட். மலேசியா மார் தட்டி நிற்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் இம்மண்ணின் தோட்டத் தொழிலாளர்கள்தான். காடும் மலைகளுமாய்க் கிடந்த நாட்டைச் செதுக்கி செப்பனிட்டதில் தமிழகத்தில் இருந்து சென்ற இந்தத் தோட்டத் தொழிலாளர்களது ரத்தம் தோய்ந்து கிடக்கிறது. வெள்ளையர்களால் அடிமைகளாய் கூலிகளாய் கூட்டி செல்லப்பட்ட  தலித் மக்களது வாழ்வில் சொல்லாத சேதிகள் ஏராளம் இருக்கிறது.

செம்பனை மரத்தில் செதில்களுக்கிடையே ஏறி பழம் பறிப்பதற்குள் அவர்கள் பட்டபாடு எழுத்துக்களில் கொடுத்துவிட முடியாது. முக்கால் மரம் ஏறுவதற்குள் செதில் பிய்ந்து மேலிருந்து மல்லாக்க விழுவதில் தொடங்கி…. செதில்களுக்குள் பதுங்கியிருக்கும் பாம்புகள் தீண்டி மருந்து கட்டும் முன்பே மரணத்தைத் தழுவிய துயரங்கள் வரைக்கும் ஏராளம் இருக்கிறது. அங்கிருந்த தோழர்கள் சிலரிடம் நெடுநேரம் பேசிவிட்டு தோட்டத்தில் கிடந்த சில செம்பனைப் பழங்களையும் அவர்கள் நினைவோடு சேர்த்து எடுத்துக் கொண்டு கோலாலம்பூர் வந்து சேர்ந்தேன்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் “லிட்டில் இந்தியா” பகுதிக்குப் போனால் எல்லாம் தமிழ்மயம். தடுக்காமல் விழுந்தாலும் தமிழர்கள் மீதுதான் விழ வேண்டும். இதற்காகவே மலேசியத் தமிழர்கள் “லிட்டில் தமிழ்நாடு” எனப் பெயர்மாற்றப் போராட்டம் அறிவிக்கலாம். இங்குள்ளவர்களுக்கு காதில் ஏதோ கடும் பிரச்சனை போலிருக்கிறது. ஒவ்வொரு கடையிலும் பிரமாண்ட ஸ்பீக்கர்கள் வைத்து ஊரை அலற விடுகிறார்கள். இவர்களுக்கென்றே பிரத்யேகமாக இலவச காது சிகிச்சை முகாம்களை நடத்தலாம் மலேசிய அரசு. உணவு விடுதி ஒன்றில் என்னை அடையாளம் கண்டு கொண்ட குருமூர்த்தி கைகளை நேசத்துடன் பற்றிக் கொண்டார். அவருடன் மலேசிய அரசியல்… தமிழக அரசியல் குறித்தெல்லாம் கதைத்துவிட்டு தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தேன்.

இப்போது ஓட்டல் அறையில் இளையராஜாவும் நானும் மட்டும்தான். (அவர் எப்ப அங்க வந்தார்?ன்னு என்னைப் போலவே கேணயனாட்டக் கேட்டுராதீங்க அப்பு. நான் பாட்டுக் கேட்டதை அப்படிச் சொன்னேன் அம்புட்டுதான்)

சரி ஒரு தம் அடித்துவிட்டு வரலாம் என்று ஓட்டலை விட்டுக் கீழே இறங்க… ஓட்டல் கதவைத் திறந்துவிட்ட ஊழியர் எந்த ஊர்? என்று கேட்டார். தமிழ்நாடு என்றேன். நீங்க? என்றதற்கு ”பாகிஸ்தான்” என்றார். ”உங்களைக் காட்டி பயமுறுத்திதான் எங்களுக்கான கல்வி…. எங்களுக்கான வேலை…. என அனைத்தையும் பறித்துக் கொள்கிறது எங்கள் அரசு…” என்றார். அங்கும் அதே கதைதான் என்றேன்.

இந்த ஓட்டலில் தங்கியிருப்பதால் என்னை ஏதோ லார்டு லபக்கு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்…. நாலு நண்பர்கள் பிச்சை போட்டதால் மலேசியா வந்திருக்கிறேன். நானும் உங்க ரகம்தான் என்றேன். நேரம் காலை நாலு மணி என்றது.

”நீங்க எழுத்தாளர் என்பதால் இதை கேட்கிறேன்….தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்…. நம் இரண்டு நாடுமே ரா(RAW)வைப் பற்றி பேசுகிறார்கள்….. ஐஎஸ்ஐ(ISI) பற்றிப் பேசுகிறார்கள்….. ஆனால் ஒரு போதும் அமெரிக்க உளவுத் துறையின் FBI பற்றி சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்களே…. ஏன்?” என்றார். தெரியலியேப்பா என்றேன். ஒரு கடைநிலை ஊழியரின் அறிவுக்கு முன்னே நான் இன்னும் சிறியதாகி இருந்தேன். சரி கிளம்பலாம் என்று எண்ணி அந்த நண்பனிடம் கைகொடுத்து விட்டு தோழா! உங்கள் பெயர்? என்றேன்.  பஃஸி என்றான் அந்தத் தோழன். நம்ம ரெண்டு நாட்டுக்குமே இதுதான் பிரச்சனை. அதுதான் பசி. சில நேரங்களில் ப.சி.யும் கூட. புரியாமல் சிரித்தான் அந்த எளிய நண்பன்.

 

சாலை ஓரத்தில் உணவகம் வைத்து பிழைப்பு நடத்தும் பெருமாள் என்பவரை நண்பர் அறிமுகம் செய்து வைத்தார். மலேசியக் கல்வி முறையில் இருந்து அமைப்புமுறை வரைக்கும் அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார் பெருமாள். அவர் உணவாளர் மட்டுமல்ல உணர்வாளரும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அங்கு யாரிடம் நம்மை அறிமுகப்படுத்தி வைத்தாலும் “ஊர்” என்றே அறிமுகப்படுத்துகிறார்கள். ஊர் என்றதுமே…. “நான் ராமநாதபுரம்… நீங்க அங்க எங்கே?” என்கிறார்கள். அவர்களுக்கு ஊர் என்றாலே தமிழகம்தான். இந்தத் தலைமுறையில் சிலரைத் தவிர அனைவரும் “ஊர்” நினைவை மனதில் சுமந்து திரிகிறார்கள். பல வருடங்களுக்கு ஒரு முறை வந்து போக வசதியுள்ளவர்கள் தவிர….. மற்றவர்கள் ஊர் நினைவிலேயே வாழ்கிறார்கள்.

ஊர் சரி…. பார் எப்படி இருக்கிறது எனப் பார்க்கவேண்டாமா? நண்பர் கணேஷ்தான் தமிழாய்ந்த தமிழ்குடி எப்படிக் குடிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள் என அழைத்துப் போனார் ஒரு “தமிழ்” பாருக்கு. உள்ளே நுழைந்தால்….காது சவ்வு நார் நாராய்க் கிழிந்து விடுவதைப் போல இரைச்சல். ஆர்கெஸ்ட்ராவாம். குத்துப்பாட்டுகளுக்கு குடும்பம் குடும்பமாய் ஆடுகிறார்கள். யாரும் யாரோடும் பேசிவிடக் கூடாது என்கிற அதீத கவனத்தில் பத்து நொடிகூட இடைவெளி இல்லாமல் பாடல் சாரி….இரைச்சல் தொடர்கிறது. ”வாடா மாப்ளே வாழைப்பழ தோப்புல வாலிபால் ஆடலாமா?” என்றார் பாடகி. “நண்பா! காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாதுங்கிறது இதைத்தானோ?” என்றேன் கணேஷிடம்.

நாராச ஒலி காதைக் கிழிக்க எழுந்து வெளியில் வந்து ஒரு புகையைப் பற்ற வைத்தேன். எதிரே தொங் நாம் மூல வியாதி மருத்துவர் என்கிற ஒரு பெயர்ப்பலகை. அழகிய தமிழில். அப்புறம் இந்த முக்கு முக்குனா மூல வியாதி வராம என்ன செய்யும்?

மீண்டும் உள்ளே போனால்…. ”சொய்…. சொய்” என தமிழினி பாடலைத் தாறுமாறாகக் கிழித்துக் கொண்டிருந்தார்கள். அத்தோடு விடுவார்களா…. கூறு ஒண்ணாக…. கூறு ரெண்டாக…. சிங்சாங்….. சிங்சாங்…. என்று விஜலஷ்மி நவநீதகிருஷ்ணனையும் கூறு போட ஆரம்பித்தார்கள். நல்ல வேளையாக இவர்களிடம் சிக்காமல் பி.பி.சிறீனிவாஸ் செத்துப்போனார்.

படம்

 

”ஊர்” கிளம்பும் நாள் வந்தது. நானும் ஊர் விட்டு வந்து ஆறு நாட்களாயிற்று. லண்டனில் இருந்து தன் வயதான அம்மாவைப் பார்ப்பதற்காக வந்திருந்த ஈழத்து நண்பன் கருணாகரனும் அன்றுதான் லண்டன் திரும்ப வேண்டும். எனக்குப் பிறகுதான் அவருக்கு விமானம் என்றாலும் அதிகாலையிலேயே எழுந்து என்னை வழியனுப்ப வந்திருந்தான் நண்பன். இருவரும் கிடைத்ததைக் கொறித்து விட்டு நேரம் பார்த்தோம். ஊருக்குக் கிளம்ப எனக்கு இன்னும் 20 நிமிடம் இருந்தது. சரி…. ஒரு தம் அடிக்கலாம் என்று அதற்கான அறையைத் தேடிப் போனோம். புகை வாசனை ஒத்துக் கொள்ளாமல் வெளியிலேயே எனக்காக நின்றிருந்தான் நண்பன். விமானத்தில் நுழைய கடைசி ஐந்து நிமிடம் இருக்கும்வரைக்கும் என்னுடனேயே இருந்துவிட்டு தன்னுடைய பெட்டியை நகர்த்தியபடி சென்ற கருணாகரனைப் பார்த்தபடி ஓரிரு நிமிடம் நின்றேன்.

”ஊர்”.

ஆறே நாட்கள்  பிரிந்து இருந்துவிட்டு மீண்டும் ஊர் பார்க்கும் மகிழ்ச்சியில் நான்.

எப்போதாவது ஊர் திரும்புவோம் என்கிற நம்பிக்கையில் எண்ணற்ற மலேசிய மக்கள்.

எப்போதுமே ஊர் திரும்ப முடியாது என்கிற எதார்த்தம் புரிந்து வாழ்வின் வலிகளைச் சுமந்தபடி கருணாகரனும் அவனது மக்களும்.

 

நன்றி : ”அந்திமழை” மாத இதழ்.

சட்டங்கள் காக்குமா சரிகாக்களை….?

படம்

அன்புத் தோழி,

இம்மடல் ஆச்சர்யமாகத்தானிருக்கும் உனக்கு. ஏன் அதிர்ச்சியாகக்கூட.

“இதுவரையிலும் பெண்ணினத்துக்காக ‘வரிந்து கட்டிக்கொண்டு’ எழுதியதெல்லாம் வெறும் வேடமோ?” என்று எரிச்சலாகக் கூட இருக்கும்.

“ஆண்களுக்கான ஒரு அப்பட்டமான வக்காலத்து” என அடிமனதில் ஆத்திரம்கூட எழும்.

என்ன செய்வது? எழுதுவது என்று வந்துவிட்ட பிறகு…. எதனோடு மோதுவது… எவரோடு மோதுவது…. என்னவாகும் விளைவு…. என்பதெல்லாம் என் புத்திக்கு உரைப்பதேயில்லை. என்ன செய்வது…. இனி எல்லாம் வல்ல பகுத்தறிவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு எண்ணியதை எழுதித்தானாக வேண்டும்.

சரிகா :

இறந்த பிறகு எல்லா இதயங்களிலும் வாழத் துவங்கியிருக்கும் ஒரு மாணவி. பெண்களைக் கேலி செய்யும் போக்கிற்குக் கிடைத்த ஜூலை மாதத்து இரை.

நாளிதழ்கள் தொடங்கி வண்ணத் தொலைக்காட்சிகள் வரைக்கும் சரிகாவுக்காக வருந்தியாயிற்று….

வழக்கு மன்றத்திற்கு வந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊரே கூடி நின்று சரிகாவுக்காக சபித்தாயிற்று…..

சட்டென்று விழித்துக் கொண்ட அரசு சரிகாக்களுக்காக சட்டம் கூடப் போட்டாயிற்று…..

சரி…. இனி எல்லாம் முடிந்தது….

மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்தியாயிற்று…

இனி அவரவர் வேலைகளுக்குப் போகலாம்.

சுபம்.

என்ன சரிதானே?

சரிகாவுக்காக வருத்தப்பட்ட பத்திரிகை, தொலைக்காட்சி, பொதுமக்கள் என எல்லோரும் பார்க்கத் தவறிய விஷயமும் ஒன்று உண்டு. பெண்களைக் கேலி செய்யும் குற்றச்செயல் என்றில்லை. எல்லா குற்றச் செயல்களிலும் நாம் காணத்தவறும் விஷயம் அது.

அதுதான் : பிரச்னையின் ஆணிவேரை அடையாளம் காணும் விஷயம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு “மனஓசை” என்கிற ஆரோக்கியமான பத்திரிக்கையில் படித்த அற்புதமான கதை ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

என்ன தோழி…. கதை என்றதும் உனது பாலபருவம் நினைவுக்கு வருகிறதா? அது இருக்கட்டும் ஒருபுறம்.. இனி கதைக்கு வருவோம்.

“ஒரு ஊரில் வாழ்ந்த மக்கள் கொசுத் தொல்லையால் பயங்கரமான துன்பத்திற்கு ஆளாகிறார்கள். என்ன செய்தும் அவர்களால் கொசுக்களை விரட்ட முடிவதில்லை. அப்போது பார்த்து ஒருவன் கொசுவலையோடு அந்த ஊருக்குள் வருகிறான். மக்கள் அவனிடமுள்ள விதவிதமான வலைகளை வாங்கி உள்ளுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். கொசுவை இவர்கள் விரட்டுவது மாறி கொசு இவர்களை விரட்டுகிறது. வாங்கிய வலையும் வசதிப்படுவதில்லை.

நாட்கள் நகர அடுத்ததாக அந்த ஊருக்குள் கொசுவத்திச் சுருள்களோடு இன்னொருவன் அறிமுகமாகிறான். இதைக் கொளுத்தி வைத்தால் போதும்… நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம்… என்று அவனது சுருள்களை விற்றுப் போகிறான். ஆனால் அந்த மக்களுக்கோ கொசுத் தொல்லையோடு புகைத் தொல்லையும் சேர்ந்ததுதான் மிச்சம். அந்தப் புகையால் கொசு மயங்கியதோ இல்லையோ அவர்கள் மயங்கியதுதான் கண்டபலன்.

மீண்டும் கொஞ்சநாள் கழித்து அந்த ஊருக்குள் மற்றொருவன் வருகிறான். புதிதாக வந்தவன் கொசுவலைகளையும் கொண்டு வரவில்லை, கொசுவத்திச் சுருளையும் கொண்டு வரவில்லை. மாறாக விதவிதமான கிரீம்களோடு வந்திருந்தான். அவன் கையிலிருந்த கிரீம் குழாய்களை மக்கள் வியப்போடு பார்த்தனர். “இனி நீங்கள் அதிக விலை கொடுத்து வலையையும் வாங்க வேண்டியதில்லை…. சுருளையும் வாங்க வேண்டியதில்லை…. இந்தக் கிரீமை உடல் முழுக்க பூசிக் கொண்டால் போதும். பக்கத்தில் வராது கொசு…..” என்று தான் கொண்டு வந்திருந்த கிரீம்களை விற்றுத் திரும்பினான். கிரீம் தடவிய மக்களோ அது ஏற்படுத்திய உடல் எரிச்சலில் கொசுக்கடியே பரவாயில்லை என்று எண்ண ஆரம்பித்தனர்.

அந்த வேளையில் ஊருக்குள்ளிருந்த உருப்படியான இளைஞர்கள் ஆறேழு பேர் மண்வெட்டி, கடப்பாறை, சட்டி சகிதம் எதிரில் வரக் கண்டனர் மக்கள்.

“இந்தக் காலை வேளையில் கடப்பாறை சட்டியோடு எங்கே கிளம்பிவிட்டீர்கள்?” என அந்த இளைஞர்களைப் பார்த்து ஊர் மக்கள் கேட்டதற்கு…. அவர்களில் ஒருவன் சொன்னான்….

“நீங்களும் இது வரைக்கும் கொசுவை விரட்ட ஏதேதோ வழிகளைக் கையாண்டு பார்த்து விட்டீர்கள். கொசுவை நீங்களும் விடுவதாயில்லை…. கொசுவும் உங்களை விடுவதாயில்லை. கொசு வலைக்காரன் பேச்சைக் கேட்டு வலை வலையாய் வாங்கி அதற்குள் நுழைந்து கொண்டீர்கள்….. விடவில்லை கொசு. கொசுவத்திச் சுருள்களை விடிய விடியக் கொளுத்தி தப்பிக்கப் பார்த்தீர்கள்….. விடவில்லை கொசு. கண்டகண்ட கிரீம்களைத் தடவி உடல்களைப் புண்ணாக்கிக் கொண்டீர்கள்…. விடவில்லை கொசு.

கொசுவலைக்காரன், கொசுவத்திச் சுருள்காரன், கொசுக்கிரீம்காரன் என எல்லோரும் உங்களால் பெரும் பணக்காரன் ஆனதுதான் மிச்சம். இவர்கள் மூவரும் கொசுவை விரட்டத்தான் வழி சொன்னார்களே தவிர கொசுவை அடியோடு ஒழிக்க வழி சொல்லவில்லை. அதுதான் நாங்கள் புறப்பட்டு விட்டோம்….” என்றனர் அந்த இளைஞர்கள்

”அடடே…. கடப்பாறையில் கொசு அடிக்கும் கலை நமக்குத் தெரியாது போயிற்றே…” என்று கிண்டல் செய்தனர் ஓரிருவர். இந்த இளைஞர்களிடம் ஏதோ ஒரு விஷயம் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஒருவர் மட்டும் சற்றே அவர்களை நெருங்கி…. “நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான். ஆனால் கடப்பாறை, மண்வெட்டி எதற்கு என்றுதான் புரியவில்லை” என்றபோது….

“கொசுவின் ஊற்றுக்கண்ணாக ஊரைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையை மூடுவதற்கு….”என்று நெத்தியடியாய் பதில் வருகிறது. ஊரே அப்போதுதான் அது குறித்து யோசிக்க ஆரம்பிக்கிறது.

ஆம் தோழி…. அதைப்போன்றே நம்மில் யாரும் ஒரு குற்றத்திற்கான ஊற்றுக்கண்ணை உற்று நோக்குவதேயில்லை. பெண்களைக் கேலி செய்பவர்களைப் பிடிக்க, மாறுவேடத்தில் காவலரை நிறுத்துவது….. தர்ம அடி கொடுப்பது….. வித விதமான சட்டங்கள் போடுவது… என்பதெல்லாம் கொசுக்கடிக்கு கிரீம் தடவுகிற வேலைகள்தான். கொசுக்களின் ஊற்றுக்கண் சாக்கடை என்பதைப் போல இந்தக் கேலி…. கிண்டல்களின் ஊற்றுக்கண் எது? என்பதைப் பார்த்தால் எல்லா விஷயமும் புரிந்து போகும். சரி தோழி…. இவை இப்படி ஒருபுறம் இருக்க நாமும் இந்தக் கேலியின் மூலம் நோக்கி முன்னேறலாமா? இனி?

ஹரி :

சென்னை மாநிலக் கல்லூரி மாணவன். இருபதே வயது. ஒரே இரவில் தமிழகத்தின் பொதுமக்கள் பலராலும்…. பத்திரிகைகளாலும் கொடூரமானவனாக சித்தரிக்கப்பட்டு விட்டவன். ஏழை கூலித் தொழிலாளியின் மகன்.

எது துரத்திற்று அவனை இக்கொலைப்பட்டத்தை நோக்கி?

எது துரத்திற்று அவனை சிறைக்கம்பிகளை நோக்கி?

எது துரத்திற்று அவனை எத்திராஜ் கல்லூரி வாசலை நோக்கி?

அவன் பிறக்கும்போதே பெண்களைக் கேலி செய்து சிறைக்குப் போகவேண்டுமென சங்கற்பம் செய்து கொண்டு பிறந்தவனா? ஏன் இப்படி மக்களது ஏச்சுக்கும் ஏளனத்துக்கும் ஆளாகிப் போனான்?

பட்டதாரியாகப் பட்டம் பெறப்போனவன் கொலைகாரப் பட்டத்தைச் சுமக்கும் அளவுக்கு அவனைத் துரத்தியது எது?

இன்றைக்கு எதுவெல்லாம் அவனைக் குற்றவாளியென குற்றம் சாட்டுகிறதோ அதுவெல்லாம்தான் அவனைத் துரத்திற்று.

‘மச்சி அவ துப்புனா எச்சி’ என பெண்களைச் சுற்றும் விடலைகளை ஹீரோக்களாக்கிய திரைப்படங்கள்….

’நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி’ எனப் பாடும் பொறுக்கிகளை உருவாக்கிய, நியாயப்படுத்திய பாடல்கள்….

’டேட்டிங் ஸ்பெஷல்’….. தழுவல் ஸ்பெஷல்….. நழுவல் ஸ்பெஷல்… என காசுக்காக எதையும் விற்றுத் தள்ளும் பத்திரிக்கைகள்….

கை வண்டி இழுக்கும் உழைப்பாளிகளைக் கூட தடுத்து நிறுத்தி ‘உங்களுக்குப் பிடிச்ச பாட்டு ஒன்ணச் சொல்லுங்க’ என செயற்கையாய் இளித்தபடி கேட்கும் தொலைக்காட்சிகள்…..

இவர்களே ஆயிரக்கணக்கான ஹரிகளை குற்றவாளியாக்கியவர்கள்.

இவர்களே ஆயிரக்கணக்கான ஹரிகளை உற்பத்தி செய்பவர்கள்.

குதிரை குப்புறத் தள்ளியதோடு நிற்காமல் குழியும் தோண்டிய கதையாய்…. ஹரிகள் பிடிபடாமல் இருக்கும்போது “கல்லூரிக் காம்பவுண்ட்”, “கழிப்பறைக் காம்பவுண்ட்” என இவர்களை ஹீரோக்களாய் வர்ணித்துவிட்டு…..

பிடிபட்டவுடன் “பிறக்கும்போதே பிச்சுவாவோடு பிறந்தவனாம் ஹரி” என்று கவர் ஸ்டோரியும் எழுதிவிடுவதுதான் அவர்கள் பாணி.

ஆக…. ஒரு குற்றத்தைப் புரிந்தவனை விட அக்குற்றச் செயலை புரிய தூண்டுகோலாய் இருப்பது மாபெரும் குற்றம் என்கிறதாம் இந்திய குற்றவியல் சட்டம்.

ஆனால் இங்கு…. ஹரிகளை சிறைச்சாலைகளுக்குள் அனுப்பி விட்டு….. பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை எழுதியவர்களுக்கு பாரதிதாசன் விருதும், ஜனாதிபதி விருதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களை இழிவுபடுத்தும் கேலி, கிண்டல்களின் உற்பத்தித் தலங்கள் எது எது என்று அரசுக்குத் தெரியாதா?

படுகேவலமான திரைப்படங்கள் எடுக்கும் நபர்களை அரசுக்குத் தெரியாதா?

படுகேவலமான பாடல்களை எழுதும் நபர்களை அரசுக்குத் தெரியாதா?

படுகேவலமான கதைகளை எழுதும் பத்திரிக்கைகளின் முகவரி அரசுக்குத் தெரியாதா?

இந்த லட்சணத்தில் ஈவ் டீசிங்கைத் தடுக்க அதிரடிப்படையாம்…. கராத்தே கற்ற பெண்காவலர்களாம்…. அதுவும் மாறுவேடத்திலாம்….. இப்பெண் காவலர்களை ஒவ்வொரு கல்லூரி வாசல்களுக்கும் அனுப்புவதற்கு பதிலாக… ஒவ்வொரு பாடலாசிரியர் வீட்டுக்கும்…. ஒவ்வொரு பத்திரிக்கை அலுவலகத்துக்கும் அனுப்பி அவர்களது கராத்தே ’கலையை’ கொஞ்சமாவது காண்பிக்கச் சொல்லியிருந்தால்…. குறைந்தபட்சம் குற்றச் செயல்களின் ஊற்றுக்கண்ணை ஆட்டம் காணச் செய்த புண்ணியமாவது கிடைத்திருக்கும்.

சமூகமே செல்லரித்துப்போய் கிடக்கும்போது அதிலிருந்து வருபவன் மட்டும் சொக்கத்தங்கமாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இந்த நூற்றாண்டின் வேதனையான நகைச்சுவை.

ஆபாச சினிமா… ஆபாச பாடல்… ஆபாச தொலைக்காட்சி…. ஆபாச புத்தகங்கள்…. என எல்லாம் அப்படியே இருக்க வேண்டும்….. ஆனால் இந்தச் சூழலில் உருவாகி வருபவன் மட்டும் புடம் போட்டவனாய் இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட வடிகட்டிய முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ராகிங்கா….. உடனே அதற்கொரு சட்டம்.

கேலி கிண்டலா…. உடனே அதற்கொரு சட்டம்.

அப்படியானால் இப்போது இருப்பில் உள்ள சட்டங்கள்……..?

இத்தகைய செயல்களை சட்டங்களால் சாதிக்க முடியாது. பிரச்னைகளின் ஆணிவேரை அடையாளம் காட்டும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களால்தான் சாதிக்க முடியும். இப்போதைய தேவை சட்டங்களல்ல. சமூக மாற்றங்கள்.

தோழி! சரிகா விஷயத்திலாகட்டும் அல்லது எந்த விஷயத்திலாகட்டும் மீண்டும் மீண்டும் ஒன்றை வலியுறுத்தவே விரும்புகின்றேன். குற்றவாளிகளைத் தண்டிப்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் எமக்குள் இல்லை. ஆனால் அதற்கும் முன்னதாக குற்றங்களை உருவாக்குகிற சூழல்கள் களையப்பட்டாக வேண்டும் என்பதே எமது கருத்து.

தொலைக்காட்சி….

திரைப்படம்….

பத்திரிக்கை…. போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் பலியாக்கப்பட்டது சரிகாக்கள் மட்டுமில்லை…. ஹரிகளும்தான்.

இனிய தோழி!,

இம்மடலுக்கான இறுதி வரிகளை இரவலாகத் தந்திருப்பவர் வேறு யாருமில்லை நமது திருவள்ளுவர்தான். ஈவ் டீசிங்கிற்கு மட்டுமில்லை…. இம்மண்ணின் அனைத்து அவலங்களுக்கும் ஆப்படித்த மாதிரி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதி வைத்துவிட்டுப் போன வைர வரிகள்தான் இனி வரும் வரிகள் :

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

( பின்குறிப்பு : ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகளுக்கு முன் (1998) “பெண்மணி” மாத இதழில் எழுதிய கட்டுரை. )

மத்தியதர வர்க்க மகான்களுக்கு…….

படம்

னாலும் இந்தக் குசும்பு கூடாது இந்த அந்திமழை ஆட்களுக்கு. யார் எதைப் பற்றி எழுதுவது என்கிற விவஸ்தை வேண்டாமா? உழைப்பைப் பற்றி….. அதுவும் நான்….. எழுதினால் அவனவன் நிச்சயம் வாயில் சிரிக்க மாட்டான் என்பது மட்டும் உறுதி. எழுதப் போற தலைப்பைப் பற்றிச் சொன்னதுமே ஏற இறங்கப் பார்த்தார்கள் நண்பர்கள். ”எழுத்தாளா…. இந்தாய்யா டீ….. குடிச்சுட்டு உழைப்பைப் பத்தி எழுது…” என இரண்டு மணி நேரமாய் துணைவி எழுப்பிய பிற்பாடு எழுத உட்கார்ந்திருக்கிறேன் நான்.

உண்மையிலேயே இந்த உழைப்பு யாருக்குத் தேவைப்படுகிறது? அதுவும் கடும் உழைப்பு.? உழைப்புக்கேற்ற ஊதியம்… ஊதியத்துக்கேற்ற உழைப்பு….இது பலமுறை பலபக்கம் கேட்ட தாரக மந்திரம்  உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிற இடத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்தான். ஆனால் ஊதியம் இவ்வளவுதான் என ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட இடங்களில் கை ஊணி கரணம் போட்டாலும் கிடைப்பதுதானே கிடைக்கும்.

இந்த முதல்வகை மனிதர்கள்தான் சகலருக்குமான டார்கெட். கழுதைக்கு முன்னால் குச்சியில் தொங்கவிடப்பட்ட கேரட் கணக்காய் மத்திய தர வர்க்கத்துக்கும்…. உயர் மத்தியதர வர்க்கத்துக்கும் முன்னே தொங்க விடப்பட்டுள்ள கேரட்டுகள் ஏராளம். அவைகள் அதைப் பிடிக்க பாயும் பாய்ச்சல்தான் இன்றைய வாழ்க்கை(?) முறை. ”பணத்தில் பல்லு விளக்குவது எப்படி?” “பணத்திலேயே பாடை கட்டலாம் வாங்க” என பப்பல பக்கமும் ஏகப்பட்ட லேகிய வியாபாரிகள்.(பாஸ்…இதுல எதுவும் உள்குத்து இல்ல)

ஒரு மாநகரத்துத் தூய்மைத் தொழிலாளி பொருள் சேர்க்க படாதபாடு பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. நிலையங்களில் நிற்கும் ரயில்களில் ”இருந்துவிட்டு”ப் போகும் “பண்பாளர்களது” மலத்தின் மீது நீரைப் பீய்ச்சி அடித்து துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒரு தாய் பொருளாதார மேம்பாட்டுக்காய் நாய்பட்ட பாடுபட்டால் ஒரு நியாயம் இருக்கிறது. வாழும் காலத்திலேயே நரகத்தைப் பார்த்துவிட்ட அவர்கள் 24 மணி நேரம் அல்ல 30 மணி நேரம் உழைத்தாலும் அவர்கள் மீள வழி கிடைக்குமா? கிடைக்காது ஏனெனில் அவர்களுக்கு விதிக்கப்பட்டது ஊதியத்திற்கான உழைப்பு. மகனுக்கோ மகளுக்கோ வந்த காய்ச்சலுக்காக கந்துவட்டிக்கு வாங்கிய மூன்றாயிரம் ரூபாயை அடைப்பதற்குள் அவர்களுக்கு மூன்று யுகங்கள் கடந்து போகும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இருந்து  இந்தியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளுபவர்கள் இயற்கை உபாதைகளை தீர்த்துவிட்டு பணம் செலுத்தாமல் வர ஒரு சாப்ட்வேர் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த சாப்ட்வேர் என்ஜினீயருக்கான ஊதியமோ உழைப்புக்கேற்றது.

எமது நண்பர் சதீஷ் டேவிட் ஒருமுறை கேட்டார்….”ஏன் நம்ம நண்பர்கள் எல்லாம் இப்படியே இருக்கீங்க?” என்று. எங்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட மிக நல்ல மனிதர்தான் அவர். ஒருவேளை ஜிப்பை சரியாகப் போடவில்லையோ என்கிற சந்தேகத்தில்  ஒரு முறை சரிபார்த்து விட்டு… ”ஏன் எங்களுக்கென்ன?” என்றேன்.

”இல்ல நாம நெனச்சா நல்லா மேல வரலாமில்ல….”

புரியல…நல்லான்னா என்ன?ன்னு என்றேன்.

“இப்ப நீங்க எல்லாம் டூ வீலர்தான் வெச்சிருக்கீங்க…. ஏதாவது பிசினஸ் செய்தா ஒரு கார் வாங்கலாம் இல்லியா…..”

அதான் நீங்க வெச்சிருக்கீங்களே… என்றேன்.

”இருந்தாலும் உங்களுக்கூன்னு ஒண்ணு இருந்தா நல்லா இருக்குமில்ல” இது சதீஷ்.

அப்புறம்…?

“அப்புறமென்ன சின்னதா ஒரு சொந்த வீடு…..”

சரி வாங்கீரலாம்….அதுக்கப்புறம் என்றேன்.

“பியூச்சர்ல்ல ஏதாவது நோய் நொடின்னா பாத்துக்கறதுக்கு பேங்க் பேலன்ஸ்….”

ஓகே வெச்சுக்கலாம் அப்புறம் என்றேன் மீண்டும்…..

மீண்டும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார். ஒருகட்டத்தில் இடைமறித்து சதீஷ் வெறும் கமாவாவே போட்டுட்டுப் போறீங்களே….. எப்ப புள்ளி வைக்கப் போறீங்க? என்றேன். அவருக்குத் தலை சுற்றி விட்டது.

“ச்சே….உங்க கூட பேசீட்டு இருந்தா நானும் உங்க மாதிரி ஆயிருவேன்” எனக் கிளம்பிவிட்டார் நண்பர்.

எனக்கு பார்த்ததுமே சிரிப்பு வருவது இந்த “சொந்த” வீட்டுக்காரர்களைப் பார்த்துத்தான். மத்தியதர வர்க்கத்தின் ஒரே இலக்கு இதுதான். இதை அடைய வங்கி வங்கியாய் அலைந்து கண்டவர்களிடம் பல்லிளித்து முதலில் பேஸ்மெண்ட்க்கு முதல் தவணை….. கதவு, ஜன்னல் வைத்த பிற்பாடு இரண்டாவது…. எனக் கடன் வாங்கிக் கட்டி…. முப்பது வருட இன்ஸ்டால்மெண்ட்டில் மொத்தத்தையும் வாங்கி…. கட்டி முடித்த பிற்பாடாவது  ஓய்வார்கள் எனப் பார்த்தால் அதுதான் அவர்களது அகராதியிலேயே இல்லாத விஷயம் ஆயிற்றே…. புது மனை புகு விழா வைக்காவிட்டால் சொந்தபந்தங்கள் என்ன சொல்லும்? வாங்கு அதற்கும் ஒரு கடன். அதுக்கப்பறம் வெறும் ஊறுகாயை நக்கீட்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

சொந்த வீடு…. சொந்த வாகனம்…. என லட்சிய வெறி பிடித்து அலைகின்றவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ”அண்ணே! இந்த உலகமே ஒரு வாடகை வீடு. இது புரியாம ”சொந்த” வீட்டுக்கான ஓட்டம் வேறு” என்று தம்பி நா.முத்துக்குமார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

அப்பா பல்கலைக் கழகத்தின் கணக்கு அலுவலர் ஆன போதும் அவரது 24 இஞ்ச் சைக்கிளில்தான் இறுதிவரை சென்று வந்தார். அவர் பயணப்படும் வரை சொந்த வீட்டில்தான் சாக வேண்டும் என்கிற வெறியெல்லாம் ஒருபோதும் அவருக்கு இருந்த்தில்லை. வாடகை வீட்டில் இருந்துதான் அவரைத் தூக்கிக் கொண்டு போனோம். ஆனால் அவர் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்தார். பிழைப்பின் நிமித்தம் வாழ்க்கையைத் தொலைக்கவில்லை. அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது என்கிற துல்லிய வேறுபாடு அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அவரது வாழ்க்கை நதியில் விழுந்த இலையைப் போல இலகுவாக இருந்தது. நானோ வேலைக்குப் போன முதல் மாதத்திலேயே பைக் இருந்தால்தான் ஆயிற்று கடனில் துவங்கினேன் எனது ஈனப்பிழைப்பை. அஞ்சு ரூபா வட்டியில் ஆரம்பித்து…. கிரெடிட் கார்டில் பயணித்து…. கார்டுக்குப் பணம் கட்ட மீண்டும் கடன் வாங்கிக் கழித்து… வீட்டில் வைத்திருந்த பாட்டி காலத்து வெள்ளி டம்ளர்களை சத்தமில்லாமல் விலைக்கு விற்று எனத் தொடர்ந்து கடைசியில் ஐம்பது பைசா பிராங்கோடேப் மாத்திரையைக் கூட கடன் கொடுக்க முடியாது என மருந்துக்கடைக்காரர் சொன்னபோது புரிந்தது அப்பாவின் எளிய வாழ்க்கை. அவ்வேளைகளில் கள்ளம் கபடமற்ற என் நண்பர்கள் மட்டும் இல்லாது போயிருந்தால் என்றோ செத்திருப்பேன் நான்.

எப்படி வாழக்கூடாது என்பதை நான் என்னில் இருந்துதான் கற்றுக் கொண்டேன். “ஒருவன் தனது திருமணத்துக்கு வாங்கிய கடன் அவனது மூன்றாவது பிள்ளை பிறக்கும்போது கூட தீராமல் இருக்கும்” என்றார் தந்தை பெரியார். இன்றைய மத்திய தர வர்க்கம் செலவளிப்பது எல்லாமே இந்த ரகம்தான். மொட்டைக்கு…. காதுகுத்துக்கு… ஞானஸ்தானத்துக்கு ….பூப்பு நன்னீராட்டுக்கு….. கல்யாணத்துக்கு…. கருமாதிக்கு என எல்லாமே ஆடம்பரமாயிற்று இங்கே. அதனால்தான் மீண்டும் மீண்டும் பணத்தைத் தேடி ஓட வேண்டியிருக்கிறது. உழைக்கும் நேரம் போதாது போகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபக்கம் செல்வச் செழிப்பு….. மறுபக்கம் இல்லாமை….. என்பவற்றுக்கெல்லாம்  பிரதான காரணம் இந்த நாட்டின் அமைப்புமுறை. அதை அடியோடு தகர்க்க வேண்டும் என்கிற அரசியல் அரிச்சுவடி நம் முன்னே நிற்கிறது. அதற்கு ஊடான பயணத்திற்கு இடையேயும் அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது ? எனப் பிரித்துப் பார்த்து தீர்மானிக்கும் புத்தியும் நமக்குத் தேவையாய் இருக்கிறது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக எதையும் வாங்கிக் குவிக்க வேண்டியதில்லை. பாதிப்பணத்துக்குக் கிடைக்கிறது என்பதற்காக ”அந்தப் பத்து யானையையும் பந்தல்காலில் கட்டி வைத்து விட்டுப் போ” என்கிற டாம்பீகமும் அவசியமில்லை. வாழ்க்கை முறை எளிதாகும்போது தேவைகள் குறையும். தேவைகள் குறையும் போதுதான் பிழைப்புக்கான ஓட்டம் குறைந்து நமக்கான வாழ்க்கையை வாழத்துவங்குவோம் நாம்.

அந்த வாழ்க்கையை வாழத் துவங்குவதற்கு…….

24 செக் லீப்…..

ரெண்டு சாட்சிக் கையெழுத்து……

ரெண்டு சூரிட்டி என எதுவும் தேவையில்லை.

ஒரே தேவை :  “போதும்” என்கிற மனசு.

”முள் கிரீடம்”

ச்சே…. இந்த இளவட்டங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று முத்தமிழ் “அறிஞர்”…. தப்பு தப்பு…. ஐந்தமிழறிஞர் கலைஞர் எதைச் சொன்னாலும் பகடி செய்யக் கிளம்பி விடுகின்றனர்.

ஈழத்தில் விமானத் தாக்குதல்களுக்கும், கொத்துக் குண்டுகளுக்கும் தப்பி…. முள்வேலி வதை முகாம்களில் இருந்து குற்றுயிரும் குலை உயிருமாய் மீண்டு…. மிச்ச சொச்ச உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு அலைபவர்களைக் கரையேற்றலாம் என்று பார்த்தால் அதற்கும் விட மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தால் யார்தான் சகித்துக்  கொள்வார்கள்.?

“டெசோ” வை (அதுவாகப்பட்டது தமிழீழ ஆதரவாளர் அமைப்பு) மீண்டும் ஆரம்பிக்கலாம் என்கிற பல்லவியை பழைய ’டெசோ’க்காரர் வீரமணி லாவகமாக ஆரம்பித்துவைக்க….

ஈழப்போரில் முன் நின்று போராடிய களைப்போடு ”முத்தமிழறிஞர்” சரணமாகத் தொடர….

சுபவீ சுருதி சேர்க்கக் களை கட்டி விட்டது தமிழீழக் கச்சேரி.

இதில் எரிச்சல்படவும் ஏகடியம் பேசவும் என்ன இருக்கிறது? வரலாறு தெரியாத விடலைகள் எல்லாம் அரசியல் கதைக்க வந்தால் இப்படித்தான் இருக்கும். நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளானா நம் முத்தமிழ்க் காவலர்?

இன்று நேற்றல்ல…. ஏறக்குறைய இருபத்தி ஆறு வருடங்கள் முன்னரே இதே டெசோவை அமர்க்களமாக ஆரம்பித்து தரணி எங்கும் பவனி வந்தாரே எங்கள் ”தமிழினத் தலைவர்”….. அப்போதெல்லாம் இவர்கள் பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். ஆனால் “தெய்வாதீனமாக” எம் பெற்றோர் கிருபையால் பிறந்து வளர்ந்து இருபத்தி நான்கு வயது கொண்ட இளைஞனாய் நின்றேன் அப்போது.

தடிமாடு மாதிரி வெறும் இளைஞனாய் அல்ல.

”இலட்சியத்தில் உறுதி”யும் ”கொள்கையில் நேர்மை”யும் கொண்டு எம் தலைவர் எங்கெங்கெல்லாம் அலைகடலென ஆர்ப்பரித்து வா அடலேறே என அழைக்கிறாரோ அங்கெல்லாம் போய் நின்றேன்.

நின்று?

தமிழீழத்துக்காக 1986 ஆம் ஆண்டு தமிழ்க் காவலரால் கூட்டப்பட்ட கூட்டங்களில் நின்று….

”இலங்கையில் தமிழீழம் மலர ஆதரவு தருவேன்….

இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவேன்….

போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையில் இருந்து தவறாமல் இருப்பேன்….

தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித்த் தியாகத்துக்கும் தயராக இருப்பேன்….

இந்தக் கடமைகளைச் செய்யும் போது மத்திய மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பேன்…..”

என்று தலைவர் சொல்லச் சொல்ல கூடவே ஓங்கி உறுதிமொழி

எடுத்த இளைஞனாக நின்றேன். போதுமா?

இதுதானா தலைவர் செய்த குற்றம்? இது குற்றமென்றால் ஒரு முறை அல்ல

ஓராயிரம் முறை கூட என்னுயிரை அடச்சே…. தன்னுயிரை பலியிடத்

தயங்கமாட்டார் எம் தலைவர். இதைக்கூட புரிந்து கொள்ளாமல்….(மீண்டும்

ஒரு ”ச்சே” போட்டுக் கொள்ளவும்)

என்ன செய்ய இல்லத்தைப் போலவே ஈழத்திலும் வந்த ”சகோதர”ச்

சண்டையை சாக்கிட்டு சுற்றியிருந்தவர்களுக்குக் கூட சொல்லாமல்

டெசோவுக்குப் போட வேண்டியதாயிற்று பூட்டை.

எம் கொற்றவன் குற்றம் செய்யவில்லை.

குற்றம் செய்ததெல்லாம் நம் மக்கள்தான்.

பின்னே…..?

கடலில் போட்டாலும் கட்டையாவேன்….

கரையில் போட்டாலும் விறகாவேன்…. என்றிருந்தவரை எம்.ஜி.ஆர் போன

பின்பு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து “முள்கிரீடம்” சூட்டினால் அவர்தான்

என்ன செய்வார் பாவம்?

அதுவும் அவருக்கு எப்போதும் பிடிக்காத ”முள் கிரீடம்”.

அக்கிரீடம் படுத்தியபாடுதான் நேருவின் மகளை வரவேற்று நிலையான

ஆட்சியைத் தரச் சொன்னது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் மண்டலை ஆதரித்தவரை கமண்டலக்

கட்சிக்காரர்களோடு கூட்டணி வைக்கச் செய்தது…..

அக்கிரீடம் படுத்தியபாடுதான் சொக்கத்தங்கம் சோனியாவோடு கூட்டு சேர வைத்து ஈழத்தமிழர் பிணங்களைப் பார்த்தும் அமைதி காக்க வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் லஞ்ச் பிரேக் உண்ணாவிரதம் இருக்க வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் மழை விட்டாலும் தூவானம் இருக்கத்தான் செய்யும் எனப் பேச வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் முத்துக்குமார் செத்துக்கிடந்தாலும் மகனது பர்த் டே பார்ட்டியைக் கொண்டாட வைத்தது….

அக்கிரீடம் படுத்தியபாடுதான் மருத்துவத்துகாக சாவின் விளிம்பில் தமிழகம் வந்திறங்கிய எளிய மூதாட்டி பார்வதியம்மாளை திருப்பி அனுப்ப வைத்தது…..

இப்பொழுது சொல்லுங்கள் யார் குற்றவாளி?

முள்கிரீடம் அளித்தவரா?

அல்லது அதைச் சுமந்தவரா?

டெசோவை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம்…..

யார் வேண்டுமானாலும் பொறுப்பு வகிக்கலாம்…..

ஆனால் நோக்கம் தமிழீழமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

ஆகவே தோழர்களே…..

எமது தலைவர் நிறுவனராக இருக்கும் இத்தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கு

தலைவராக ராஜபக்சே….

செயலராக சோனியா….

பொருளாளராக பொன்சேகா……

கூட இருக்கலாம்

ஏனென்றால் நமக்குத் தேவை தமிழீழம்தான்.

அதற்காக அங்கு தமிழர்கள் உயிர்வாழ வேண்டும் என்கிற கட்டாயம் ஏதும்

கிடையாது.

(அதுசரி ஆளே இல்லாத கடைல ஏம்ப்பா இப்பிடி டீ ஆத்திகிட்டு இருக்கீங்க?)

(நன்றி : சண்டே இந்தியன் இதழ்)

அவர் பெயர் சுஜாதா….

அவர் பெயர்: சுஜாதா 

வயது : 12 

ஊர் : இராமநாதபுரம் அருகேயுள்ள உப்புக்கோட்டை 

”நடந்த” சம்பவம் : ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இச்சிறுமியை அதே பள்ளியில் படிக்கும் கார்மேகம் என்ற மாணவன் 6.4.1997 அன்று கடத்திச் செல்கிறான். அதன்பின் சுஜாதாவுக்கு என்ன கதி ஏற்பட்டது என்பது யாருக்கும் தெரிவதில்லை.

மகளைக் காணவில்லை என்று  அவரது தந்தை சேவுகன் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் தருகிறார்.

விசாரிக்கிறது போலீஸ்.

குற்றவாளிபெயர் :கிருஷ்ணமூர்த்தி  

தொழில் : ஆட்டோ ஓட்டுநர் 

செய்த ”குற்றம்”: சிறுமி சுஜாதாவைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது. பிற்பாடு அவரது உடலை 5 லிட்டர் பெட்ரோல் கேன் கொண்டு சுடுகாட்டில் எரித்தது.

இந்தப் படுபாதகச் செயலுக்கு துணை நின்ற பழனி என்பவரையும் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீஸ்.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லாத சுஜாதாவின் தந்தை சேவுகன் ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், தொண்டி போலீசின் வழியிலேயே வழக்கைக் கொண்டு செல்கிறார்கள். கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகியோர் மீது சுஜாதாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், கார்மேகம் கடத்தியதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறார்கள்.

இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டு காலமாக நடந்து வந்த வேளையில்….

யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக 11.10.2006 அன்று ”படுகொலை செய்யப்பட்ட” சுஜாதாவே தன் கணவர் மற்றும் கைக்குழந்தை சகிதம் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக…

வெட்கித் தலைகுனிகிறார்கள் போலீசாரும் நீதித் துறையினரும்.

தற்போதைய நிலவரம் : பொய் வழக்கில் சித்ரவதைக்குள்ளாகி 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலைந்த இளைஞர்கள் 2 பேருக்கும் தலா ரூ ஒரு லட்சம் இழப்பீடாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் வழங்க வேண்டும். சித்ரவதை செய்த போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

அப்படியாயின்….

சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கொடுத்த வாக்குமூலம்….?

கொலை செய்ததாக கொடுத்த ஒப்புதல்….?

ஒரு வேளை விசாரணையும் விரைந்து நடைபெற்று… உச்சபட்ச தண்டனையாக மரணதண்டனையும் விதிக்கப்பட்டு…. அதன் பிற்பாடு சுஜாதா கோர்ட்டுக்கு வந்து நின்றிருந்தால்?

யாருக்குக் கவலை இதன் மீதெல்லாம்?

“முறையாக” விசாரித்து…. ”முறையாக” வழக்குத் தொடுத்து…. ”முறையாக” விசாரணை நடைபெற்ற இந்த வழக்கின் கதியே இதுவென்றால் ”என்கவுண்ட்டர் கொலை” வழக்குகளின் கதி?

தவறு செய்தவர்கள் யாராயினும் நிச்சயம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். ஆனால் அது எந்த வழியில்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

                                         கோவையில் பள்ளி செல்லும் இரு பிஞ்சுகள் குதறிக் கொல்லப்பட்டதைக் கேட்டதும் பதறாத உள்ளம் இருந்திருக்கவே முடியாது. இதைக் கண்டு கலங்காதவர்களும்…. கண்டிக்காதவர்களும்…. மனித இனத்திலேயே சேர்த்தி இல்லை என்பதில் சந்தேகமே கிடையாது.

அந்த மொட்டுகளின் வாழ்வை சிதைத்த கொடூர குற்றவாளிகள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உரியவர்கள். நீதியை விரைந்து நிலைநாட்டவும்…. வழக்கு நேர்மையாகவும் துரிதமாகவும் நடைபெறவும் கோவை நகர மக்களது ஒத்துழைப்பு அத்தியாவசியத் தேவை.

நாம் அந்தப் பிஞ்சுகளின் மரணத்திற்கு உண்மையிலேயே வருந்துகிறோம் என்றால் அந்த ஒத்துழைப்புதான் நீதியை விரைந்து நிலைநாட்ட துணை நிற்கும்.

அதற்காக “எண்கவுண்ட்டர்” கொலைகளுக்கு நாம் பட்டாசு வெடிப்பதும்…. இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுவதும்… போலீசாருக்கு பணத்தைக் குறிப்பிடாமல் காசோலையை கொடுப்பதற்குச் சமம்.(BLANK CHEQUE). நாளை அது நம் மீதும் திரும்பாது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது.

பிஞ்சுகளைக் கொன்ற பாதகர்கள் மிக மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அந்த தண்டனையை விரைவான விசாரணையின் மூலம் வாங்கித் தர ஒத்துழைப்பதே நம் அனைவரது கடமையும். அதற்காக குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜின் ”மோதல் சாவு”க்கு பட்டாசு வெடிப்பதல்ல நம் வேலை.

அந்தச் சாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால் நாமும் ஒரு வகையில் மோகன்ராஜுக்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

மோகன்ராஜ்கள் இப்படி காமவெறியும் கொலை வெறியும் கொண்டு அலைந்ததற்கு நமது மீடியாக்களும் ஒரு மிக முக்கியக் காரணம். நாளிதழ்கள்…. வார இதழ்கள்…. தொலைக்காட்சி சேனல்கள்… என அனைத்திலும் தவறாது இடம்பெறும் ஆபாசங்களும், வக்கிரங்களும் எளிய மனிதர்களைக்கூட கிரிமினல்களாக மாற்றுவதில் போய் முடிகின்றன. சம்பவங்கள் நடந்த பிற்பாடு அதற்கு பலியானவர்களை பிரதான குற்றவாளிகளாக முன் நிறுத்திவிட்டு பின் ஒளிந்து கொள்கின்றன இந்த மீடியாக்கள்.

இந்த நேரத்தில் எனக்கு மரியாதைக்குரிய இயக்குநர் மகேந்திரன் அவர்களது ”உதிரிப்பூக்கள்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிதான் நினைவுக்கு வருகிறது. மற்ற மனிதர்களுக்கு துன்பத்தைத் தருவதை மட்டுமே ”லட்சியமாக” வைத்திருக்கும் விஜயனை ஊர் மக்களே ஒன்று சேர்ந்து விரட்டிப் போய் ஆற்றில் குதித்து சாகச் சொல்வார்கள். அப்போது விஜயன் பேசும் அந்த இறுதி வசனம்தான் என் மனதுக்குள் இப்போதும் ஓடுகிறது.

அது:

”நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. ஆனா இன்னைக்கு உங்க எல்லாரையும் நான் என்னப்போல மாத்தீட்டேன்.

நான் செஞ்ச தவறுகள்லயே பெரிய தவறு அதான்.”

ஆம்….

நாம் ஒருபோதும் மோகன்ராஜ்களாக ஆக வேண்டாம்.

அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் நல்ல மனிதர்களாக ஆவோம்.

அதுதான் கற்கால மனோபாவங்களில் இருந்து நம்மை விடுவித்து நாகரீக உலகை நோக்கி நடைபோட வைக்கும்.

இதையே தத்துவமேதை ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தைகளில் சொல்வதானால்……

“நான் மிருகத்தனமாய் இருந்து 

என்னை முறியடிக்க நீங்களும் 

மிருகத்தனமான முறையையே உபயோகித்தால் 

நீங்களும் என்னைப்போலவே  

மிருகமாகி விடுகிறீர்கள்.

 

 

நன்றி : ”த சண்டே இந்தியன்”(The Sunday Indian)

”நேர் நேர் தேமா”…. ”நிரை நேர் புளிமா” ….

”அதிகாலை” ஏழரைக்கே எழுப்பி விட்டார்கள் ரேடியோ மிர்ச்சியில் இருந்து.

”சென்னையில் ஏறக்குறைய ஐம்பது சாலைகளில் உள்ள பிரிட்டிஷ்காரர்களது பெயரைத் தூக்கிவிட்டு அதற்கு பதிலாக தமிழ்ப் பெயர்களை பெயரைச் சூட்டப் போகிறார்கள் இது சரிதானா?” என்பதுதான் அவர்கள் எழுப்பிக் கேட்ட கேள்வி.

(அது சரி….. ஏன் தான் இந்த F.M.காரர்கள் பேசும்போது ஓடுகிற ரயிலைப் பிடிக்கப் போவதுபோல மூச்சு விடாமல் பேசுகிறார்கள்? என்பது எனக்குள் இருக்கும் கேள்வி.)

தம்பி ஷா என்பவர் பேசினார்.

வெள்ளைக்காரர்களை என்றும் எஜமான மனோபாவத்திலேயே பார்த்துப் பழகிவிட்ட அடிமைகள் அப்பெயர்களை தூக்கிச் சுமப்பதும் தவறு…..

அதைப்போலவே தாய்மொழி என்பதற்காக தரமற்றவர்களது பெயர்களைத் தாங்கிப் பிடிப்பதும் தவறு…. என்றேன்.

கோயமுத்தூர்ப் பக்கம் ஒரு பழமொழி உண்டு. “வெட்டிக்குப் பெத்து ’வெங்கட்டு’ன்னு பேர் வெச்ச மாதிரி” என்று. அப்படி இங்கு பெற்ற பிள்ளைக்குப் பேர் வைப்பதற்குக் கூட யோசிப்பதில்லை யாரும். அப்படி இருக்கையில் சாலைக்குப் பேர் வைப்பதற்கா சிந்திக்கப் போகிறார்கள்? 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பேர் வைத்தால் ஒன்று ”சுரேஷ்” என்று வைப்பார்கள் அல்லது “ரமேஷ்” என்று வைப்பார்கள். அண்ணா சாலையில் நின்று ரமேஷ் என்று கூவினால் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேராவது நிச்சயம் திரும்பிப் பார்ப்பார்கள். இன்றைக்கு அதற்கு பதிலாக “ஆகாஷ்” அல்லது ”அபிலாஷ்”. அதுவுமில்லாவிட்டால் “ஜான்” அல்லது “ஜேம்ஸ்”.

தான் பெற்ற குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதற்குக்கூட சிந்திக்க நேரம் ஒதுக்குவதில்லை அநேகம்பேர். அது இந்துவாகட்டும்…..அல்லது இஸ்லாமியராகட்டும்… அல்லது கிருஸ்தவராகட்டும்….. இவர்கள் எவருக்குமே தமிழ்ப்பெயர் என்றால் கசப்போ கசப்புதான். இதில் மட்டும் அபார ”ஒற்றுமை” இவர்களுக்குள்.

(நிலா…. அமுதன்…. செம்மொழி…. சொற்கோ….. யாழ்…… மகிழ்….. தமிழ்த்தென்றல்……..மணிமேகலை…. தமிழோவியா….. இளவேனில்….. தமிழீழம்….. என தூள் கிளப்புபவர்கள் இதில் விதிவிலக்கு.)

சரி…. தொடங்கிய இடத்துக்கே வருவோம்.

ஆங்கிலேயர் பெயர் சூட்டப்பட்ட அநேக சாலைகளிலும் அர்த்தமுள்ள சாலைகளும் ஓரிரண்டு உண்டு. அதில் ஒன்றுதான் “எல்லிஸ் சாலை.” ஆனால் “எல்லிஸ் சாலை”யில் அன்றாடம் சென்று வருபவர்களுக்குத் தெரியுமா அந்த மகத்தான மனிதன் எல்லீசன் பற்றி?

1796 இல் தமிழக மண்ணில் கால் பதித்தான் அந்த எல்லிஸ்.   வந்து சேர்ந்த நான்கே ஆண்டுகளில் ”தமிழ், தெலுங்கு, மராத்தி மொழிகளுக்கான இலக்கணம் மற்றும் அகராதிகளைத் தயாரிக்க வேண்டும்” என்று சென்னை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தான். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லிஸ் தமிழ் மீது தீராத காதல் கொண்டு….துல்லியமாகக் கற்றுக் கொண்டு….. நாம் இன்னமும் மண்டையைக் குழப்பிக் கொள்கிற ”நேர் நேர் தேமா”   ”நிறை நேர் புளிமா” என இலக்கணத்தையும் கரைத்துக் குடித்து பலபேர் வயிற்றில் புளியைக் கரைத்தான்.

தமிழ் மீதான இந்தக் காதல் அந்த எல்லீஸ் துரைக்கு எதுவரை சென்றதென்றால் நாம் இன்றைக்கும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறோமே அந்த ”ஸ்”.  அந்த “ஸ்”யே தனது பெயரில் இருந்து தூக்கி எரியும் அளவுக்குச் சென்றது.

தமிழகத்தில் கடைகளுக்கு பெயர் வைப்பதென்றால் கூட “அம்மாஸ்…. பாட்டீஸ்….. ஆனந்தாஸ்….. ஆரியாஸ்… என்று இன்றைக்கும் பேர் வைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் அன்றைக்கே தனது பெயரில் “ஸ்” இருக்கக்கூடாது…… தமிழ் ஒலிநயத்திற்கேற்ப தனது பெயரை எல்லீசன் என்றுதான் அழைக்கவேண்டும் என்று தனது பெயரையே மாற்றிக் கொண்டவர்தான் எல்லீசன் துரை.

சென்னையில் ஒன்பது ஆண்டுகள் மாவட்ட ஆட்சித் தலைவராக (”தமிழில்” சொல்வதென்றால் ”கலெக்டர்”.) எல்லீசன் இருந்த பொழுதுதான் திருவள்ளுவர் உருவம் பொறித்த இரண்டு வராகன் தங்க நாணயத்தை வெளியிட்டார். இவை போக இவர் பதிப்பித்த எண்ணற்ற ஓலைச் சுவடிகள்….இலக்கிய மொழி பெயர்ப்புகள்….. என நீண்டுகொண்டே செல்லும் அந்த மாமனிதனின் பணி.  இத்தோடு மேலும் பல எண்ணற்ற பணிகளையும் செய்து முடித்த கையோடு தனது 42 ஆவது வயதில் இராமநாதபுரத்தில் அனாதையாகச் செத்துப் போனார் அந்த எல்லீசன்.

 சென்னை நகர மேயர் பெயர் மாற்றப் பணிகளில் ஈடுபட்டிருப்பதில் மாறுபாடு ஒன்றுமில்லை எமக்கு. ஆனால் அந்த சூரியன் மறையாத தேசத்துக்குச் சொந்தக்காரனாக இருந்து தமிழர்களின் வாழ்வோடு கலந்து மறைந்த அந்த எளியவனின் விருப்பப்படி ”எல்லிஸ்” சாலையையும் கையோடு எல்லீசன் சாலை என்று மாற்றி அமைப்பாரேயானால் உண்மையிலேயே மனம் மகிழும் தமிழ் உலகம்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும். 

**********

நாம் இங்கே அவர்களது வாழ்வை எண்ணி குமைந்து கொண்டிருந்தால் அவர்களோ நம்மை எண்ணி துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஓரிரு நாட்கள்  முன்பு   லண்டனில்   இருக்கும்    ஈழ நண்பர் ”மைலோ” என்கிற சிவசுதன் தொலைபேசியில் அழைத்தார். போபால் மக்களுக்குத் தொடரும் அநீதி அவரை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது.

“என்ன தோழர்….. போபாலில் 20000 பேரை விஷவாயுவில் கொன்றழித்ததோடு…. பல லட்சம் பேரை நிரந்தர நோயாளி ஆக்கியவர்களுக்கு இரண்டு வருஷம்தானா தண்டனை?” என்றார் கவலையோடு.

அத்தோடு நில்லாமல் ”உங்கட நாட்டுல  அவ்வளவு பேர் உசுர விட்டிருக்காங்க…. ஆனா அமெரிக்காவுல ஒரு எண்ணைக் கம்பெனி லீக் ஆயிடுச்சுன்னு அலறித் துடிக்கிறாங்களே…. இது அக்கிரமமா இல்லையா?” என்று கேட்டார் நண்பர். அப்போதுதான் எனக்கு பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனத்தின்(British Petrolium)  விபத்து பற்றி புரிய வந்தது. 

மெக்சிகோ வளைகுடாவில் இருக்கும் அந்த நிறுவனத்தின் குழாய்களில் கசிவு ஏற்பட்டு ஐம்பது நாட்களுக்கு மேலாகிறது.

அந்தக் கசிவால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது……

கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன…..

வியாபாரம் பாதிக்கப் படுகிறது…. என்று ஓலமோ ஓலம் அமெரிக்காவில்.

கடல் வாழ் உயிரினங்களின் மீது உள்ள கரிசனத்தில் நூற்றில் ஒரு பங்காவது போபாலில் செத்த மக்கள் மீது இவர்களுக்கு இருக்கிறதா? என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். மேலை நாடுகள் என்றைக்குத்தான் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்களை மனிதர்களாக மதித்திருக்கிறார்கள்?

இந்த நாடுகளெல்லாம் அவர்களுக்கு தங்களது ஆயுதங்களையும், அபாயகரமான ரசாயணங்களையும் சோதனை செய்து பார்க்கும் சோதனைக்கூடங்கள்தானே?

பச்சையாகச் சொன்னால் இவர்களுக்கெல்லாம் இந்நாடுகள் ஒரு குப்பைத் தொட்டி. தொழிற்சாலைக்கழிவு தொடங்கி அணுக்கழிவு வரைக்கும்.

கட்டபொம்மன்கள் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் எட்டப்பன்களுக்கு மட்டும் பஞ்சமில்லை இன்று.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். 

**********

காலதாமதமான செய்திதான் என்றாலும் கொஞ்சம் ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டிய செய்தி.

கொழும்பில் சந்தி சிரித்த சர்வதேச இந்திய திரைப்பட விழா செய்திதான் அது.

ஆளாளுக்கு தனித் தனியே நின்று குரல் எழுப்பினாலும் காரியம் கை கூடி இருக்கிறதே என்கிற மகிழ்ச்சிதான் நமக்கு. இலங்கை அரசு இந்த விழாவை வைத்து போட்ட கணக்கு தப்பாகிப் போயிருக்கிறது. அமிதாப்பச்சன் தொடங்கி ஷாருக்கான் வரைக்கும் அங்கு ஒதுங்காதது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

இதில் மனமார பாராட்டப்பட வேண்டியவர்கள் தென்னிந்திய திரைப்பட சங்கத்தினர்தான்.

இவர்கள் மட்டுமில்லை ”இளந்தமிழர் இயக்கம்” அதே இலக்கோடு வேறு விதமாகப் பயணப்பட்டார்கள் என்றால்……

”மே 17 இயக்க”த்தைச் சேர்ந்தவர்களோ வைத்த குறி தவறாமல் மற்றொரு விதமாகப் பயணப்பட்டார்கள்…..

”பெரியார் திராவிடர் கழக”த் தோழர்கள் ஒரு பக்கமும்….. ”தமிழ்த் தேசிய விடுதலை இயக்க” நண்பர்கள் மறுபக்கமுமாய் ஆளுக்கொரு வியூகம் வகுத்துப் பணியாற்றினார்கள்….

”நாம் தமிழர்” இயக்கமோ அமிதாப்பச்சன் வீட்டையே முற்றுகை இட்டு ”போக வேண்டாம்” என்று கோரிக்கை வைத்தார்கள்…..

இது தொடர்ந்தால் இன்னும் பல நல்ல சேதிகளும் நம்மைத் தொடர்வதை தடுக்க முடியாது யாராலும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

**********

பின்குறிப்பு:

அய்யா தர்மதொரைகளே……!

செம்மொழி மாநாட்டை ஒட்டி ஊருல சுத்துற பிச்சைக்காரர்களை எல்லாம் புடுச்சுக் கொண்டு போயி மண்டபத்துலயோ…… ஒதுக்குப் பொறத்துலயோ வெச்சு சோறு போடறாங்களாம். நம்மளக் கண்டா அப்புறம் நம்ம கதி அதோகதிதான்.

அதுனால எங்கியாவது கேரளா பக்கம் கையேந்தலாம்ன்னு ஒரு யோசனை. எந்தப் புண்ணியவானாவது ஒரு ”எக்ஸ்ட்ரா லார்ஜ்” வாங்கி குடுத்தான்னா….. அதை அப்புடியே உள்ள கவுத்தீட்டு குப்புறச் சாஞ்சுறலாம்…. அதுனால இப்பவே சொல்லீர்றேன்……

நான் அடுத்த வாரம் லீவுங்கோ…..

(நன்றி : “தமிழக அரசியல்” வார இதழ் )

 

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…

பயணக்கட்டுரை என்றாலே வெளிநாடுகளில் சுற்றித் திரிந்ததைதான் எழுதவேண்டுமா என்ன?

வேகாத வெய்யிலில் வெந்து ஊர் ஊராய் அலைந்ததெல்லாம் பயணம் ஆகாதா? அப்படித்தான் அலைந்தேன் கடந்த வாரம். அதை அப்படியே உங்களோடு பகிர்ந்து கொல்கிறேன் இந்தவாரம். முதலில்…….

திருநெல்வேலி

திருநெல்வேலிக்குக் கிளம்புகிறேன் என்றதுமே “மறக்காம கம்பளி எடுத்துக்க…… குளிர் தாங்காது” என்றார்கள். திருநெல்வேலியில் வண்டி நின்றபோது குறட்டை விட்டுக் கொண்டிருந்ததன் விளைவு……. வள்ளியூர் போய் இறங்க வேண்டியதாயிற்று. கூட வந்த நண்பர்கள் கு.செ.வும் அன்பழகனும் என்னைவிட ”சுறுசுறுப்பானவர்கள்” என்கிற உண்மை அப்போதுதான் புலப்பட்டது. ஒருவழியாக வள்ளியூரில் இருந்து மீண்டும் ரயில் பிடித்து திருநெல்வேலி போய் இறங்கியதும்தான் நண்பர்கள் கம்பளி எடுத்துக்கச் சொன்னதன் அர்த்தம்  புரிந்தது. மாலையில்தான் மணிவிழா.

இலக்கிய வட்டார நண்பர்களால் நேசத்துடன் “தொ.ப.”என்றழைக்கப்படும் தொ,பரமசிவன் அவர்களுக்கு. எனக்கு மிகவும் அதிர்வூட்டிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்தான் இந்தத் தொ.ப.

தமிழ்ப் பேராசிரியர்……

”அறியப்படாத தமிழகம்”, “பண்பாட்டு அசைவுகள்”, “சமயங்களின் அரசியல்” என எண்ணற்ற நூல்களை எழுதியவர்……

மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர்…..,

சமூக ஆய்வாளர் என ஏகப்பட்ட முகங்கள் உண்டு தோழன் “தொ.ப” வுக்கு.

அப்படிப்பட்டவரது மணிவிழாவில் கலந்து கொள்ள இந்தச் சிறுவனும் (அட நான்தாங்க….)  அழைக்கப்பட்டது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும்பேறு.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… பாரி வள்ளலின் மகள்களான அங்கவை, சங்கவை பற்றி அரிச்சுவடியாவது அறிந்தவர் என்று அர்த்தம்.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… உயிரே போனாலும் அவர்களைக் கொச்சைப்படுத்தாதவர் என்று அர்த்தம்.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… பெற்ற பெண்களையே வைத்து ”பழகலாம் வாங்க” என்று தரகர் வேலை பார்க்காதவர் என்று அர்த்தம்.

தமிழ்ப் பேராசிரியர் என்றால்…… ரஜினியென்ன ஜாக்கிசானே அழைத்தாலும் “போய்யா நீயாச்சு…. உன் சினிமாவாச்சு” என்று உதறித் தள்ளுபவர் என்று அர்த்தம்…….

அப்படிப்பட்ட சுயமரியாதைக்குச் சொந்தக்காரர்தான் இந்தத் தொ.பரமசிவன்.

எளிய மக்களது பண்பாட்டுச் செயல்களுக்குப் பின் இருக்கும் அர்த்தங்கள்…. சிறுதெய்வ வழிபாடுகள் குறித்த ஆய்வுகள்…… என மக்களோடு மக்களாகக் கரைந்து அவர்களது கொண்டாட்டங்கள்….. அவலங்கள் என அனைத்துக்குமான அர்த்தங்களைத் தேடி அலைவதுதான் “தொ.ப”வின் வாழ்க்கை.

மீதியுள்ள நேரங்களில் ஏதேனும் ஒரு டீக்கடை பெஞ்ச்சில் நண்பர்களோடு கழியும் அவரது பொழுது. (வசதிப்பட்டவங்க நண்பன் லெனா குமாருக்கு ஒரு போனைப் போட்டுத் தாக்குங்க (09443486285) ”தொ.ப.”வின் புத்தகங்கள் கைவசம் இருந்தால் அனுப்பி வைப்பார்.)

ஒரு ஊர் என்றால் அங்குள்ளவர்களது வாழ்க்கை முறை…. அவர்களது பழக்க வழக்கங்கங்கள்……. ஊர் பேருக்கான அர்த்தம்…… என அனைத்தையும் அலசி ஆராய்வதுதான் ”தொ.ப” வின் பணி.

“திருக்காவலூர்” என்றால் அன்னையின் காவலில் இருக்கும் ஊர் என்று அர்த்தமாம்.

அப்படிப்பார்த்தால் அன்றைக்கு திராவிட நாட்டுக்காக போர்ப்பரணி பாடியவர்கள்……. முரசொலித்தவர்கள் என  திராவிடக் கொழுந்துகள் பலதும் திருக்காவலூர்க்காரர்களாகத்தான் இருக்க வேண்டும். இதில் சில தலித் உறவுகளும் உள்ளடக்கம்.

ஈழமே எரிந்தபோதுகூட இவர்கள் “அன்னையின்” காவலில் இருந்தவர்கள்தானே?

தொ.பரமசிவனின் அருமை எனக்குப் புரிந்தது ஜெயலலிதா ”கோயில்களில் ஆடு கோழி பலியிட தடைச் சட்டம்” கொண்டுவந்த போதுதான்.

சங்கரமடத்தில் கிடாய் வெட்டச்சொல்லி கட்டாயப்படுத்தவும் முடியாது…… சங்கிலிக் கருப்பராயன் கோயிலில் சக்கரைப் பொங்கல்தான் வைக்க வேண்டும் என்று சண்டித்தனம் செய்யவும் கூடாது என்பதைப் புரிய வைத்தது இவரது புத்தகங்கள்தான்.

எந்தவொரு விஷயத்தையும் ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முயல்வது எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதை புரிந்துகொண்ட பொழுது அது.

நிகழ்ச்சி நடக்கும் திருநெல்வேலி நூலக வளாகமே நண்பர்களால் நிறைந்திருந்தது. தன் கவிதைகளால் கிறங்கடிக்கும் கல்யாண்ஜி, வயது எண்பதைக் கடந்தாலும் சமூக அக்கறையில் சளைக்காத தி.க.சி ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன், எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழிசை அறிஞர் மம்முது, பேராசிரியர் மு.இராமசாமி, எழுத்தாளர் செ.திவான், என ஏகப்பட்டவர்களது அன்பு மழையில் மூழ்கியது அரங்கு.

இப்படிப்பட்ட நெகிழ்வான நிகழ்வுகள் எப்போதாவதுதான் வாய்க்கிறது. மனம் நிரம்பி வழியும் மகிழ்வோடு மறுநாள் காலை திருச்சிராப்பள்ளிக்கு ரயிலேறினோம்.

திருச்சிராப்பள்ளி

இறங்கும்போதே நாங்கள் தஞ்சைக்குச் செல்ல வேண்டிய ரயில் கிளம்பிப் போயிருந்தது. இரண்டு மணி நேரம் த்ரிஷா…… அடச்சே திருச்சி ”குளிரில்” சுற்றி அலைந்து விட்டு நாலரைக்கு வந்த நாகூர் பாசஞ்சரில் ஏறி அமர்ந்தோம் என்று எழுதத்தான் ஆசை.

ஆனால் நிற்கக்கூட இடமில்லை.

திடீரென “மகளிர் மசோதாவுல என்னதாம்ப்பா சிக்கல்?” என ஒரு அசரீரி. திரும்பிப் பார்த்தால் நான்கு கல்லூரி மாணவிகள். மகளிர் மசோதா பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். கேட்கக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சீரியல்கள் பற்றியும்…… அஜித் விஜய் பற்றியும் பேசாமல் இப்படி ஆரோக்கியமாக அளவளாவிக் கொள்கிறார்களே என்பதைப் பார்த்தபோது பெருமையாக இருந்தது. சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பேசிக்கொண்டிருந்ததை எரிச்சலாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆண் வர்க்கத்தில் சிலர்.

தஞ்சையில் ரயில் நின்றதும் முதல் வேலையாக அவர்களிடம் சென்று எங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்து விட்டுக் கிளம்பினோம்.

தஞ்சாவூர்

நண்பன் சசிக்குமாரின் திருமண நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்குள் நுழையும் போதே தமிழர் தேசிய இயக்கத் தலைவர் தோழர் பழ.நெடுமாறன் முன்னதாகவே  அமர்ந்திருந்தார்.

நண்பன் சசிக்குமார் நிறைய குறும்படங்களை இயக்கியவர். அடுத்து ஒரு பெரும்படம் எடுக்கும் முயற்சியில் இருப்பவர்.  அவரது முதல் முயற்சியான “சித்திரமாடம்” விரைவிலேயே திரைக்கு வர இருப்பதாகச் சொன்னார். இவை எல்லாவற்றைக் காட்டிலும் நல்ல உணர்வாளர். தாடியைக் கூட எடுக்காமல் அநியாயத்துக்கு எளிமையாக அமர்ந்திருந்தார் சசி.

ஒலி பெருக்கியைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். சரி அதற்குள் ஒரு புகையைப் போட்டு விட்டு வரலாம் என்று மண்டபத்தின் ஓரத்தில் ஒதுங்கினோம். “கடமையை” முடித்துவிட்டு மீண்டும் மண்டபத்தின் உள்ளே நுழைந்தால் சசிக்குமார் – உமாராணி திருமணம் நடந்து முடிந்திருந்தது. அநாவசியத்துக்கு எந்தச் சடங்குகளும் இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் முடிந்து விட்டது.

தோழர்.நெடுமாறன் அவர்களது பேச்சை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் வந்திருந்த அனைவரும். தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினது தலைவர் தோழர்.பெ.மணியரசன் உட்பட பலரது பேச்சிலும் ஈழத்துயரம் பற்றிய கவலையும், அக்கறையும் வெளிப்பட்டது.

குடும்ப நிகழ்வை ஒரு சமூக நிகழ்வாக மாற்றி அனைவரையும் அதில் பங்குகொள்ள வைத்த சசிக்குமாரின் மனிதநேயத்தை மனதுக்குள் அசை போட்டபடி கோவைக்கு ரயிலேறினோம்.

மூணார்

அப்புறம் இவ்வளவு “உழைத்த” பிறகும் ஓய்வெடுக்காவிட்டால் எப்படி? தலைவர்கள்தான் பெங்களூர்…….கொடநாடு…… என்று செல்ல வேண்டுமா? நாம் போனால் என்ன குடிமுழுகி விடப் போகிறது என்கிற யோசனையில் நண்பர் தங்கமுருகனோடு கிளம்பினோம் மூணார்.

அப்புறம் என்ன? ”பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா”தான். ரொம்ப கற்பனை பண்ணாதீங்க அப்பு.

நான் நித்யானந்தா அல்ல.

சின்னச் சின்ன ஆசை……


ஆனாலும் இந்த மீனவர்கள் இப்படி அடம் பிடிக்கக் கூடாது. ’மீன் பிடித்தால் கடலிலேதான் மீன் பிடிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்தால் எப்படித்தான் அதைத் தாங்கிக் கொள்ளும் “நம்” இந்திய அரசு. ஏன் இந்த மீனவர்களுக்கு கடலை விட்டால் வேறு இடமே கிடையாதா? எங்காவது ஏரி….. குளம்….. குட்டை அல்லது கூவம் என்று தேடிப் போக வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இப்படி உயிரை வாங்கினால் என்னதான் செய்யும் அரசு?

இப்படி எல்லோரும் ’தாம்தூம்’ என்று குதிப்பதற்குக் காரணம் மத்திய அரசு இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டுவருவதாக இருந்த “மீன்பிடி தொழில் ஒழுங்குமுறைச் சட்டம்”தான். இப்போதைக்கு தள்ளிவைத்திருக்கிற அந்தச் சட்டத்தில் அப்படி என்னதான் பஞ்சமாபாதகம் இருக்கிறது என்று எப்பாடுபட்டாவது பார்த்தே தீருவது என்கிற வெறியே கிளம்பி விட்டது. இவர்கள் எல்லோரும் போட்ட கூப்பாட்டைப் பார்த்து. ஏதோ நமக்கு இருக்கிற அறைகுறை அறிவுக்கு படித்துப் பார்த்தால்…… அட….. இந்த அரசுக்கு நம்ம மீனவர்கள் மேல் இவ்வளவு கரிசனமா? என்று கண்ணில் தண்ணியே வந்துவிட்டது. அப்படியென்ன இல்லாததையும் பொல்லாததையும் அதில் சொல்லிவிட்டார்கள்.?

கடலுக்குள் மீன் பிடிக்கப் போகும்போது வழி தவறி வேற்று கிரகத்துக்குப் போய் விடாமல் இருக்க 12 கடல் மைல் தொலைவுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும்…..

அதுவும் கடலோரக் காவல்படையிடம் பெர்மிட் வாங்கிக் கொண்டு போக வேண்டும்…..

அதிக மீன்களை ஏற்றி பாரம் தாங்காமல் மீனவர்கள் படகோடு கைலாயமோ……. பரலோகமோ போகாமல் தடுக்க பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன் பிடிக்கக் கூடாது……

எந்தெந்த மீன்களைப் பிடிக்கலாம்………

எந்தெந்த மீன்களைப் பிடிக்கக் கூடாது…….

எந்தெந்த வலைகளைப் பயன்படுத்தலாம்……

என்றெல்லாம் அந்த சோதாவில்……..ச்சே அந்த மசோதாவில்  ”மீனவ நண்பர்கள்” அக்”கரை”யோடு சொல்லியிருப்பதை பார்த்தால் புல்லரிக்கிறது.

ஆனால் மீனவர்களோ “12 கடல் மைல் தொலைவுக்குள் மீன் பிடி என்றால் மீனல்ல…… நத்தைகூட கிடைக்காது. கடமா, சுறா, கனவாய் போன்ற நல்ல மீன்கள் வேண்டுமென்றால் ஆழ்கடலுக்குப் போனால்தான் கிடைக்கும். பத்தாயிரம் ரூபாயுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும் என்றால் கடலுக்குள் போகவே வேண்டியதில்லை. கரையிலேயே கவுந்தடிச்சு குப்புறப் படுத்துக்க வேண்டீதுதான்.” என்கிறார்கள்.

இதிலென்ன பிரச்சனையோ நமக்குப் புரியவில்லை. வலை போட்டுப் பிடித்ததை வகை வகையாய் பிரித்து எந்த மீன் என்ன விலை என்று கணக்குப் பார்த்து பத்தாயிரம் ரூபாய் போக மிச்சமுள்ள மீன்களை ரோஜா பட கதாநாயகி மாதிரி “மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை” என்று பாடியபடியே கடலில் கடாசிவிட்டு கரைக்குத் திரும்ப வேண்டியதுதானே என்று திருப்பிக் கேட்டால்…….

படகுக்கான டீசல் செலவே ஆறாயிரம் ரூபாய்…… இதில் வலை வாடகை, ஆள் கூலி எல்லாம் போனால் வெறும் ஊறுகாயை நாக்குல தடவீட்டு நடமாடவேண்டீதுதான். படகில் தப்பித் தவறி பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன் இருந்தால் எங்களைக் கைது செய்து படகையும், வலைகளையும் பறிமுதல் செய்யலாமாம்…… படகில் உள்ள ஒவ்வொரு மீனவருக்கும் 25000 ரூபாய் அபராதம் விதிக்கலாமாம்…… அதிகாரிகளைத் தடுத்தால் 10 லட்சம் அபராதத்தோடு ஒரு ஆண்டு சிறையும் உண்டு என்கிறது இக்கூறுகெட்ட சட்டம்.” என்று அலறுகிறார்கள்.

நம்ம அரசுகளைப் பற்றி ஒரு இழவும் இந்த மீனவர்களுக்குப் புரிபடமாட்டேன் என்கிறது.

மீனவர்களோ அல்லது விவசாயிகளோ வாழமுடியாமக் கரடியாகக் கத்தும்போது வர்றாங்களோ இல்லியோ…. ஆனா கரெக்டா வாய்க்கரிசி போடும்போதாவது வந்து சேருவாங்கில்ல….. லேட்டா வந்தாலும் செத்ததுக்கு பேட்டா குடுக்க கண்டிப்பா வருவாங்க. அதுவும் இடைத்தேர்தல் ஏதாவது பக்கத்துலதான்னா…… அடிச்சுது யோகம்…. அவங்க குடும்பங்களுக்கு. வீணாப் ’போய்ச் சேர்ந்தவங்க’ வீட்டுல ஒருத்தருக்கு வேலை…. இடைக்கால நிவாரணத் தொகை…… விரைவிலேயே முழு பட்டுவாடாவுக்குமான உத்தரவாதம்…….ன்னு அவங்க காட்டுல அடைமழைதான். இதைக்கூட புரிந்து கொள்ளாமல் அழிச்சாட்டியம் செய்தால் எப்படி.? இந்த மீன் பிடி தொழில் ஒழுங்குமுறைக்கான சட்டமே நாட்டின் “பாதுகாப்பு” கருதி கொண்டுவரப் படும் சட்டம். அதுவும் மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை மனதில் வைத்து கொண்டு வர இருக்கின்ற சட்டம் என்று சொன்னால் அதையும் பிரித்து மேய்கிறார்கள் மீனவர்கள்.

மும்பை கடற்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபர்களின் நடமாட்டம் இருப்பதாக உளவுப் பிரிவுக்கு முன்னதாகவே தகவல் கொடுத்தது மீனவர்கள்தான். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் குறட்டை விட்டுவிட்டு காவல் அரண்களா இருக்கின்ற எங்களுக்கு எல்லைகள் வகுத்து அபராதம் விதிப்பது அயோக்கியத்தனம். உண்மையில் அபராதம் விதிக்க வேண்டுமென்றால் முன் கூட்டியே தகவல் தந்தும் பிடிக்கக் கையாலாகாத உளவுத்துறைக்கும் உள்துறை அமைச்சருக்கும்தான் அபராதம் விதிக்க வேண்டும். மாண்டால் கடல்…… மீண்டால் கரை என்று அன்றாடம் செத்துப் பிழைக்கும் எங்கள் வாழ்வோடு விளையாடுவது எங்கு கொண்டு போய் விடப்போகிறது என்பது போகப் போக தெரியும்” என்று கோபத்தோடு குமுறி எடுக்கிறார்கள்.

நமக்கென்னவோ…….

”12 கடல் மைலைக் கடந்தால் 9 லட்சம் அபராதம் 3 ஆண்டு சிறை…..”

”பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன் இருந்தா பறிமுதலோடு 25000 ரூபாய் அபராதம்…..”

”கடலில் மீன் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக இறங்கினால் கூட தண்டனை…….”

”மாநில அரசு கொடுத்த அனுமதி போக கடலோர காவல்படையின் பெர்மிட் இல்லாவிட்டால் கைது, தண்டனை……”

”கைதானவர்களை நீதி மன்றத்தில் எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் ஆடி அசைந்து எப்போது வேண்டுமானாலும் ஆஜர் படுத்தலாம்….. யாரும் கேள்வி கேட்க முடியாது…..”

”யோக்கிய சிகாமணிகளான அதிகாரிகள் ”நல்ல எண்ணத்தோடு” எடுக்கும் நடவடிக்கையைக் கேள்வி கேட்டால் 10 லட்சம் அபராதம், சிறை……..”

”எந்த மீனைப் பிடிக்கலாம்…… எந்த வலையில் பிடிக்கலாம் என்பதற்கான கட்டுப்பாடுகள்…….”

என இப்படியெல்லாம் ”நாட்டின் பாதுகாப்புக்காக” கொண்டு வரப்பட இருக்கிற சட்ட மசோதாவில் இல்லாதது ஒன்றே ஒன்றுதான்.

அது:

மீனவர்களுக்கு எந்தெந்த நாட்களில் அந்த மூடு வரலாம்……

மீனவர்கள் எந்தெந்த நாட்களில் தங்கள் பெண்டாட்டிகளோடு தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாம்…….

எந்தெந்த நாட்களில் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்….. என்பது மட்டும்தான் விடுபட்டிருக்கிறது

அதையும் அப்படியே இந்த மசோதாவில் சேர்த்து விட்டால் நாடு ஓகோன்னு உருப்பட்டு விடும் .

மொத்தத்தில் இது ”தடா”வுக்கு தம்பி…… ”பொடா” வுக்கு அண்ணன்.

s

கதவைத் சாத்து…… கழுதை போகட்டும்……


வாடிக்கையாளர் : ஏங்க சாமி பீடிஇருக்கா?

கடைக்காரர் : “சாமி பீடிஇல்ல…. வேணும்ன்னா சாமி சி.டி.” இருக்கு….

தரட்டுமா?


ஏதாவது ஒரு டுபாக்கூர் காரணத்தைச் சொல்லி இந்த வாரமும் எழுதுவதற்கு ”ஜூட்” விட்டு விடலாம் என்று பார்த்தால் பரமஹம்ச நித்யானந்தர் படு வேகமாக ”செயல்பட்டு” நம்மையும் செயல்பட வைத்து விட்டார்.

அடச்சே….. எழுதவைத்து விட்டார்.

மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதாயில்லை” என்று மாமேதை மாவோ சொன்னது இத்தகைய ”புண்ணியவான்களை” நினைத்துத்தான் போலிருக்கிறது.

சூரியன் சாய்ந்ததில் இருந்தே ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள்…. ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ்.கள் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொல்லி.

சரி எப்படியாவது பார்த்துத் தொலைப்போம் என்று அடித்துப் பிடித்துச் சென்று தொலைக்காட்சியைப் பார்த்தால் அதில் ஸ்வாமி நித்யானந்தர் ஏதோ ஒரு நடிகைக்கு அந்தரங்கமாய் அருளாசி வழங்கிக் கொண்டிருந்த காட்சி அமோகமாய் ஓடிக் கொண்டிருந்தது.

பார்க்கப் பார்க்க தமிழகத்தில் பக்தி மார்க்கம் கட்டிலில் கால் பரப்பிக் கிடப்பது பட்டென்று புரிந்தது.

அன்று கொலை வழக்கில் ஒரு ஜெயேந்திரர்.

நேற்று கருவறை லீலைகளில் தேவநாத குருக்கள்.

இன்று காற்றாய் வரும் நடிகைகளுக்காக கதவைத் திறந்து வைத்திருக்கும் ஒரு நித்யானந்தர்.

பேஷ்……. பேஷ்…… ரொம்ப நன்னாயிருக்கு.

இப்போதெல்லாம் பெண்களில் பாதிப்பேர் வீட்டிலேயே கும்பிட ஆரம்பித்து விட்டார்கள். இந்த சாமியார்கள் புராணம் இதே மாதிரி தொடர்ந்தால் நாளை ஆண்கள் கதியும் அதோகதி ஆகிவிடக் கூடிய வாய்ப்புகள் அநேகம் இருக்கிறது.

மாதம் ஒரு சாமியாரோ…… ஒரு பாதிரியாரோ….. இப்படி ஏடாகூடமாக மாட்டிக் கொண்டாலும் புற்றீசல் மாதிரி மீண்டும் ஒரு புது போக்கிரி கிளம்புவது மட்டும் நின்றபாடில்லையே ஏன் என்பதுதான் கேள்வி.

போன ஆட்சியில் ஒரு சாமியார் கைது செய்யப்பட்டால் அடுத்து வருகிற ஆட்சியில் அந்த ஆசாமிக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு.

இப்போதிருக்கிற ஆட்சி காலத்தில் ஒருவர் கம்பி எண்ண அனுப்பி வைக்கப்பட்டால் அடுத்து வருகிற ஆட்சிக் காலத்தில் அதே ஜென்மத்துக்கு ராஜமரியாதை.

இதை மிகச் சரியாக புரிந்து வைத்திருக்கிறவர்கள் கடவுளின் ஏஜெண்ட்டுகளும்…… அரசியல் ஏஜெண்ட்டுகளும்தான்.

ஆனால்……

அரளியைச் சாப்பிடு ஆஸ்த்துமா போகட்டும்……..

கடப்பாரையைக் கடி கண்ணு தெரியட்டும்……….

என்று அட்வைஸ் மழையை அள்ளிவிட்ட இந்த நித்யானந்தனோ மற்றவர்கள் மாதிரி இல்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால் அவரே எழுதுவாரா இப்படி?

ஆசைகள் இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமே இல்லை.

வாழ்வதற்கு ஆசைகள் அடிப்படையான பிராணன் போன்றது. உயிர் போன்றது.

இயங்கும் எந்தவொரு மனிதருக்கும் ஆசை என்பது தவிர்க்க முடியாத ஒரு பாகம். ஆசையை அடையும் சக்தியைப் பெறுவதே ஆன்மீகம்.

எருமை மாட்டுக்குத்தான் ஆசைகளே இருக்காது. காலையில் எழுந்தவுடன் சாப்பிடும். அதன்பின் படுத்துக் கொள்ளும். மழை பெய்தாலும் சரி, வெயிலடித்தாலும் சரி, அப்படியே இருக்கும்.” என்று பொட்டில் அடித்த மாதிரி அவரே ஒரு வார இதழில் எழுதியிருக்கிறார்.

ஆக……

பரமஹம்ஸ நித்யானந்தர் தான் ஒரு எருமை மாடு இல்லை என்று நிரூபிப்பதற்காகப் படுக்கையில் புரண்டதற்குபோய் இப்படியா பிராணனை வாங்குவது.?

எருமை மாட்டுக்கு ஆசைகள் இல்லையென்று சொன்னது எருமை மாடுகளை அவமதிக்கும் செயல்” என்று புளூகிராஸ் நண்பர்கள் அவர் மீது வழக்கோ……..

அல்லது…….

அவரைச் சுற்றியுள்ள எருமைகளுக்கும் மரபணு சோதனைகள் நடத்தி ’எருமைகள் அவரால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை’ என்று.டாக்டர்கள் சர்டிபிகேட் தந்தால்தான் அவரை வெளியே விடுவோம்” என்று நாளை எவரும் போராட்டமோ……. நடத்தாமல் இருக்க…..

தூணிலும் இருக்கும்…….

நடிகையின் துகிலிலும் இருக்கும்………

அந்த ஆண்டவன் அருள் புரியக்கடவாராக.

கதவைச் சாத்து கழுதை போகட்டும்.


**********

மத்திய அரசு இந்தியாவில் இன்னமும் பண்டமாற்று முறைதான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ?

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று துண்டு போட்டுத் தாண்டி சத்தியம் செய்கிறார்கள் மன்மோகன்சிங்கும், பிரணாப் முகர்ஜியும்.

என்னவோ ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் மக்கள் அரிசியைக் கொடுத்து கோதுமையை வாங்கிக் கொள்வதைப் போலவும்….. காய்கறிகளைக் கொடுத்து உப்பும்,சக்கரையையும் பரிமாறிக் கொள்வதைப் போலவும் பினாத்துகிறார்கள்.

எந்தப் பொருளாக இருந்தாலும் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணப்பட்டால்தான் பரிவர்த்தனையே நடக்கும். அப்படிப் பயணப்பட வேண்டுமென்றால் லாரிகளில் டீசலுக்கு பதிலாக தண்ணீரை நிரப்பிக் கொண்டு ஓட்டமுடியாது. அப்படிப்பட்ட மகத்தான தொழில் நுட்பத்தையும் இந்த மேதைகள் நமக்குக் கண்டுபிடித்துத் தரவில்லை.

அப்படியிருக்கையில் டீசல் விலை உயர்ந்தால் லாரி வாடகை உயரும்….. லாரி வாடகை உயர்ந்தால்…. அதில் பயணப்படும் கட்டுமானப் பொருட்கள் தொடங்கி உயிரைக் காப்பாற்றக் கூடிய மருந்துகள் வரைக்கும் அத்தனை பொருட்களது விலையும் கட்டாயம் உயரும் என்பது அஞ்சாங்கிளாஸ் படிக்கும் பையனுக்குக் கூடத் தெரியும் ஆனால் உலக வங்கியிலேயே குப்பை கொட்டிய இந்த ”மகாமேதை” மன்மோகன் சிங்குக்குத் தெரியாமல் போனது எப்படி?

இந்த லட்சணத்தில்…..

2011 இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும்……

அதைத் தொடர்ந்து இரட்டை இலக்கத்தை எட்டும்…….

18 சதவீதத்தை எட்டியுள்ள உணவுப் பொருட்களின் விலை உயர்வு அப்படியே தொபுக்கடீர்ன்னு குறையும்…….

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பண வீக்கத்தை அதிக அளவுக்கு அதிகரிக்காது…….

ஒட்டுமொத்தமாக 0.4 சதவீதம்தான் பணவீக்கம் இருக்கும்….” என்று ஆளாளுக்கு அள்ளி வீசுகிறார்கள்.

கேட்கிறவன் காங்கிரஸ்காரன்னா….மன்மோகன்சிங்கே மார்க்சீயவாதிம்பாங்க போலிருக்கு.

இதில் திருணாமூல் ஒரு ஆர்ப்பாட்டம்……..

வழக்கம்போல் கலைஞர் புறாக் காலில் கட்டிவிட்ட ஒரு கடுதாசி…… என ஜமாய்க்கிறார்கள்.

தோழமைக் கட்சிகளை எப்படி சரிக்கட்டுவதென்று எங்களுக்குத் தெரியும்.” என்று ஏற்கெனவே ஈழப்பிரச்சனையில் சரிக்கட்டிய அனுபவத்தில் பட்டாசு கிளப்புகிறார் பிரணாப்.

விலைவாசியைக் குறைக்க கொடநாட்டில் முகாமிட்டிருக்கிற புர்ச்சித்தலைவியோ அடுத்த தேர்தல் கூட்டை மனதில் வைத்தபடி ‘பாம்பும் சாகாமல்….. தடியும் உடையாமல்’ அறிக்கை விடுகிறார்.

அதே கணக்கில் இருக்கும் விஜயகாந்த் “மாநில அரசு நினைத்தால் குறைக்கலாம்” என்கிறார்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவர்கள் எல்லோருமே ஒரே கட்சிதான் போலிருக்கிறது. ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு காலம் தள்ளப் போகிற மக்கள் மட்டும்தான் எதிர்க்கட்சி.

மொத்தத்தில்……..

பொருளாதாரமும் சரியாகப் போவதில்லை…….

விக்கிற விலையில் இருக்கிற தாரமும் தாக்குப் பிடிக்கப் போவதில்லை…….

இப்படி ஒத்தை ஆளா காலம் தள்ளுவதற்கு பதிலாக பேசாமல் சுவாமி பாமரானந்தான்னு பேரை மாத்திகிட்டு ஒரு ஆசிரமம் போட்டறதுதான் சரி போலிருக்கிறது.

அப்புறம் என்ன…..

காசுக்குக் காசுமாச்சு.

———–       ———–ஆச்சு.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 127 other followers