திருவள்ளுவர் யார்…?


நேற்று மாலை நண்பர் கெளதமன்
அதிர்ச்சிகரமான தகவல்களோடு அறைக்கு வந்தார்.
.
தமிழகத்தின் தெற்கு, வடக்கு, கிழக்கு எனப்பயணப்பட்ட அவர்
மேற்கு மட்டும் எதற்கு மிச்சம் என கோவையில் டேரா போட்டு…
(அதாவது குடிவந்து) இரு ஆண்டுகள் இருக்கலாம்.
.
ஜெயகாந்தனின் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான நண்பர்.
ஆயினும் சுயசிந்தனையாளர்.
.
பேச்சு பல்வேறு பக்கம் பயணித்து
மீண்டும் அய்யன் திருவள்ளுவனிடமே வந்து நின்றது.
திருவள்ளுவர் யார் என்கிற பட்டிமன்றம்
ஒருபக்கம் இருக்கட்டும்…

ஆனால் திருக்குறளை யார் யாரெல்லாம்
மொழி பெயர்த்தார்கள் என்கிற திசை நோக்கி பேச்சு நகர….
.
அடுத்து அவர் சொன்ன சில தகவல்கள்
எனக்கு புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது
என்பதுதான் உண்மை.
.
நான் இதுவரைக்கும் சந்தித்த இலக்கிய ஸ்வாஸிப்பாளர்கள்…
.
இலக்கியப் பிரக்ஞையாளர்கள்…
.
பிரதியைக் கட்டுடைக்கும் ஸாஹித்யக் கொத்தனார்கள்….
.
யாரும் நம்ம கெளதமன் சொன்ன
தகவல்களைப் பற்றி மூச்சுகூட விட்டதில்லை.
.
.
முப்பதுகளில் வந்த ”மணிக்கொடி” பத்திரிக்கையைப்
பற்றி பேச்சு வந்தாலே….
.
”ப்ச்…ப்ச்…ப்ச்… அந்த மணிக்கொடி காலம்….”
.
”ச்சே…. நம்ம ராமையா… ச்சொக்கலிங்ஹம்…. ச்சே….”
.
”ம்ம்…ம்ம்..ம்ம்… மணிப்ப்ரவாள நடைன்னா….”
.
”ஹூம்…. ஹூம்… சிறுபத்திரிக்கையா இருந்தாலும்…
மாதாந்திரியா இருந்து வாராந்திரியா வந்தப்போ
நான் பூந்தி ஷாப்டுட்டு இருந்தேன்…”
.
”ப்ச்…ப்ச்… அந்தக் கவிதானுபவம் இருக்கே… ப்ச்….ப்ச்…”
.
(தயவுசெய்து யாரும் இதை
“கவிதா” ”அனுபவம்” என்று பிரித்து வாசிக்க வேண்டாம்.,,,)
.
”மணிக்கொடில நம்ம ஸ்ரீநிவாஸன் எழுதீண்டு இருக்கச்சே….”
.
என்று வாயில் டியூன் போடுவார்களே ஒழிய…
அந்த மனிதர் அர்ப்பணிப்புடன் செய்த
அந்த அற்புதமான விஷயத்தைப் பற்றி
மூச்சுகூட விட மாட்டார்கள்.
.
அதுதான் : அவரின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு.
.
அந்த மணிக்கொடியின் பிதாமகர் சீனிவாசன்
எழுத்தாளராக… கட்டுரையாளராக… வலம் வரும் வேளையில்
இவரது எழுத்து ”ஆங்கிலேய அரசை ஏளனப்படுத்துகிறது”…

”சுதந்திர முழுக்கத்துக்குத் துணை போகிறது” என்று சொல்லி
நாசிக் சிறையில் அடைக்கப்படுகிறார் 1932 இல்.
.
சக கைதிகளுடன் பேசக்கூடாது….
.
அரசியல் கதைக்கக் கூடாது….
.
எந்த ஆங்கிலப் பத்திரிக்கையிலும் அரசியலைப் பற்றி
மூச்சுகூட விடக்கூடாது என்கிற கட்டளைகள் வேறு.
.
இதுவே வசதியாகப் போய்விடுகிறது சீனிவாசனுக்கு.
.
அரசியல் பேசக்கூடாது…
.
எழுதி வெளியில் அனுப்பக்கூடாது….
.
அவ்வளவுதானே…
.
எனக்கு வாசிக்க புத்தகங்களும்…
எழுத நோட்டும் வேண்டும்… என்று கேட்க
அனுமதிக்கிறது சிறை நிர்வாகம்.
.
சிறையில் இருக்கும் கணவருக்கு
ப்ளேட்டோ… சாக்ரடீஸ்…. இராமாயணம்… உட்பட
பல நூல்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்
அவரது மனைவி.
.
அவற்றுள் ஒன்றுதான் திருக்குறள்.
.
அப்படித்தான் வள்ளுவரது திருக்குறளும்
மொழி பெயர்க்கப்படுகிறது நாசிக் சிறையில்.
.
1899 இல் பிறந்த ”மணிக்கொடி” சீனிவாசன் எழுதியவற்றில்
எண்ணற்றவை நூலாக வெளிவந்து விட்டன.
ஆனால் இன்னமும் வெளிவராமல் இருப்பவனவற்றுள்
முக்கியமானது அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த திருக்குறள்தான்.
.
ஒன்றே முக்காலடி குறளுக்கு ஒன்றே முக்காலடியிலேயே அமைந்த
அழகிய ஆங்கில மொழிபெயர்ப்பு.
.
எந்த மொழியிலும் புலமை பெற்றவனில்லை நான்.
ஆனால் மணிக்கொடி சீனிவாசனின் இம்மொழி பெயர்ப்பு
சீரானதுதானா என சீர்தூக்கிப் பார்த்து
செப்பனிடப்பட்டு விரைவில் பதிப்பிக்கப்பட்டால்
எண்பத்தி ஆறு ஆண்டுகள் முன்னமே
இத்தகைய பணியில் ஈடுபட்ட ஒரு மனிதனின் உழைப்பு
காலம்கடந்தாவது மதிக்கப்படும்.
.
சிற்றிலக்கிய மரபின் தொடக்கமே
திராவிட இயக்க ஒவ்வாமையின் பக்க விளைவுதான்.
அதில் மணிக்கொடிக்கும் பங்குண்டுதான்.
.
பாரதிதாசன் “தமிழ் எங்கள் மூச்சாம்” என்றெழுதினால்
“தமிழ் எனக்கு மூச்சுதான்…
ஆனால் அதை பிறர் மீது விடமாட்டேன்” என
ஜெலுசில் சாப்பிட்டும் பயனளிக்காது
வயிற்றெரிச்சலில் எழுதியவர்தான் பிற்பாடு வந்த ஞானக்கூத்தன்.
.
ஆனாலும் அவர்களைப் போன்று நாமில்லையே .
“அவர்நாண நன்னயம் செய்”வதுதானே
வள்ளுவன் காட்டிச் சென்றது….?
.
ஆக…. இந்நூலை வெளியிட்டே ஆகவேண்டும் என்கிற
தீரா தாகத்தோடு 2001 ஆம் ஆண்டே கணிணியில்
தட்டச்சிவைத்துக் காத்திருந்தார்
அவரது புதல்வர்களில் ஒருவரான ஜயதேவ் சீனிவாசன்.
.
ஆனால் அவரும் காற்றோடு கலந்துபோய்
ஓரிரண்டு ஆண்டுகள் ஆயிற்று.
.
ஆனால் திருக்குறள் ஆங்கிலப் பதிப்பு வரவேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தி அவர் எழுதிய
அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் மட்டும்
காற்றோடு கலக்காமல் காலம் கடந்தும் நிற்கின்றன.
.
அதுதான் :

”இந்துக்கள், பெளத்தர்கள், ஜைனர்கள் வள்ளுவர் தங்கள் மதத்தைச்
சார்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுவதும் சரியல்ல.
.
ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் குறளின் கருத்துக்கள்,
தங்கள் மதத்தின் சித்தாந்தங்களை தழுவி இருக்கிறது
என்று எண்ணினால், மற்ற மதத்தினரும் அவ்வாறே கூற முடியும்
என்பதை உணரவேண்டும்.
.
மேலும் குறளில் கூறப்பட்ட சில கருத்துக்கள்
அவரவர் மதத்தின் சில அடிப்படை ஆசாரங்களுக்கு
மாறுபட்டு இருப்பதாகவும் தெளிவுபடும்.
.
ஆகவே, உண்மை எது என்றால்,
வள்ளுவர் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும்,
அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் ஜாதி, மதம், இனம்
இவைகளுக்கு அப்பாற்பட்டது”.

.
(இதுதான் சீனிவாசனின் புதல்வர் ஜெயதேவ்
வெளிவராத அந்நூலுக்கு எழுதிய வெளிவராத அணிந்துரை….)
.
மணிக்கொடி சீனிவாசன் அவர்களின் அரசியல் பயணத்தில்
அநேகவற்றோடு நாம் முரண்படலாம் உடன்படலாம்.
ஆனால் சிறைக்கம்பிகள் மட்டுமே சாட்சியாக
நின்ற பொழுதுகளில் அவர் வடித்த
திருக்குறளின் ஆங்கில மொழியாக்கப் படைப்பு
அச்சிலேற்றப்பட வேண்டும்.
.
அப்போதுதான் எண்ணிப்பார்க்கவே முடியாத எண்ணற்றவற்றைப் பற்றி
ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே
தமிழ் மண்ணில் இருந்து திருவள்ளுவர் என்கிற ஒரு மனிதர்
சிந்தித்திருக்கிறார் என்கிற அற்புதம்
ஆங்கிலம் பேசும் மக்களுக்கும் புலப்படும்.
.
.

படித்ததும் கிழித்ததும் பார்ட் – II
.
நன்றி : http://www.andhimazhai.com

Leave a comment