போரும் அமைதியும்… உனக்கொரு பொருள்…. எனக்கொரு பொருள்….

அமைதி என்கிற வார்த்தையைக் கேட்டாலே
அச்சமாக இருக்கிறது.

அமைதி….

யாருக்கான அமைதி?

எதற்கான அமைதி?

எப்பேர்ப்பட்ட அமைதி?
.
இப்படித்தான்….
IPKF1எண்பதுகளின் மத்தியில் அமைதியை வேண்டி நின்ற ஈழத்து மக்களுக்கு
அதைப் பரிசளிப்பதற்காக எண்ணற்ற டாங்கிகளோடும்
ஏவுகணைகளோடும் இங்கிருந்து சென்றது ஒரு ”அமைதி”ப்படை.
.
அது நிலை நாட்டிய ”அமைதி”யையும்…. ”
அகிம்சை”யையும் பற்றி ஈழத்து மக்களைக் கேட்டால்
இன்றும் சொல்வார்கள் தெளிவாக.
.
அந்த அமைதிக்காக காணிக்கையாக்கப்பட்ட
பல்லாயிரம் உயிர்களையும்….
பாலியல் வல்லுறவால் சிதைக்கப்பட்ட
பலநூறு ஜீவன்களையும் என்றும் மறவார்கள் அம்மக்கள்.
.
சிங்கள ராணுவத்துக்கு ஒரு தோட்டாகூட
செலவில்லாமல் நேசநாட்டு ஸ்பான்சரில் நிகழ்த்தப்பட்ட
அமைதிக்கான யுத்தம் அது.
.
தொண்ணூறுகளின் துவக்கம்தான்
இப்படித் தொலைந்து போயிற்று என்றால்

இரண்டாயிரங்களின் தொடக்கமோ
இரட்டை கோபுரத் தகர்ப்பில் ஆரம்பித்தது.

அத்தாக்குதல் குறித்து ஆயிரத்தெட்டு
சந்தேகங்கள் இருந்தாலும்
அகப்பட்டுக் கொண்டது ஆப்கானிஸ்தான்.

அதை வைத்து உலகமெங்கும் ”பேரமைதி”யை
”நிலைநாட்ட” அமெரிக்க அங்கிள் எடுத்துக் கொண்ட
”அசாத்திய முயற்சி”கள் சொல்லி மாளாதவை.
.
பயங்கரவாதத்தைப் பற்றியும்
உலக அமைதியைப் பற்றியும்
அமெரிக்க வள்ளலார்கள் மனம் உருகப் பேசிய பேச்சுகளில்
மனம் கிரங்கிப் போனார்கள் உலக மக்கள்.

அதுவரை அமெரிக்காவும் அதனது சி.ஐ.ஏ.வும்
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
எப்பேர்ப்பட்ட அமைதியை நிலை நாட்டியிருந்தார்கள் என்கிற
உண்மையை உணர்ந்திருந்தவர்கள்
வாயில் சிரிக்காமல் வேறொரு உறுப்பில் சிரித்தனர்.
.
பயங்கரவாத இயக்கங்களின் பட்டியல் என்று
பயங்கரவாத நாடே அறிவித்தது.

அப்புறமென்ன ஆப்கனோடு நிற்குமா அது?
ஈராக்கிலும் பத்து லட்சம் பேரை
மோட்சத்துக்கு அனுப்பும் பெரும்பணியை
சிரமேற்கொண்டு செய்து முடித்தது.

அதில் சதாம் உசேனது உயிரும் அடக்கம்.
.
இது சர்வதேசம். சரி.
.
அப்புறம் எப்படி இருக்கிறது இந்த தேசம்?
இதுதான் கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் நடத்திய பூமியாயிற்றே….

மூடநம்பிக்கைக்கு எதிராக முழக்கமிட்ட
நரேந்திர தபோல்கர் “அமைதியாக” முடித்து வைக்கப்பட்டார்.
.
பூனாவில் இவ்விதமாக அமைதி நிலைநாட்டப்பட்டது.
.
மகாராஷ்டிராவில் எண்ணற்ற சாதி மறுப்புத் திருமணங்களை
முன்நின்று நடத்தி வைத்தவர் கோவிந்த் பன்சாரே.
அத்தோடு எழுத்தாளரும் கூட.

உண்மையில் சத்ரபதி சிவாஜி யார்?
அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டு எப்படிச் செயல்பட்டார்?
அவரது படைத் தளபதிகளில் எப்படி சகல மதத்தைச் சார்ந்தவர்களும்
இடம் பெற்றிருந்தார்கள்? என்று
அவர் சிவாஜி குறித்து எழுதிய நூல்
ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்பனையானது.
.
தாங்கள் சித்தரித்த சிவாஜிக்கு மாற்றாக மற்றொரு சிவாஜியா?
பொறுக்குமா இந்துத்துவ வெறியர்களுக்கு?
மனைவியோடு வாக்கிங் சென்றவரை
ஆசை தீர சுட்டு தணித்துக் கொண்டனர் தம் தாகத்தை.
மருத்துவ சிகிச்சை பலனளிக்காது மரணத்தைத் தழுவினார் பன்சாரே.
.
மொத்த மகாராஷ்டிராவிலும்
இவ்விதமாக அமைதி நிலைநாட்டப்பட்டது.
.
அது 2015 செப்டெம்பர் மாதத்து இரவு நேரம்
உணவருந்திக் கொண்டிருக்கிறார் முகம்மது அக்லக்.

அவரது குடும்பத்தினர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்
என்று சுற்றி வளைக்கிறது மதவெறி பிடித்த கும்பலொன்று.
குற்றுயிராக்கப்படுகிறான் 22 வயது மகன்.

அக்லக்கோ அங்கேயே பிணமாக்கப்படுகிறார்.
.
யார் எதை உண்பது? என்கிற உரிமையைக்கூட இம்மக்களுக்கு அளிக்காத சுதந்திர மண்ணில் Dadriஇருந்து வெகு சுதந்திரமாகப் பிரிந்து செல்கிறது அக்லக்கின் உயிர்.
எல்லாவற்றையும்விட…..

அதிபத்த நாயனார் சிவனுக்கு உணவாக
மீன் அளித்த கதையையும்…..

தனக்குப் பிடித்த கடவுளுக்கு
தனக்குப் பிடித்த பன்றிக் கறியையே
விருந்தாகப் படைத்த கண்ணப்ப நாயனார் கதையையும்…

கேள்வியாவது பட்டிருந்தால்
சக மனிதனைக் கொல்லத் துணியமாட்டார்கள்,

மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று
ஒரு அப்பாவி இஸ்லாமிய முதியவரைக் கொல்லும்
நகரமிராண்டிக் கூட்டத்திற்கும்…..

மதிய உணவு வேளையில்
ஊழியர்கள் அசைவம் கொண்டு வரக்கூடாது என்று
சுற்றறிக்கை விடும் நூற்றாண்டைக் கடந்த
The Hindu பத்திரிக்கைக்கும் இருப்பது
”நூலளவு” வித்தியாசம்தான்.

ஆக….
யார் எதை எதைச் சாப்பிடுவது….
எதையெதைச் சாப்பிடக்கூடாது என்பதை
அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.

அதைப்போலவே
சங்கர மடத்தில் கருவாடு காய்ச்சச் சொல்ல
எப்படி பிறருக்கு உரிமை கிடையாதோ……

அப்படி….

சங்கிலிக் கருப்பராயன் கோயிலில்
சர்க்கரைப் பொங்கல் வைக்கச் சொல்லவும்….
எவனுக்கும் உரிமை கிடையாது.
.
இந்த உண்மை உரைக்காததால் தான்
காவு வாங்கப்பட்டது முகம்மது அக்லக்கின் உயிர்.

ஆக….

உத்தரப்பிரதேசத்திலும் அமைதி
வெகு அற்புதமாக நிலைநாட்டப்பட்டது.
.
.
இப்படித்தான் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
சாதி ரீதியாக இழிவுபடுத்தப்பட்டு
மன உளைச்சல்களுக்கு ஆளான
ஐதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோஹித் வெமுலா சாவை Rohitநோக்கித் தள்ளப்பட்டான்.
அவனது சாவுக்குக் காரணமான சாதி வெறியர்களும்
மத வெறியர்களும் தண்டிக்கப்படும்போது
நமது நாட்காட்டிகளில் எத்தனை ஆண்டுகள் கடந்திருக்கும்
என்பது இந்தப் புண்ணிய பூமிக்கே வெளிச்சம்.
.
நாம் ஐதராபத்திலும் இப்படியோர்
”அற்புதமான” அமைதியை நிலைநாட்டினோம்.
.
தமிழகம் மட்டும் சளைத்ததா என்ன?
.
காதல் என்கிற மாபெரும் ”படுபாதகத்தை”ச் செய்துவிட்ட
காரணத்துக்காகவே ரயில் தண்டவாளத்தில் கிடந்தது
நம் இளவரசனது உயிர்.
.
சாதி வெறி கோரத்தாண்டவமாடிய கொடூரப் பொழுதுகளை
தமிழகம் கண்கூடக் கண்டது.

கள்ளம் கபடமற்ற அவ்விளைஞனது
பச்சைப் படுகொலை நம்மைக் குற்ற உணர்ச்சியில்
தலைகுனிய வைத்து மூன்றாண்டுகூட கடக்காமல்
அடுத்த அயோக்கியத்தனமும் அரங்கேறியது உடுமலையில்.
.
சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர்
கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டார் Shankarபட்டப்பகலில்.
தங்கை கெளசல்யாவோ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சங்கர் என்கிற அந்த பொறியியல் மாணவன்
ஏன் வெட்டிச் சாய்க்கப்பட்டான்? என்ன காரணம்?

”கெளரவ”க் கொலையாம்.
.
தங்களது கேடுகெட்ட சாதி…
மத நம்பிக்கைகளுக்காக பெற்றவர்களே
தங்கள் பிள்ளைகளைக் காவு வாங்குவதை
கெளரவம் என்று எந்த மடையன் சொல்வான்.?
.
ஆக அமைதியை நிலைநாட்டும் அற்புதப் பணியில்
தமிழகமும் தன் பங்கை செவ்வனே செய்து முடித்தது இவ்விதம்தான்.
.
இன்றோ….
.
மராட்டியத்தின் யுனா.
மாட்டின் தோலை உரித்தார்கள் என்று சொல்லி
தலித் இளைஞர்களை மதவெறியர்களும்
சாதி வெறியர்களும் கொடூரமாகத் தாக்கிய
காட்சிகளைக் கண்டு நாடே குமுறத் தொடங்கி இருக்கிறது.
.
ஆனாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து
தலித் மக்கள் தொடங்கியிருக்கிற யுத்தமோ
அளப்பறிய ஆறுதலையும் அளித்திருக்கிறது.
.
”மாடுதான் உனக்குத் தாயென்றால்….
உன் தாயின் பிணத்தை நீயே அகற்று” என்று
நெத்தியடி முடிவை எடுத்திருக்கிறார்கள்
மராட்டிய தலித் மக்கள்.
.
இது மராட்டியத்தோடு மட்டும் நின்றுவிடக் கூடாது
என்பதே நம் ஆசை.

இத்தனை ஆண்டுகளாய்….

ஒவ்வொரு மாநிலத்திலும்….

ஒவ்வொரு மாவட்டத்திலும்
நாள் தவறாது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு
ஒருவழியாகத் தன் திருவாயைத் திறந்திருக்கிறார் மோடி.
.
”தாக்குவதென்றால்
தலித்துகளைத் தாக்காதீர்கள்.
என்னைத் தாக்குங்கள்” என்று.
.
பாவம் அவருக்கு இப்போதுதான்
இது தெரிந்திருக்கிறது.
.
உண்மைதான்
எப்போதாவது இந்தியா வந்து செல்லும்
அவருக்கு இவைகளெல்லாம் தெரிந்திருக்க
நியாயமில்லைதான்.
.
அமைதியை விரும்புகிறார் மோடி.
நம்புங்கள்.
.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும்
அரிய கலை அவர்கள் அறியாத ஒன்றுதான்.
.
நாட்டில் மதத்தின் பெயராலும்
மாட்டின் பேராலும் நிகழ்த்தப்படும்
கொடூரங்களெல்லாம்
அவர்கள் ஒருபோதும் அறியாத ஒன்றுதான்.
.
காந்தி கொலையில் இருந்து
யுனா வெறித்தனம் வரை
எதிலும் சங்பரிவாரங்களுக்கு சம்பந்தமேயில்லை.
நம்புங்கள்.
.
காந்தியார் கொல்லப்பட்டதுகூட
திப்புசுல்தானால் திட்டமிடப்பட்ட
சதியாக இருக்கலாம்.
.
நம்புங்கள் நண்பர்களே….
.
.
எனக்கு ஏனோ இந்த நேரத்தில்
நினைவுக்கு வரக்கூடாத கவிதை ஒன்று
நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
.
ஏறக்குறைய இருபத்தி ஐந்தாண்டுகள் முன்பு
”பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு வெளியிட்ட
“மெளனம் உனது எதிரி” என்கிற கவிதை தொகுப்பு
ஞாபகத்துக்கு வந்து தொலைப்பதை
எப்படித் தவிர்ப்பது என்றே தெரியவில்லை.
.
வேறு வழியில்லை.
நீங்களும்தான் அந்தக் கவிதையின்
வரிகளைக் கேட்டுத் தொலைக்க வேண்டும்.
.
இது அமெரிக்க அங்கிளுக்கு மட்டுமல்ல
சகல அங்கிள்களுக்கும் பொருந்தக்கூடிய வரிகள்தான்.
.
இதுதான் அந்த வரிகள்:
.
.
“நீயும் அமைதி பற்றி பேசுகிறாய்.
ஆனால் எல்லோருக்கும் பொதுவான
தாயகத்தின் வளங்களை நீ மட்டும்
தனியே சுரண்டிக் கொள்கிறாய்.
.
நீயும் அமைதி பற்றி பேசுகிறாய்.
ஆனால் உன் சதிச் செயல்களை
மக்கள் மேடைக்கு ஏற்றிய,
உன்னை நியாயத்திற்காக எதிர்க்கத் துணிந்த
தேசத்தின் ஏராளமான இளங்குருத்துக்களை
நீ அநியாயமாகச் சாகடித்தாய்.
.
ஒரு கொடூரமான கழுகு
பாதுகாப்பற்ற, உதவியற்ற
வெண்புறாவை
குறிவைத்துக் குதறுவதைப் போல.
.
ஆமாம்…. நீயும் அமைதி பற்றி பேசுகிறாய்.
ஆனால் உன் இரத்தக்கறை படிந்த கைகளுக்குள் இருக்கும்
பலிகொடுக்கும் பட்டாக்கத்திகளை
முதுகுக்குப் பின்னால் மறைக்கப் பார்க்கிறாய்.
.
நாங்களும் அமைதியையே விரும்புகிறோம்.
.
.
ஆனால்
நீதியின் மீது நிறுவப்பட்ட அமைதியை,
நியாயத்தின் மீது கட்டப்பட்ட அமைதியை.
அது கிடைக்காவிடில்
உன் மீது
நியாயப்போர் தொடுப்போம் நாங்கள்.
.
.
(நன்றி : ”சமரசம்” இதழ்)