மொத்தத்தில் “காதலர் தினம்” வந்தாலும் வந்தது…..யாருக்கு எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் குழப்பமோ குழப்பம். கலாச்சாரக் காவலர்கள் “கூடவே கூடாது” என்று நின்றால்…… கட்டுடைப்பாளர்களோ “கொண்டாடியே தீருவோம்” எனக் கும்மி அடிக்கிறார்கள். எதிர்ப்பவர்களாகட்டும்…. ஏற்றுக்கொள்பவர்களாகட்டும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரே விசயம் கார்ப்பரேட் கம்பெனிகளால் ஊதிப் பெருக்கப்பட்ட இக் கொண்டாட்டம் அவர்களது கல்லாப் பெட்டியை நிச்சயம் நிரப்பும் என்பதே. காதல்..கீதல் செய்து தொலைத்தால் நம்ம சாதிக்கும்-மதத்துக்கும் சிக்கல் வந்து சேருமே…அப்புறம் நம் பிழைப்பு என்னாவது என்கிற கவலையில் பா.ஜ.க, சிவசேனா,பஜ்ரங்தள் போன்ற கும்பல்கள் ஒரு புறம்….
இதுகளெல்லாம் எதிர்க்கும் போது சும்மாயிருந்துவிட்டால் மதவெறி ஜோதியில் நாமும் சங்கமமாகி விட்டதாக அர்த்தமாகி விடுமே என்கிற பதைபதைப்பில் வாலண்டைனின் வாரிசுதாரர்களாகிவிட்ட நம்மவர்கள் மறுபுறம்.
நமது கேள்வியெல்லாம் பிப்ரவரி 14 “காதலர் தினம்” என்றால், வருடத்தின் மற்ற நாட்களெல்லாம் என்ன தினம்?
நம்மைப் பொறுத்தவரை வருடத்தின் 365 நாட்களும் காதலர் தினம்தான்.
லீப்வருடமெனில் 366.
அம்மா… அப்பா… சித்தப்பா… அப்பப்பா… அம்மம்மா… மச்சினி… மாமனார் என சகலருக்கும் ஒரு தினம் ஒதுக்கீடு செய்திருக்கின்றன மேற்கத்திய நாடுகள்.
மேற்கத்திய உலகு சொல்கின்ற யாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வதும் அல்லது எதிர்ப்பதும் அபத்தத்தில்தான் போய் முடியும்.
மே 1,
மார்ச் 8,
டிசம்பர் 10
என இவற்றை ஏகபோகமாகக் கொண்டாடலாம் சரி.
ஆனால் தப்பித் தவறிக்கூட நமக்கு ஹிரோசிமா – நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய நாசகாரத் தாக்குதல்கள் நம் நினைவுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே மிகத் தந்திரமாக ஆகஸ்ட் 6 ஐ “நண்பர்கள் தினம்” என திசை திருப்பினால் எங்கே போய் முட்டிக் கொள்வது?
நாளை மற்றுமொரு நாளே.
***************
இந்த “தகுதி”, “திறமை”க்கான ஒட்டுமொத்த பட்டாதாரர்களின் கூப்பாடு ஓரளவிற்கு ஓய்ந்த மாதிரித் தெரிந்தாலும் மறுபடி எப்பக் கிளம்பும் என்பது தெரியவில்லை. உயர் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்ட 27 சதவீத ஒதுக்கீட்டையும் இவர்கள் இஷ்டப்பட்டபடி பிரித்துக் கொடுக்கலாம் என்கிற ஒரு அம்சம் வெகு வெகு வசதியாகப் போய் விட்டது இந்த ஜென்மங்களுக்கு.
வரும்…வரும்…வரும்…வரும்…வரும்…வரும்…வரும்…வரும்… என்று குணா கமல் கணக்காய் கூறிக்கொண்டிருந்தவர்கள் ஆடி அசைந்து 69 வருடம் கழித்து ஒரு வழியாய் ஒதுக்கிய அந்த 27 சதவீதத்தையும் குரங்கு ஆப்பம் பிய்த்த கதையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு
ஆமதாபாத் ஐ.ஐ.எம்…ல் வெறும் 6 சதவீதம்….
பெங்களூர் ஐ.ஐ.எம்…ல் 10 சதவீதம்….
வர்க்க “விடுதலைக்கான” பாதையில் வெற்றி நடை போடும் “காம்ரேடு”களது மே.வங்கத்தில் 0 சதவீதம்…
என “தாராளமாய்” ஒதுக்கியிருப்பதைப் பார்த்தால் எப்படியோ கிருஸ்து பிறப்பு 3047 க்குள் நிரப்பப்பட்டு விடும் என நம்பலாம். (இப்போது அதுவும் நட்டுகிட்டுப் போயிடுச்சு “உச்சா நீதி” மன்றத்தால்….)
ஏனுங்க நமக்கொரு சந்தேகம்….
இந்தத் தகுதி….தெறம….தெறம…. ங்கறாங்களே….நம்முளுக்குத் தெரிஞ்சு ISRO வுல சுத்தமா சாதியே “பார்க்காம” அக்மார்க் “தெறமய” வெச்சுத்தான் ஆளெடுக்கறாங்க….
நம்ம சிவகாசி ராக்கெட் கூட வானத்துல போகுது.
ஆனா பல நூறு கோடி செலவு பண்ணி நம்ம விஞ்ஞானிக உடற ராக்கெட்டுக பெரும்பாலும் கடலுக்குள்ளதான போகுது….?
ஒருவேள இதுதான் தகுதி…. தெறம….ங்கறதுங்களா?
***************
ஆசிரியர் : உலகில் இனவெறிக்கு எதிராகப் போரிட்டவர்கள் யார்…யார்…?
மாணவன் :
1. நெல்சன் மாண்டேலா
2. மகாத்மா காந்தி.
3. ஷில்பா ஷெட்டி.
நண்பர் செந்தமிழ்ச்செல்வன் சொன்னாரே என்று தமிழகத்தின் குக்கிராமம் ஒன்றில் போய் முடங்கிக்கொண்டது எவ்வளவு பெரிய இமாலயத் தவறு என்பது பின்னர்தான் புரிந்தது. தகவல் தொழில் நுட்பத் தொந்தரவுகள் எதுவுமின்றி அங்கிருந்த வேளையில்தான் இந்தியாவையே உலுக்கிய அந்தச் சம்பவம் நடந்து முடிந்திருந்தது. நமக்குத் தெரிந்ததெல்லாம்
கோமுட்டி செட்டி…
தேவாங்க செட்டி…
நாட்டுக்கோட்டை செட்டி வகையறாக்கள்தான். ஆனால் இந்த ஷில்பா செட்டியைத் தெரியாமல் தொலைந்ததை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியாது.
ச்சே… இந்தளவிற்கு தேசபக்தி இல்லாமல் இருந்ததை நினைத்தால் எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.
நண்பர்கள்தான் சொன்னார்கள்:
“அவர் சாதாரண நடிகை கிடையாது. காந்தியாரின் தண்டி யாத்திரையில் கூட அவரது குடும்பத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்தியத் திரை உலகமே அவர் திறமையைக் கண்டு மூக்கின் மேல் விரல் வைத்துக் கிடக்கிறது….தமிழ்த் திரையிலும் அவர் கலைச்சேவை ஆற்றியதற்கு வரலாற்று ஆவணங்கள் பல இருக்கின்றன. சேம்பிளுக்கு ஒன்று….அவர் நடித்த ரோமியோவின் போது காணாமல் சாமியாராய்ப் போன பிரபுதேவா இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார். அதுவும் டைரக்டராக. வடக்கு தெற்கு என்றில்லை… மொத்தத்தில் அவர் ஒரு தேசிய சொத்து.”
என்றார்கள்.
அவர் கேவலம் மூன்றரைக் கோடி பிசாத்துக் காசுக்காக அவமானப்படுத்தப்பட்ட விதத்தினைக் கேட்கக் கேட்க ரத்தம் கொதித்தது. நாமெல்லாம் இந்தியனாய் இருப்பதை விட நாண்டுகிட்டே சாகலாம் என்று கூடத் தோன்றிவிட்டது. நல்ல வேளையாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தில் தாமதிக்காமல் இந்திய அரசு சுறுசுறுப்பாக செயல்பட்ட விதம்தான் என்னைப் போன்றவர்களைக் காப்பாற்றி கட்டுரை எழுத வைத்திருக்கிறது.
செய்தி கேள்விப்பட்ட மறுநொடியே பிரிட்டனின் சேன்சிலரைக் கூப்பிட்டுக் கண்டித்தது….
மனித உரிமைப் போராளி டோனி பிளேயரை குரல் கொடுக்கத் தூண்டியது….என அடுக்கிக் கொண்டே போகலாம்.
தேசத்தின் கௌரவத்தைத் தூக்கி நிறுத்தப்போன ஷெட்டிக்கு ஒரு அவமானம் என்றால் அது தேசத்துக்கே ஏற்பட்ட அவமானமல்லவா?
அதுவும் இனவெறிப் பேச்சை எப்படி சகித்துக் கொள்ளும் இந்தியா?
கயர்லாஞ்சியில் நிலவும் சமத்துவமாகட்டும்….
இன்றோ நாளையோ என்று இழுத்துக் கொண்டு கிடக்கும் சமூக நீதியாகட்டும்….
எந்த விதத்தில் சளைத்தது….பசுவும் புலியும் ஒரே ஓடையில் நீர் அருந்தும் இந்த ராமராஜ்ஜியம்?
என்னைக் கேட்டால் தேசத்தின் சொத்துக்கு ஏற்பட்ட சேதாரத்திற்கு பிரிட்டன் மீது பொருளாதாரத் தடையே விதித்திருக்க வேண்டும்.
முடிந்தால் ஷில்பா ஷெட்டியோடு ஒரு ‘அமைதிப் படை’யைக் கூட அனுப்பி வைக்கலாம்…..
சொல்ல முடியாது….
செய்தாலும் செய்வார்கள்.
ஆற அமர கறி சோறு சாப்பிட்டு….
அப்படியே வெத்திலை போட்ட கையோடு
ஒரு குட்டித் தூக்கமும் போட்டு….
சோம்பல் முறித்து நிமிர்ந்து பார்க்க…
எங்க ஷில்பா ஷெட்டி என்ன ஈழத்தமிழர்களா என்ன?
பின் குறிப்பு:
லண்டனில் ஷெட்டிக்கு ஏற்பட்ட அவமானம்
இந்தியாவுக்கே ஏற்பட்ட அவமானம் என்றால்…
டெல்லியில் ஷில்பாவுக்குக் கிடைத்த முத்தம்
ஒருவேளை இந்தியாவுக்கே கிடைத்த முத்தமோ….
புரியலியேப்பா……..