1938 முதல் மொழிப் போரில் பெண்கள்

ண்மையில் நிவேதிதா லூயிஸ் எழுதி வெளிவந்திருந்த 1938 மொழிப் போரில் பெண்கள் என்கிற புத்தகம் குறித்த விவரங்களை இணையத்தளங்களில் தேடி கைக்கு சுளுக்கு பிடித்ததுதான் மிச்சம். 1938 என்று கீபோர்டில் கொத்தினாலே அக்காலகட்டத்திய மற்ற அனைத்து விவரங்களும் கிடைக்கிறது ஆனால் இந்த நூல் மட்டும் கிட்டான் பாடில்லா….
( அதிலும் மொழிப்போர் ஐ மொழிப் போர் என்றாக்கியதால் முழிப்போரும் உண்டு. )
Search Engine பார்வைக்கு நூல் போகவேண்டும் என்றால் அது எங்காவது பதிவாகி இருக்க வேண்டும்.

1. நூலின் பெயர்

2. நூலின் ஆசிரியர்

3. பதிப்பகம்

4. நூலின் விலை

இப்படி எங்காவது எவராவது பதிவு செய்திருந்தால் நிச்சயம் கண்களுக்குத் தட்டுப்படும். ஆனால் தட்டுப்படுவதெல்லாம் அந்நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வி.ஐ.பி க்களது வீடியோ முழக்கங்கள்தான். யாராவது விரிவாக எழுதி பதிவு பண்ணுங்க நியாயமாரே…!

எம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….


ஒரு முன்குறிப்பு :
=========
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம் உங்களோடு கதைக்கப்போகிறேன்.

ஏறக்குறைய இருபது ஆண்டுகள் முன்னரே தமிழ் திரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாசங்கள்…. வக்கிரங்கள்… பகுத்தறிவற்றதனங்கள் குறித்தெல்லாம் எனது ”வாலி + வைரமுத்து = ஆபாசம்” என்கிற நூலில் துவைத்துக் காயப்போட்டு விட்டபடியால் மீண்டும் அவற்றுள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.
.
இங்கு பேசப்போவது தம்பி யுகபாரதியின் நூல்குறித்து மட்டுமே. இந்நூல் குறிப்பிடும் பாடலாசிரியர்களில் மகத்தான பாடல்களைக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்…. கெடுத்தவர்களும் இருக்கிறார்கள்.

எனவே இது இப்பாடலாசிரியர்களின் பாடல்களைக் குறித்த யுகபாரதியின் பார்வையினூடே பயணிக்கும் ஒரு பயணம்தான்.
.
இனி….

.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் கவிஞர் யுகபாரதி எழுதிய தொடர் ஒன்றின் நீட்சிதான் இந்த “நேற்றைய காற்று.”
.
வார இதழ்களுக்கே உரிய பக்க நெருக்கடியால் சொல்லாமல் விட்டவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அளித்திருக்கிறார். அதுவும் ஐநூறைத் தொடும் பக்கங்களோடு.
.
இதைப் பற்றி எழுத உட்காரும்போதெல்லாம் யுகபாரதி குறிப்பிடும் பாடல்களைச் சுற்றியும்… கவிஞர்களைச் சுற்றியும் வட்டமிட ஆரம்பித்துவிடும் மனம்.
.
அப்புறம் சும்மாவா இருக்க முடியும் ?
.
யுகபாரதி ஒரு பாடல் குறித்துக் குறிப்பிட்டால் உடனே அதைக் கேட்டாக வேண்டும் என்கிற ஆவல் எழுந்து யூடியூப்பில் பார்க்கத் தொடங்கிவிடுவேன்.
.
மனம் அந்தப் பாடல்வரிகளில் மிதக்கத் தொடங்கிவிடும். இப்படியே யூடியூப்பில் மூழ்கிக் கிடந்தால் அப்புறம் எப்போதுதான் எழுதுவது? ச்சை…. முதலில் இதை நிறுத்தித் தொலைக்க வேண்டும் என முடிவெடுத்து எழுத ஆரம்பிப்பதற்குள் மூன்று நான்கு வாரங்கள் கடந்தோடி விட்டது.
.
வெறுமனே பாடல்களைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல்…

அந்தப் பாடலாசிரியர் பயணித்த பாதை எது…?

எந்த சித்தாந்தம் அவரை இப்படிப் பயணிக்க வைத்தது…?

அந்த வேளையில் கோலோச்சிக் கொண்டிருந்த சித்தாந்ததிற்கு அவர்கள் எப்படி உரமூட்டினார்கள் என்பது குறித்தெல்லாம் விரிவாக…. மிக விரிவாகப் பேசுகிறது “நேற்றைய காற்று”.
.
யுகபாரதி முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல “மொழியறியாத ஒருவர் இசையமைப்பாளர் ஆகலாம்…
.
இனமறியாத ஒருவர் இயக்குநராக ஆகலாம்…
.
ஆனால், தமிழைப் பிழையற அறியாதவர்களோ, தமிழினத்தைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களோ பாடலாசிரியராக ஆக முடியாது.”
உண்மைதான்.
.
ஆனால், இப்போது பாடல் எழுதிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் இந்த மொழி குறித்தும், இனம் குறித்தும் புரிதல் உள்ளவர்கள்? என்கிற கேள்வியும் யுகபாரதிக்குள் எழமலில்லை.
.
ஆனால் அவற்றுக்குள் தலையை நீட்டி சர்ச்சைகளுக்குள் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை அவர்.
.
திரைத்துறைக்கு வெளியில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் வேண்டுமானால் அடித்து ஆடலாம். ஆனால் தம்பியைப் போன்றவர்கள் கடுமையான விமர்சனத்தில் ஈடுபட்டால் அது பொறாமையின் நிமித்தமும், போட்டியின் நிமித்தமும் எழுந்ததாகவே பொருள் கொள்ளப்படும்.
.
ஆயினும் அவ்வப்போது நாசூக்காகச் சுட்டியும் செல்கிறார்.
.
யுகபாரதி தேர்ந்தெடுத்து எழுதியுள்ள இருபது பாடலாசிரியர்களில் கண்ணதாசனோ, கல்யாணசுந்தரமோ, வாலியோ, வைரமுத்தோ இடம்பெறவில்லை.
.
பரவலாக அறியப்பட்ட இவர்கள் குறித்து எழுதுவதை விட…. இன்னமும் விரிவாக அறிந்தாக வேண்டிய கவிஞர்களின் மீது கவனம் குவித்திருக்கிறார்.
.
நா. காமராசன் / புலமைப்பித்தன் / கவி. கா.மு. ஷெரீப் / உடுமலை நாராயணகவி / அறிவுமதி / மருதகாசி / பஞ்சு அருணாசலம் / ஆலங்குடி சோமு / கங்கை அமரன் / மு. மேத்தா என நீளுகிறது அப்பட்டியல்.
.
இவர்களில் திராவிட இயக்கச் சிந்தனையில் வந்தவர்களும் உண்டு…
.
பொதுவுடைமைச் சிந்தனையில் வந்தவர்களும் உண்டு….
.
தமிழ்த் தேசிய சிந்தனை மரபில் வந்தவர்களும் உண்டு.
.
.
தனது “கருப்பு மலர்கள்” கவிதைத் தொகுப்பால் அதிரவைத்த நா. காமராசனை ”சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது” என “நல்லவனுக்கு நல்லவன்” படத்தின் பாடலைச் சொன்னால் சட்டெனப் புரியும் பலருக்கு.
.
அறுபதுகளில் பிறந்தவர்களுக்கோ நீதிக்குத் தலைவணங்கு படத்தில் வரும் “கனவுகளே ஆயிரம் கனவுகளே” பாடலும் அதில் வரும்….
.
“நகக்குறி வரைகின்ற சித்திரமோ / அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ / முகமென்று அதற்கொரு தலைநகரோ / கைகள் மூடிய கோட்டைக் கதவுகளோ” என்கிற வரிகளும் வந்துபோகும்.
.
வானிலே தேனிலா பாடுதே / வெளக்கு வெச்ச நேரத்திலே / பாட்டுத் தலைவன் பாடினால் போன்ற பாடல்களைக் கொடுத்த நா. காமராசனின் பாடல்களில் என்னை இன்னமும் இதமாக வருடும் பாடலும் ஒன்றுண்டு.
.
அதுதான் :
.
’ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் வரும்…. “இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்” என்கிற பாடலும்….
.
அதில் வரும்
”புத்தனின் முகமோ / என் தத்துவச் சுடரோ / சித்திர விழியோ / அதில் எத்தனை கதையோ “ என்கிற வரிகளும்தான்…
.
நா. காமராசனின் பாடல்களோடு நிற்காது அவருக்கும் கலைஞருக்கும் இருந்த தொடர்பு…

அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவு…

அவரது அதிரடி பேச்சு என பல்வேறு சுவையான செய்திகளையும் சொல்கிறார் யுகபாரதி.
.
.
”எனக்கு வியாபார புத்தியும் இல்லை. விளம்பர யுக்தியும் தெரியவில்லை.” என வருந்திய புலமைப்பித்தன் கோவை சூலூரில் மரத்தடி பள்ளியில் தமிழ் பயின்று தமிழாசிரியராய் உயர்ந்து எழுதிய பாடல்கள் ஏராளம்.
.
”பழுதுபார்த்து ஒதுக்க முடியாத பாடல்களை மட்டுமே எழுதிய பாடலாசிரியர்களாக இருவரைக் கொள்ளலாம்.
.
ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மற்றொருவர் புலமைப்பித்தன்” என்கிறார் யுகபாரதி.
.
1966 இல் வெளிவந்த ’குடியிருந்த கோயில்’ திரைப்பட்த்தில் வரும் “நான் யார், நான் யார் நீ யார்?” பாடலில் தொடங்குகிறது புலமைப்பித்தனின் திரையுலகப் பயணம்.
.
அணி இலக்கணத்தை முதன்மையாகக் கொண்டு அவர் எழுதியுள்ள பாடல்களின் பட்டியல் நீளமானது.
.
”நாயகனில்” வரும்…
”நீயொரு காதல் சங்கீதம் / வாய்மொழி சொன்னால் தெய்வீகம்…”
.
”நீதிக்குத் தலை வணங்கு” படத்தில் வரும் “இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்….”
.
”ரோசாப்பூ ரவிக்கைக்காரி”யின் “உச்சி வகுந்தெடுத்துப் பிச்சிப்பூ வச்ச கிளி…”
.
’அடிமைப்பெண்’“ணின் “ஆயிரம் நிலவே வா… ஓராயிரம் நிலவே வா…” என ஏராளம் எழுதிக் குவித்திருக்கிறார் புலவர்.
.
தம்பி யுகபாரதி ”ஜோக்கரில்” எழுதிய “என்னங்க சார் உங்க சட்டம்” பாடலுக்கான உந்துதலே புலவர் எழுதிய ”நீதிக்குத் தண்டனை” திரைப்படத்தில் வரும் “ஓ மனிதர்களே கொஞ்சம் நில்லுங்கள்” பாடல்தான் என்பது யுகபாரதியின் கருத்து.
.
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தாலும் கலைஞரின் படங்களுக்குப் பாடல் எழுதும் துணிச்சல் புலவர் புதுமைப்பித்தனுக்கு இருந்திருக்கிறது.
.
திரைப்பாடல்கள் மட்டுமின்றி அவரது “புரட்சிப் பூக்கள்” கவிதை நூல் குறித்து…
.
தமிழீழ மக்களின் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்கும் இருந்த நேசம்
.
குறித்தெல்லாம் விரிவாகச் சிலாகிக்கிறார் யுகபாரதி.
.
எனது மனதைத் தொட்ட பாடல்கள் வரிசையில் அவர் அழகன் திரைப்படத்தில் எழுதிய “சாதி மல்லிப் பூச்சரமே” பாடலுக்கு பிரதான பங்கிருக்கிறது.
.

.
”ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?” என நம்மைக் கேட்ட கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதிய மற்றொரு பிரபல பாடல்தான் “பாட்டும் நானே பாவமும் நானே” என திருவிளையாடலில் வரும் பாடல்.
.
போட்டியும் பொறாமையும் நிறைந்த படவுலகில் தான் எழுதிய அப்பாடலை கண்ணதாசன் பெயரில் வெளிவருவதற்குச் சம்மதித்து இருக்கிறார் கா.மு. ஷெரீப் என்பது ஜெயகாந்தன் தனது “ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்” என்கிற நூலில் எழுதிய பிறகுதான் வெளி உலகுக்கே தெரிய வந்திருக்கிறது.
.
கலைஞரின் நண்பராயினும் தமிழரசுக் கட்சியில் தன் பயணத்தைத் தொடர்ந்தவர். மதத்தைத் தாண்டிய மனிதநேயத்தை முன்னிறுத்தியதற்கு முன்னுதாரணமாகச் சொல்லலாம் கவிஞர் கா.மு. ஷெரீப்பை.
.
“வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா” என்ற கவிஞர் “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என சுட்டிக்காட்டவும் தவறவில்லை.
.
”ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே” பாடல் தந்த உந்துதலே தன்னை ”ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கு போட்டு” என எழுத வைத்ததென்பது யுகபாரதியின் வாக்குமூலம்.
.
திரைத்தமிழை எதார்த்த தத்துவத் தளத்திற்கு இழுத்து வந்ததில் கவிஞர் கா.மு. ஷெரீப்பிற்கு பெரும் பங்குண்டு.
.
”கவிஞன் தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளைமாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக்கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடன் எழுத வேண்டும்.”
.
என்ற கா.மு. ஷெரீப்பை இத்துறையில் இருந்து சந்நியாசம் வாங்க வைத்ததே “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் / அவன் மாம்பழம் வேண்டுமென்றான்” என்கிற வாலியின் பாடல்தான்.
.
“என்னை சினிமாவை விட்டுத் துரத்திய பாடல் அது” என்று 1986 பத்திரிகை நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.
.
இந்நூலில் பாடலாசிரியர்களது திரையுலக அனுபவங்களை மட்டுமல்லாது அவர்களது அரசியல் அனுபவங்களையும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்லும் யுகபாரதி கா.மு. ஷெரீப்பிற்கு ஏற்பட்ட ஒரு சோகத்தையும் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறார்.
.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழரசுக் கழகத்தின் வளர்ச்சிக்காகவே பாடுபட்ட அவருக்கு அதன் தலைவர் ம.பொ.சி. கொடுத்த ”அல்வா” பற்றிய சம்பவம்தான் அது.
.
ம.பொ.சி. யின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டிற்கு ஐம்பது பவுன் தங்கம் வழங்கத் திட்டம் போடுகிறார்கள்.

ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் ஐம்பது பவுனுக்கான தொகை வசூலாவதில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
.
இத்தனைக்கும் அப்போது மோடி கிடையாது.
.
அதைப் பார்த்த அக்கழகத்தின் பொதுச் செயலாளரான கா.மு. ஷெரீப் தன் மனைவி கழுத்தில் போட்டிருந்த நகைகளைக் கழற்றி அவரது தலைவர் ம.பொ.சி. கழுத்தில் போடுகிறார்.
.
அதில்தான் அத்தலைவருக்கான காரே வாங்கப்படுகிறது. ஆனாலும் ”தலைவர்” தான் எழுதிய “எனது போராட்டம்” என்கிற போராட்ட காதையில் கா.மு. ஷெரீப் அவர்களைப் பற்றி கூடுதலாக ஒரு வரிகூட குறிப்பிடவில்லை என்பதுதான் அதிலுள்ள சோகம் என்கிறார் தம்பி யுகபாரதி.
.
.
பராசக்தி படத்தில் ”கா… கா… கா…” பாடலில் வரும் ”எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்குப் பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே / வலுத்தவன் இளைத்தவன் இனச்சண்டை பணச்சண்டை / எத்தனையோ இந்த நாட்டிலே “ வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ஐம்பதுகளிலேயே இப்படியொரு கருத்தாழம்மிக்க பாடலை யார் எழுதியிருப்பார்கள் என்று யோசித்ததுண்டு.
.
பிற்பாடுதான் தெரிந்தது அந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் உடுமலை நாராயணகவி என்பது.
.
திராவிட இயக்கக் கருத்துக்களை மக்கள் மத்தியில் வரவேற்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு இவரையே சாரும்.
.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாராயணகவிக்கு தமிழையும் கலையையும் கற்றுத் தந்தவர் முத்துசாமிக் கவிராயராம்.
.
பெரியாரின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பற்றுக் கொண்டவர் நாராயணகவி.
.
சோவியத்து ரஷ்யாவைப் பார்த்துவிட்டு வந்த பெரியாருக்கு கலைத்துறையினர் பாராட்டுவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய… வரமாட்டேன் என்று மறுத்து விடுகிறார் பெரியார்.
.
ஆனால் அவசியம் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும் என நாராயணகவி வேண்டுகோள் விடுக்க…
.
”யாருக்காக இல்லாவிட்டாலும் நாராயணகவிக்காகக் கலந்து கொள்கிறேன்” என்று கூறி கலந்து கொண்டிருக்கிறார் பெரியார்.
.
திரைத்துறை மீது அவ்வளவு நல்ல எண்ணம் இருந்ததில்லை பெரியாருக்கு என்பது ஊரறிந்த ரகசியம்.
.
ஆனால் அவரையே யோசிக்க வைத்த பாடல் உண்டென்றால் அது ”டாக்டர் சாவித்திரி” படத்தில் இடம்பெற்ற “காசிக்குப் போனால் கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு” என்கிற நாராயணகவியின் பாடல்தான்.
.
அவருக்கும் கலைவாணருக்கும் இருந்த உறவு….
.
அவருக்கும் பாபநாசம் சிவனுக்கும் இருந்த உறவு என இதில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் யுகபாரதி.
.
இதில் சுவாரசியமான ஒரு தகவல் உண்டென்றால் அது உடுமலையார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கன்னத்தில் விட்ட அறைதான்.
.
தேவதாஸ் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான “உலகே மாயம், வாழ்வே மாயம்” பாடல் பதிவின் போது நடந்த சம்பவம்தான் அது.
.
நாராயணகவி எழுதிய அப்பாடலை பாடிய கண்டசாலா தமிழையும் தெலுங்கு போல உச்சரித்து “உல்கே மாயம், வால்வே மாயம்” எனப் பாட ”தமிழை ஏண்டா இப்படிக் கொலை செய்கிறீர்கள்?” என்று விழுந்திருக்கிறது அறை எம்.எஸ்.வி.க்கு.
.
இதைச் சொல்லிவிட்டு ஆனால் அதற்குப் பிறகு தம்பி யுகபாரதி சொல்வதுதான் உச்சகட்டமான சமாச்சாரம். அதை அவரது வரிகளிலேயே சொல்வதானால்….
.
“காலத்திற்கேற்ப பாடுவதாகச் சொல்லிக் கொண்டு, என்னுடைய பலபாடல்களை இந்தப் பாடகர்கள் கொன்று புதைத்திருக்கின்றனர்.
.
இசையமைப்பாளரை அறையக்கூடிய கவிராயர்கள் இப்போதில்லை என்பதல்ல, எழுதக்கூடிய கவிராயர்கள் பலருக்கே தமிழ் சரியாகத் தெரியாது என்பதுதான் இன்றைய நிலை.” என்கிற யுகபாரதியின் ஆதங்கத்துக்கு யார் ஆறுதல் சொல்வது?
.
.
என்னடா இவன் இன்னும் அறுபதுகளையே தாண்டவில்லையே எப்போது இவன் நம்ம காலத்துக்கு வந்து சேரப் போகிறான் என நீங்கள் சலித்துக் கொள்வது புரிகிறது.
.
என்ன செய்வது…. நேற்றைய செய்திதானே நாளைய வரலாறு…?
.
.
இசைஞானியை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலத்தின் பக்கம் வருவோம். 1962 இல் அவர் எழுதிய “மணமகளே மருமகளே வா வா” என எழுதிய அந்தப் பாடல்தான் தமிழக மக்கள் மத்தியில் அவரைப் பிரபலப்படுத்தியது.
.
இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலிக்கும் பாடல்களில் அதுவும் ஒன்று.
.
நமது நோஸ்டால்ஜியாவைக் கிளப்பிவிடும் பாடல்களில் ஏகப்பட்ட பாடல்கள் பஞ்சு அருணாசலத்தினுடையவைதான்.
.
”சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்” /

”தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்” /

“கண்மணியே காதலென்பது” /

“அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை” /

“பருவமே புதிய பாடல் பாடு” /

“விழியிலே மலர்ந்தது” /

“ராஜா என்பார் மந்திரி என்பார்” /

“குயிலே கவிக்குயிலே” /

”தூரத்தில் நான் கண்ட உன்முகம்” என எண்ணற்ற அற்புதமான பாடல்களுக்குச் சொந்தக்காரர் அவர்.
.
அவர் எழுதியவற்றிலேயே எனக்கு மிகவும் பிடித்தது என்றால் 1965 இல் வெளிவந்த ”கலங்கரை விளக்கம்” படத்தில் வரும் “பொன்னெழில் பூத்தது புதுவானில் வெண்பனி தூவும் நிலவே நில்” என்கிற பாடல்தான்.
.
இளையராஜாவின் ஆளுமையைப் புகழ்வதற்கென்றே எண்ணற்ற பாடல்களை எழுதியவர் பஞ்சு அருணாசலம்.
.
ஆனால் அவர் வசனம் எழுதிய இயக்கிய படங்களில் சிலவற்றில் பெண்கள் பற்றிய பார்வை பிற்போக்கானவைதான் என்பதை யுகபாரதியும் ஒப்புக் கொள்கிறார்.
.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இங்கு நூல் குறித்து மட்டுமே எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என்பதால் விமர்சனங்களைத் தவிர்த்திருக்கிறேன்.
.
அதை வேறொரு தளத்தில்… வேறொரு தருணத்தில் பார்ப்போம்.
.
.
அடுத்ததாக யுகபாரதி சிலாகித்து எழுதியிருக்கிற ”அண்ணன்” எனக்கும் அண்ணன் தான்.
.
அதுதான் பாவலர் அறிவுமதி.
.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ”சிறைச்சாலை” படத்தின் பாடல்களைக் கேட்டு சொக்கிப் போயிருக்கிறேன் நான்.
.
அதிலும் அதில் வரும்…

ஆசை அகத்திணையா /

வார்த்தை கலித்தொகையா /

அன்பே நீ வா வா புது காதல் குறுந்தொகையா… என்கிற வரிகளாகட்டும்….

கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ /
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ?

என்கிற வரிகளாகட்டும்….
.

”நிலாவின் பிள்ளை இங்கு நீ தானோ?

பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய்தானோ…?” என வளைய வரும் வரிகளாகட்டும் இன்றும் என் பொழுதுகளை இனிமையாக்கக் கூடியவை.
.
பலநாட்கள் யார் எழுதியது என்பதை அறிந்து கொள்ளாமலேயே “முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன” பாடலை ரசித்திருக்கிறேன்.
.
பாலு மகேந்திரா இயக்கி இளையராஜா இசையில் வெளிவந்த ”ராமன் அப்துல்லா” படப்பாடல் அது.
.
அதில் வரும் ”நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை….”
.
“உந்தன் பேரைச் சொல்லித்தான் காமன் என்னைச் சந்தித்தான்… “ என்கிற அறிவுமதியின் வரிகள் கிறக்கம் வரவழைப்பவை.
.
”சேது”வில் வரும் ”எங்கே செல்லும் இந்தப் பாதை”யாகட்டும்…
.
”மாலை என் வேதனை கூட்டுதடி…”யாகட்டும் எல்லாம் அறிவுமதியின் சாதனையைக் கூட்டும் பாடல்கள்தான்.
.
அவரது பாடல்களை விடவும் நாம் கொண்டாட வேண்டிய குணாம்சம் ஒன்று இருக்கிறதென்றால் அது அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் அவரது அறச்சீற்றம்தான்.
.
எழுத்தாளர் சுஜாதாவின் புறநானூற்று உரைக்கான மறுப்பாகட்டும்….
.
மணிரத்னத்தின் ”இருவர்” படத்துக்கான எதிர்ப்பாகட்டும்….
.
எல்லாமே அவரது அறச்சீற்றத்தின் அடையாளங்கள்தான்.

”மதுரை வீரன் தானே”….

“அழகூரில் பூத்தவளே”…

“தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்”…

”பொய் சொல்லக்கூடாது காதலி”… என நீண்டுகொண்டே போகும் பாவலர் அறிவுமதியின் பட்டியல்.
.
.
அரசவைக் கவிஞர் பதவியைப் பெற்ற கடைசிக் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய

மாஞ்சோலைக் கிளிதானோ /

பொன்மானத் தேடி /

இதயம் போகுதே /

சங்கீதமேகம் என பலபாடல்களைக் குறிப்பிடுகிறார் “நேற்றைய காற்றில்.”
.
.
.
இந்த நூலைப் படிக்கும் வரையில்கூட “மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே” பாடலை எழுதியவர் நிச்சயம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன் நான்.
.
ஆனால் 1956 இல் வெளிவந்த ”தாய்க்குப் பின் தாரம்” படத்திற்காக இப்பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி.
.
அதைப் போலவே “வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே” பாடலை எல்லோரும்கண்ணதாசன் தான் எழுதியிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை எழுதியவரும் மருதகாசிதான் என்கிற செய்தியை உரக்கச் சொல்கிறார் யுகபாரதி.
.
மருதகாசி அவர்களின் ”சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா….”

”காவியமா நெஞ்சின் ஓவியமா…”

”மணப்பாற மாடுகட்டி….”

”சமரசம் உலாவும் இடமே…” போன்ற அற்புதமான பாடல்கள் தோன்றிய விதம்…

அதன் பின்னே ஒளிந்திருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் என நம்மை அழைத்துக் கொண்டு போகிறது ”நேற்றைய காற்று.”
.
.

ஆலங்குடி சோமுவின்…

”உள்ளத்தின் கதவுகள் கண்களடா”

“பொன்மகள் வந்தாள்”

”மஞ்சக்குளிச்சி அள்ளி முடிச்சு” போன்ற பாடல்கள் குறித்தும்….
.
.

கு.மா. பாலசுப்ரமணியத்தின்…

”அமுதை பொழியும் நிலவே”
.
”சிங்கார வேலனே தேவா”
.
”குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே”
.
”இன்பம் பொங்கும் வெண்ணிலா” போன்ற நினைவை விட்டு அகலாத பாடல்கள் குறித்தும்….
விலாவாரியாகச் சொல்கிறது தம்பி யுகபாரதியின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பு.
.
.
இங்கு சொன்னதை விடவும் நான் சொல்லாமல் விட்டதே அதிகம்.
.
உண்மையில் இந்தநூல் ஒரு முனைவர் பட்டம் பெறுவதற்கான சகல தகுதியும் கொண்ட ஆய்வேடு என்றுகூட சொல்லலாம்.
.
அவ்வளவு சுவாரசியம்மிக்க தகவல்கள்.
.
தன் சமகாலத்துக் கவிஞர்கள் குறித்தும் இதில் விடுபட்ட முந்தைய தலைமுறைக் கவிஞர்கள் குறித்தும் அடுத்தடுத்து வரும் தனது தொகுப்பில் சேர்க்க இருக்கிறார் யுகபாரதி. அதன் பொருட்டு அவற்றை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கிறார்.
.
வரிக்கு வரி…. பக்கத்திற்குப் பக்கம்… சுவாரசியமூட்டும் இந்நூல் எனது பல பொழுதுகளை இனிமையாக்கியது.
.
எனது காலக்குதிரையை பின்னோக்கி பயணிக்க வைத்ததில் தம்பி யுகபாரதியின் இப்புத்தகத்திற்குப் பெரும்பங்கிருக்கிறது.
.
எனவே….. யான் பெற்றதை நீங்களும் பெற…
.
“நேற்றைய காற்றை”…

நாளை வாசிக்க….

இன்று அழையுங்கள் : 98411 57958.
.
.
.
படித்ததும் கிழித்ததும் பார்ட் – II
நன்றி : http://www.andhimazhai.com

திருவள்ளுவர் யார்…?


நேற்று மாலை நண்பர் கெளதமன்
அதிர்ச்சிகரமான தகவல்களோடு அறைக்கு வந்தார்.
.
தமிழகத்தின் தெற்கு, வடக்கு, கிழக்கு எனப்பயணப்பட்ட அவர்
மேற்கு மட்டும் எதற்கு மிச்சம் என கோவையில் டேரா போட்டு…
(அதாவது குடிவந்து) இரு ஆண்டுகள் இருக்கலாம்.
.
ஜெயகாந்தனின் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான நண்பர்.
ஆயினும் சுயசிந்தனையாளர்.
.
பேச்சு பல்வேறு பக்கம் பயணித்து
மீண்டும் அய்யன் திருவள்ளுவனிடமே வந்து நின்றது.
திருவள்ளுவர் யார் என்கிற பட்டிமன்றம்
ஒருபக்கம் இருக்கட்டும்…

ஆனால் திருக்குறளை யார் யாரெல்லாம்
மொழி பெயர்த்தார்கள் என்கிற திசை நோக்கி பேச்சு நகர….
.
அடுத்து அவர் சொன்ன சில தகவல்கள்
எனக்கு புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது
என்பதுதான் உண்மை.
.
நான் இதுவரைக்கும் சந்தித்த இலக்கிய ஸ்வாஸிப்பாளர்கள்…
.
இலக்கியப் பிரக்ஞையாளர்கள்…
.
பிரதியைக் கட்டுடைக்கும் ஸாஹித்யக் கொத்தனார்கள்….
.
யாரும் நம்ம கெளதமன் சொன்ன
தகவல்களைப் பற்றி மூச்சுகூட விட்டதில்லை.
.
.
முப்பதுகளில் வந்த ”மணிக்கொடி” பத்திரிக்கையைப்
பற்றி பேச்சு வந்தாலே….
.
”ப்ச்…ப்ச்…ப்ச்… அந்த மணிக்கொடி காலம்….”
.
”ச்சே…. நம்ம ராமையா… ச்சொக்கலிங்ஹம்…. ச்சே….”
.
”ம்ம்…ம்ம்..ம்ம்… மணிப்ப்ரவாள நடைன்னா….”
.
”ஹூம்…. ஹூம்… சிறுபத்திரிக்கையா இருந்தாலும்…
மாதாந்திரியா இருந்து வாராந்திரியா வந்தப்போ
நான் பூந்தி ஷாப்டுட்டு இருந்தேன்…”
.
”ப்ச்…ப்ச்… அந்தக் கவிதானுபவம் இருக்கே… ப்ச்….ப்ச்…”
.
(தயவுசெய்து யாரும் இதை
“கவிதா” ”அனுபவம்” என்று பிரித்து வாசிக்க வேண்டாம்.,,,)
.
”மணிக்கொடில நம்ம ஸ்ரீநிவாஸன் எழுதீண்டு இருக்கச்சே….”
.
என்று வாயில் டியூன் போடுவார்களே ஒழிய…
அந்த மனிதர் அர்ப்பணிப்புடன் செய்த
அந்த அற்புதமான விஷயத்தைப் பற்றி
மூச்சுகூட விட மாட்டார்கள்.
.
அதுதான் : அவரின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு.
.
அந்த மணிக்கொடியின் பிதாமகர் சீனிவாசன்
எழுத்தாளராக… கட்டுரையாளராக… வலம் வரும் வேளையில்
இவரது எழுத்து ”ஆங்கிலேய அரசை ஏளனப்படுத்துகிறது”…

”சுதந்திர முழுக்கத்துக்குத் துணை போகிறது” என்று சொல்லி
நாசிக் சிறையில் அடைக்கப்படுகிறார் 1932 இல்.
.
சக கைதிகளுடன் பேசக்கூடாது….
.
அரசியல் கதைக்கக் கூடாது….
.
எந்த ஆங்கிலப் பத்திரிக்கையிலும் அரசியலைப் பற்றி
மூச்சுகூட விடக்கூடாது என்கிற கட்டளைகள் வேறு.
.
இதுவே வசதியாகப் போய்விடுகிறது சீனிவாசனுக்கு.
.
அரசியல் பேசக்கூடாது…
.
எழுதி வெளியில் அனுப்பக்கூடாது….
.
அவ்வளவுதானே…
.
எனக்கு வாசிக்க புத்தகங்களும்…
எழுத நோட்டும் வேண்டும்… என்று கேட்க
அனுமதிக்கிறது சிறை நிர்வாகம்.
.
சிறையில் இருக்கும் கணவருக்கு
ப்ளேட்டோ… சாக்ரடீஸ்…. இராமாயணம்… உட்பட
பல நூல்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்
அவரது மனைவி.
.
அவற்றுள் ஒன்றுதான் திருக்குறள்.
.
அப்படித்தான் வள்ளுவரது திருக்குறளும்
மொழி பெயர்க்கப்படுகிறது நாசிக் சிறையில்.
.
1899 இல் பிறந்த ”மணிக்கொடி” சீனிவாசன் எழுதியவற்றில்
எண்ணற்றவை நூலாக வெளிவந்து விட்டன.
ஆனால் இன்னமும் வெளிவராமல் இருப்பவனவற்றுள்
முக்கியமானது அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருக்குறள்தான்.
.
ஒன்றே முக்காலடி குறளுக்கு ஒன்றே முக்காலடியிலேயே அமைந்த
அழகிய ஆங்கில மொழிபெயர்ப்பு.
.
எந்த மொழியிலும் புலமை பெற்றவனில்லை நான்.
ஆனால் மணிக்கொடி சீனிவாசனின் இம்மொழி பெயர்ப்பு
சீரானதுதானா என சீர்தூக்கிப் பார்த்து
செப்பனிடப்பட்டு விரைவில் பதிப்பிக்கப்பட்டால்
எண்பத்தி ஆறு ஆண்டுகள் முன்னமே
இத்தகைய பணியில் ஈடுபட்ட ஒரு மனிதனின் உழைப்பு
காலம்கடந்தாவது மதிக்கப்படும்.
.
சிற்றிலக்கிய மரபின் தொடக்கமே
திராவிட இயக்க ஒவ்வாமையின் பக்க விளைவுதான்.
அதில் மணிக்கொடிக்கும் பங்குண்டுதான்.
.
பாரதிதாசன் “தமிழ் எங்கள் மூச்சாம்” என்றெழுதினால்
“தமிழ் எனக்கு மூச்சுதான்…
ஆனால் அதை பிறர் மீது விடமாட்டேன்” என
ஜெலுசில் சாப்பிட்டும் பயனளிக்காது
வயிற்றெரிச்சலில் எழுதியவர்தான் பிற்பாடு வந்த ஞானக்கூத்தன்.
.
ஆனாலும் அவர்களைப் போன்று நாமில்லையே .
“அவர்நாண நன்னயம் செய்”வதுதானே
வள்ளுவன் காட்டிச் சென்றது….?
.
ஆக…. இந்நூலை வெளியிட்டே ஆகவேண்டும் என்கிற
தீரா தாகத்தோடு 2001 ஆம் ஆண்டே கணிணியில்
தட்டச்சிவைத்துக் காத்திருந்தார்
அவரது புதல்வர்களில் ஒருவரான ஜயதேவ் சீனிவாசன்.
.
ஆனால் அவரும் காற்றோடு கலந்துபோய்
ஓரிரண்டு ஆண்டுகள் ஆயிற்று.
.
ஆனால் திருக்குறள் ஆங்கிலப் பதிப்பு வரவேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தி அவர் எழுதிய
அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் மட்டும்
காற்றோடு கலக்காமல் காலம் கடந்தும் நிற்கின்றன.
.
அதுதான் :

”இந்துக்கள், பெளத்தர்கள், ஜைனர்கள் வள்ளுவர் தங்கள் மதத்தைச்
சார்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுவதும் சரியல்ல.
.
ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் குறளின் கருத்துக்கள்,
தங்கள் மதத்தின் சித்தாந்தங்களை தழுவி இருக்கிறது
என்று எண்ணினால், மற்ற மதத்தினரும் அவ்வாறே கூற முடியும்
என்பதை உணரவேண்டும்.
.
மேலும் குறளில் கூறப்பட்ட சில கருத்துக்கள்
அவரவர் மதத்தின் சில அடிப்படை ஆசாரங்களுக்கு
மாறுபட்டு இருப்பதாகவும் தெளிவுபடும்.
.
ஆகவே, உண்மை எது என்றால்,
வள்ளுவர் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும்,
அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் ஜாதி, மதம், இனம்
இவைகளுக்கு அப்பாற்பட்டது”.

.
(இதுதான் சீனிவாசனின் புதல்வர் ஜெயதேவ்
வெளிவராத அந்நூலுக்கு எழுதிய வெளிவராத அணிந்துரை….)
.
மணிக்கொடி சீனிவாசன் அவர்களின் அரசியல் பயணத்தில்
அநேகவற்றோடு நாம் முரண்படலாம் உடன்படலாம்.
ஆனால் சிறைக்கம்பிகள் மட்டுமே சாட்சியாக
நின்ற பொழுதுகளில் அவர் வடித்த
திருக்குறளின் ஆங்கில மொழியாக்கப் படைப்பு
அச்சிலேற்றப்பட வேண்டும்.
.
அப்போதுதான் எண்ணிப்பார்க்கவே முடியாத எண்ணற்றவற்றைப் பற்றி
ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே
தமிழ் மண்ணில் இருந்து திருவள்ளுவர் என்கிற ஒரு மனிதர்
சிந்தித்திருக்கிறார் என்கிற அற்புதம்
ஆங்கிலம் பேசும் மக்களுக்கும் புலப்படும்.
.
.

படித்ததும் கிழித்ததும் பார்ட் – II
.
நன்றி : http://www.andhimazhai.com

அவன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது…

இருந்தாலும் அவன் என்னைப் பார்த்து
அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது.
.
இப்போது நினைத்தாலும் எரிச்சல் எரிச்சலாக வருகிறது.
.
நான் ஓரளவுக்கு மறை கழண்டவன்தான் என்றாலும்
அவன் நினைத்திருந்த அளவுக்கு நானில்லை என்பதுதான்
என் ஆதங்கம்… அங்கலாய்ப்பு… ஆத்திரம் எல்லாம்….
.
அதுவும் என்னைப் பார்த்து மட்டும் ஏன் அப்படிச் சொன்னான்?
அன்று இரவு முழுக்க இதே நினைப்பு.
.
தஞ்சை கருத்தரங்கம் நிறைவு பெற்றவுடன்
நண்பர் சரவணன் விருந்துக்கு அழைத்தாரே என்று
போனதுதான் நான் செய்த ஒரே தப்பு.
.
நான் ஏதோ பழைய மாயாபஜார் படத்தில் வரும்
ரங்காராவைப் போல சாப்பாட்டில் வெளுத்து வாங்குவேன்
என்கிற எண்ணத்தில் அவரது தங்கை சுமதி வேறு ஏகப்பட்ட
உணவு வகைகளைச் செய்து வைத்திருந்தார்.
.
ஆனால் கூட வந்த அந்த இனியன் ஜென்மம்தான்
அரைமூட்டை அரிசியை அப்படியே திங்கும்.
நானெல்லாம் சுத்த வேஸ்ட்.
.
உரையாடி உண்டு களைப்பாறிய பிறகு
“மூச்சா” போறதுக்கு பாத்ரூம் எங்கிருக்கு?
எனக் கேட்டேன் எதிரே இருந்த கவுதமனிடம்.
.
”அதோ அப்படிப் போயி ரைட்ல திரும்புங்க” என்றார்.
.
போனால் எதிரெ இளித்தபடி இனியன்.
ஒற்றை விரலை நீட்டிக் காண்பித்தேன்.
.
“அதோ உள்ளதான்…
ஆனா லெப்ட்ல இருக்குற சின்னத் தொட்டில ஊத்து…
ரைட்ல இருக்குற பெரிய தொட்டில ஊத்தீராதே…”என்றான்.
.
ஒருவேளை பெரிய பெரிய வணிக வளாகங்களிலும்
சினிமா தியேட்டர்களிலும் இருப்பதைப் போல
சிறுவர்களுக்கு உயரம் குறைவான சின்ன பேசினும்
பெரியவர்களுக்கு உயரமான பெரிய பேசினும்
ஆக இரண்டு வைத்திருப்பார்கள் போலிருக்கிறது
என்று உள்ளே நுழைந்தால்….
.
அதைப்பார்த்ததும் எனக்கு வந்த எரிச்சலுக்கு
அளவே இல்லை.
அந்த மூதேவி சொன்னது போல இரண்டு தொட்டிதான்.
ஆனால் இரண்டும் வேறு வேறு உபயோகத்திற்கு.
.
நான் இதுகூட தெரியாத ஆஃப்பாயிலா?
.
என்னைப் பார்த்து இப்படிச் சொல்லிவிட்டானே
என ஆத்திரம் மேலும் பீறிட்டது.
அதுவரை அடக்கி வைத்திருந்ததை வெளியேற்றிவிட்டு
அமைதியாக வெளியில் வந்தேன்.
.
ஏன்யா….
எனக்கு இந்த ரெண்டு தொட்டிக்குமான வித்தியாசம்கூட தெரியாதா?
.
ச்சே….
எனக்கு ஏனோ இந்த வேளையில் முன்னரே நான் எழுதிய
ஜார்ஜ் புஷ் கதைதான் நினைவுக்கு வந்தது.
.
அது :
.
”பழைய ஜனாதிபதி பில் கிளிண்டன் எப்படி இருக்கிறார்
என்று பார்த்து வரலாம் வா” என்று தனது மனைவியை
அழைத்துக் கொண்டு புறப்பட்டார் புஷ்.
.
”வாராது வந்த மாமணி”யைப் பார்த்ததும்
அதிர்ச்சியைச் சமாளித்தபடியே
.
“அடடே…….. வாங்க புஷ்…….. வாங்க……..” என்றனர்
பில் கிளிண்டனும் அவரது மனைவியும்.
.
வீட்டையெல்லாம் சுற்றிப்பார்த்த பின்னர்
உணவு சாப்பிட அமர்ந்தனர் நால்வரும்.
அந்த நேரம் பார்த்து புஷ்ஷுக்கு ஒன் பாத்ரூம் வர……..
.
ஒற்றை விரலைக் காட்டினார் புஷ்.
.
”அதோ…….. அந்தப் பக்கம் கடைசி ரூம்.”
என்று கை காட்டினார் கிளிண்டன்.
.
தேடிப் போய் தன் “சுமையை” இறக்கி விட்டு வந்த புஷ்
“அப்பாடா”என்று அமர்ந்தபடியே தன் மனைவியின் காதில் ஏதோ கிசுகிசுக்க……..

பதிலுக்கு புஷ்ஷின் மனைவி கிளிண்டனின் மனைவி ஹிலாரியிடம் காதைக் கடிக்க……..

ஏதும் புரியாமல் முழித்தபடி சாப்பிட ஆரம்பித்தார் பில் கிளிண்டன்.
.
ஒருவழியாய் வந்த விருந்தாளிகளை வழியனுப்பி வைத்துவிட்டு
வந்து படுக்கையில் சாயும் முன்……..
.
”ஆமாம்……..புஷ்ஷின் மனைவி உன் காதில்
ஏதோ கிசுகிசுத்தாரே…..அது என்ன?” என்று
ஆர்வத்துடன் கேட்டார் கிளிண்டன்.
.
”அது வேறொன்றுமில்லை……..
நமது பங்களாவிலேயே புஷ்ஷுக்குப் பிடித்தது
கழிப்பறைதானாம்.

அதிலும்….. உங்க தங்க முலாம் பூசிய
சிறுநீர் கழிக்கும் தொட்டி அவருக்கு
ரொம்ப ரொம்பப் பிடித்து விட்டதாம்.” என்றார் ஹிலாரி.
.
”என்னது…….. தங்க முலாம் பூசிய சிறுநீர் கழிக்கும் தொட்டியா……..?

நான் அப்பவே நெனைச்சேன்……..
அது எதுவோன்னு நெனைச்சு……..
ஏதோ பண்ணித் தொலைக்கும்னு” என்று
தலையில் அடித்துக்கொண்டார் பில் கிளிண்டன்.
.
”ஏங்க…….. என்னங்க ஆச்சு……..?”
என்று ஹிலாரி படபடப்புடன் வினவ……..
.
”அட…….. அது சிறுநீர்த் தொட்டின்னு நெனச்சு……..
நான் தினமும் வாசிக்கிற சாக்சாபோன்ல
ஊத்தீட்டுப் போயிருக்கு அந்த சனியன்.” என்றார் பில்.
.
ஏம்ப்பா….
நான் தெரியாமத்தான் கேக்குறேன்….
நானென்ன அந்த புஷ் அளவுக்குக் கூறு கெட்டவனா?
.
அந்த ரெண்டு தொட்டிக்குமா வித்தியாசம் தெரியாது?
.
இருந்தாலும்…
அவன்…. என்னைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது.
.
(சகலரது சந்தேகமும் தீர அவ்விரு ”தொட்டி”களின் படங்களும் கீழே
கொடுக்கப்பட்டுள்ளுன.

எஜமான்….நீங்களே பார்த்து தீர்ப்பு சொல்லுங்கள்.)
.
.

படித்ததும் கிழித்ததும் பார்ட் II

நன்றி : http://www.andhimazhai.com

”திருக்குறளை எழுதியது திப்புசுல்தான்”


அமேசான் காடுகளின் அணையா நெருப்பால்
உலகத்தின் நுரையீரலே பத்தி எரியுதுன்னு
அங்க அவனவன் அலறிகிட்டுக் கிடந்தா….
.
இங்க உள்ளவன் என்னடான்னா
அமேசான்ல சென் பாலனுக்கோ… ஜென்பாலனுக்கோ
விருது குடுத்தது சரியா? தப்பா?ன்னு
மயிர் பொளக்கும் வாதம் பண்ணிகிட்டு இருக்கான்.
.
அதிலும் ஆகமவிதிப்படி அரியவகை இலக்கியம்
Produce பண்ணுற மாவுமோகன் வேற
இது இலக்கியமே இல்லை….
வெறும் குப்பைன்னு சொன்னதும் சொன்னார்…
அவர் மீது பாய்ந்து விட்டார்கள் நம்மவர்கள்.
.
இப்ப அவர் என்ன தப்பா சொல்லீட்டார்ன்னு
இந்தக் குதி குதிக்கிறார்களோ தெரியவில்லை.

ஒரு இலக்கிய குருமகா சன்னிதானமாக வீற்றிருப்பவர்
இந்த அருள்வாக்கைக்கூட அருளவில்லை என்றால் எப்படி?
.
நம்ம சு.சாமி மாதிரி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை
.
”திருக்குறளை எழுதியது திப்புசுல்தான்”…
.
“வள்ளலாரின் வளர்ப்புமகன் தான் ஷங்கர்”…
.
என அள்ளிவிடுவது அவரது Routine ஆன ஒன்றுதானே?
.
இதற்குப் போய் கோபித்துக் கொள்வானேன்?
கொந்தளிப்பானேன்?
.
ஒருவேளை சன்னிதானமே
எந்திரன் 2 விலோ…
சந்திரன் 3 யிலோ…
பிசியாக இருந்துவிட்டாலும்…

“என்ன மாமு…!
இந்த மாச ஆன்மீகத் தேடலின் கண்டுபிடிப்பை
இன்னும் அவுத்துவிடாம இருக்கீங்க?”ன்னு
மனசுவிட்டுக் கேட்க வேண்டீதுதானே?

இந்தப் பெருந்தன்மைகூட உங்களைப் போன்ற இலக்கியவாதிகளுக்கு
இல்லாவிட்டால் ஆசான் தான் என்ன செய்வார் பாவம்…?
.
.
அவர் ஆன்மீகக் கடலை கடையும் வேலையைப் பார்ப்பாரா?
.

குற்றுயிரும் குலையுயிருமாய்த் தவிக்கும்
திரைத்துறையை தூக்கி நிறுத்துவாரா?
.

தத்துவ தரிசனமே இல்லாமல்
தறுதலைகளாய்க் கேள்வி கேட்பவர்களுக்கு
பதில் கடிதம் போடுவாரா?
.

குப்பைக் கிடங்காய்ப் போய்விட்ட
தமிழ் இலக்கிய உலகை clean செய்யும் வேலையைத்தான் பார்ப்பாரா?
.

ச்சே… கொஞ்சம்கூட இரக்கமே இல்லாத ஜனங்களப்பா நீங்கள்.
.
அப்படி அவர் என்னதான் சொல்லிவிட்டார் என்று இந்தக் குதி குதிக்கிறீர்கள்?
.
ஒருமுறைக்குப் பலமுறை அவரது அமேசான் விருது குறித்த
தத்துவக் கீற்றுகளை படித்துப் பாருங்கள்.
அப்போதாவது உங்கள் மரமண்டையில் ஏறுகிறதா பார்ப்போம்.
.
அவர் என்ன எழுத வேண்டாம் என்றா சொன்னார்?
.
“எழுதுபவர்கள் அந்த பரிசுத்தொகைக்கு
அதற்கு கதைகள் அனுப்புவதாக இருந்தால்கூட
அவர்கள் வழக்கமாக எழுதும் பெயரில்
அனுப்பாமலிருப்பது நன்று.” ன்னுதானே சொல்றார்.
.

எழுதுங்க சொந்தப்பேரில் எழுதாம
ஏதாவது பூனை பெயரில் எழுதுங்க.
ஒரிஜினல் பேர்ல எழுதுனா உங்களோட மத்த நூல்களுக்கும்
நல்ல வாசகர்கள் அமைய மாட்டார்கள்…ன்னு
ஒரு அறிவுரை சொல்றார் இதுக்குப் போயி….
முறையோ குய்யோன்னு கூப்பாடு போடறதா?
.
ஏன் நம்ம ஆசானோட ”இரவு” நாவல்ல வரும்
ஆஸ்தான கேரக்டரே அதுதானே?
.

பேஸ்புக்குல ஒரிஜினல் ஐடி..ல போயி கமெண்ட் போடறது…

அதையவே டூப்ளிகேட் ஐடி..ல போயி காரித் துப்பறது.

இதப் பார்த்து வேற யாராவது தொன்மையான
தத்துவ தரிசனத்தோடு வந்து திருப்பித் துப்புனா….
.
அவனை வண்டை வண்டையா போட்டுப் பொளக்குறது….
.
இதுதான அந்த நாவலோட கதாநாயகனின் பொழுதுபோக்கு?
.

பின்ன எளக்கியம்ன்னா சும்மாவா?
.
அதப் புரிஞ்சுக்குங்க மொதல்ல.

எழுது… சொந்தப் பேர்ல எழுதாதேங்கிறதுக்கெல்லாம் ஒரு கண்டனமாய்யா?
.

கடல்…
காவியத்தலைவன்…
பாதியில் பாய்காட் பண்ணிய சிந்துசமவெளி போன்ற
“காவியங்களின்” எழுத்தோவியருக்கு இந்த உரிமை கூட கிடையாதா என்ன?
.
இப்பவும் சொல்றேன்….
.
நம்ம இலக்கியத்தின் தர நிர்ணய துலாக்கோலை
தூக்கிப் புடிச்சிருக்கிற நம்ம கஜக்கோல் பாண்டியன்
ஃபேஸ்புக்ல இல்லன்னு நெனச்சுகிட்டு கன்னாபின்னான்னு எழுதாதீங்க.
.
அவுரு இந்த நாலாந்தர ஃபேஸ்புக்குல
மூன்றாம்தரமா மூணு டூப்ளிகேட் ஐ.டி. வெச்சிருப்பாரு…
.
நம்ம “இரவு” நாயகன அண்டர் எஸ்டிமேட் பண்ணாதீங்க.
.
தப்பித் தவறி பண்ணுனீங்க
அப்புறம் அமேசான் காட்டுத் தீ மாதிரி
ஒங்க இலக்கிய ஒலகமே கந்தல்தான்.
.
Be careful.

==============================
.
படித்ததும் கிழித்ததும் பார்ட் II
.
நன்றி :http://andhimazhai.com/news/view/pamaran-2-series-5-.html?

லாலு பிரசாத் – நாம் பார்க்காத மறுபக்கம்…


புத்தகம்ன்னா புத்தகம்…
அப்படி ஒரு புத்தகம்.
படிக்கக் கையில் எடுத்ததில் இருந்து
முடிக்கும் வரை அவ்வளவு சுவாரசியம்.
.
எல்லாம் நம்ம தலைவர் லாலு பிரசாத்தின் சுயசரிதைதான்.
.
லாலு பிரசாத் என்றாலே ஒரு இளக்காரப்பார்வை
எண்ணற்றவர்களிடம் உண்டு.
அதுவும் அவரை நம்மூர் பசுநேசர் ராமராஜனோடு
ஒப்பிட்டுச் செய்த பகடிகள் ஏராளம்.
.
ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி
அவர் யார்?
எப்படிப்பட்டவர்?
எவ்விதம் இவ்வளவு உயரத்துக்கு வந்தார்?
என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த நூலில் இருக்கிறது.
.
அதிலும் தான் எந்த இடத்தில் தடுமாறினேன்….
தவறிழைத்தேன் என்கிற மனம் திறந்த
ஒப்புதல் வாக்குமூலங்களும் உண்டு இதில்.
.
அவருக்கே உரித்தான நக்கல் நையாண்டி
ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கிறது.
தமிழிலேயே தடுமாறும் நான்
இந்த இங்கிலீஷ் புத்தகத்தை வாசித்துவிட்டேன் என்றால்
உங்களால் முடியாதா என்ன? (GOPALGANJ TO RAISINA)
.
புறாக்களும் அணில்களும் எலிகளும் துள்ளி விளையாடும்
அந்த மண் குடிசையின் இடுக்குகளில் சில வேளைகளில்
தேள்களும் பாம்புகளும் கூட எட்டிப்பார்க்கும்.
.
பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுல்ள
ஒரு குக்கிராமமான புல்வாரியாவில்
ஆறு சகோதரர்களோடும் ஒரு சகோதரியோடும் லல்லு பிறந்தார்.
.
1948 ஜூன் பதினொன்று என்று சான்றிதழ்கள் சொன்னாலும்
கல்வி பெறாத தன் தாய் சொல்லும்
பிறந்த தேதியில் சந்தேகம் இருக்கிறது என்கிறார்.
.
ராமநவமியும் மொகரமும் பாகுபாடற்றுக் கொண்டாடப்படும்
அக்கிராமத்தில் மரமேறி
மாங்காய் பறிப்பது…
.
குட்டையில் குதித்து நீந்துவது…
.
எருமை மாடுகளின் மீது சவாரி செல்வது…
.
பிடுங்கிய கரும்பை சுவைத்தபடி
வீடு வந்து சேருவது
இதுதான் லல்லுவின் அலப்பரையான ஆரம்பப் பள்ளிக் காலங்கள்.
.
அலப்பரையின் உச்சமாக ஊருக்கு வந்த
பெருங்காய வியாபாரி மூட்டையை கிணற்று மேட்டில் வைத்துவிட்டு
துண்டை உதறுவதற்குள் கிணற்றுக்குள் குப்புறப் பாய்கிறது மூட்டை.
.
உபயம் : லல்லூ பிரசாத்.
.
வியாபாரியின் அலறல் கேட்டு மொத்த கிராமுமே திரண்டு வர..

”அட…. உதவிக்கு இவ்வளவு பேரா…?” என
அந்த வியாபாரி வியக்கும்முன்னே
கையில் வைத்திருக்கும் குடங்களோடு
கிணற்றை நோக்கிப் பாய்கிறது மொத்த கூட்டமும்.
.
பின்னே….
நேற்றுவரை சாதாரணக் கிணறாக இருந்த அந்தக் கிணறு….
பெருங்காயக் கிணறாக பரிணாமம் பெற்றால்
சும்மா இருப்பார்களா மக்கள்?
.
அப்புறமென்ன அந்தக் கிராமம் முழுக்கவே
பெருங்காய சமையலும் பெருங்காய மணமும்தான்.
.
இனி இவனை இங்கு வைத்துக் கொண்டிருந்தால்
உருப்பட மாட்டான் என்று முடிவெடுத்த லல்லுவின் தாய்
பாட்னா கால்நடைக் கல்லூரியில் தினக்கூலியாகப் பணியாற்றும்
தனது மற்றொரு மகன் முகுந்த் ராயிடம்
அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார்.
.
அக்கிராமத்துக் குட்டைகளையும்…
குளங்களையும்…
பறவைகளையும்…
நண்பர்களையும் பிரிய முடியாத லல்லுவின் கதறல்
தாயின் செவிகளில் ஏறுவதேயில்லை.
.
முடிவு ?
.
பாட்னாவிலுள்ள பள்ளியை நோக்கிய பயணம்.
66 பைசா தினக்கூலி வாங்கும் அண்ணனால்
இரண்டு சட்டையும் ஒரு டிராயரும் மட்டுமே
வாங்கித்தர இயலுகிறது.
.
தனது கிராமத்துக் கதைகள், மிமிக்ரி என வெளுத்துக்கட்டும் லாலு
அரசு நடுநிலைப் பள்ளியின் கிளாஸ் லீடர்.
அண்ணனுக்கு உதவியாக சமைத்துத் தருதல்
பாத்திரங்கள் கழுவுதல் என நகரும் நாட்கள்
கல்லூரிக் காலத்தைத் தொடுகிறது.
.
பாட்னா பல்கலைக் கழகத்தின்
B.N கல்லூரியில் காலெடுத்து வைக்கிறார் லாலு.
கல்லூரியில் சேர்ந்தாலும் இரண்டு வேளை உணவோ…
நாகரீக உடையோ அண்ணன்களால் வாங்கித்தர இயலுவதில்லை.
.
வசதிபடைத்த உயர்ஜாதியினர் மோட்டார் சைக்கிள்களில்
கல்லூரிக்கு வர
10 கிலோமீட்டர் நடைதான் லாலுவைப் போன்ற ஏழை ஜாதிகளுக்கு.
.
அங்குதான் ஆரம்பிக்கிறது லாலுவின் முதல் சமூகப்பணி.
.
ஒருநாள் சட்டென்று கல்லூரியின்
பிரதான வாசலின் முன்பாக நடுவில் நின்றபடி
உரத்த குரலில் பேசத் தொடங்குகிறார்:
.
“நாங்கள் ஏழைகள்தான்…
ஆனால் படிக்க ஆசைப்படுபவர்கள்.
பசியும் களைப்பும் மேலிட 10 கிலோமீட்டர்
நடந்தே வந்தால் எங்களுக்குள் எப்படிப் படிப்பு ஏறும்?

காலையில் கல்லூரியில் கால் வைத்ததில் இருந்து மாலைவரை
பசிக்கு ஏதேனும் சிறுதீனி தின்னலாம் என்றால்
அதற்கு பாக்கெட்மணி கொடுத்து அனுப்ப
எங்கள் வீடுகளில் வசதியும் கிடையாது.

கல்லூரி முடிந்தாலோ மீண்டும் வீடு நோக்கி
அதே 10 கிலோமீட்டர் நடை.
உடனடியாக கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு
பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும்…” என்று முழங்க…
.
துணைக்கு மாணவர்களும் கூட்டம் கூட்டமாக வந்துசேர்கிறார்கள்.
.
லாலுவின் பேச்சையும் பேச்சின் வீச்சையும்
கண்ட பல்கலைக் கழக நிர்வாகம்
தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு
பேருந்துவிடச் சம்மதிக்கிறது.
.
போதாக்குறைக்கு கல்லூரிப் பெண்களை கேலி செய்பவர்கள்…
விடாமல் துரத்துபவர்கள்…
ரோட்டோர ரோமியோக்கள்…
என எல்லோருக்கும் லாலு என்றால் சிம்ம சொப்பனம்தான்.
.
பெண்கள் தேடிவந்து புகார் செய்வார்கள் லாலுவிடம்.
அதற்காக கேலி செய்யும் மாணவர்களை
போலீசிடம் பிடித்துத் தருவது
கல்லூரி நிர்வாகத்திடம் போட்டுத் தருவது
என்றெல்லாம் போக மாட்டார் லாலு.
.
அவருக்கே ”உரித்தான” பாணியில் பாடம் எடுத்து
மாற்றிக்காட்டுவார். பெண்கள் மத்தியில் லாலுதான் ஹீரோ.
.
B.N. கல்லூரியில் மட்டுமில்லை
அதைத்தாண்டி பாட்னா பெண்கள் கல்லூரிக்கும்
சார்தான் அத்தாரிட்டி.
அக்கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்த ஒரே ஆண் லாலுதான்.
.

இந்த வேளையில்தான் ராம் மனோகர் லோகியாவின்
கருத்துக்களால் ஈர்க்கப்படுகிறார் லாலு.
.
நிலப்பிரபுக்களின் மையமான பீகாரில்
பெரும்பாலான நிலமும் கல்வியும் அரசியலும் அதிகாரமும்
உயர்ஜாதியினர் கைகளில் மட்டுமே சுற்றிச் சுற்றி வந்தது.
.
தனது சோசலிச தத்துவத்தை சோதித்துப் பார்க்கும்
சோதனைக் களமாக லோகியா பீகாரில் களமிறங்க
லாலுவின் கவனமும் அவரது சோசலிஸ்ட் கட்சியை
நோக்கித் திரும்புகிறது.
.
பிற்பாடு பாட்னா பல்கலைக் கழகத்தின்
மாணவர் தலைவரானதோ…
.
கல்லூரி தேர்தலில் அமைச்சரின் மகனையே
மண்ணைக் கவ்வ வைத்ததோ…
.
வழக்கம்போல மாணவிகளின் நூறு சதவீத ஓட்டும்
லாலுவிற்கே விழுந்ததோ…
.
பீகாரின் தலைநகரே வியந்த விஷயங்கள்.
.
.
லோகியாவிற்குப் பிற்பாடு ஜெ.பி என்றழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண்
அவர்களது ”முழுப்புரட்சி” அறைகூவலை ஏற்று
மாணவர் போராட்டத்திற்கான அமைப்பாளர் ஆகிறார்.
.
இதில் முக்கியமானது 18.3.1974 இல் நடந்த
பீகார் சட்டசபை முற்றுகைப் போராட்டம்தான்.
.
ஜெ.பி.யின் ஆணைப்படி தொடங்கிய இப்போராட்டத்தை
கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு என
சகல வழிகளிலும் ஒடுக்கப் பார்க்கிறது போலீஸ்.
துப்பாக்கிச்சூட்டில் லாலு கொல்லப்பட்டுவிட்டார்
என்கிற புரளி கிளம்ப கொந்தளிக்கிறது பீகாரே.
.
பிற்பாடு இந்திராகாந்தி கொண்டு வந்த ”மிசா” சட்டத்தில்
லாலு கைது செய்யப்படுவதும்…
.
1974 ஜுன் 25 ஆம் நாள் நாட்டையே இருளில் தள்ளிய
எமர்ஜென்ஸி அறிவிக்கப்படுவதும்…
.
நாடு முழுவதும் அரசியல்தலைவர்கள்
சிறையில் அடைக்கப்படுவதும்…
.
கருத்தடை என்கிற பெயரில் இந்திராவின் உத்தமபுத்திரன் சஞ்சய்காந்தி
திருமணமே ஆகாத இளைஞர்களை
கொத்துக் கொத்தாக தூக்கிப்போய்
கட்டாயக் கருத்தடை செய்து அனுப்பப்படுவதும்….
.
என நடந்தேறியவை அனைத்தும்
இப்பன்றித் தொழுவ ஜனநாயகம் பல்லிளித்த காலங்கள்.
.
இந்திரா அறிவித்த அவசரநிலை பிரகடனம் வாபஸ் வாங்கப்பட்டதும்…
.
நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும்…
.
சிறைக்குள்ளிருந்தபடியே லாலு வக்கீலுக்கான LLB படிப்பில் பாஸானதும்…
.
சிறைக்குள் இருந்தபடியே எம்.பி. தேர்தலில் போட்டிபோட்டதும்…
.
சிறைக்குள் இருந்தபடியே 3.75 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும்
வரலாற்றில் கண்ட செய்திகள்தான்.
.
ஆனால் இவையனைத்தும் நிறைவேறும்போது
லாலுவுக்கு வயது வெறும் 29.
.
ஆம்…
.
இந்தியாவிலேயே அன்று இந்த வயதில்
பாராளுமன்ற உறுப்பினரானது லாலு பிரசாத் மட்டும்தான்.
.
இதுதான் வரலாறு காணாத செய்தி.
.
ஆனால் இதில் கல்லூரிக் காலம் தொடங்கி
ஜெ.பி.யுடன் இருந்த காலம் வரை
லாலுவுக்கு எதிராக கோள் மூட்டுவதிலும்,
ஏழரையைக் கூட்டுவதிலும் கவனமாக இருந்தது
ஆர்.எஸ்.எஸும் அதனது மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும் தான்.
.
அது இன்று வரையிலும் தொடர்கிறது என்பது வேறு விஷயம்.
.
காரணம் : ஆர்.எஸ்.எஸுக்கும் பி.ஜெ.பி.க்கும் பேரைக்கேட்டால்
தூக்கத்தில்கூட மூச்சா போய்விடக் கூடிய அளவுக்கு
கிலி கொடுக்கும் புலியாக இருந்தவர்தான் லாலு பிரசாத்.
.
அதற்கு உதாரணமாக ஒன்றே ஒன்றைச் சொல்லி
விடைபெறுவது உத்தமமானது என்று நினைக்கிறேன்.
.
அதுதான் : எல்.கே.அத்வானியின் கைது.
.
வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்காக வந்த
மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த உத்தரவிட்டதும்
அதைத் தாங்க முடியாமல் பி.ஜெ.பி ரத்த யாத்திரையைத் அறிவித்ததும்
அதற்கு அத்வானி தலைமை வகித்து நகரம் நகரமாய் வந்து
ரணகளப்படுத்தியதும் ஊர் அறிந்த செய்திகள்.
.
பாட்னா பொதுக்கூட்டம் ஒன்றில் லாலு அறிவிக்கிறார் :
.
”நேற்று இரவு என் கனவில் ராமர் வந்தார்.
என்னிடம்….

’லாலு… என் பேரைச் சொல்லிக் கொண்டு
ஒரு டுபாக்கூர் ரதயாத்திரை வருகிறது…
அதைப் போய் தடுத்து நிறுத்தி
ஆளைத் தூக்கி உள்ளே போடு…’ என்றார்.

பீகார் எல்லைக்குள் கால் வைத்தால்
நிச்சயம் கைதுதான்” என்கிறார் லாலு பிரசாத்.
.
ரதயாத்திரை வரும்போது மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம்
பயத்தில் மெளனம் காக்கிறார்கள்.
வழியெங்கும் கலவரம்.
.
பீகாரை நெருங்குகிறது ரதயாத்திரை.
.
மத்திய அமைச்சர் முப்தி முகமது சையத்
முதலமைச்சர் லாலுபிரசாத்தின் போன் லைனுக்கு வருகிறார்.
“ரத யாத்திரையைத் தடுக்க வேண்டாம்.
அப்படியே போக விட்டுவிடுங்கள்” என்கிறார்.
.
”நீங்கள் அதிகாரத்தில் மயங்கிவிட்டீர்கள்” என்றபடி
போனை வைக்கிறார் லாலு.
.
ரதம் நெருங்குகிறது.
.
முதலில் சசராம் என்கிற இடத்தில் தடுத்து நிறுத்தி
கைது செய்வதாகத் திட்டம்.
.
தன் படுக்கை அறையில் அரசின் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை.
கைதானால் கொண்டு வர ஹெலிகாப்டர் எல்லாம் ரெடி.

ஆனால்…

ரகசியமாகப் பேசப்பட்ட விஷயம் வெளியில் கசிகிறது.
.
ரூட்டை மாற்றுகிறார் அத்வானி
.
அடுத்ததாக தன்பாத் என்கிற இடத்தில்
தடுத்து நிறுத்த முடிவெடுக்கிறார்கள்.
.
இந்தத் திட்டமும் லீக்காகிறது.
.
மீண்டும் ரூட்டை மாற்றுகிறார் அத்வானி.
.
.
லாலு பிரசாத்தின் அதற்கடுத்த திட்டம்தான் Plan B.
.
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.கே.சிங்கை வரச்சொல்லி
ஆணைபிறப்பிக்கிறார் லாலு.

அடுத்து டி.ஐ.ஜி ராமேஷ்வருக்கு அழைப்பு.

இவர்களோடு ரகசிய ஆலோசனையை முடித்துவிட்டு
தலைமைச் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளை
அழைத்து சமஸ்டிபூரில் அத்வானியைக் கைது செய்யும்
திட்டத்தை விவரிக்கிறார்.
.
இந்தமுறை ரகசியம் கசியாமல் இருக்க
தனது இல்லத்தில் உள்ள எல்லா தொலைபேசி இணைப்புகளையும்
துண்டிக்கச் சொல்லிவிட்டு
வந்தவர்களை வெளியேவிடாமல் மூலையில் போய்
குத்த வெச்சு உட்காரச் சொல்லுகிறார் லாலு.
.
அதன்பிறகு CRPF க்கு தகவல் சொல்வதோ…
.
ஹெலிகாப்டர் பைலட் அவினாஷிடம் அந்த திட்டத்தை
நிறைவேற்றும் பொறுப்பை ஒப்படைப்பதோ…
.
தன்னை சந்திக்க வந்த பி.ஜெ.பி. தலைவர்களிடம்
“அத்வானி ஜி… யை கைது செய்ய
நானென்ன பைத்தியக்காரனா?” என்று திசைமாற்றி விடுவதோ…
.
இதை நம்பி கட்சிக்காரர்களும் மீடியாக்காரர்களும்
குப்புறப்படுத்து குறட்டை விட்டதோ….
.
தனியாகத் தூங்கிய அத்வானிக்கு
தேநீர் கொடுக்கச் சொல்லி சத்தமின்றித் தூக்கியதோ…
.
எல்லாம் இந்நூலில் வரும் பரபரப்பின் உச்சங்கள்.

.
இவை எல்லாவற்றைவிடவும்
முதலமைச்சராக இருந்த காலங்களில்…

”வழக்கமாக” ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்
தலித்துகளுக்கு வீடுகட்டித் தருவதற்கு மாற்றாக
நகரின் மத்தியில் அடுக்குமாடி வீடு கட்டித் தந்தது…
.
அரசு நிலத்தில் அமைந்திருந்த
கோடீஸ்வரர்களுக்கான 200 ஏக்கர்
பாட்னா கோல்ப் மைதானத்தை கைப்பற்றி
மிருகங்கள் சுதந்திரமாக உலவட்டும் என
அருகில் இருந்த பாட்னா மிருகக்காட்சி சாலையோடு இணைத்தது….
.
பணக்காரர்கள் குடிக்கவும் கும்மாளமிடவுமாய் இருந்த
பாட்னா ஜிம்கானா கிளப்பில் 60 சதவீதம் கையகப்படுத்தி…
அதில் இனி ஏழை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள்
தங்கள் வீட்டு திருமண நிகழ்வுகள் உட்பட
சகலத்தையும் வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கிறார்.
.
அத்தோடு நிற்கவில்லை லாலு.
.
ஒரு புறத்தில் பணக்காரர்கள்
விலை உயர்ந்த மதுபானங்கள் குடித்துக் கொண்டிருக்கும்போது
ஏழைகள் என்ன செய்வார்களென யோசித்து
.
“இனி நீங்களே உங்களுக்கான
உள்ளூர் கள்ளையும் கறியையும் கையோடு கொண்டு வாருங்கள்.

இங்கேயே உங்களுக்கு விருப்பமான
ஆடு கோழி பன்றி என சமைத்துச் சாப்பிடுங்கள்.

இது வசதி உள்ளவனுக்கு
மட்டுமேயான இடமல்ல.

இது உங்களுக்கானதும்தான்
என அறிவிக்கிறார் லாலு பிரசாத்.
.
ஆளும் வர்க்கங்களும்…
உயர் சாதிகளும்…
உயர் அதிகாரிகளும் காண்டாவதற்கு இவைகள் போதாதா….?
.
இப்போது புரிகிறதா பிரதர்
அவர் ஏன் உள்ளே இருக்கிறார் என்று….?
.
.
.

படித்ததும் கிழித்ததும் பார்ட் II

.
நன்றி : http://www.andhimazhai.com

தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே….


யாரும் பேசத் துணியாத விஷயத்தை
முதலில் பேசத் துணிந்தவர் மதிவண்ணன்
என்றுதான் சொல்லவேண்டும்.
.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரிலேயே ஒடுக்கப்பட்டோராய்
இருக்கிற அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடு
இன்றைக்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது
என்று சொன்னால் அதில் எழுத்தாளர் மதிவண்ணன் அவர்களது
பங்களிப்பும் மிக முக்கியமான ஒன்று.
.
”ஒரு சின்ன நூல் வெளியீடு….
ஈரோடு வரமுடியுமா?” எனக் கேட்டதும்
உடனே சரியென்று தலையாட்டினேன்.
.
ஆனால் அச்சிறு நூலைப் பார்த்ததும்
எனக்கு ஏனோ அடிவயிற்றைப் புரட்டியது.
அதில் மதிவண்ணன் சாடோ சாடென்று சாடியிருந்த
மனிதரோ தமிழகத்தின் ஆகப் பெரிய ஆளுமை.
ஆய்வுத்தளத்தில் அவருக்கென்று ஒரு தனி இடமுண்டு.
.
அவர்தான் : பேராசிரியர் நா. வானமாமலை.
.
அவரது “தமிழர் நாட்டுப் பாடல்கள்” என்கிற நூலில்
அருந்ததிய மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக
எந்தெந்த இடங்களில் எல்லாம் எழுதியிருக்கிறார்
என்று துல்லியமாக கோடிட்டுக் காட்டி
குமுறி இருந்தார் மதிவண்ணன்.
எல்லாமே ஆணித்தரமான தரவுகள்.
.
ஆங்கிலேயருக்கு எதிரான போரில்
கட்டபொம்மனுக்கு துணை நின்றவர்களில்
அருந்ததியர் சமூகத்துக்கும்
மள்ளர் சமூகத்துக்கும் பெரும் பங்கு உண்டு.
.
ஆனால் பேராசிரியர் நா.வானமாமலை தொகுத்த
கட்டபொம்மன் கதைப் பாடல்களில்
அவர்களது வீரஞ்செறிந்த போராட்டம் குறித்தும்,
தியாகம் குறித்தும் ஒரு வரிகூட முன்னுரையில்
குறிப்பிடாது தவிர்த்தது எந்த வகையில் நியாயம்?
என ஆதங்கம் மிக்க கேள்விகளையும்
எழுப்பி இருந்தார் மதிவண்ணன்.
.
இக்கேள்விகளையும் குமுறல்களையும் உள்ளடக்கி
மதிவண்ணன் எழுதிய அச்சிறு புத்தகம்தான்
“நா,வா – வின் புரட்டுகளும் அருந்ததியர் வரலாறும்”.
.
போதாக்குறைக்கு
ஏன் இந்த இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு
சில விஷயங்களில் மண்டையில் மசாலாவே
இருப்பதில்லை என்கிற கோபமும் வேறு.
.
நான் அறிஞனுமில்லை.
ஆய்வாளனுமில்லை.
எதிலும் நுனிப்புல் மேயும் ரகம்.
.
ஆனால் ”கூட்டணி தர்மம்” மாதிரி…
கூட்ட ”தர்மம்” என்று ஒன்றிருக்கிறதே….
.
அதற்காக….
ஏற்கெனவே அறிந்தது கொஞ்சம்….
இதற்கென தேடி வாசித்தது கொஞ்சம்…
சித்தானை போன்ற சில ஆய்வாள நண்பர்களிடம்
விவாதித்து தெரிந்து கொண்டது கொஞ்சம்….
என ஒப்பேத்திக் கொண்டு நிகழ்ச்சிக்குக் கிளம்பியபோதுதான்
ஒன்று உறைத்தது……
.
அட….
இந்த இந்திய இடதுசாரிகளுக்கு
சில அல்ல…
பல விஷயங்களிலும் மண்டையில் மசாலா கிடையாதே
என்பதுதான் அது.
.
பேராசிரியர் நா.வா தொடங்கி
அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்கள் வரைக்கும்
இருந்த / இருக்கும் ஒரே பெருவியாதி
திராவிட இயக்க ஒவ்வாமைதான்.
.
பேராசிரியரோ….
அவரை ஒட்டி அடுத்து வந்த ஆய்வாளர்களோ
பெரியார் எனும் அந்த அசாத்திய ஆளுமையைப் புரிந்து
கொள்வதற்குள் அநேகருடைய ஆயுள்காலம்
முடிந்து போயிற்று என்பதுதான் உண்மை.
.
இவ்வறியாமை இந்திய ஆய்வாளர்களோடு மட்டும்
முற்றுப் பெற்று விடவில்லை.
ஈழத்து கைலாசபதி, கா.சிவத்தம்பி வரையிலும் தொடர்ந்தது.
.
ஈழத்தில் ஏறக்குறைய ”பெரியார்” என்கிற வார்த்தையே
இருட்டடிப்பு செய்யப்பட்டது
அங்குள்ள அறிவுசீவிகளாலும் இடதுசாரிகளாலும்..
.
நமது வரலாறே மறக்கப்பட்டதும்
மறைக்கப்பட்டதுமான வரலாறுதானே?
.
ஆனால் நாமே மறந்த தடயங்கள்….
அதன்பொருட்டு இன்றும் நம்மைச் சூழ்ந்திருக்கும்
அவலங்கள் ஏராளம்.
(அதை வேறொரு தருணத்தில் விரிவாகப் பேசுவோம்.)
.
மறைக்கப்பட்ட அந்தத் தடயங்களைத் தேடும்
முயற்சிகளில் ஒன்றுதான் இந்தக் கட்டுரையும்.

சரி…
நாம் மீண்டும் பேராசிரியர் நா. வானமாமலைக்கே
வருவோம்.
.
அவரது எண்ணற்ற நூல்களில் ஒன்றுதான்
“தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்.”
.
சித்தர்கள் காலம் தொடங்கி
சேர சோழ பாண்டியர் காலம் வரை
தமிழகத்தில் சாதியத்துக்கு எதிரான சமர்கள்
எத்தனையெத்தனை நடந்துள்ளன என்பதை
விரிவாகவும் விரைவாகவும் சொல்லுகிறது
1980 வெளியிடப்பட்ட இந்த நூல்.
.
புராண காலங்கள் தொடங்கி
மன்னர் காலம் வரை
படுவேகம் பிடிக்கும் வானமாமலையின் வாகனம்
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்….
சுயமரியாதை இயக்கம்….
தோன்றிய காலம் தொடங்கியதும்
பிரேக் டவுன் ஆகி நின்று விடுகிறது.
.
ஆயோ ஆய் என்று ஆயப்பட்ட
இந்த ஐம்பது பக்க நூலில்
நாலே நாலு எழுத்துதான் மிஸ்ஸிங்.
.
அது:
பெ
ரி
யா
ர்.
.
நூலின் தலைப்பைப் பார்த்தால்
ஆர்.எஸ்.எஸ்.காரனுக்குக்கூட நினைவுக்கு வரக் கூடிய
ஒரே பெயர் பெரியாராகத்தான் இருக்க முடியும்.
.
ஆனால் அதுவெல்லாம்
நம் இடதுசாரி ஆய்வாளர்கள் முன்பு செல்லுபடியாகுமோ.?
ஆகாது.
ஆகவே ஆகாது.
அம்புட்டு ஆச்சாரம்.
.
நம் மரியாதைக்குரிய ஆய்வாளர் பேராசிரியர் வானமாமலையின்
மற்றொரு நூல் : “இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்”
.
1978 இல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸால்
வெளியிடப்பட்ட இந்நூலில் உலக அளவிலும்
இந்திய அளவிலும் அன்றைய காலம் தொடங்கி
இன்று வரை நாத்திகக் கருத்துக்கள் உருப்பெற்ற வரலாறுகள்….
.
கடவுள் இன்மைக் கொள்கைதான்
தற்கால நாத்திகமாகக் கருதப்படுகையில்….
வேதங்களை நம்பாதவர்களே நாத்திகர்கள்
என அன்றைக்கு அழைக்கப்பட்டார்கள்…..
என விரிவாகச் சொல்கிறார் நா.வா.
.
அத்தோடு ஆத்திகர்களின் புரட்டு வாதம்,
கடவுள் கருத்தின் துவக்கம்,
நாத்திகம் பற்றிய மார்க்சியவாதிகளின் விமர்சனங்கள்
என அநேக விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது நூல்.
.
நாத்திகம் குறித்து பேராசான் மார்க்ஸ்
சொல்லுவதென்ன?
மார்க்சியத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய
தோழர் லெனின் சொல்லுவதென்ன?
என விரிவாக விளக்கும் பேராசிரியர்
பெரியாருக்கு வரும்போது மட்டும் கொஞ்சம்
ஜர்க் ஆகிறார்.
.
முற்றாக மறுக்கவும் முடியாமல்
முற்றாக நிராகரிக்கவும் முடியாமல்
தடுமாறும் கோலம் எழுத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.
.
இதை அவரது ஆய்வுப்புலத்தின் போதாமை என்று
கொள்ளலாமே தவிர
அவர் ஆச்சாரமான வைணவ குலத்தின் தோன்றல்
என்பதனால்தான் என்று எவரும் கொள்ளக்கூடாது.
.
அவரது வார்த்தைகளிலேயெ சொல்வதானால்…..
.
“ பெரியார் முரணற்ற நாத்திகர்.
பெரியார் கடவுள் எதிர்ப்போடு,
மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார்.
.
அவருடைய நாத்திகம் பொது அறிவைப் பயன்படுத்தி
உருவாக்கப்பட்டது.
அதில் விஞ்ஞானக் கொள்கைகளை அவர் பயன்படுத்தவில்லை.
……………..
…………..
ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் உண்மைகள்,
அவற்றின் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகள்,
இவ்வறிவியல் கொள்கைகளை கிரகித்துக் கொண்டு
வளர்ச்சி பெற்று வரும் மார்க்சீய தத்துவம்,
இவற்றினின்று அவருடைய நாத்திகம்
விலகியே நிற்கிறது.
இதுவே அதனுடைய பலவீனம்.”
.
இதைப் படித்ததும் பேரதிர்ச்சியில் அப்படியே
உறைந்து போனேன் என்று எழுதினால்
அது அப்பட்டமான பொய்.
.
குறிப்பாக இந்திய இடதுசாரிகளிடம்
அதிலும் சிறப்பாக தமிழக இடதுசாரிகளிடம்
அத்தகைய மூடநம்பிக்கைகள் எல்லாம் கிடையாது எனக்கு.
இப்படி ஏதாவது எழுதாவிட்டால்தான் அதிர்ச்சி அடைவேன்.
.
1958 லேயே நான்காவது பதிப்பு கண்ட நூல் :
”இனி வரும் உலகம்”.
.
”அறிவியல் அறிவற்ற”….
”அறிவியல் உண்மைகளை அறியாத”….
”அதன் அடிப்படையில் உருவாகும்
அறிவியல் கொள்கைகளை கிரகிக்கத்
துப்புக் கெட்ட” ஈ.வெ.ரா எழுதியது அது.
.
ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதுகிறார் :
.
”இனிவரும் உலகத்தில் கம்பியில்லா தந்திச் சாதனம்
ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்…
.
உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம்
எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப்
பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்….
.
மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்திலிருந்து கொண்டே
பல இடங்களில் உள்ள மக்களுக்குக்
கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்….”
.
இதுதானய்யா அந்த
”அறிவற்ற” கிழவன் அறுபதாண்டுகளுக்கு
முன்னர் எழுதியது.
.
பூப்பு நன்னீராட்டு விழாவுக்குக்கூட
தங்களது நாளிதழில் விளம்பரம் போடும்
”விஞ்ஞான” ”மார்க்சீயவாதிகள்” மத்தியில்
இப்படியொன்றையும் சொல்லித் தொலைத்தது பெருசு :
.
“பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை
என்பதுகூட நீக்கப்படலாம்.
.
நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும்
உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகளைப் போல்
தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு
அவர்களது வீரியத்தை இன்செக்ஷன் மூலம்
பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி
நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும்.
.
ஆண் பெண் சேர்க்கைக்கும்
குழந்தை பெறுவதற்கும்
சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.”
.
கர்ப்பத்தடையே கண்டனத்துக்கு உள்ளான காலங்களில்
செயற்கை முறை கருத்தரிப்பைப் பற்றிப் பேசியவர்
நிச்சயம் அறிவியல் அறிவற்ற
ஆசாமியாகத்தானே இருக்க முடியும்?
.
அடுத்த ஒரே ஒரு சேதியோடு
நமது கதாகாலட்சேபத்தை நிறுத்திக் கொள்வது
நல்லது என்றே தோன்றுகிறது.
.
அது 1970 ஆம் ஆண்டு.
.
கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரிக்குப் பேசச்
செல்கிறார் பெரியார். (இப்போது அதுதான் அண்ணா பல்கலைக் கழகமாக
பரிணாமம் அடைந்திருக்கிறது)
.
அங்குள்ள மாடி அறை ஒன்றில் கம்ப்யூட்டர் என்கிற
ஒரு புதிய கருவி வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
.
அங்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கம்ப்யூட்டர்
இன்றுள்ளது போல அல்ல.
அதுவே ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கக் கூடியது.
.
அது 1959 ஆண்டு உருவாக்கப்பட்ட
ஐ.பி.எம் 1620 ரகக் கம்ப்யூட்டர்.
.
அதைப் பார்த்தே தீரவேண்டும் என
அடம் பிடித்த பெரியாரை முதல் மாடிக்குத்
தூக்கிச் சென்று காட்டுகிறார்கள்.
.
இது என்னவெல்லாம் செய்யும் என
தன் சந்தேகங்களைக் கேட்கிறார் பெரியார்.
.
இது வினாடிக்கு 333 எழுத்துக்களைப் படிக்கும்
10 எழுத்துக்களை அச்சடிக்கும் என விளக்குகிறார்கள்.
.
வருடத்தையும் நாளையும் சொன்னால்
கிழமையைச் சரியாகக் குறிப்பிடும் என்கிறார்கள்.
.
17.9.1879 என்ன தேதி? என்கிறார் பெரியார்.

”புதன்கிழமை” என்கிறது கம்ப்யூட்டர்.
.
மேலும் பல கேள்விகளைக் கேட்டு
அது அளித்த விடைகளைக் கண்டு
பெருமகிழ்வோடு கிளம்பிச் செல்கிறார் பெரியார்.
.
இதனை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக
இருந்த வா.செ.குழந்தைசாமி தனது நூலில்
பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.
.
அதனைவிடவும் அக்கல்லூரியில் இருந்த
ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களே
பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த
தமிழகத்தின் முதல் கம்ப்யூட்டரை
நேரில் கண்டு அறிந்து தெளிந்து
விடைபெற்ற பெரியாரைத்தான்
விஞ்ஞானம் தெரியாதவர் என்கிறார்
நா.வானமாமலை.
.
இதற்கூடே வறட்டு நாத்திகரான பெரியாருக்கு
வர்க்கபார்வை கிடையாது என்கிற
சலிப்பில் இருந்த ப.ஜீவானந்தம்
பிர்லா மாளிகையில் ஒலித்த
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான
அசரீரி கேட்டு காங்கிரஸில் ஐக்கியமான கதைகளும்….
.
பெரியாரைக் கொச்சைப்படுத்துவதற்கென்றே
மார்க்ஸிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியால்
தப்பும் தவறுமாக எழுதப்பட்ட
”ஆரிய மாயையா? திராவிட மாயையா?”
என்கிற நூலுக்குக் கிடைத்த நெத்தியடிக் கதைகளும்….
.
1924 வைக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக
பெரியார் நடத்திய தெரு நுழைவுப் போராட்டத்தை
கோயில் நுழைவுப் போராட்டமாக
மார்க்சிஸ்ட் ராமமூர்த்தி குழப்பியடித்த கதைகளையும்….
.
எழுதிக் கொண்டே போகலாம்தான்….
.
ஆனால்….
.
அட….
அதெல்லாம் அந்தக் காலம்.
.
ஆய்வாளர் நா.வானமாமலை,
மார்க்ஸிஸ்ட் இராமமூர்த்தி எல்லாம்
மறைந்தே எண்ணற்ற ஆண்டுகள் ஆயிற்று.
.
இன்னும் எதற்கு இந்தப் பழைய கதை?.
.
இப்போதெல்லாம் இடதுசாரிகள் அப்படிக் கிடையாது
என அடித்துச் சத்தியம் செய்பவர்கள்
யாரேனும் இருந்தால்….
.
அவர்கள்…..
.
அங்கிள் டி.கெ.ரங்கராஜன்
பத்து பர்சண்ட் ”பரம ஏழைகளுக்காக”
பாராளுமன்றத்தில் முழங்கிய
சமீபத்திய கதையையும் நினைவில் கொள்வது
மார்க்சீயத்துக்கும் நல்லது.
மக்களுக்கும் நல்லது.
.

பின்குறிப்பு :
.
அதெல்லாம் சரி…..
இந்தத் தலைப்புக்கும் கட்டுரைக்கும்
என்னய்யா சம்பந்தம் என்கிறீர்களா?
.
பாஸ்….!
கட்டுரைதான் இவ்வளவு சீரியஸ்
தொனில இருக்குதே….
தலைப்பாவது கொஞ்சம்
ரொமான்ஸ் மூடுல இருக்கட்டுமேங்கிற
ஒரு அல்ப ஆசைதான்….
.
வேறென்ன?


.
நன்றி :
“காமன் சென்ஸ்” (Common Sense) மாத இதழ்.

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா.
.

கமல்ஹாசன்

திரு கமல்ஹாசன் அவர்களைப் பேட்டி கண்டு
எந்த மனநலப் பாதிப்பும் ஏற்படாமல்
வீடு திரும்பிய நியூஸ் 18 நெறியாளர்
குணசேகரன் அவர்களுக்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பேரன்பு


புதிர்கள் நிறைந்த இவ்வாழ்வில்
எவர்மீதும் புகார்கள் இல்லை இவனுக்கு.
.
அன்பினை வார்த்தைகளால்
விளக்கிவிட முடியுமா என்ன?
அதுவும் பேரன்பினை….?
.
பாப்பாவும்… மீராவும்…
விஜயலட்சுமியும்…. அமுதவனும்….
நெயில் பாலீஷும்…. அந்தச் சிட்டுக் குருவியும்
என்னில் சுழன்றபடி இருக்கிறார்கள் இன்னமும்.
.
பெருமகிழ்ச்சி ராம்.

மக்கள் எனப்படுவது

தொழிலாளர்கள் போராட்டமோ…
ஆசிரியர்கள் போராட்டமோ…
எழும்போதெல்லாம் எம்.ஜி.ஆர். சொல்வார்:
.
“மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.”
.
அதாவது 1977 ல் ஆட்சிக்கு வந்த பின்பு
.

விவசாயிகள் போராட்டமோ…
மாணவர்கள் போராட்டமோ…
எழும்போதெல்லாம் கருணாநிதி சொல்வார்:
.
“இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்.”
.
அதாவது 1969 ல் ஆட்சிக்கு வந்த பின்பு
.

நெசவாளிகள் போராட்டமோ…
சாலைப் பணியாளர்கள் போராட்டமோ…
எழும்போதெல்லாம் ஜெயலலிதா சொல்வார்:
.
“எதிர்க்கட்சிகளது தூண்டுதலை சந்திப்போம்”
.
அதாவது 1991 ல் ஆட்சிக்கு வந்த பின்பு.
.

அதற்காக ராஜகோபாலாச்சாரியாரோ –
பக்தவச்சலமோ
சவால் விடாதவர்களோ..
விடத் தெரியாதவர்களோ அல்ல.
.
அவர்களும் செய்தார்கள் அதை.
.

ஆக இன்றைய நொடிவரை எனக்குப்
புரியாத புதிர் ஒன்றே ஒன்றுதான்.
.
அது: மக்கள் எனப்படுவது யார்…?
.
மொத்தத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களது
போராட்டமும் முடிவுக்கு வந்து விட்டது.
அவர்களது போராட்டம் மட்டுமில்லை…
நெசவாளிகள்… விவசாயிகள்…
போக்குவரத்துத் தொழிலாளர்கள்… சாலைப் பணியாளர்கள் …
என சகலரது போராட்டமும்தான்.
.
எது ஆளுகிறது…?
எது ஆதரிக்கிறது…? என
எதுவும் புரிபடாத நிலையில் உழைக்கும் உலகம்.
.
அதுசரி…
ஏனிந்தப் போராட்டங்கள் அனைத்துமே
ஏறக்குறைய நீர்த்துப் போயின?
.
விவசாயிகள் போராட்டமா…?
மருத்துவர்களுக்கு கவலையில்லை.
.
நெசவாளிகள் போராட்டமா…?
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குப் பிரச்சனை இல்லை.
.
மாணவர்கள் போராட்டமா…?
அரசு ஊழியர்களுக்கு சம்பந்தமேயில்லை.
.
சற்றே சிந்தித்தால்…
ஒருவருடைய போராட்டம்
மற்றவருக்குத் தேவையற்ற ஒன்று.

ஆனால், தான் போராடும்போது மட்டும்
உலகமே தனக்குப் பின்னால் அணிதிரண்டு
நிற்க வேண்டும் என்கிற பேராசைக்கு
மட்டும் பஞ்சமில்லை.
.
பஞ்சப்படி உயர்வுக்காக தன் பின்னால்
விவசாயிகள்கூட அணி திரள வேண்டும் என
எண்ணுகிற அரசூழியன் விவசாயிகளது இலவச (?)
மின்சார பறிப்பிற்கு எதிராக தான் துணை நிற்க வேண்டும்
என ஒரு நொடிகூட சிந்தித்ததில்லை.
.
மருத்துவக் கல்லூரியின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக
அகிலமே அணிதிரள வேண்டும்
எனக் கனாக்காணுகிற ஒரு மருத்துவ மாணவன்..
அதிகபட்ச கல்விக் கட்டணங்களுக்குப் பலியாகும்
பிற மாணவரது போராட்டங்களில்
தன்னை இணைத்துக் கொள்வதில்லை.
.
எனக்கு ஜார்ஜ் குருஜிப் சொன்ன
ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
.
மலையில் வசித்த மந்திரவாதி ஒருவன்
தான் வைத்திருந்த ஆட்டு மந்தையில்
ஒன்றன் பின் ஒன்றாக சாப்பிட்டு வந்தபோது
சில ஆடுகளுக்கு மட்டும் சந்தேகம் ஏற்பட்டதாம்.
.
தமது கூட்டத்தில் ஒவ்வொரு நாளும்
சில ஆடுகள் காணாமல் போவதாக…
சந்தேகப்பட்ட ஆடுகளில் ஒன்றை அழைத்து
மந்திரவாதி சொன்னது இதுதான்;
.
“உண்மையில் நீ ஒரு ஆடல்ல.
ஒரு சிங்கம்.
நான் சாப்பிடப்போவது ஆடுகளை மட்டும்தான்.
நீ தைரியமாக இரு”
.
அடுத்ததாக மற்றொரு ஆட்டை அழைத்து,
“நீ ஆடே கிடையாது அவர்கள்தான் ஆடுகள்.
சரியாகச் சொன்னால் நீ ஒரு புலி.
நான் கொல்லப் போவது ஆடுகளை மட்டும்…”
என இப்படி ஒவ்வொரு ஆட்டிற்கும்
ஒவ்வொரு விளக்கம் கொடுத்தானாம் அந்த மந்திரவாதி.
.
அந்த அப்பாவி ஆடுகள் ஒவ்வொன்றும்
தன்னை சிங்கமாகவும், புலியாகவும், கரடியாகவும்
கற்பிதம் செய்து கொண்டிருந்த வேளைகளில்
தனது கூட்டத்தில் இருந்தவர்கள்
ஒன்றன் பின் ஒன்றாக காணாமல் போனதை
உணரவேயில்லை.
.
மொத்தத்தில் அவை அனைத்துமே
அந்த மந்திரவாதியின் பசிக்கு இரையானதுதான்
அவர்களது அறியாமைக்குக் கிடைத்த விலை.
.
(விலை கிடக்கட்டும்…
இக்கதையின் மூலமாக தாங்கள் சொல்ல வரும் நீதி…?
என நீங்கள் முழங்கையை மடக்குவது புரிகிறது…

ஆடோ.. நாடோ… நரிகளிடம் நாட்டாமைக்குப் போனால்
கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்
என்பதைப் புரிந்து கொள்வது புத்திசாலித்தனமானது…
போதுமா சாமி!)
.
இதற்கும் இன்றைக்கு நடக்கிற
ஒவ்வொரு பிரிவினரது போராட்டங்களுக்கும்
எந்தவொரு வித்தியாசமும் புலப்படவில்லை எனக்கு.
.
ஏனெனில் உலகில் மக்கள் என்று எவரும் தனியாக இல்லை.
.
ஒரு மூதாட்டி ஒரு விவசாயினுடைய மனைவியாக இருப்பார்.
.
ஒரு முதியவர் ஒரு நெசவாளியினது கணவராக இருப்பார்.
.
இது எதுவும் இல்லாது இருப்பவர்…
பூமிக்குள் “பத்திரமாக” படுத்துறங்குபவராக இருப்பார்.
.
முதுமைக்குக்கூட ஓய்வையும்… நிம்மதியையும்,
நிம்மதியான சாவையும்கூட தந்துவிடாத
“மகத்தான” சமூக அமைப்பு நம்முடையது.
.
ஆக…
‘மக்களுக்குத் துன்பம்…’
‘மக்களுக்குப் பிரச்சனை…’
‘மக்கள் கவனித்துக் கொள்வார்கள்…’
என்றே வருகின்ற ஒவ்வொரு அரசுகளும் முழங்குகின்றனவே…
.
ஆனால்……..
.
தொழிலாளர்கள்…
விவசாயிகள்…
ஆசிரியர்கள்…
மாணவர்கள்…
நெசவாளிகள்…
உதிரிப் பாட்டாளிகள்.. என
இவர்களையும் தாண்டி
வேற்று கிரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
‘மக்கள்’ எனத் தனியாக
வேறு எவரேனும் உளரோ…?
.
நீங்களாவது கொஞ்சம் உளறுங்களேன்..
.
.
(“புலம்பல் பக்கம்” – தீராநதி – 2000.)